( எம் .ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

 

பாயிலே படுத்தாலும் பாடிடுவேன் ஆண்டவனே

நோயென்னை வதைத்தாலும் உனைமறவேன் ஆண்டவனே

நாள்முழுக்க வேதனையில் நரகமதைக் கண்டாலும்

வாழ்நாளில் உன்நாமம் மறக்காமல் செபித்திடுவேன் !

 

பரிசு பலபெற்றாலும் பட்டமெலாம் கிடைத்தாலும்

உரிமையுடன் உன்நாமம் உரைத்துநிற்க நான்மறவேன்

அருமருந்து உண்டாலும் அருகில்பலர் இருந்தாலும்

ஆண்டவனே உன்துணையே அமிர்தமாய் அமையுமன்றோ !

 

இன்பம்பல நான்கண்டேன் இனிமையுடன் வாழ்ந்திருந்தேன்

இப்போது அவையாவும் எட்டியே நிற்கிறதே

இல்லறமும் கசக்கிறது இனிமையெலாம் உறைக்கிறது

என்றாலும் ஆண்டவனே நீமட்டும் இனிக்கின்றாய் !

 

சுகமுடனே இருக்கையிலே சுற்றமெலாம் சூழ்ந்திருந்தார்

சுகம்குறைந்து போகையிலே தூரரவர் நிற்கின்றார்

சுகமனைத்தும் பெற்றுநின்றார் சுமையென்றே எண்ணுகிறார்

சுமைதாங்கி ஆண்டவனே சுமையென நீயெண்ணாதே !

 

பழம்பழுத்த மரமாகப் பயன்கொடுத்து நின்றிருந்தேன்

பலபேரும் பயன்பெற்று பழமரத்தை நாடிநின்றார்

பழம்கொடுத்த மரமிப்போ உரமிழந்து போனதனால்

பறித்துண்ட பலபேரும் பாராமலே செல்லுகிறார் !

 

ஆண்டவனே இவ்வுலகின் அதிசயத்தைப் பாராயோ

அன்புபாச நேசமெல்லாம் ஆரிடம்நான் தேடுவதோ

அரைக்கணமும் மறவாமல் உனைநினைக்கும் அடியேனை

அல்லல்பட விட்டிடாமல் அரவணைப்பாய் ஆண்டவனே !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *