கபீர்தாசரின் கவிதைகள் – (2) தமிழாக்கம்: க. பாலசுப்ரமணியன்
க. பாலசுப்பிரமணியன்
துயரத்தில் இறைவனைத் தேடும் மனிதா
சுகத்தில் அவனை ஏன் தேடுவதில்லை ?
சுகத்தில் அவனை நீ நாடிவிட்டால்
துயரமே என்றும் வருமோ உனக்கு ?
வாசம் இங்கே வாசம் அங்கே
வாசம் தேடும் கஸ்தூரி மானே
வாசம் வருவது உள்ளிருந்து
விளங்கிடும் நாளும் வந்திடுமோ ?
குருவும் இறைவனும் ஒன்றாய் நின்றால்
அடைவேன் சரணம் யாருடைப் பாதம் ?
குருவின் பாதங்களே முதலில் சரணம்
குருவே காட்டினான் இறைவன் பாதையை !
சொல்வாய் என்றும் சொற்கள் இனியவை
சொல்லில் ஆணவம் சுத்தமாய் நீக்கி
சொல்லின் இனிமையை சுகமாய் உணர்ந்து
சொல்வாய் சொற்கள் இனிமையைப் பகிர்ந்து.
ஒரே உரையில் உண்டோ இருவாள்கள்
ஒரே இடத்தில் உண்டோ அன்பும் அகந்தையும் ?
ஒரே முகத்தில் கண்களும் காதும்
பார்த்திடும் கண்கள் என்றும் கேட்டதில்லை !
நாளை செய்வதை இன்றே செய்
இன்று செய்வதை இப்பொழுதே செய்
நல்லவை செய்திட நாட்களைத் தேடாதே
நாளைய பொழுதை யாரே அறிந்தார் ?
செடியினில் மொட்டுக்கள் முனங்கின மெதுவாய்
மறைந்தே வருகிறான் மலர்கள் பறித்திட
மணமாய் மலர்ந்த மலர்கள் மறைந்திடும்
மலர்ந்திடும் நமக்கும் நாளை வந்திடும் !