மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 1
இன்னம்பூரான்
26 02 2018
நாத்திகமும், அதுவும் அற்ற வாழ்வியலும் மதாபிமானங்கள் தான் என்பதைத் திட்டவட்டமாக அறிக. மனிதன் தோன்றியபோதே, இயற்கையின் கூற்றுகள் அவனுடைய சிந்தனையை பாதித்தன; தூண்டுவித்தன; அலைபாய விட்டன; அச்சமூட்டின; கற்பனைக்கு வித்திட்டன; படைப்பாற்றலுக்கு உரமிட்டன. மின்னலடித்த மானம் அவனை, அவளை பயமுறுத்தியது; உடனுறைந்த இடி பீதியடையவைத்தது; அடுத்து வந்த மழை வியப்பைக் கூட்டியது. ஆண்-பெண் உறவு மனிதன் தோன்றுவது பலகோடி வருடங்களுக்கு முன்பே இயற்கை அன்னையின் வரமாக அமைந்தது. கானகத்தே வாழ்ந்த பழங்குடிகள் சிங்கம், புலிகளின் இனப்பெருக்கத்தைக் கண்டார்கள். தாங்கள் வளர்த்த கால்நடைகளின் வாழ்வியலை பாடமாக கற்றார்கள்; ஆதாம்-ஈவாள்-ஆப்பிள்-அரவம்-சாத்தான் கதை பிறப்புதற்கு முன், தொல்காப்பியர் பிற்காலம் பாராட்டிய கலவி பேரின்பத்தை சுவைத்தார்கள். அது ஒரு தொடர்கதை. தொன்மை இலக்கியம். அது செவி வாழ் இலக்கியமாகவும், பின்னர் எழுத்து இலக்கியமாகவும் பிறந்தது. சில வகையில் அது மதாபிமானத்துக்கு வித்திட்டது என்றாலும், தொன்மம் என்ற வாழ்வியல் இலக்கியம், மதாபிமானங்கள் போல் (நாத்திகம் உள்பட) மூளைச்சலவையில் ஈடுபடவில்லை. மதாபிமானங்கள் எல்லாம் தாழ்ந்தவை அல்ல. அவற்றில் வைணவம், பெளதம் போன்றவை, ஏன் எல்லா மதாபிமானங்களும் (நாத்திகம் உள்பட) வாழ்வியலின் உன்னதமான நிலைப்பாடுகளை போதித்திருப்பதை தற்கால விஞ்ஞானம் வெளிப்படுத்துவதை காண்கிறோம்.
எனக்கு வயது 85. மூன்று வாரங்களுக்கு முன் காலை உடற்பயிற்சிக்கு சென்றபோது கவனக்குறைவால் (?) ஒரு கான்கிரீட் பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்தேன். எனவே, சில சொற்களுக்கு மேல் எழுதமுடியவில்லை. சிறிய பகுதிகளை பதிவு செய்வதை வாசகர்கள் பொறுத்தாளவேண்டும். வழக்கம் போல் சித்திரம் போடவில்லை. காட்டாறு போல் சிந்தனையாறு பெருக்கெடுக்கும்போது, சித்திரம் ஏதுக்கடி குதம்பாய்!
ஒரு இறுதி வரி. திறந்த மனம் வேண்டும். போலி பகுத்தறிவு போறாது.
-#-
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com
போலி பகுத்தறிவு போறாதா? எதுக்கு போலிப்பகுத்தறிவோ அல்லது எந்த போலித்தனமும் வேண்டும்?
உங்கள் உடம்பும் ஆரோக்யமும் சரியாகி வருகிறதா? உங்கள் மூவ்மெண்ட் முன்பிருந்தார்போல் சரியாகி விடும் என நம்புகிறேன்.
சரியான நேரத்தில் போலி பகுத்தறிவைப்பத்தி எச்சரிக்கை கொடுத்துள்ளீர்கள். தமிழ்நாட்டையும் தமிழர்களையும் வாட்டுவது சிறியார் ஈ.வே.ரா. தந்த `கொடை` – போலிப்பகுத்தறிவு. பகுத்தறிவு எல்லா மனிதர்களுக்கும் எக்காலத்திலேயும் உள்ளது. கற்கால மனிதன் எப்படி விலங்குகளை வேட்டையாடுவது , எப்படி தப்பிப்பது முதல் தற்கால விண்வெளி சாடிலைட் வரை , அல்லது ஒரு விவசாயி எப்பொழுது எப்படி எதை பயிரிடலாம் வரை மனிதன் பகுத்தறிவை பயன்படுத்துகிறான். ஆனால் சிறியார் பக்தர்களோ அவர்கள்தான் பகுத்தறிவை கண்டுபிடித்தவர்கள் போல் குதிக்கின்றனர்.
பகுத்தறிவுத் தந்தை பெரியார்தான் கடவுளை நம்பும் கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டைன், திருவள்ளுவர், இளங்கோவடிகள், ஆண்டாள், அப்பர், சுந்தரர், சம்பந்தர், வாசகர், அன்னை தெரேசா, பாரதியார், டாக்டர் அப்துல்கலாம், டாக்டர் இராதாகிருஷ்ணன் போன்ற மேதைகள் எல்லாரையும் முட்டாள்கள் என்று இகழ்ந்தவர்.
சி. ஜெயபாரதன்
சிறியார் மேதைகள் மட்டுமல்ல கடவுளை நம்பும் எவரும் முட்டாள் அல்லது அயோக்யன் என திட்டியவர். பகுத்தறிவு தன் சொந்த, பிரத்யேக சொத்து , அது மத்தவர்களுக்கு சொந்தம் இல்லை என நினைப்பவர்தான் அப்படி பேசுவார்.
அது நிற்க
இன்னாம்பூராரின் பள்ளத்தில் வீழ்வும் , அதனால் ஏற்பட்ட காயங்களும் நகரப்புர நிர்வாகம் எந்த அளவு மோசமாக உள்ளது என காட்டுகிறது. மெட்ராஸ் 60கள் வரை வாழ்வதற்கு உகந்ததாக இருந்தது. இப்போது ரிடயர் ஆனவர்களுக்கு நகரங்கள் நரகங்கள் ஆகி விட்டன. சென்னையில் ஒரு 1 கி.மீ. உல்லாசமான நடை என்பது எட்டாக்கனியாகி விட்டது. நீங்கள் 100 மீட்டர்கள்கூட பள்ளத்தில் விழ மாட்டீர்கள் ஆல்லது ஓடும் வண்டியினால் இடி பட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் செல்ல முடியாது. மொழி , நாடு, மதம் பற்றி பெருமிதம் அடைவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை – தினசரி வாழ்க்கையை தரப்படுத்தமுடியாவிட்டால்.
Please bear with me for some time. I am on the recovery path. Thanks