-இரா.சீனிவாசன் 

முன்னுரை

“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்ற ஔவைப் பிரட்டியாரின் வாக்கிற்கு இணங்க மானிடப் பிறவியைப்  பெற்ற மக்கள் நல்ல வாழ்வியல் முறைகளைப் பின்பற்றி வாழ்தல் அவசியமாகும். இயற்கையோடு இயைந்து இணைந்து இன்பமாக வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். மனிதன் தன் வாழ்க்கைக்கு இயற்கையே துணை என்பதை உணர்ந்தான். ஆதலால் இயற்கையைத் தன் வாழ்வோடு இணைத்து, மனிதன் தன் தேவைகள் அனைத்தும் இயற்கைப் பொருட்களிடமிருந்துக் கிடைக்கின்றன என்பதைப் புரிந்துக் கொண்டான். அவ்வாறு அவர்கள் இயற்கையோடு இணைந்து நிலத்தையும், பொழுதையும் பயன்படுத்தியதைத் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களின் வழி அறியலாம். தமிழில் தோன்றிய இலக்கிய வகைகளுள் மிகவும் முக்கியமானது திணை இலக்கியமாகும். இவை நில அடிப்படையானது. நிலமும் பொழுதும் இயற்கைப் பின்னணியும் மனித வாழ்வும் இயைபடப் புனையப்படுவது திணை இலக்கியமாகும். திணை இலக்கியத்தை அகம், புறம் என்று இரண்டாகப் பிரிக்கிறார் தொல்காப்பியர்.

முதல் எனப்படுவது நிலம் பொழுதிரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே
   (தொல்.அகத்,4)

மேலும் தமிழ்மொழியின் சிறப்பினைக் கூறுகையில்,

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து
எனத் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் தமிழகத்தின் எல்லையைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

கல்தோன்றி மண்தோன்றிக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’ எனப் புறப்பொருள் வெண்பாமாலை தமிழர்களின் தொன்மையைக் குறிப்பிடுகின்றது. இலக்கண இலக்கிய வளங்களோடும் வாழ்வின் மேம்பட்ட நாகரிகத்தோடும் வாழ்ந்த இனம் தமிழினம். தமிழர் தாம் வாழுகின்ற நிலங்களுக்கேற்பத் தமது தொழில், வாழ்க்கை அமைப்பு முறையை வகைப்படுத்தி வாழ்ந்துள்ளனர் என்பதை,

முதல் கரு உரிப்பொருள் என் மூன்றே      எனத் தொல்காப்பிய நூற்பா–  949உம்    மாயோன் மேய  எனத் தொல்காப்பிய நூற்பா– 951-உம் இயம்புவதை நாம் உணரவேண்டும். இதன் மூலம் தமிழர்களின் வாழ்வியல் விழுமியங்கள் வெளிப்பட உணர்கிறோம். தமிழர்கள் தாம் வாழும் நிலங்களுக்கு ஏற்றாற் போல வாழ்க்கைமுறையை அமைத்துக் கொண்டனர் எனலாம். அவற்றை முறையே,

1) குறிஞ்சிநில வாழ்வியல்    2) முல்லைநில வாழ்வியல்
3) மருதநில வாழ்வியல்      4) நெய்தல்நில வாழ்வியல்
இங்கே நாம் முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் வாழ்வியலைக் குறித்து ஆய்வுக் கட்டுரையில் காண்போம்.

குறிஞ்சி நில வாழ்வியல்:

மலையும், மலைசார்ந்த இடமும் குறிஞ்சி எனலாயிற்று. இங்கு வாழும் மக்கள் குறிஞ்சிநில மக்கள் என அழைக்கப்பட்டனர். நிலம் பொழுது என்பதை முதற்பொருளாகவும், தம் வாழ்வியலோடு இயைந்த தெய்வம், உணவு, விலங்குகள், மரம், செடி, கொடிகள், தொழில் போன்றவற்றைக் கருப்பொருளாகவும், தலைமகனுக்கும், தலைமகளுக்கும் இடையே உள்ள உணர்வைக் கொண்டு உரிப்பொருள் எனவும் வகைப்படுத்தினர். குறிஞ்சிக்கான பெரும்பொழுது கூதிர், முன்பனி எனவும், சிறுபொழுது யாமம் எனவும் பிரித்ததனை

“…………… குறிஞ்சி:  கூதிர், யாமம் என்மனார் புலவர்                              எனப் பாடுகிறது தொல். நூற்பா பாடல் எண் (952). இந்நில மக்களினுடைய தொழில் தேன் எடுத்தல், தினைப்புனம் காத்தல், இந்நில மக்களுடைய அகவொழுக்கமானது களவு, கற்பு என வரினும் அவை அறத்தொடு நிற்றலாய் விளங்குவதை அகப்பாடல்வழி நம்மால் உணர முடிகிறது. இந்நில மக்களின் காதற்சிறப்பு சங்கப் பாடல்களின் கற்பனைத் திறனையும், வாழ்வியல் விழுமியங்களையும், தலைவன் தலைவிக்கிடையே ஏற்படும் காதல் நிலைப்பாடுகளையும், தோழி, செவிலித்தாய், நற்றாய் முதலானோர்களின் அறவுரைகளையும், அறிவுரைகளையும் எல்லாவற்றிற்கும் மேலாகக் கதைப்பாங்கிலும் அமைந்துள்ளதை நம்மால் உய்த்துணர முடிகிறது. ஒரு குறமகள் வேங்கை மலர்களைப் பறிக்க எண்ணினாள். மிக உயர்ந்த மரக்கிளையில், பூத்த பூக்களாய் இருப்பதால் அதனைப் பறிக்க விரும்பிய தலைவி “வேங்கை! வேங்கை!” என்று கூச்சலிட்டாள். கானவர்கள் பசுவைக் கொல்லும் புலியென அஞ்சி வில்லோடு காவல் காக்கச் சென்றனர் தத்தம் குடியிருப்பை. அத்தகைய மலைச்சாரலை சொந்தமாய் உடைய தலைவனின் மார்பைத் தன் நெஞ்சு சொந்தமாகக் கொண்டது. “அவனால் அவனது காதலால் என்னுயிரே போவதாயினும் போகட்டும். உனது மகளின் விழிகளில் படர்ந்த பசலையானது காமநோயினால் வந்தது என்று மட்டும் கூறாதே தோழி” என்று தலைவியின் கூற்றைப் படம் பிடிக்கிறது.

“……………. யாக்கை இன்உயிர் கழிவது ஆயினும்,
நின்மகள்               (அகம் -52, 12-15)

எனும் நொச்சி நியமங்கிழார் இயற்றிய குறிஞ்சிப்பாடல்.

முல்லை நில வாழ்வியல்:

காரும், மாலையும் முல்லை”      (தொல். நூற்பா  952)
மாயோன் மேய காடுறை உலகமும்”   தொல். நூற்பா 951  என முல்லை நிலத்தின் நிலம் பொழுதினை வரையறுக்கின்றது.

இந்நில மக்கள் காடும், காடு சார்ந்த இடங்களில் வாழ்கின்றனர். இயற்கை எழில் சூழ வாழ்ந்தனர். இந்நிலவாழ் காதல் தலைமகளானவள் இருத்தலும், இருத்தல் நிமித்தமும் கொண்டு தன் தலைவனை எண்ணி நினைந்து உருகுகிறாள். இந்நில மாந்தர் அன்பில் உயரியவர் எனில் அது மிகையாகாது. வாடுகின்ற தலைவிக்கு கார்காலம் வந்து விட்டது. பிச்சிப் பூக்கள் பூக்கத் தொடங்கி விட்டன. “பெண்ணே! உயிர்களை வருத்தாத உன் அன்பிற்குரிய தலைவன் உனைநினைத்து விரைந்து வருவான், கவலை கொள்ளாதே” எனத் தோழியானவள் ஆறுதல் வழங்கித் தலைவியின் ஆற்றாமையைப் போக்க முயலுகிறாள்.

அதனை காட்சிப்படுத்தும் விதமாகக் குறுங்குடி மருதனார் இயற்றிய பாடல் விரிவதை

தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா
ஆர்த்த மாண்வினைத் தேரன் (அகம் – 4, 11-12) கூறுகிறது.

“கொன்றை மரத்தின் மொட்டுக்கள் அரும்பி மலரும் நாளில் கொம்புகிளைத்த மான்கள் துள்ளிக் குதித்தன. வானகம் தூறலிட்டதில் கானகம் பசுமை பூத்தது. இந்நாளில் வருவதாய் சொன்ன உன் தலைவன் செங்காந்தள் மலர்களைக் காணும் நேரம் உன்னழகினை நினைந்து வருவான். நினைத்ததும் உனைத்தேடி குதிரைபூட்டிய தேரில் விரைந்து வருவான். அவ்வாறு வரும் வழியில் கோவை மலர்களில் தேன் எடுக்க மூழ்கியிருக்கும் வண்டுகள் தேனின் மணிச்சத்தம் கேட்டு பறந்து விடும் என்றஞ்சி மணியின் நாவைக் கட்டி ஓட்டி வருவான்” எனக் கூறும் தோழி, “வண்டினத்தைக் கூட வாடவிடக்கூடாது என்று நினைக்கும் உன் தலைவன் உனை வாட விட்டு விடுவானோ?” எனக் கேட்கிறாள். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காரணத்தால் மட்டுமே வண்டிற்கும் கூட வலி ஏற்படாதிருக்க மனம் இரங்கினான் தமிழன் எனும் நிலையை முல்லைப் பாடல் வழி நம்மால் அறிய முடிகிறது.

இயற்கையை இரசிப்பது மட்டுமன்று, போர்க்காலத்து நாளிலும் பகைவரை எல்லாம் சாடித் தன் காதல் தலைவியின் இளமை நலம்துய்க்கத் தேரினை விரைந்துசெலுத்திடத் தேர்ப்பாகனுக்கு ஆணையிடுகிறான் தலைவன் என்பதை

முரண்செறிந் திருந்த தானை இரண்டும்”     (அகம் – 44, 3-6)

எனும் பாடல் வழிக் குடவாயில் கீரத்தனார் கூறுவதை காணும் போது, தலைவனானவன் தலைவியை எக்காலத்தும் தனித்து தவிக்கவிடக்கூடாது எனும் உன்னத நோக்கோடு விளங்குகிறான் என்பதை அறிய முடிகிறது. தலைவன், தலைவியின் நினைவாக மூவிடப் பிரிதலும், தலைவி, தலைவன் நினைவாகக் காத்திருத்தலும் காதலின் இன்பத்தை பெருக்குவதாக விளங்குகின்றது. இதனையே வள்ளுவர் தமது அன்புடைமையில்

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப…  (குறள் – 75) என்கிறார்.

கொலை புரிதல் கொடிய பாவம் எனினும், கூடிய உயிரை வருத்துவது அதை விடப் பாவம் என்பதை முல்லை நில மக்களின் வாழ்வியலால் அறிய முடிகின்றது.

மருத நில வாழ்வியல்:

வைகறை விடியல் மருதம்” என்கிறது தொல்நூற்பா  954. வயலும், வயல்சார்ந்த நீர் நிலை நிரம்பியபகுதி இந்திரனுக்குரிய ஒன்றாகும். இந்நில மக்கள் விவசாயத்தைப் பெரிதும் போற்றி வளர்த்தனர்.

கற்பு நெறியில் தலைவி சிறந்து விளங்குகிறாள். தலைவன் இளமை நலம்துய்க்கப் பரத்தையரிடம் செல்கின்றான். தலைவன் ஒழுக்கம் தவறுவதை மருதநில வாழ்வியல் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது எனினும், இன்பம்துய்த்துத் திரும்பிய தலைவனை, தலைவி ஊடல் நிலையில் வெறுக்கிறாள்.          

வரைவிலா மாணிழையார்… (குறள் – 919)

மிக இழிந்தவர் கிடக்கும் நரகம் எது? ஒரு வரம்பில்லாத பரத்தையரின் தோளாகும் என வள்ளுவப் பெருந்தகை கூறும் கூற்றைத் தலைவியானவள் தன்னை மறந்து தன் இளமை நலம் துய்க்காது பரத்தையரை நாடிச்சென்ற தலைவனைப் பார்த்துக் கூறுகிறாள். மருதத்திணைக்குரிய அகத்திணை ஒழுக்கமென்பது ஊடலும், ஊடல் நிமித்தமும் ஆகும். இங்கே தலைவியானவள் இளமை நலம் எனும் காதல் பெண்பருவத்தில் இருப்பதில்லை. பிள்ளைபெற்ற தாயாகத்தான் பெரும்பாலும் மருதத்திணையில் காட்டப்படுகிறாள். இக்கூற்றை மருதநிலப்பாடல்கள் நமக்கு அறிவிக்கின்றன.

தலைவியோ தன் இளமைக் காலத்துத் தலைவன் தன்னை எவ்வாறு இன்பம் துய்த்தான்; அத்தகைய தலைவன் தான் பிள்ளைபெற்ற தாயானதும், தன்னைத் தலைவன் அணைக்க விரும்பாது ஒதுங்கிப் போகிறான். அவனை அன்போடு தானே அணைக்கச் சென்றாலும் மார்பில் கசியும் பால் தன்மீது படுமென்று ஒதுங்கி நிற்கின்றான் எனத் தோழியிடம் கூறுகிறாள் தலைவி.

தலைவனின் செயலானது, தாமரை நிறைந்த தடாகத்தை எருமையானது கலக்கிச் சேறாக்கும்; பின்பு தாமரையை தின்று மகிழும். அத்தகைய குணம்கொண்ட நீ எனக்கு யாரோ? உன்னோடு நான் எதற்கு ஊடல் கொள்ள வேண்டும்? இவ்வூரே உன்னைப் பற்றித் தூற்றுகிறது. அதனை என்வாயால் நான் சொல்லமாட்டேன். நீ வாழ்க! களிறுகள் நிறைந்த போர்க்களத்தைச் செழியனது வெற்றிபொருந்திய போர்வாள் அழித்ததுபோல, எனது வளையல்கள் நெகிழ்ந்து வீழ்ந்தாலும் வீழ்க என்றாலும், நீ நினைத்த இடத்திற்கே சென்று நீ நினைத்தது போலவே இன்பம் துய்த்திடு. உன்னைத் தடுப்பவர் எவரிங்கே? என்பதை அள்ளூர் நன்முல்லையார் தம்பாடல் வாயிலாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். இங்கே தலைவன், தலைவியின் ஊடல் நிலை மட்டுமல்லாது போர்நிகழ்வும் குறித்தது குறிப்பிடத்தக்கது. ஆகவேதான் அகநானூறு தமிழர்களின் அகவாழ்வை மட்டுமின்றி அந்நாளைய போர் நிலைக்களன்களையும் குறிப்பிடுகிறது.

  “களிறுடை அருஞ்சமம் ததைய நூறும் (அகம் – 46, 12-14) எனும் பாடல் விளக்குகிறது. தமிழரின் பண்டைய திருமண நிகழ்ச்சியை கூறும் மருதநிலப்பாடல் ஒன்றைப் பார்ப்போம். சிலப்பதிகாரத்தில் மணவிழாவிலே “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிய…” என்பது போன்ற நிகழ்ச்சி ஏதும் அன்றைய தமிழர் தம் வாழ்க்கையில் இல்லை என்பதை உரையாசிரியர் உரைக்கின்றார்.

தமிழர் பண்பாட்டின் விழுமியங்களாக இலக்கியச் செப்பேடுகளாக அகநானூற்றைப் போற்றுவது இதன் காரணத்தால் எனின் அது மிகையாகாது. அந்நாளைய தமிழர்கள் நல்லநாள் பார்த்தல், புத்தாடை உடுத்தல், பெருஞ்சோறளித்தல், மங்கல மகளிர் வாழ்த்தல், தமர் அளித்தல் போன்றவைகளே நிகழ்ந்துள்ளன என்பதை நல்லாவூர் கிழார் இயற்றிய மருதநிலப்பாடல் உணர்த்துகிறது.

கோள்கள் நீங்கிய கொடுவெண் திங்கள்  (அகம் – 86, 6-15) என்கின்ற பாடல்வழித் திருமண நாளில் நடைபெறும் நிகழ்வுகளை வரிசைக் கிரமமாகக் கூறி அதாவது, உளுத்தம் பருப்புப் பொங்கலைக் கூடியிருக்கும் சொந்தங்கள் இடைவிடாது உண்டுகொண்டிருந்தனர். முழுமதி வந்த தீங்கற்ற உரோகணி நன்னாள் அது! இருள்நீங்கிய புலர்காலை பூத்தது. உச்சியிலே நிறை நீர்க்குடம் சுமந்தும், இடையிலே மண்கலயங்கள் சுமந்த மங்கல மகளிர் கூடினர். அன்பளிப்பு வழங்கியபடி இருந்தனர். மங்கல மகளிரின் நீராட்டலில் நீரும், பூவும், நெல்லும் கூந்தலோடு உறவாடி நின்றன. அதன்பின் வதுவை மணமும் நிகழ்ந்தது. பின் “கற்பினின்று வழுவாது மணவாளனுக்குரிய இல்லக்கிழத்தி ஆவாய்” என சுற்றம்கூடி வாழ்த்தி எம்மைத் தனி அறை காட்டினர். புணர்ச்சி கொள்ளும் முதலிரவில் புத்தாடைக்குள் புதைந்து கிடந்த பூவையை மெல்ல அணைத்தேன். “உன் உள்ளம் விரும்புவதை ஒளியா சொல்” என்றேன். பொத்திய என் கரமெடுத்து தலைகவிழ்ந்த சித்திரமாய் மௌனமாய் நின்றாள். பூமுகம் என்றும் அவள் தன்பால் எப்போதும் அன்புகொண்டவள். தோழியே தடைபுரிகிறாள் எனத் தலைவியின் அன்புநலம் பாராட்டும் அற்புதப் படப்பிடிப்பாய் அமைந்த பாடலிது. இத்தகைய உயரிய பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட இலக்கியங்களைக் கற்று இன்புறுவதே தமிழர்களாகிய நமக்குக் கிடைத்த பெரும்பேறு.

முடிவுரை

இக்கட்டுரையின் மூலம் மனிதன் தங்கள் வாழ்க்கையோடு நிலத்தையும் பொழுதையும் தொடர்புபடுத்தி வாழ்ந்தான். நிலத்தின் பெயரால் மக்கள் பெயர் அமைவதால் நிலத்தினை உயர்திணையாக்கிப் பேசுவதையும் காணலாம். நிலத்தையும் பொழுதையும் மக்களுக்கு நன்மை பயக்கும் கருவிகளாகக் கொண்டனர். மேலும் அவற்றைப் போற்றிப் பாதுகாத்து வந்தனர். எதிர்காலத்தில் நாமும் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அவற்றின் இன்றியமையாமையை உணர வேண்டுமென்ற உயரிய நோக்கத்தை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

*****

கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்,
அரசு கலைக்கல்லூரி,
கோவை.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இலக்கியங்களில் வாழ்வியல்

  1. பேராசிரியை திருமதி.நித்யா அவர்களுக்கு வணக்கம்.
     எனதுஆய்வுக்கட்டுரையை பதிவேற்றம் செய்தமைக்கு 
    மிக்க நன்றி. காரிருள் கடல் பயணத்தில் தங்களது  
    உதவி கலங்கரை விளக்கு போன்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.