-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 17 – அழுக்காறாமை

குறள் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு

மனசில பொறாம இல்லாம வாழுத கொணத்த ஒருத்தன் தனக்கான ஒழுக்க நெறியா நெனைச்சிக்கிடணும்.

குறள் 162:

விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

ஒருத்தன் யார்கிட்டயும் பொறாமைப் படாம இருந்தாம்னா அவன் பெத்த பேறு ல அதுக்கு ஒப்பா வேற எதுவும் இல்ல.

குறள் 163:

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்

மத்தவங்க வாழ்க்கைல ஒசருதது பொறுக்காம பொறாமப் படுதவன் அறத்தால வர புண்ணியத்த வேண்டாம் னு மறுத்து சொல்லுதவனாவான்.

குறள் 164:

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து

பொறாமையால கெடுதல் வெளையும் னு அறிஞ்சி புத்தியுள்ளவங்க தீமையான செயல செய்யமாட்டாங்க.

குறள் 165:

அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது

பொறாமை உள்ளவங்களுக்கு வேற எதிரி தேவையில்ல. அவங்க கொணமே அவங்கள தோக்கடிச்சிடும்.

குறள் 166:

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும்

ஒதவியா ஒருத்தங்களுக்கு கொடுக்குதத கண்டு பொறாம படுதவனோட கொணம் அவன மட்டுமில்லாம அவனோட சொந்தக்காரங்களையும் சேத்து சோறும், உடுப்பும் இல்லாம அலைய உட்டுரும்.

குறள் 167:

அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்

பொறாம கொணம் கொண்டவன திருமகள் னு சொல்லுத லச்சுமி தன்னோட அக்காள் மூதேவிக்கு அடையாளம் காட்டிபோட்டு நகந்துகிடுவா.

குறள் 168:

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்

பொறாமன்னு சொல்லுத பாவி ஒருத்தனோட சொத்த அழிச்சி அவன கெட்ட வழில போக விட்டுரும்..    .

குறள் 169:

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்

பொறாம இருக்குதவன் வளமா வாழுததும், பொறாம இல்லாத நல்லவன் வேதன படுததும் ஆராஞ்சுபாக்க வேண்டியவை.

குறள் 170:

அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்

பொறாம பட்டதனால ஒருத்தனுக்கு பெரும கெடச்சிது னு ஒலகத்துல இல்ல. பொறாம இல்லாதவங்க தாழ்ந்துட்டாங்க ன்னும் இல்ல.

______________________________________

கட்டுரையாளரைப் பற்றி

இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *