ஏர் இந்தியா
பவள சங்கரி
ஏர் இந்தியா நிறுவனம் முழுவதுமாகவோ அல்லது அதனுடைய 50% பங்குகளையோ தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் மூலம் அறியமுடிகிறது. விமானங்களுக்குரிய எரிபொருள் மற்றும் சில சலுகைகள் அளிக்கப்பெற்றும் ஏர் இந்தியா நிறுவனம் இத்தொழிலில் வெற்றி பெற முடியவில்லை என்பது வேதனைக்குரியது. பல ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கி ஒரு தனியார் நிறுவனத்தினரால் வெற்றி பெற முடியுமென்றால் அரசு நிறுவனமாகிய ஏர் இந்தியா தன்னுடைய நிர்வாகச் சீர்கேட்டை சீர்செய்து நட்டம் ஏற்படாமல் விமான சேவையை நடத்த முடியாதா என்ற ஐயமே எழுகிறது. அரசு சரியான நடவடிக்கை எடுத்து இந்த நிறுவனத்தைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சி எடுக்கவேண்டும். நவரத்னா நிறுவனங்களும், மினி நவரத்னா நிறுவனங்களும் அரசு நிர்வாகத்தில் சிறப்பான செயல்பாட்டில் இருக்கும்போது ஏர் இந்தியா நிறுவனமும் நவரத்னா நிறுவனங்களைப்போல சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதே நம் நம்பிக்கை.