( எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

 

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

நூலகம் போவது யாவர்க்கும் நன்று

ஆலயம் எங்கள் ஆணவம் போக்கும்

நூலகம் எங்கள் அறிவினைக் கூட்டும் !

 

சாதியும் பாராது சமயமும் பாராது

பதவியும் நோக்காது பணத்தையும் பார்க்காது

படிக்கின்ற மனமுடையார் பலருக்கும் வரவேற்பு

பக்குவமாய் கிடைக்குமிடம் நூலகமொன்றேயாம் !

 

நூல்வாங்க முடியாதார் நூலகத்தை நாடிடுவார்

நூல்தெரிந்து படிப்பாரும் நூலகத்தை நாடிடுவார்

வாழ்வெல்லாம் படிப்பாரும் நூலகத்தை நாடிடுவார்

வளமெனவே அமைந்திருக்கும் நூலகத்தை வாழ்த்திடுவோம் !

 

ஊருக்குள் நூலகம் ஒருகோவில் போலாகும்

பாருக்குள் நூலகம் பலகோவில் போலாகும்

வேருக்கு நீராக நூலகங்கள் இருப்பதனால்

விருப்பமுடன் சென்றிடுவார் வேற்றுமைகள் இல்லாமல் !

 

கோவில்களும் நூலகமும் நாட்டினுக்கு இலட்சணமே

கோரமுடன் போர்வரினும் காக்கச்சட்டம் சொல்கிறது

அதைமீறி சிலநாடு ஆணவத்தால் அழித்துநிற்பின்

அறமென்னும் பெருநெருப்பு அவர்களையே அழித்துவிடும் !

 

நூலகத்தைக் கோவிலுடன் ஒப்பிடவே அஞ்சுகிறார்

குழப்பமெலாம் கோவிலிலே வருமென்றே எண்ணுகிறார்

நூலகத்தைப் பயனாக்கி நுண்ணறிவு பெற்றுநின்றால்

நூலகமே கோவிலெனும் நிலையெமக்கு வந்திடுமே !

 

தாழ்வுமனப் பான்மையினை தான்போக்கி  நிற்பதற்கு

நூலகத்தின் நூல்களெல்லாம் வாழ்நாளில் உதவிநிற்கும்

வேலையெல்லாம் முடித்துவிட்டு விருப்பமுள்ள வேளைகளில்

நாலுமணி நூலகத்தில் நாமிருந்தால் நன்மையன்றோ !

 

கோவிலுக்கும் சென்றிடுவோம் குறையகற்ற வேண்டிடுவோம்

நூலகத்தை வாழ்நாளின் துணையெனவே கொண்டிடுவோம்

கற்பவற்றைக் கற்பதற்கு நூலகத்தைத் தேர்ந்தெடுப்போம்

கற்றபடி கோவிலிலே கடவுளைநாம் தொழுதுநிற்போம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *