அமெரிக்காவில் ஓரின ஈர்ப்பாளர்களின் நீண்ட பயணம்

0

நாகேஸ்வரி அண்ணாமலை

அமெரிக்காவில் ஓரின ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்கான நீண்ட பயணம் இன்னும் முற்றுப்பெறவில்லை என்றாலும் இப்போது எவ்வளவோ முன்னேறியிருக்கிறது.  இருபது வருஷங்களுக்கு முன்புகூட இவர்கள் பலரால் நிந்திக்கப்பட்டார்கள்.  (இன்னும் சில சமூகங்களில் இவர்களுக்கு மரண தண்டனைகூடக் கொடுக்கப்படுகிறது என்பது வேதனைக்குரிய விஷயம்.)

1998-இல் வயோமிங் என்னும் மாநிலத்தைச் சேர்ந்த லாரமீ என்னும் ஊரில் ஒரு ஓரின ஈர்ப்பாளனை இரண்டு திருடர்கள் கடத்திக்கொண்டுபோய் துன்புறுத்திப் பின் ஒரு வேலியில் தொங்கவிட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.  அந்தப் பக்கமாக சைக்கிளில் போய்க்கொண்டிருந்த ஒருவன் – முதலில் வயல்களில் வைக்கப்படும் சோளக்கொல்லை பொம்மை என்று நினைத்துப் போகவிருந்தவன் – பின் நிலைமையை உணர்ந்து மருத்துவமனையில் அவனைச் சேர்த்தும் அவன் – மேத்யூ ஷெப்பர்ட் – இறந்துவிட்டான்.  வயோமிங்கில் நடந்த அவனுடைய ஈமச்சடங்குகளுக்கு நிறையப் பேர் வந்திருந்தாலும் சிலர் அது அங்கு நடைபெறுவதைக் கண்டித்து சுலோகங்கள் தாங்கிய அட்டைகளைச் சுமந்துவந்தனர்.  இதனால் அங்கு மகனுடைய அடக்கம் நடைபெற்றால் பின்னால் அவனுடைய கல்லறை அப்படி எதிர்த்தவர்களால் அசிங்கப்படுத்தப்படலாம் என்று பயந்து அவனுடைய பெற்றோர்கள் இருபது வருஷங்களாக மகனுடைய அஸ்தியை புதைக்காமல் வைத்திருந்தார்கள்.  இப்போது மகனுக்கு ஒரு பாதுகாப்பான இடம் கிடைத்திருக்கிறது.  கடைசியாக மகனுக்கு அவனுக்குப் பிரியமான இடத்தில் அவனுடைய கடைசி இருப்பிடம் அமைந்திருக்கிறது என்று அவனுடைய தந்தையும் தாயும் நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கிறார்கள்.  முதலில் மகனுடைய அஸ்தியை வயோமிங்கின் மலைகளின் மீதும் சம வெளிகளிலும் தூவிவிட முடிவுசெய்தனர்.  இருந்தாலும் மகனிடம் தொடர்ந்து பேசுவதற்கு ஏதுவாக ஒரு பாதுகாப்பான இடம் தேடினர்.  இப்போது கடைசியாக வாஷிங்டன் நேஷனல் கதீட்ரலில் அஸ்தியைப் புதைக்க இடம் கிடைத்திருக்கிறது.  வரும் அக்டோபர் 26-ஆம் தேதி மேத்யூவின் அஸ்தி அங்கு புதைக்கப்படும்.  இது ஜெபக் கூட்டங்களும் ஞாபகார்த்தக் கூட்டங்களும் தினமும் நடைபெறும் கதீட் ரல்.  இங்கு பெரிய அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.   பெரிய புள்ளிகளான அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்ஸன், அமெரிக்கக் கப்பற்படையில் பெரிய அதிகாரியாக விளங்கிய ஜார்ஜ் டூயீ, ஹெலென் கெல்லர், அவருடைய ஆசிரியை ஆனா சல்லிவன் ஆகியோர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.  “இவர்களோடு மேத்யூவும் புதைக்கப்பட்டிருப்பது சிறந்த காரியம்தான்” என்று பிஷப் புத்தே கூறியிருக்கிறார். சமீபத்தில் அமெரிக்க செனட்டராக இருந்த, அமெரிக்காவின் கடற்படையில் பணிபுரிந்த, வியட்நாம் சிறையில் ஐந்தரை வருடங்கள் போர்க் கைதியாகக் கழித்த செனட்டர் மெக்கெயினைக் கவுரவித்து இறைவழிபாடு நடத்தினார்கள்.

அக்டோபர் 26-ஆம் தேதியன்று பொதுமக்களுக்கான ஜெபக்கூட்டம் முடிவடைந்ததும் மேத்யூவின் குடும்ப அங்கத்தினர்களுக்காகத் தனிப்பட்ட முறையில் நடக்கப்போகும் நிகழ்ச்சியில் மேத்யூவின் அஸ்தி அங்கு புதைக்கப்படும்.  அந்த நிகழ்ச்சிக்கு பிஷப் புத்தேயும் ராபின்ஸனும் (இவர் 2003-இல் முதல் ஓரின ஈர்ப்பாள பிஷப்பாக எபிஸ்கோப்பல் தேவாலயத்தில் சேர்ந்தவர்) தலைமை தாங்குவார்கள்.  மேத்யூவின் பெற்றோர்கள் ஓரின ஈர்ப்பாளர்கள், மூன்றாம் பாலினர் என்று பலவிதமான பால் பாகு

பாடுகளுடையவர்களின் ((LGBTQ) உரிமைகளுக்காகப் பாடுபட்டு வருகிறார்கள்.  இவர்களோடு சேர்ந்து ராபின்ஸனும் பாடுபட்டு வருகிறார்.  மேத்யூவின் அம்மா கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தக் கதீட்ரலில் மேத்யூவின் அஸ்தியைப் புதைக்க ராபின்ஸன் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.

மேத்யூவின் நண்பன் ஜேஸன் மார்ட்ஸன் நண்பனின் பெயரில் ஒரு பவுண்டேஷனை ஆரம்பித்து மேத்யூவுக்குப் பிரியமான உலக அரசியல், மனித உரிமைகள் பற்றி அவன் பெயர் விளங்குமாறு செய்யப் போகிறார்.  அக்டோபர் 26-ஆம் தேதி ஜேஸனும் மேத்யூவின் அஸ்தி புதைக்கப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்.  பிஷப் ராபின்ஸன் கூறியதுபோல் இம்மாதிரி பால் பாகுபாடு உடையவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அமெரிக்கா இப்போது – மேத்யூ கொல்லப்பட்டபோது இருந்ததைவிட – எவ்வளவோ முன்னேறியிருக்கிறது.  மத்திய அரசாலும்  சில மாநில அரசுகளாலும் ஓரின ஈர்ப்புத் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.

2009-இல் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு மசோதாவில் மேத்யூவின் பெயர் இடம் பெற்றிருக்கிறது.  அந்த மசோதா சட்டமாக்கப்பட்டபோது ஒருவரை வெறுப்பதால் இழைக்கப்படும் கொலைகளில் (Hate Crimes- அமெரிக்காவில் இவ்வகைக் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை உண்டு) பால் பாகுபாட்டினால் ஒருவரை வெறுத்து இழைக்கப்படும் கொலைகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.  2013-லேயே ‘மேத்யூ, என் நண்பன்’ என்னும் ஆவணப் படமும் கதீட் ரலால் வெளியிடப்பட்டது.

“மேத்யூ கொலைசெய்யப்பட்டதிலிருந்து இந்த இருபது வருடங்களில்  எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.  ஆயினும் இன்னும் எவ்வளவோ மாற வேண்டியிருக்கிறது.  பால் பாகுபாடு உடையவர்களும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள்.  அவர்களும் கடவுளின் குழந்தைகள்.  அதனால் அவர்களுடைய பால் பாகு பாட்டினால் அவர்களை வெறுப்பதை விட்டுவிட்டு அவர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும்” என்றார் பிஷப் புத்தே.

இப்போதைய போப் பிரான்சிஸும் ஓரின ஈர்ப்பாளர்கள் பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, “அவர்களைப் பற்றிக் கணிப்பதற்கு நான் யார்?  அவர்களும் கடவுளின் குழந்தைகள்” என்றார்.

“இந்தக் கத்தீட்ரலில்  புதைக்கப்பட்டிருக்கும் மற்றப் பெரிய மனிதர்களோடு எங்கள் மகன் மேத்யூவுக்கும் இடம் கிடைத்திருப்பது நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான மகிழ்ச்சியான விஷயம்” என்று மேத்யூவின் தந்தை கூறியிருக்கிறார்.

அமெரிக்கா பல வழிகளில் உலகிற்கு முன்னோடியாகத் திகழ்கிறது.  பால் பாகுபாடுடையவர்களுக்கு சமூகத்தில் உரிய இடத்தை வழங்கியிருப்பதிலும் முதன்மை வகிக்கிறது.

இருந்தாலும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் அவருடைய ஆதரவாளர்களும் இதுவரை அவர்களுக்குக் கிடைத்திருக்கும் உரிமைகளை மறுத்துச் சட்டம் இயற்றிவிடுவார்களோ என்ற பயமும் வருகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.