அவள் பேரழகி!
-இந்து
ஒற்றைச் சுழியில் தொடங்கி
ஒரு வளைவு, இரு நெளிவு கடைசியில் ஒரு குழிவு ….
என்னே எழில்…!
தன் எழில் போதாதென்று சில சமயம் ஒய்யாரத் தங்கையுடன்….
சில சமயம் காலில் சி்ணுங்கும் மெட்டி சுழியுடன்….
மொத்தமாக அவள் பேரழகி….
அந்த அவள் ‘காவிரித்தாய்’ அல்ல…
அந்த அவள் உயிருள்ள மங்கையும் அல்ல….
அவள் பாரதி தீராத காதல் கொண்டிருந்த உயிர்க் காதலியின் வாரிசுகள்…
ஆம்….
அவள் கன்னி ‘தமிழ்’த்தாயின் பிள்ளைகள்….
அந்த அவள் ‘ஒ’, ‘ஓ’, ‘ஔ’…..
***
பொறுமையாக இருக்க வேண்டும்…
மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்…
எதிரே தடைகள் இருக்கலாம்…
இருந்தால் ஒதுங்கிச் செல்ல வேண்டும்…
முன்னேறிச் செல்லும்போது தோல்வி அடையலாம்…
தோல்விகளைக் கண்டு துவண்டுவிடக் கூடாது….
விடாமுயற்சி செய்ய வேண்டும இலக்கை அடையும் வரை ….
இவை என் வாழ்க்கை கற்றுத் தந்த பாடங்கள் அல்ல…
பெங்களூரு ட்ராபிக் கற்று தந்த பாடங்கள்!!
***
குட்டிக் குட்டி கைகள்…
ரோஜா நிறக் கால்கள்….
உன் குட்டி மூக்கு…
பூந்தளிர்க் கன்னம்…
பிறைநிலா நெற்றி…
இப்படி இருப்பாயாடி என் மருமகளே…!
அண்ணன் ஜாடையில் கண்கள் இருக்குமோ…?
அண்ணி ஜாடையில் குட்டி உதடு இருக்குமோ..?
நித்தமும் உன்னையே எண்ணி
என் கவிதைச் சரக்கும் சுவைக்கவில்லையடி..!.
முதல் முறை உருப்படியாய் என் அண்ணன் தந்த அழகுப் பொம்மை
நீ மட்டும் தான் என் பெண்ணே…!