நான் அறிந்த சிலம்பு – 239
-மலர் சபா
மதுரைக் காண்டம் – கட்டுரை காதை
வார்த்திகனைச் சிறையிட, ஐயை கோயிலின் கதவம் திறவாமை
தட்சணாமூர்த்தி அணிந்த அணிகலன்களைப்
பார்த்துப் பொறாமையுற்ற
அரசுப் பணியாளர்கள் சிலர்
“இவன் புதையலைக் கவர்ந்த பார்ப்பனன்”
என்றே கூறிக்
கள்வரை அடைக்கும் சிறையில்
அவனை அடைத்தனர்.
அங்ஙனம் சிறையுற்ற
வார்த்திகனின் மனைவி கார்த்திகை
அம்முறையற்ற செயலால்
பெரிதும் வருந்தினாள்
மயங்கி நிலத்தில் விழுந்து புலம்பினாள்.
ஒரு பாவமும் செய்யாத தன் கணவனுக்கு
நேர்ந்த கொடுமையை எண்ணி
இறைவன் மீது கோபம் கொண்டாள்.
அவளின் இந்தச் செயல் கண்டு
குற்றமேதும் இல்லாத சிறப்பினை உடைய
சிற்ப வேலைகள் அமைந்த
கொற்றவைக் கோயிலின் கதவு மூடிக் கொண்டது.