-நாகேஸ்வரி அண்ணாமலை

 

அடுத்த அறுபது நொடிகளில், அதாவது ஒரு நிமிடத்தில் உலகம் முழுவதுமுள்ள மக்கள் பத்து லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்களையும் இருபது லட்சம் பிளாஸ்டிக் பைகளையும் வாங்குவார்களாம். இவையெல்லாம் முற்றிலும் அழிந்து போவதற்கு ஆயிரம் வருஷங்களுக்கு மேல் ஆகுமாம். இது இப்படி நடந்துகொண்டிருக்க அவற்றில் சில மிகவும் நுண்ணிய துகள்களாக உடைந்து எண்ணிலடங்காத அளவில் கடலில் கலந்துவிடுகின்றன. இவை கடல் நீரிலும் குடிநீரிலும் நாம் தினமும் உபயோகிக்கும் உப்பிலும் காணப்படுகின்றன. மேலே குறிப்பிட்டவற்றோடு அவை போய்ச் சேரும் இன்னொரு இடம் மனிதனின் குடலுமாகும்.

ஃபின்லாந்து, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, போலந்து, ரஷ்யா, பிரிட்டன், ஆஸ்ட்ரியா ஆகிய நாடுகளிலிருந்து எட்டு பேரின் மலத்தைச் சோதித்தபோது எல்லோர் மலங்களிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருந்தனவாம். இப்போதைக்கு மனிதனின் ஆரோக்கியத்திற்கு எந்தவித ஆபத்தும் இவற்றால் இல்லையென்றாலும் இன்னும் நிறையப் பேர்களைப் பரிசோதித்து விபரம் சேகரிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவுசெய்திருக்கிறார்கள்.

பிளாஸ்டிக் நுண்துகள்களால் மனிதனுக்கு ஆபத்து எதுவும் இல்லையென்று இப்போதைக்கு முடிவுசெய்யப்பட்டிருந்தாலும் எத்தனையோ மிருகங்கள் பிளாஸ்டிக்கினால் பாதிக்கப்படுகின்றன. கடல்வாழ் மீன்கள் எத்தனையோ இந்த பிளாஸ்டிக் பைகளை விழுங்கி உயிர் இழந்திருக்கின்றன.

சமீபத்தில் பதினேழு பவுண்டு எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் ஒரு திமிங்கலத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பிளாஸ்டிக்கின் கெடுதல்கள் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். போப் பிரான்சிஸ், இந்த பூமி கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்டது. இதை மாசுபடுத்தினால் கடவுளை நிந்திப்பதற்குச் சமம் என்கிறார். உலகில் எல்லோருக்கும் பிளாஸ்டிக்கின் இன்னொரு பக்கம் தெரியத்தான் செய்கிறது. ஆனாலும் அதன் உபயோகத்தால் பல வசதிகள் இருப்பதால் தொடர்ந்து உபயோகித்து வருகிறோம். சிலர் அது மறு சுழற்சி செய்யப்பட்டால் வீணாவதில்லை என்று நினைக்கிறார்கள். இது மிகவும் தவறு. மறுசுழற்சி செய்யப்படும்போது எத்தனை பொருள்கள் வீணாகின்றன. மேலும் ஒரு குறுகிய சதவிகிதமே மறுசுழற்சி செய்வதன் மூலம் திரும்பக் கிடைக்கிறது. அதனால் reduce, reuse, recycle என்ற மந்திரத்தை நாம் பின்பற்ற வேண்டும். முதலில் கூடியவரை பிளாஸ்டிக் பொருள்களின் (எல்லாப் பொருள்களையும் என்றுகூட நான் சொல்லுவேன்) உபயோகத்தைக் குறைக்க வேண்டும். இயற்கை வளங்களைக் குறைவாகப் பயன்படுத்துங்கள். அதற்குமேல் வாங்கித்தான் தீர வேண்டுமென்றால் அந்தப் பொருளைத் தாங்கிவந்த டப்பாக்களை மறுபடி உபயோகப்படுத்துங்கள். அதற்கு மேலும் தேவையென்றால் இவற்றை மறுசுழற்சி செய்யும் இடங்களில் சேர்த்துவிடுங்கள்.

அமெரிக்காவில் இப்போது பால், தயிர், வெண்ணெய் ஆகிய எல்லாம் பிளாஸ்டிக்கில் அல்லது பிளாஸ்டிக்கோடு இன்னொரு பொருள் சேர்த்துச் செய்யப்பட்ட டப்பாக்களில்தான் கிடைக்கின்றன. அமெரிக்கர்கள் இவற்றையெல்லாம் உபயோகித்துவிட்டுக் கீழே தூக்கி எறிவதைப் பார்த்தால் என் நெஞ்சமெல்லாம் வலிக்கும். சில சூப்பர்மார்க்கெட்டுகளில் சொந்தப் பைகளைக் கொண்டுவருபவர்களுக்கு ஒரு பைக்கு ஏழு சென்ட் திருப்பிக் கொடுத்தார்கள். இந்த மாதிரி உத்திகள்கூட அதிகப் பலனை விளைவிக்கவில்லை. அமெரிக்காவில் எல்லா நகரங்களும் பிளாஸ்டிக்கின் உபயோகத்தைக் குறைக்கத் தங்களாலான முயற்சிகளைக் கடைப்பிடிக்க முயன்று வருகின்றன. எதுவும் பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைத்த மாதிரி தெரியவில்லை.

அமெரிக்காவில் எதையும் sterilize பண்ணுவதால் அமெரிக்கர்களுக்கு நோய்தடுப்புச் சக்தி மிகவும் குறைந்துபோய்விட்டது. யாரும் குழாயிலிருந்து தண்ணீர் குடிப்பதில்லை. எல்லாம் பாட்டில்கள்தான்.

அமெரிக்காவில் வசித்தாலும் நாங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிளாஸ்டிக்கின் உபயோகத்தைக் குறைத்து வருகிறோம். பார்ட்டிகளுக்குப் போனால் எங்கள் சொந்தப் பிளேட்டுகளையும் டம்ளர்களையும் எடுத்துச் செல்கிறோம். பிரயாணம் செய்யும்போதோ வேறு எங்காவது வெளியில் செல்லும்போதோ கையோடு உணவை எடுத்துச் சென்றால் திரும்ப உபயோக்கிக்கக் கூடிய பிளேட்டுகளில்தான் எடுத்துச் செல்கிறோம். அவற்றைத் திரும்பக் கொண்டுவந்து கழுவி உபயோகப்படுத்துகிறோம். பிளாஸ்டிக்கில் கொண்டுபோயிருந்தால் அங்கேயே குப்பைக் கூடையில் எறிவதற்கு வசதியாகத்தான் இருந்திருக்கும். ஆனாலும் அப்படிச் செய்வதில்லை.

அமெரிக்காவில் ஓட்டல்களில் நாம் உண்டதுபோக மீதியை வீட்டிற்கு எடுத்து வந்துவிடலாம். அதனால் நம்மை யாரும் குறைவாக நினைக்க மாட்டார்கள். இப்போது இது எல்லோரும் ஒப்புக்கொண்ட பழக்கமாகிவிட்டது. ஓட்டல் சர்வர்களே doggie bag-ல்போட்டுக் கொடுக்கவா என்று நம்மிடம் கேட்பார்கள். இப்படி மிஞ்சிய உணவை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் பைகளுக்கு doggie bag என்று பெயர். (அமெரிக்கர்கள் தாங்கள் உபயோகிக்கும் உணவில் 40 சதவிகிதத்தை வீணடிக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விபரம் கூறுவது இன்னொரு விஷயம்.)

ரொட்டித் துண்டுகளோடு சாப்பிடும் peanut butter என்னும் நிலக்கடலை வெண்ணெயைச் சூப்பர் மார்க்கெட்டுகளில் பாட்டில்களிலோ பிளாஸ்டிக் டப்பாக்களிலோ விற்கிறார்கள். இப்போது கடைகளில் தினமும் மெஷினில் அரைத்து விற்கிறார்கள். தினமும் தயாரிக்கப்படும் இதில் preservative எதுவும் சேர்ப்பதில்லை. ஆனால் இப்படித் தினமும் தயாரிக்கப்படுவதையும் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்கிறார்கள். பிளாஸ்டிக்கின் உபயோகத்தைக் குறைக்க எண்ணிய நாங்கள் எங்கள் வீட்டிலிருந்து கண்ணாடி பாட்டில்களைக் கொண்டுபோய் கடையிலேயே அரைத்து எங்கள் பாட்டில்களில் போட்டுத் தரச் சொன்னோம். நாங்கள் அப்படிக் கேட்டவுடன், “ஷெல்பில் நிறைய இருக்கிறது. அதில் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார்கள். திரும்பத் திரும்ப உபயோகிக்கக் கூடிய பாட்டில்களையே நாங்கள் விரும்புவதால் பிளாஸ்டிக் வேண்டாம் என்றும் எங்கள் பாட்டில்களிலேயே மெஷினில் அரைத்ததைப் போடும்படியும் சொன்னோம். கடை ஊழியர்களுக்கு அது புரியவே இல்லை. பிளாஸ்டிக்கை விட கண்ணாடி பாட்டில் கனமாக இருக்கும், அதனால் எங்களுக்குக் கொஞ்சம் குறைவாகவே கடலை வெண்ணெய் கிடைக்கும் (பிளாஸ்டிக் டப்பாக்களில் கடலை வெண்ணெயை நிரப்பி அதன் எடையைக் கணக்கிட்டு விலையைக் குறிப்பார்கள்) என்று கூறிப் பார்த்தார்கள். நாங்கள், “அதனால் பரவாயில்லை. பாட்டில்களில் அதைப் பெறுவதுதான் எங்கள் முக்கிய நோக்கம்” என்று எவ்வளவோ கூறிப்பார்த்தும் அவர்களுக்கு விளங்கவில்லை. பின் கடை மேனேஜரை வரவழைத்துப் பல முறை அவருக்கு விளக்கிய பிறகு வேண்டா வெறுப்பாக எங்கள் பாட்டில்களில் கொடுக்க ஒப்புக்கொண்டார்கள்.

சென்ற ஒரு வருஷமாகக் கடை ஊழியர்களுக்கு எங்களுடைய இந்தப் பழக்கம் பழகிவிட்டதால் போனவுடனேயே எந்தத் தகராறும் செய்யாமல் எங்கள் பாட்டில்களிலேயே கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கடை இப்போது மூடப்பட்டுவிட்டது. இன்னொரு கடையிலும் இதே மாதிரி அன்றன்றே செய்து விற்கிறார்கள் என்று அறிந்து அங்கு போய் வாங்க முயன்றோம். இந்தக் கடையிலும் முதலில் ஒத்துக் கொள்ளவில்லை. அவர்கள் அதற்குச் சொன்ன காரணம் எங்களிடம் சிரிப்பை வரவழைத்துவிட்டது. அவர்கள் கொடுக்கும் பிளாஸ்டிக் டப்பாக்கள் சுத்தமானவையாம் (sterilized); எங்கள் பாட்டில்கள் சுத்தம் செய்யப்படாதவையாம் (unsterilized); இதனால் எங்களுக்கு ஏதாவது உடல் உபாதை ஏற்பட்டு நாங்கள் அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்துவிடுவோமாம்! “எங்கள் பாட்டில்களில் நீங்கள் கொடுத்தாலும் நாங்கள் உங்கள் மீது வழக்குப் போட மாட்டோம் என்று எழுதிக் கொடுத்தால் எங்கள் பாட்டில்களில் நிரப்பிக் கொடுப்பீர்களா?” என்று கேட்டும் அந்தப் பகுதியில் இருந்த ஊழியர் ஒத்துக் கொள்ளவில்லை. பின் கடை மேனேஜரிடம் கேட்டு, அவரிடம் நிறைய பேசி அவரை இதற்குச் சம்மதிக்க வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. கடைசியாக அவர் சம்மதித்தாலும் கடலை வெண்ணெயின் எடையையும் விலையையும் கடையின் பெயரையும் குறிக்கும் ‘ஸ்லிப்பை’ பாட்டிலின் மேல் ஒட்டக் கூடாது என்று கூறிவிட்டார்கள். அந்த ‘ஸ்லிப்பை’க் கையில் வைத்திருந்து எல்லாச் சாமான்களுக்கும் விலைபோட்டு மொத்த பில்லையும் தயாரிப்பவரிடம் அதைக் காட்டிவிட்டு அதைக் கீழே போட்டுவிடுமாறு கூறினார்கள். எங்கள் பாட்டில்களில் அவர்கள் போட்டுக் கொடுத்ததற்கு எந்த ஆதாரமும் இருக்கக் கூடாதாம்!

சுத்தம் என்ற பெயரில் அமெரிக்கா எவ்வளவு தூரம் வந்திருக்கிறது என்று பாருங்கள்!

அமெரிக்கா இருக்கட்டும். இப்போது தமிழ்நாட்டில் 2019 ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து பிளாஸ்டிக் உபயோகத்திற்குத் தடை வந்திருப்பதாக அறிந்தோம். ஊழலுக்கு ஒரு உதாரணமாகத் திகழும் தமிழ்நாட்டில் இந்தத் தடை எப்படி அமுல்படுத்தப்படுகிறது என்றும் மக்கள் எவ்வளவு தூரம் ஒத்துழைக்கிறார்கள் இருக்கிறார்கள் என்றும் அறிய மிகவும் ஆவலாக இருக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *