அரவணைப்பாய் ஆண்டவனே !
( எம் .ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )
பாயிலே படுத்தாலும் பாடிடுவேன் ஆண்டவனே
நோயென்னை வதைத்தாலும் உனைமறவேன் ஆண்டவனே
நாள்முழுக்க வேதனையில் நரகமதைக் கண்டாலும்
வாழ்நாளில் உன்நாமம் மறக்காமல் செபித்திடுவேன் !
பரிசு பலபெற்றாலும் பட்டமெலாம் கிடைத்தாலும்
உரிமையுடன் உன்நாமம் உரைத்துநிற்க நான்மறவேன்
அருமருந்து உண்டாலும் அருகில்பலர் இருந்தாலும்
ஆண்டவனே உன்துணையே அமிர்தமாய் அமையுமன்றோ !
இன்பம்பல நான்கண்டேன் இனிமையுடன் வாழ்ந்திருந்தேன்
இப்போது அவையாவும் எட்டியே நிற்கிறதே
இல்லறமும் கசக்கிறது இனிமையெலாம் உறைக்கிறது
என்றாலும் ஆண்டவனே நீமட்டும் இனிக்கின்றாய் !
சுகமுடனே இருக்கையிலே சுற்றமெலாம் சூழ்ந்திருந்தார்
சுகம்குறைந்து போகையிலே தூரரவர் நிற்கின்றார்
சுகமனைத்தும் பெற்றுநின்றார் சுமையென்றே எண்ணுகிறார்
சுமைதாங்கி ஆண்டவனே சுமையென நீயெண்ணாதே !
பழம்பழுத்த மரமாகப் பயன்கொடுத்து நின்றிருந்தேன்
பலபேரும் பயன்பெற்று பழமரத்தை நாடிநின்றார்
பழம்கொடுத்த மரமிப்போ உரமிழந்து போனதனால்
பறித்துண்ட பலபேரும் பாராமலே செல்லுகிறார் !
ஆண்டவனே இவ்வுலகின் அதிசயத்தைப் பாராயோ
அன்புபாச நேசமெல்லாம் ஆரிடம்நான் தேடுவதோ
அரைக்கணமும் மறவாமல் உனைநினைக்கும் அடியேனை
அல்லல்பட விட்டிடாமல் அரவணைப்பாய் ஆண்டவனே !