-செண்பக ஜெகதீசன்

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.

-திருக்குறள் -728(அவை அஞ்சாமை)

புதுக் கவிதையில்…

நல்லோர் அவையில்
பல்லோர்க்கும் புரியும்படி
நல்ல நூலின் பொருளை,
அச்சத்தால்
எடுத்துரைக்க இயலாதவர்
எத்தனை நூல் கற்றிருந்தாலும்,
அவரால்
எந்தப் பயனுமில்லை
இந்த உலகத்துக்கே…!

குறும்பாவில்…

அச்சத்தால் நல்ல அவையினர்முன்
அவரறிய நூற்பொருள் எடுத்துரைக்கத் தெரியாதவன்
பலநூல் கற்றிருந்தும் பயனிலை அவனிக்கே…!

மரபுக் கவிதையில்…

நல்லோர் நிறைந்த அவைதனிலே
நல்ல நூலதன் பொருளதுதான்
எல்லோ ருக்கும் புரிந்திடவே
எடுத்து ரைக்க அஞ்சிநிற்கும்
வல்லமை யில்லா ஒருவர்தான்,
வகைகள் பலவாய் நூற்களையே
கல்வி யென்றே கற்றிருந்தும்
காசினிக் கவரால் பயனிலையே…!

லிமரைக்கூ..

அதுவேயவன் திறமையின் எல்லை,
அவையஞ்சி நூற்பொருளுரைக்கத் திறனில்லை,
பலநூல் கற்றுமவனால் பயனே இல்லை…!

கிராமிய பாணியில்…

பயப்படாத பயப்படாத
பேசுறதுக்குப் பயப்படாத,
படிச்சத எடுத்துச்சொல்லி
சபயில
பேசுறதுக்குப் பயப்படாத..

நல்லவுங்க சபயில
எல்லாருக்கும் புரியிறாப்புல
படிச்ச பொத்தகத்தில உள்ள பொருள
எடுத்துச்சொல்ல முடியாம
பயந்து நிக்கிறவன்,
எவுளவு பெரிய படிப்பும்
எத்தின பொத்தகம் படிச்சிருந்தாலும்,
அவுனால
எந்தப்பயனுமில்ல ஒலகத்துக்கே..

அதுனால,
பயப்படாத பயப்படாத
பேசுறதுக்குப் பயப்படாத,
படிச்சத எடுத்துச்சொல்லி
சபயில
பேசுறதுக்குப் பயப்படாத…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *