குறளின் கதிர்களாய்…(246)
– செண்பக ஜெகதீசன்
அழிவி னவைநீக்கி யாறுய்த் தழிவின்க
ணல்ல லுழப்பதாம் நட்பு.
-திருக்குறள் -787(நட்பு)
புதுக் கவிதையில்…
அழிவுதரும்
தீவழிச் செல்கையில்
தடுத்து நிறுத்தி,
ஆக்கந்தரும் நல்வழி
செல்லாதபோது
செல்லவைத்து,
அழிவு வரும்போது
கைவிட்டு அகன்றிடாமல்,
உடனிருந்து
துன்பம் அனுபவிப்பதே
தூய நட்பு…!
குறும்பாவில்…
தீயவழி செல்லாமல் தடுத்து நிறுத்தி,
நல்வழியில் நடக்கவைத்து, அழிவுவந்தால்
உடனிருந்து துன்புறுதலே நட்பு…!
மரபுக் கவிதையில்…
அழிவைத் தந்திடும் தீவழியில்
ஆசையில் செல்கையில் தடுத்தேதான்
வழியது நல்லதாய்க் காட்டியதன்
வழியே நம்மைச் செல்லவைத்து,
அழிவது வாழ்வில் வரும்பொழுதில்
அகன்றே நம்மைக் கைவிட்டிடும்
பழியதைப் பெறாமல் இடரிலும்நம்
பக்க மிருப்பதே நட்பாமே…!
லிமரைக்கூ..
தீயவழியில் நாம்செல்வதைத் தடுத்து
நல்வழியில் நமைச்செலுத்தி, நல்லநண்பர்,
நம்துன்பத்திலும் துணையிருப்பார் அடுத்து…!
கிராமிய பாணியில்…
நட்பிதுதான் நட்பிதுதான்
நல்ல நட்பிதுதான்,
துன்பத்திலயும் தொணயிருக்கும்
நல்ல நட்பிதுதான்..
கெட்டவழியில நாமபோனா
கேடுவராமத் தடுத்துநெறுத்தி
நல்லவழியில நம்ம நடக்கவச்சி,
கேடுவாற காலத்தில ஓடாம
கூடயிருந்தே துன்பப்படுறதுதான்
கொறயில்லாத நட்பாவும்..
அதால
நட்பிதுதான் நட்பிதுதான்
நல்ல நட்பிதுதான்,
துன்பத்திலயும் தொணயிருக்கும்
நல்ல நட்பிதுதான்…!