மார்கழி மணாளன் ( மூன்றாம் பகுதி) -1
க. பாலசுப்பிரமணியன்
திரு வல்லபர் (திருவல்லா)
மார்கழி பிறந்தது மங்களம் நிறைந்தது
மாதவன் நினைவில் மகிழ்வும் வளர்ந்தது
மாலையை ஏந்திய கோதையைப் போல
மாலனைத் தேடி மனமும் சென்றது !
ஆயிரம் பரிதிகள் அணியாய் வந்ததோ
பாயிரம் பாடிப் பணிவாய் எழுப்பிட ?
தாயிடம் சேய்போல் தவழ்ந்தது உலகமே
வேறிடம் இல்லை வேங்கடன் பாதமே !
சேடனின் உடலினில் சீருடன் கிடந்தும்
வேடங்கள் பலவும் விந்தையாய் எடுத்துத்
தேடிய நெஞ்சங்களைத் தேடியே வருவான்
தேனினும் இனிய திருவுடை அரங்கன் !
கூப்பிடப் பெயர்கள் கோடியில் உண்டு
கூவியே அழைத்தால் கோவிந்தன் வருவான்
கூரிட அரக்கரைக் கூடவே இருப்பான்
கூப்பிடும் கைகள் குலத்தினைக் காக்க !
தோளுடை வலிமை துவாரகை வளர்ந்தது
தோகளன் வதைக்கத் துணையாய் வந்தது
தோளுடைத் துணியை தோதுடன் விலக்கிடத்
தாயவள் தரிசனம் திருமார்பில் கிடைத்தது !
வல்லவை கரையினில் வளர்ந்திடும் அருளே
வானவர் வேதியர் வணங்கிடும் வல்லபா !
வந்தவர் நின்றவர் வேண்டிய பொழுதில்
வல்லமை வழங்கிடும் வானுறை வேங்கடா !
சங்குடன் சக்கரம் சங்கடம் நீக்கிடும்
மங்கிடா ஒளியினை மதியினில் சேர்ந்திடும்
தங்கிடா துயரங்கள் தாள்களைப் பற்றினால்
பங்கிலாப் புகழ்தரும் பாவையின் நாயகா !!