பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

மோகன்தாஸ் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (28.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “படக்கவிதைப் போட்டி (171)

  1. ஓர் ஏழையின் குமுறல்

    கைநிறையப் போடக்
    கலர்கலராக் குவிச்சிருக்கு
    பைநிறையப் பணமிருந்தாப்
    பார்த்துப் பார்த்து வாங்கிக்கலாம்.
    ஏழைக நம்பளுக்கு
    எதுக்கிந்த வளையலெல்லாம்
    வாழ வழியில்லையாம்
    வளையலொரு கேடா
    புதுப் புள்ளத்தாச்சிக்குப்
    போடுவாங்க வளைகாப்பு
    எட்டு மாதப் புள்ளத்தாச்சி
    எம் பொழைப்பு கல்லுடைப்பு

    கல்லுடைக்கும் கைக்கு
    காப்பு சரிவருமா?

    நாட்கூலி வாங்கி நானூத்தும் கஞ்சிலதான்
    ஆத்தா மனம் மகிழும் அவவயிறும் குளிரும்
    சீக்காளி எம்புருசன் செதைஞ்சு கெடக்கையில
    காப்பு வந்து என்னோட கையிலதான் ஏறிடுமா
    வாணா எனக்கிந்த வளைகாப்பு ஆசையெல்லாம்
    வீணாச் செலவழிச்சு வீம்பு பண்ண ஏலாது.

  2. பேரழகு…

    தங்க வளையல் போட்டால்தான்
    தனியே வந்திடும் மதிப்பென்றே
    அங்கம் முழுதும் தங்கமாக்க
    ஆசைப் பட்டிடும் அணங்குகளே,
    தங்கம் தராத அழகினையே
    தந்திடும் சாதா வளையல்களே,
    தங்கிடும் எளிமையும் அடக்கமதுவும்
    தானே கொணரும் பேரழகே…!

    செண்பக ஜெகதீசன்…

  3. வளைக்காப்பு::
    =============

    குலங்கள் தழைக்க குடும்பம் மகிழ
    பலவிதப் பண்டிகைப் பெரிதாய் உண்டு

    நலமுடன் வாழவும் நித்தமும் ஒன்றாய்
    விலகா வண்ணம் வருமாம் அழகாய்

    விளைந்த நல்திரு விழவில் அணியும்
    வளையல் தந்த வகைதான் வளைகாப்பு

    பிரிவினை அகற்றப் பாடம் சொன்னது
    பிரியாது சேர்ந்தே பெண்ணொடு பழகும்

    வட்ட வடிவம் வண்ணத் தோற்றம்
    எட்ட விரட்டும் எதிர்வினை ஒழிய

    வளைந்து பருக்கும் வயிற்றின் ரகசியம்
    வளையலின் மூலம் வருகின்ற உண்மை

    சங்கத் தமிழில் சதங்கையும் வளையலும்
    பொங்கு தமிழாலே புகழுற்ற வரலாறு

    கருவின் உயிரும் கேட்கும் இசையை
    ஒருவித வளையல் ஒலியும் சுகம்தான்

    மனைவி ஆனதும் மங்கை யர்க்கொரு
    வினைகள் வராது வளையல் காப்பது

    “வளைக்காப்பு”

    திளைத்து மகிழத் தருமாம்
    வளையல் சத்தம்.! வருவதும் மங்கலமே.!

    ==========================
    *இணைக்குறள் ஆசிரியப்பா*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.