அரணை……
முனைவர் கி.காளைராசன்
(அரணை = பல்லியைப் போன்று பெரியது. பாம்பு போன்று இருக்கும், பாம்பை அடிக்க முடியாதவர் எல்லாம் இதை அடிப்பர்.)
விடுமுறைக்கு மாரநாடு கிராமத்திற்குச் செல்லும் போதெல்லாம் எங்களது அக்காவும் மாமாவும் தான் எங்களுக்கு எல்லாமும். காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பே எங்களை எங்களது மாமா ஏதாவது ஒரு வயலுக்கு அழைத்துச் சென்று விடுவார். அக்கா சோறு கொண்டு வரும். சாப்பிட்டுவிட்டு வாழைத்தோப்பில் அல்லது கரும்புத் தோட்டத்தில் உள்ள குச்சு வீட்டில் படுத்துத் தூங்குமோம்.
மாலை ஆனவுடன் ஓட்டமும் நடையுமாக வீடு வந்து சேர்வோம். வயலிலிருந்து வீட்டிற்கு வரும் வழியிலேயே கொஞ்சம் கீரை, தக்காளி, கத்தரிக்காய், பாகற்காய், வாழைப்பூ, வாழைக் கிழங்கு என்று எது கைக்கு அகப்படுகிறதோ அதையெல்லாம் அக்கா கையில் பிடுங்கி எடுத்துக் கொள்ளும்.
வீட்டிற்கு அருகில் உள்ள வைகோல் படப்பைச் சுற்றிலும் காளான் முளைத்திருக்கும் அதையும் அக்கா பிடுங்கி எடுத்துக் கொள்ளும். வீட்டிற்கு வந்ததும் அக்கா சமையல் வேலையில் மும்முரமாக இறங்கிவிடும். மாமாவைச் சுற்றிலும் ஒரே சிறுவர் கூட்டமாக இருக்கும். நாங்கள் எல்லோரும் அவரைச் சுற்றி உட்கார்ந்திருப்போம். அவர் உரல் கல்லை தன் கைகளால் நகற்றி அதைத் தன் தொடைமீது ஏற்றி மெதுவாக வயிற்றுக்குக் கொண்டு வந்து அப்படியே நெஞ்சுக்கு ஏற்றிதன் தலைக்குமேலே தூக்கிக் காண்பிப்பார். நாங்கள் அனைவரும் கை தட்டுவோம். அப்படியே அந்த உரலைக் கீழே போடுவார். நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அந்த உரலை அசைத்துப் பார்ப்போம். சிறிதுகூட அசைக்க முடியாது. மாமா வந்து ஒரு கையால் அந்த உரலை அசைப்பார். நாங்கள் எல்லோரும் பலமாகக் கை தட்டுவோம்.
மாமா தனது கையை நீட்டுவார். மற்றொரு கையில் இருக்கும் கொச்சக்கயிறை எங்களிடம் கொடுப்பார். எங்களில் பெரியவனாக விளங்கும் பையன் ஒருவன் அதை வாங்கி அவரது கையில் முழங்கைக்கு மேலே இருக்கமாகக் கட்டிவிடுவான். எங்களை எல்லாம் கை தட்டச் சொல்வார் மாமா. நாங்கள் கை தட்டுவோம். நாங்கள் கை தட்டத் தட்ட அவரது கையை மெதுவாக மடக்கிக் கொண்டே வருவார். சிறிது நேரம் ஆக ஆக, அவரது கை விரைப்பு கொடுக்கும். அந்தக் கொச்சைக் கயிறு “பட்” என்ற சத்தத்துடன் அறுந்து விழும். நாங்கள் எல்லோரும் கை தட்டிக் கொண்டே இருப்போம்.
எங்களை இரண்டு பிரிவாகப் பிரிப்பார். ஒரு பிரிவினரைத் தனது இடது கையைப் பிடித்துக் கொள்ளுமாறு கூறுவார். மற்றொரு பிரிவினரைத் தன் வலதுகையைப் பிடித்துக் கொள்ளுமாறு கூறுவார். அப்படியே தன் கைகள் இரண்டையும் உயர்த்தி அனைவரையும் மேலே தூக்கி சுற்றுவார். இராட்டினம் சுற்றுவது போல சுற்றிக் கொண்டே இருப்பார். இறக்கி விட்டவுடன் கைதட்டுவோம்.
ஒருநாள் எங்களை எல்லாம் ஒரு பனை மரம் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். எங்களை கைதட்டச் சொன்னார். அந்த பனை மரத்தில் பலமாக மோதினார். பலமுறை மோதினார். சிறிது நேரத்தில் அந்த பனை மரம் வேரோடு பெயர்ந்து விழ்ந்தது. நாங்கள் அனைவரும் கை தட்டிக் கொண்டே இருப்போம்.
விளையாடிக் கொண்டு இருக்கும் போதே இருட்ட ஆரம்பிக்கும். அக்கா வந்து எல்லோரையும் சாப்பிடக் கூப்பிடும்.
அப்போதெல்லாம் மின்சாரம் வரவில்லை. வீட்டில் சிம்மினி விளக்கும் லாந்தரும்தான்.
(சிம்மினி என்றால் என்ன?
நான் கல்லூரியில் “சிம்மினி சுவீப்பர்சு – simeny sweepers ”
என்ற கதையைப் படிக்கும்போதுதான் பொருள் புரிந்து கொண்டேன்.)
நன்றாக இருட்டுவதற்குள் எல்லோரும் சாப்பிட்டு விடுவோம். மண்பானைச் சோறு. கும்பாவில் போட்டு அக்கா கொடுக்கும். ஒரு கும்பா நம்ம வயிரைவிடப் பெரியதாக இருக்கும். ஆனால் அதில் இருக்கும் சோறு எல்லாவற்றையும் மிச்சம் இல்லாமல் தின்று விடுவோம்.
சாப்பிட்டு முடித்தவுடன் வீட்டு வாசலில் பாய் விரிப்பு போடுவார்கள். படுத்துக் கொள்வோம். மழை பெய்தால் தான் வீட்டிற்கு உள்ளே சென்று படுப்போம். மாமா கதை சொல்வார். அது பெரும்பாலும் அரணை (பாம்புராணி)க் கதையாக இருக்கும். கதை நன்கு சுவாரசியமாக இருக்கும்.
“அரணை காலையில் வயலுக்குப் போச்சாம்.அங்கே வாழை மரத்துக்குத் தண்ணீர் பாச்சுச்சாம். ஈசானியத்தில் ஒரு மரம் பூத்திருந்துச்சாம்” என்று அன்று அவர் செய்த வேலையை எல்லாம் அரணை செய்ததாக அரணைக் கதை சொல்வார். அரணைக் கதையில் கள்வர்(திருடர்) பற்றிய கதைகள் அதிகம் இருக்கும். கதை மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். பல நேரங்களில் பாதி கதை கேட்கும் போதே நாங்கள் தூங்கிப் போவோம். இரவில் தீடீரென்று முழித்துப் பார்த்தால் ……….
அக்காவையும் காணோம்….
மாமாவையும் காணோம்….
அக்காஅ……அ
அக்காஅ……அ
மாமாஅ…….அ
மாமாஅ……அ
அழுவதுபோல் கத்துவோம்.
“டேய் அதோ பாருடா, ஒத்தக்கை முத்துராக்கு வராண்டா, அழுதா ஒத்தக்கை முத்துராக்கு பிடிச்சுட்டுப் போயிருவாண்டா பேசாமல் படுங்கடா” என்று உடன் படுத்திருக்கும் பெரியவர்கள் மிரட்டுவார்கள், அப்படியே அழுகையை நிறுத்தி விட்டு படுத்துக் கொள்வோம். ஒத்தக்கை முத்துராக்கு என்றால் அப்படியொரு பயம்.
அக்கா அர்த்த ராத்திரியில் காணாமல் போனது எங்களுக்கு மன வருத்தமாகப் போனது………. நித்தமும் ராத்திரியில எழுந்து அக்காவைத் தேட ஆரம்பித்தோம். இப்போதெல்லாம் முழித்துப் பார்த்தால் அக்கா எங்களுக்குப் பக்கத்திலேயே படுத்திருக்கும். ஆனால் மாமாவை மட்டும் காணோம். ஒருவேளை அந்த ஒத்தக் கை முத்துராக்கு வந்து பிடிச்சுட்டுப் போயிட்டானோ?
அக்காவை உசுப்பி அக்கா, அக்கா ……. மாமாவைக் காணோம். ஒத்தக்கை முத்துராக்கு பிடிச்சுட்டுப் போயிட்டான் என்போம். மாமா “வயலைக் காக்கப் போயிருக்கு” என்று அக்கா சொல்லும்.
இப்படியாக நாட்கள் நகரும். ஒவ்வொரு நாளும் விடிவதும் தெரியாது. பொழுது போவதும் தெரியாது. விடியும் நேரம் மாமா வந்து எங்களை உசுப்புவார். சாம்பலைக் கையில் கொடுத்து பல்தேய்கச் சொல்வார். வாய்க்கால் தண்ணியில் வாயைக் கொப்பளித்துக் கொண்டு வயலுக்குச் சென்று விடுவோம்.வயலில் பனைமரம் ஏற்றம் இருக்கும்.கையில் ஒரு மூங்கிலைப் பிடித்துக் கொண்டு மாமா திலா இரைப்பார்…. வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவார். கிணற்றை எட்டிப் பார்ப்போம். மூங்கிலால் வட்டமாகப் பின்னி (தற்போது சிமிண்ட் உரை) உள்ளே வைத்திருப்பார்கள்.ஐந்தாறு அடி ஆழத்தில் தண்ணீர் கிடக்கும்.
கிணற்றை எட்டிப் பார்த்தால் மாமா அதட்டுவார். ஒவ்வொருத்தனைப் போலவே ஒரு பேயும் இருக்கும். அது கிணத்துக்குள்ளதான் ஒழிந்திருக்கும் எட்டிப் பார்த்தால் அது உன்னைக் கிணத்துக்கு உள்ளே தள்ளி விட்டுவிட்டு அது மேலே வந்து விடும் என்று பயம் காட்டுவார்.
அன்றொரு நாள்….
வயலில் மாமா ‘திலா’ இரைத்துக் கொண்டிருந்தார். அக்கா சோளச்சோறு கொண்டு வந்துச்சு, நாங்கள் எல்லாம் அதைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். மாமா கீழே இறங்கி வந்து மண்வெட்டியை எடுத்து பாத்தி கட்டிக் கொண்டு இருந்தார். எங்கோ தூரத்தில் லாரி வரும் சப்தம் கேட்டது. அந்தச் சப்தத்தைக் கேட்டதும் மாமா நிமிர்ந்து சப்தம் வந்த திசை நோக்கிப் பார்த்தார். வெகு தூரத்தில் “லாரி” வருவதால் புழுதியாகத் தெரிந்தது. லாரியே தெரியவில்லை. அதைப் பார்த்தவுடன் மாமா மண்வெட்டியை அக்காவிடம் கொடுத்து இதைக் கழுவி வை. இவங்கள வீட்டிற்குக் கூட்டிக்கிட்டுப் போ என்று கூறிவிட்டு வேகமாக ஓடினார்.
ஓடிச் சென்று மாரநாடு – பழையனூர் செம்மண் சாலையை அடைந்தார். இவர் சாலையை அடைவதற்கும், அந்த புகையிலை ஏற்றி வந்த சின்ன லாரி அந்த இடத்திற்கு வருவதற்கும் சரியாக இருந்தது. நாங்கள் வயலில் நின்றபடி மாமாவைப் பார்த்துக் கொண்டிருந்தோம். மாமா தன் துண்டைக் காட்டி வண்டியை நிறுத்தினார். அதில் ஏறிச் சென்று விட்டார். லாரி பழையனூருக்குச் சென்றுவிட்டது. ஒரே செம்மண் புழுதி. அதையே வீடு செல்லும் வரை பார்த்துக்கொண்டே சென்றோம். அக்காவிடம் கேள்விமேல் கேள்வியாகக் கேட்டோம். “அது கிடக்கு விடுங்கடா” என்று சொல்லி அக்கா ஏதுவும் சொல்லவில்லை.
மாலை பொழுது சாயும் நேரம் மாமா திரும்பி வந்தார். கையில் ஒரு புகையிலைப் பொட்டலம். உள்ளே சிறு சிறு பொட்டலங்களாக இருந்தன. அதை அப்படியே அங்கே உட்கார்ந்திருந்த ஒரு வயதான ஆயாவிடம் கொடுத்துவிட்டார். வேடிக்கை விளையாட்டு நிலாச் சோறு எல்லாம் முடிந்தது.
மாமா அரணைக் கதை சொல்ல ஆரம்பித்தார். காரைக்குடியில் தங்கப் பசுப்பம் புகையிலை தயாரிக்கப்பட்டு பேப்பர் சுத்தி லாரியில் ஏற்றி ஊர் ஊராகச் சென்று விற்பது பற்றிய கதை அது. அதில் அரணையையும் சேர்த்துக் கொண்டார்.
அரணைக் கதை ஆரம்பமாகிறது …. ஒருநாள் இந்த புகையிலை வண்டி திருப்பாச்சேத்தியிலிருந்து மாரநாடு வழியாக பழையனூர் செல்கிறது. செல்லும் போது யாரோ நடுரோட்டில் நின்று கொண்டு வண்டியை மறிக்கின்றனர்.
ஓட்டுனர் வண்டியை நிறுத்துகிறார். நிறுத்தியவர்கள் வண்டியின் உள்ளே ஏறி சன்னல் வழியாக கையை விட்டு புகையிலைப் பொட்டலங்களை அள்ளிச் சென்று விடுகின்றனர்.
புகையிலை வண்டி ஓட்டுனர் முதலாளியிடம் போய்ச் சொல்கிறார். அவர் காவல்நிலையத்திற்குப் போய் “பிராது” எழுதிக் கொடுத்து கரிசனமாகக்(?) கவனித்துக் கொள்கிறார்.
அதன் பேரில் திருப்பாச்சேத்தி காவல் நிலையத்திலிருந்து காவலர்கள் வந்து அரணையைக் (மாமாவைக்) கூட்டிச் சென்று விட்டனர். விசாரைணை(?) நடைபெறுகிறது. “நான்” புகையிலை போடுவது கிடையாதுய்யா… எனக்கும் இந்தத் திருட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைய்யா என்கிறது அரணை.
அப்ப சம்பந்தமில்லாமலா நாங்கள் உன்னை இங்கே அழைத்து வந்தோம் என்று அரணையை நன்றாகக் கவனித்து(?) உள்ளனர். அடிமேல் அடி விழுந்தாலும் புகையிலைப் பொட்டலத்தை எடுக்கவில்லை என்று அரணை சொல்லிக் கொண்டே இருந்தது. அடித்த பிரம்புகள் உடைந்தது தான் மிச்சம்.
கடைசியில் அந்த காவல் அதிகாரிக்கு திடீரென்று ஒரு யோசனை உதயமாகி விட்டது. அந்த “டிரைவரை”க் கூட்டிக்கிட்டு வாங்க,
இவன்தானா? என்று அடையாளம் காட்டச் சொல்லுங்கள் என்றார்.
ஐயா “டிரைவர்” வண்டியை எடுத்துக்கிட்டு வியாபாரத்திற்குப் போயிட்டாரு, அவரு ஒருநாள் இங்கே வந்தாலும் ஒருநாள் வியாபாரம் படுத்துப் போயிடும் ஐயா”, இவரை இப்படியே விசாரிச்சு விடுங்கையா, என்றார் பிராது கொடுத்தவர்.
காவல் அதிகாரி இப்போது அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. என்னையா சொல்கின்றீர்கள். உங்களுக்கு மட்டும் தான் பிழைப்பு இருக்கா, உங்க டிரைவருக்கு மட்டும்தான் வேலையிருக்கா.
எங்களுக்கு எல்லாம் வேலையில்லையா? எனக்கு வேற வேலையே யில்லையா? இந்த ஆளை சந்தேகத்தின் பேரில் எவ்வளவுதான் அடிக்கிறது. நாளைக்கு “டிரைவர்” இவரை அடையாளம் காட்டினால்தான் உண்டு என்று “கறாராகக்” கூறிவிட்டார்.
மறுநாள் விடிந்ததும் விடியாததுமாக புகையிலை வண்டி திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் நின்றது. டிரைவர் வந்து பார்த்தார். அன்றைக்கு புகையிலைப் பொட்டலத்தைப் பிடுங்கிச் சென்றது “இவர் இல்லை”
அவன் வேறு ஒரு ஆள் என்னால் நன்றாக அடையாளம் காட்ட முடியும் என்று சொன்னார்.
காவல் அதிகாரிக்குக் கடுமையாகக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“பின்னே யாருய்யா இந்த ஆளை இங்கே கூட்டி வந்தது?” என்று திட்டித் தீர்த்தார். தலைமைக் காவலரைக் கூப்பிட்டு அதிகாரி விசாரித்தார்.
”ஐயா இவர் கள்ளன். இவரைக் கேட்டு விசாரித்தால்(?) யார் களவு செய்தது என்பது தெரிந்து விடும். அதனால்தான் இவரைக் கூப்பிட்டு வரச் செய்தேன். மற்றபடி புகையிலைப் பொட்டலம் திருட்டிற்கும் இவருக்கும் நேரிடையாகத் தொடர்பு இல்லை ஐயா ” என்றார்.
“ஏய்யா…… இதை முதலிலேயே சொல்ல வேண்டியதுதானே, அடிச்சு அடிச்சு எனக்கே கை வலிக்குதையா! அந்த ஆளைக் கூப்பிடுங்கையா!” என்றார்.
அரணை (மாமா) அந்த அதிகாரி அவர் முன்னே போய் நின்றது.
“உன் பேரென்ன?”
”சோணை.”
“இந்தப் புகையிலைப் பொட்டலத்தைத் திருடுனது யாருனு உனக்கு தெரியுமா?”
”தெரியாதுய்யா.”
“சரி நாளையிலே இருந்து அந்தப் புகையிலை வண்டி வந்தா அதுகூட நீயும் ஏறிப்போ திருட்டு நடக்காமப் பார்த்துக்கோ”
”சரிய்யா.”
“உனக்கு ஒரு பொட்டலம் புகையிலை தரச் சொல்றேன்”
”சரிய்யா”
“இனிமேல் இந்த புகையிலை வண்டியில் யார் திருடினாலும் நீதான் பொறுப்பு, திருட்டு நடக்காம பார்த்துக்கோ”
”சரிய்யா”
“ஏட்டு அந்த புகையிலைக் கம்பெனி ஆளக்கூப்பிடு, அந்த டிரைவரையும் கூப்பிடு”
“இந்த ஆளை (அரணையை)ப் பார்த்துக்குங்க, நீங்க திருப்பாச்சேத்தி தாண்டினதும் யார் வண்டியை மறித்தாலும் இந்தப் புகையிலை வண்டிக்குச் ’சோணை காவல்’ என்று சொல்லுங்கள்”
”சரிங்க ஐயா”
“இந்த ஆளையும் வண்டியில் ஏற்றிக் கொள்ளுங்கள். திரும்பும் போது இவரை இறக்கி விட்டுவிடுங்கள்”
”சரிங்க ஐயா”
“இவருக்கு ஒரு புகையிலைப் பொட்டலம் கொடுக்க வேண்டும்”
”சரிங்க ஐயா”
“சோணையைக் கூட்டிக்கிட்டுப் போயி கடையில சாப்பாடு வாங்கிப் போடுங்க, மிக்சரும் முருக்கும் வாங்கிக் கொடுங்க….”
”சரிங்க ஐயா”
அன்றிலிருந்து இந்தப் புகையிலை வண்டிக்கு அரணை தான் காவல்.
“அரணை காவல்” என்றால் யாரும் திருட மாட்டார்கள். அப்படியும் யாராவது புகையிலையைத் திருடிவிட்டால் என்ன செய்வது?
தர்மஅடி தர்மவழியில் நடக்கும் அரணைக்குத்தானே விழும்.
அதுதான் இன்னைக்கும் அரணை காவலுக்காக புகையிலை வண்டிக்குப் போச்சு”, என்றார்.
அப்புறம் மாமா…
டேய்…. தூங்குங்கடா….
ஒத்தக்கை முத்துராக்கு வராண்டா…
எல்லோரும் தூக்கி விட்டார்கள்….
நான் மட்டும் ஒருகையில் அக்கா கையையும்
மறு கையில் மாமா கையையும் பிடித்துக் கொண்டேன்.
ஒத்தக் கை முத்துராக்கு வந்து இவர்கள் இருவரையும் கூட்டிக் கிட்டு போகாமல்… களவு நடக்காமல் நான் காவல் செய்தேன்….
புரூக்கிலின் எம்ஜிஆர் மாதிரி…. இப்போதும் அரணை உள்ளது. தலைமட்டும் பெரியதாக வலுக்கையாக இருக்கு, உடம்புல எலும்பு மட்டுமே இருக்கு. காதுக்கிட்டப் போய் பெயரைச் சொன்னால் கண்திறந்து பார்க்கும், கையால் தடவிப் பார்த்துச் சிரித்துக் கொள்ளும் .
அரணையின் கதையும் தொடரும்….
அரணை சொன்ன கதைகளும் தொடரும்….
அரணை, பிள்ளைபூச்சி போன்றவை சாதுக்கள். அப்பாவி. முதல் தர்ம அடி அவைகளுக்கே. கேட்டால், மைந்த இயல்பு என்பார்கள்!
சாமானிய கிராம மக்களின் வாழ்க்கையை வெகு இயல்பாகச் சொல்லி கண்களில் நீரை வரவழைத்து விட்டார் ஆசிரியர். கதையின் தலைப்பு வெகு பொருத்தம். பாராட்டுக்கள் சார்!