என்று முடியும் பணமதிப்பு நீக்கத்தின் பணத் திண்டாட்டம்?

0

நாகேஸ்வரி அண்ணாமலை

நவம்பர் எட்டாம் தேதி திடீரென்று ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது.  அன்றிலிருந்து ஏழை மக்கள் தாளாத துன்பத்திற்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள்.  இந்தத் திட்டம் பணக்காரர்களிடம் இருந்த கள்ளப் பணத்தை வெளியே கொண்டுவருவதற்கு என்று அரசு அறிவித்தது.  ஆனால் எவ்வளவு கள்ளப் பணம் வெளியே வந்தது, எவ்வளவு வரும் என்று மத்திய அரசு எதிர்பார்த்தது என்று அரசு சொல்லும் கணக்குக்கும் உண்மையில் நடந்ததற்கும் சம்பந்தம் இல்லை.  சில தினங்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று தொடர்ந்து அறிவித்துக்கொண்டிருக்கிறது.  ஆனால் இந்தப் பிரச்சினைக்கு விடிவு விரைவில் வரப் போவதாகத் தெரியவில்லை.

சிறந்த பொருளாதார நிபுணர்களை ஆலோசிக்காமல் மத்திய அரசு எடுத்த முடிவு என்று முன்னாள் நிதிமந்திரி கூறுகிறார்.  இம்மாதிரியான தீவிர நடவடிக்கை எடுக்கும் முன் அதற்கேற்றவாறு மத்திய அரசுத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.  கள்ளப் பணத்தில் – அதாவது வரி கட்டாத பணத்தில் – ஆறு சதவிகிதம்தான் பணமாகப் பதுக்கப்பட்டிருக்கிறது; மீதிப் பணம் நிலத்திலும் கட்டடங்களிலும் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களிலும் முடக்கப்பட்டிருக்கிறது என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமெர்த்தியா சென் சொல்கிறார். அதாவது, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் 94 சதவிகிதக் கள்ளப்பணம் வெளியே வராது.  நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்ல, கள்ளப் பணம் வைத்திருப்போரின் பணத்தை வெளியே கொண்டுவந்து வறுமையைப் போக்கும் திட்டங்களைச் செயல்படுத்த, இந்தியாவை முன்னேறிய நாடுகளின் வரிசையில் நிறுத்த இந்தத் திட்டம் என்று பிரதம் மந்திரி கூறி வருகிறார்.  பழைய நோட்டுகளை செல்லாது என்று சொன்னதன் மூலம் பணமுதலைகளும் பயங்கரவாதிகளும் பணத்தைப் பதுக்க முடியாது என்று இவர்கள் சொல்லிக்கொண்டிருக்க புது நோட்டுக்களும் அவர்கள் வசம் முதலில் வருவது வேடிக்கையிலும் பெரிய வேடிக்கை.

இந்தத் திட்டம் ஏழைகளைத்தான் அதிகம் பாதித்திருப்பதாகத் தெரிகிறது.  இந்தியாவில் அடித்தட்டு மக்கள் எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு அமெரிக்கப் பத்திரிக்கை பட்டியல் போட்டுத் தந்திருக்கிறது.  இவர்கள் எல்லோரும் டெல்லியிலோ டெல்லிக்கு அருகிலோ வசிப்பவர்கள்.  யாஷ்பால் ரத்தோர் (வயது 29) என்பவரின் திருமணம் அவருக்கு மணமகளாக வரவிருந்தவரின் பெற்றோர்களால் பணப்புழக்கம் இல்லாததால் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.  ரத்தோர் வேலைபார்த்த இருசக்கர் வாகனங்கள் விற்பனை செய்யும் ஹீரோ மோட்டார் கம்பெனி இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு வாங்குவோர் இல்லாமல் உற்பத்தி குறைந்ததால் இவரை வேலையிலிருந்து நீக்கியிருக்கிறது.  அவர்களுடைய விற்பனை முப்பது சதவிகிதம் குறைந்திருக்கிறதாம். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.  அவர்களுடைய லாபம் குறைந்தால் தங்களைத் தானே அவர்கள் காத்துக்கொள்வார்கள்.  ‘இந்தத் திட்டத்தால் என் வேலையும் போய்விட்டது, என் திருமணமும் நின்றுவிட்டது’ என்று அழுகிறார் ரத்தோர்.

இதே கம்பெனியில் வேலைபார்த்த சுனில் குமார் (வயது 28) என்பவர் எந்தவித முன்னறிவுப்பும் இன்றி திடீரென்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தால் வேலையை இழந்தார்.  15,000 ரூபாய் சம்பளத்தில் மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றி வந்த இவரால் இப்போது தன்னுடைய கைக்குழந்தைக்குகூட தேவையானதை வாங்க முடியவில்லை.  நவம்பர் 29-ஆம் தேதி எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று வேலை போனதிலிருந்து இவரது குடும்பத்தால் தங்களுக்குத் தேவையான அளவு பால், பழங்கள், காய்கறிகள் வாங்க முடியவில்லை; வீட்டு வாடகை கட்ட முடியவில்லை.

தினக்கூலி வேலைசெய்பவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  மாதத்தில் எல்லா நாட்களும் வேலைபார்த்தவர்கள் இப்போது வாரத்தில் சில தினங்கள்தான் வேலைசெய்கிறார்களாம்.  பார்க்கும் நாட்களிலும் முழுக் கூலி கிடைப்பதில்லையாம்.  இரண்டு மாதங்களில் பன்னிரெண்டே நாட்கள் மட்டும் வேலைசெய்த ரஃபீக் அலியால் (வயது 32) குடும்பம் நடத்த முடியவில்லை.  மனைவியையும் குழந்தைகளையும் தன் சொந்தக் கிராமத்திற்கு அனுப்பிவிட்டார்.  தங்கள் மகளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல மனைவி தன்னிடம் பணம் கேட்டபோது இவரிடம் அனுப்புவதற்கு ஒன்றுமில்லை.

ஹோதி லாலுக்கு (வயது (38) மூன்று குழந்தைகள்.  சென்ற இரண்டு மாதங்களில் இவருக்கு ஆறு நாட்கள்தான் வேலை கிடைத்தது.  இவருடைய மகன் அலுவலங்களைச் சுத்தம் செய்து ஏழாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறான்.  அவனைச் சீக்கிரமே அந்த வேலையிலிருந்து எடுத்துக் கல்லூரிக்கு அனுப்ப முடிவுசெய்திருந்த தந்தையால் அப்படிச் செய்ய முடியவில்லை.  அவனுடைய சம்பளத்தில்தான் இப்போது குடும்பம் நடந்து வருகிறது.  ராகேஷ் யாதவ் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் மனைவியையும் கிராமத்திற்கு அனுப்பிவிட்டு ஒரே அறை கொண்ட தன் வீட்டை வாடகை கொடுக்க முடியாதலால் காலிசெய்துவிட்டு மற்ற நான்கு பேரோடு ஒரு அறையைப் பகிர்ந்துகொண்டு வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.

சொன்னபடி கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவர முடியவில்லை என்றதும் மத்திய அரசு திட்டதின் நோக்கத்தை மாற்றிக்கொண்டது. பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்குத்தான் இந்தத் திட்டமாம்.  எல்லாரும் ஆன்லைனில் பணம் கட்டலாம், கடன் அட்டையை உபயோக்கிக்கலாம் என்கிறது மத்திய அரசு.  பரிவர்த்தனனையை இப்படி மக்களுக்குக் கஷ்டத்தை உண்டுபண்ணி மாற்ற முடியாது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதில் எவ்வளவோ கஷ்டங்கள் இருக்கின்றன.  கடன் அட்டை விநியோகிக்கும் கம்பெனிகள் பொது மக்களை ஏமாற்றாமல் இருக்க அமெரிக்காவில் பல சட்டங்கள் இருக்கின்றன.  முதலில் அப்படிப்பட்ட சட்டங்களையெல்லாம் கொண்டுவந்த பிறகல்லவா இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்க வேண்டும்?  அமெரிக்காவில் கடன் அட்டைகள் புழக்கத்திற்கு வந்த பிறகு நிறையக் கடனாளிகள் உருவாகியிருக்கிறார்கள்.  அந்தத் தலைவிதி இந்தியாவுக்கும் வேண்டுமா?

எல்லாக் கஷ்டங்களும் இன்னும் சில தினங்களுக்குத்தான் என்று சொல்லிச் சொல்லி மூன்று மாதங்களைக் கடத்திவிட்ட மத்திய அரசு ‘கஷ்டங்கள் சீக்கிரம். முடிந்துவிடும்.  இனி நாட்டில் பாலும் தேனும் ஓடும்.  அதுவரைக் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்’ என்று கூறி வருகிறது.  சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருப்பவர்களால் காய்கறிகள்,  பழங்கள் வங்க முடியாதலால் அவற்றின் விலை குறைந்து வருகிறதாம்.  மேல் மட்டத்தில் இருப்பவர்களுக்கு இதனால் இன்னும் நல்லதாகப் போயிற்று.  குறைந்த விலையில் இவற்றை வாங்கலாமே.  பாலும் தேனும் ஓடும் காலம் வருவதற்குள் இப்போது வேலை இழந்தவர்கள் எப்படி உயிர் வாழப் போகிறார்கள்?

அமெரிக்காவில் வேலை இழந்தவர்களுக்கு மத்திய அரசு ஆறு மாதங்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுபோல் இந்தியாவிலும் மத்திய அரசு தன் திட்டத்தால் வேலை இழந்தவர்களுக்காவது ஏதாவது செய்ய வேண்டும்.  அரசின் திட்டத்தால் வேலை இழந்தவர்களுக்கு மறுபடி அவர்களுக்கு வேலை கிடைக்கும்வரை மத்திய அரசு பண உதவி செய்ய வேண்டும்.  தங்கள் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதிலேயே குறியாக இருக்கும் நம் அரசியல்வாதிகளுக்கு இதையெல்லாம் சிந்திக்க நேரம் இருக்குமா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *