நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 17
-நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 17 – அழுக்காறாமை
குறள் 161:
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு
மனசில பொறாம இல்லாம வாழுத கொணத்த ஒருத்தன் தனக்கான ஒழுக்க நெறியா நெனைச்சிக்கிடணும்.
குறள் 162:
விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்
ஒருத்தன் யார்கிட்டயும் பொறாமைப் படாம இருந்தாம்னா அவன் பெத்த பேறு ல அதுக்கு ஒப்பா வேற எதுவும் இல்ல.
குறள் 163:
அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்
மத்தவங்க வாழ்க்கைல ஒசருதது பொறுக்காம பொறாமப் படுதவன் அறத்தால வர புண்ணியத்த வேண்டாம் னு மறுத்து சொல்லுதவனாவான்.
குறள் 164:
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து
பொறாமையால கெடுதல் வெளையும் னு அறிஞ்சி புத்தியுள்ளவங்க தீமையான செயல செய்யமாட்டாங்க.
குறள் 165:
அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது
பொறாமை உள்ளவங்களுக்கு வேற எதிரி தேவையில்ல. அவங்க கொணமே அவங்கள தோக்கடிச்சிடும்.
குறள் 166:
கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும்
ஒதவியா ஒருத்தங்களுக்கு கொடுக்குதத கண்டு பொறாம படுதவனோட கொணம் அவன மட்டுமில்லாம அவனோட சொந்தக்காரங்களையும் சேத்து சோறும், உடுப்பும் இல்லாம அலைய உட்டுரும்.
குறள் 167:
அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
பொறாம கொணம் கொண்டவன திருமகள் னு சொல்லுத லச்சுமி தன்னோட அக்காள் மூதேவிக்கு அடையாளம் காட்டிபோட்டு நகந்துகிடுவா.
குறள் 168:
அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
பொறாமன்னு சொல்லுத பாவி ஒருத்தனோட சொத்த அழிச்சி அவன கெட்ட வழில போக விட்டுரும்.. .
குறள் 169:
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
பொறாம இருக்குதவன் வளமா வாழுததும், பொறாம இல்லாத நல்லவன் வேதன படுததும் ஆராஞ்சுபாக்க வேண்டியவை.
குறள் 170:
அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்
பொறாம பட்டதனால ஒருத்தனுக்கு பெரும கெடச்சிது னு ஒலகத்துல இல்ல. பொறாம இல்லாதவங்க தாழ்ந்துட்டாங்க ன்னும் இல்ல.
______________________________________
கட்டுரையாளரைப் பற்றி
இயற்பெயர் – பத்மா ஸ்ரீதர்
புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்