துணைவியின் இறுதிப் பயணம் – 14

0

சி. ஜெயபாரதன், கனடா

என் இழப்பை நினை,

எனினும் போக விடு எனை !

[Miss me, But let me go]

++++++++++++++

[43] ஈமச் சடங்கு

உயிருள்ள மானிடப் பிறவிக்கு
உரிய மதிப்பளிப்பது
நியாயமே மனித நேயமே.
அது போல்
உயிரிழந்த சடலத்துக்கும்
பயண முடிவில்
மரியாதை புரிவது
மனித நாகரீகம். மனித நேயமே.
பிரம்மாண்ட மான
வரலாற்றுச் சின்னமான
பிரமிடைக் கட்டினர்
ஃபெரோ வேந்தர்கள்
தமது உயிரிழக்கும் சடலத்துக்கு
முன்பாகவே !
மும்தாஜ் மனைவிக்கு
உலக ஒப்பற்ற,
எழில் கொலு மாளிகை,
தாஜ் மகாலை எழுப்பினார்
ஷாஜஹான் !
துணைவிக்கு நான் இரங்கற்
பாமாலை வடித்துச் சூட்டினேன்.
ஐம்பத்தாறு ஆண்டுகள்
உடனிருந்து
இடர், துயர், இன்பத்தைப்
பகிர்ந்து
கடமை, உடைமை
வறுமை, செழுமை, திறமையில்
தானும் பங்கெடுத்து
மரித்த என் துணைவிக்கு
உரிய மரியாதை
அளிப்பது என் இறுதிக் கடமை,
அதுவே ஈமச் சடங்கு !
மௌன மாளிகையில்
ஆரவர மின்றி ஆடம்பர மின்றி
ஊரார், உற்றார், உறவினர்
கூடி இருக்க,
நீத்தார் பெருமை நினைப்பது
ஈமச் சடங்கு !
தகன மாளிகையில் அன்பர் சூழக்
கடவுளை நினைத்து,
சடலைத்தை
அக்கினி மூலமாய்
வழியனுப்பி வைத்தோம்.
தங்க உடம்பு
குடத்துச் சாம்பல் ஆனது.
துணைவி புரிந்த
நல்வினை எல்லாம் அன்று
நாலுபேர் பேசி
நினைவில் வைத்தோம்.
செல்லும் போது
சொல்லாமல் பிரிந்த துணைவிக்கு
“போய் வா” என்று
வாயால் சொல்லும் வாடிக்கை
விடை தரவில்லை !
ஆயினும்
காதில் துணைவி முணுத்தது :
என் இழப்பை நினை !
எனினும் போக விடு எனை !

++++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.
சி. ஜெயபாரதன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *