நிர்மலா ராகவன்

வழிகாட்டல் நச்சரிப்பல்ல

“முனைவர் பட்டப்படிப்பின் ஆராய்ச்சிக்கு உங்கள் கதைகளை எடுத்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். நீங்கள் வழிகாட்ட முடியுமா?” தொலைபேசியில் வந்த கேள்வி அந்த எழுத்தாளரைத் திகைக்க வைத்தது.

முதுகலைவரை படித்தும் சுயகால்களில் நிற்கும் தைரியம் இல்லாது, தனக்கு வழிகாட்ட மற்றொருவரின் உதவியை எதிர்பார்ப்பவரை எண்ணிப் பரிதாபம்தான் மிகுந்தது. பதினைந்து வருடங்கள் கல்வி பயின்ற ஒருவரால் தனக்குள்ளும் திறமை இருக்கிறது என்பதை ஏன் உணர முடியவில்லை?

தன்னால் செய்ய முடிந்த காரியத்திற்கும் பிறரை நாடுபவர் சிறு வயதில் பெற்றோரின் அன்புக்கோ அல்லது அதிகாரத்திற்கோ பணிந்துபோனவர்களாக இருப்பார்கள். ஆசிரியர்களுக்கும் இதில் பங்குண்டு.

ஏழு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுக்குரிய சுதந்தரத்தைக் கொடுக்க வேண்டும்.

`இந்தக் காரியத்தை இப்படிச் செய்!’ என்று அதிகாரம் செய்தால், அவர்கள் பணியலாம். ஆனால் தன்னம்பிக்கையோ, மரியாதையோ எழாது. மாறாக, அன்புடன் வழிகாட்டியதை என்றும் மறக்கமாட்டார்கள்.

உதாரணமாக, `நான் இப்படிச் செய்வேன். உனக்கு எப்படிச் சௌகரியமோ அப்படிச் செய்!’ என்று, முடிவை ஒரு சிறுவனிடமே விடுங்கள். சில முறை தவறுகள் நிகழக்கூடும். ஆனால், தன் ஆற்றலுக்குத் தக்கபடி உங்கள் முறையைப் பின்பற்றுவான்.

அதிருப்தியே வழிகாட்டலை நாடுகிறது.

`எனக்கு யாராவது வழிகாட்ட மாட்டார்களா!’ என்ற பரிதவிப்பு தக்க வழிகாட்டலுக்கு முதல்படி. ஒரு குறிப்பிட்ட வழியில் செல்ல பொறுமை அவசியம். சிலவற்றைத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கவேண்டும்.

கதை

முப்பது வயதிலேயே கணவரை இழந்தவள் தனம். அண்மையில் என்னிடம் தம் மகள்களைப்பற்றி முறையிட்டாள்: “எப்போ பார்த்தாலும் கணினி, இல்லை, கைத்தொலைபேசிதான், டீச்சர், “என்று ஆரம்பித்தாள். “எல்லா வீட்டு வேலையும் நான்தான் செய்யறேன். அதுங்க அறையைக்கூட ஒழுங்கா வெச்சுக்கறதில்லே!”

படபடப்புடன் இதையே திரும்பத் திரும்பக் கூறினாள்.

சற்று யோசித்துவிட்டு, “மரியாதை இல்லாம பேசறாங்களா?“ என்று விசாரித்தேன்.

“சேச்சே!” என்ற மறுத்தாள். “ஆனா, அப்பா இல்லாத குழந்தைகளைச் சரியா வளர்க்கலேன்னு என்னைத்தானே சொல்வாங்க!” குரல் தழுதழுத்தது.

தந்தை இல்லாத குடும்பங்களில் அனேக தாய்மார்களின் குமுறல் இது.

குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் ஒன்றிச் செயல்படும்போது, குழந்தைகள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஒருவர்க்கொருவர் பகிர்ந்துகொள்வார்கள். ஆறுதலாக இருக்கும். அப்படி ஒரு துணை இல்லாததால், சிறு பிரச்னைகூட யோசிக்க, யோசிக்க பூதாகாரமாகிவிடுகிறது சில அபலைப்பெண்களுக்கு.

சியாமளா அவர்களுள் ஒருத்தி. “நான் தினமும் தூங்கப்போகுமுன் என் மகனைப்பார்த்துக் கத்துவேன்! அதனால் மாடியிலிருக்கும் வீடுதான் சௌகரியம்!” என்று என்னிடம் தெரிவித்தாள்.

“சீச்சீ! பாவம்!” என்று அவளுடைய பதின்மூன்று வயது மகனுக்குப் பரிந்தேன்.

ஆதரவாகப் பேச தந்தையுமில்லை, ஒரே துணையான தாயும் வசையையே தன் மொழியாகக் கொண்டதாலோ, என்னவோ, அவனுடைய மூளை வளர்ச்சி சற்று குன்றியிருந்தது.

“எனக்கு மட்டும் வடிகால் வேண்டாமா?” என்றாள் சியாமளா, ஆத்திரம் குறையாது.

அந்தச் சம்பவம் நினைவில் எழ, தனத்திடம், “எல்லாரிடமும் இப்படி உங்கள் குழந்தைகளைப்பற்றிப் புகார் செய்துகொண்டிருக்காதீர்கள்!” என்று கண்டித்தேன்.

“இல்லே, ஒங்ககிட்ட மட்டும்தான் சொல்றேன். நீங்க ஒருத்தர் சொன்னாத்தான் கேக்கறாங்க!”

`அம்மா எப்பவும் கத்தறாங்க!’ என்று மூத்த மகள் தன் குழப்பத்தை நம்பகமான சிலருடன் பகிர்ந்துகொண்டிருக்கிறாள்.

பெண்களுக்குத் திருமணமானால் எவ்வளவோ பிரச்னைகள்! புதிய சூழ்நிலை, புதிய மனிதர்கள்! அப்போது மனம் கலங்கும்போது, தாய்வீட்டில் கழித்த இனிமையான தருணங்கள்தாம் ஆறுதலளிக்கும். இந்த உலக நடப்பை எடுத்துச்சொன்னேன்.

“நீங்க நச்சு நச்சுன்னு பிடுங்கினாலும், அவங்க மாறப்போறதில்லே. ஒங்களுக்குத்தான் B.P அதிகமாகும்”.

தனத்தின் முகத்தில் சிறு சிரிப்பு. “அதேதான்!” என்றாள்.

தற்காலத்தில் எல்லா இளவயதினரும் கணினித்துறையில் ஆர்வமும், திறமையும் கொண்டிருப்பதன் அவசியத்தை விளக்கிவிட்டு, “அவங்ககிட்ட பேசறேன்,” என்று சமாதானப்படுத்தினேன்.

பெண்கள் இருவரும் பட்டதாரிகள். மிகவும் பொறுப்பானவர்கள். பிறருக்கு உதவ ஓடி வருவார்கள். குறைந்த காலத்திலேயே உத்தியோகத்திலும் நல்ல பெயர். மேலதிகாரிகளாகும் தன்மை படைத்தவர்கள். இளையவள் தன் வருமானத்தில் பெரும்பகுதியை தெருவில் போகும் நாய், பூனைகளின் வைத்தியச்செலவுக்குச் செலவிடுகிறாள்.

அப்பெண்கள் தாமாகவே முனைந்து செய்யும் காரியங்களே அவர்களை ஒரு நாள் சிறந்த மனிதர்களாக காட்டும்.

இதெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை தனத்திற்கு. தன் வளர்ப்புமுறையில் யாராவது ஏதேனும் குற்றம் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற வேண்டாத கவலையில் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறாள்.

அப்பெண்களைத் தனியாக அழைத்தேன். “ஒங்களைக் காப்பாத்த இத்தனை வருஷமா ஒங்கம்மாதான் சம்பாதிச்சாகணும். தனியாவே ஒங்களை வளர்த்திருக்காங்க. அது சுலபமில்லே. நீங்களும் கொஞ்சம் வீட்டு வேலையைப் பகிர்ந்துக்கணும். ஒங்க துணியை துணி துவைக்கும் இயந்திரத்தில் போடறதைக்கூட அம்மாதானா செய்யணும்?” என்று தாழ்ந்த குரலில் ஆங்கிலத்தில் கூறினேன். (அவர்களுக்குத் தமிழ் தெரியுமென்றாலும், ஆங்கிலத்தில் அவ்வளவு கடுமையாகக் கேட்காது).

இரு பெண்களின் முகத்திலும் ஆழ்ந்த வருத்தம். இனி, தாயின் மனம் நோகாது, அவளுடைய எதிர்பார்ப்பு என்னவென்று புரிந்து நடப்பார்கள்.

குழந்தைகளோ, இளைஞர்களோ, மரியாதையாகவும், உண்மையாகவும் நடந்துகொண்டார்களானால், அவர்கள் நல்வழியில்தான் செல்கிறார்கள் என்று நம்பலாம். அவர்களைப்பற்றிய கவலை அநாவசியம்.

வழிகாட்டுவது என்றெண்ணி, ஓயாமல் நச்சரித்தால் ஒருவர் கூறுவதை மற்றவருக்கு அலட்சியம் செய்யத்தான் தோன்றும்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *