படக்கவிதைப் போட்டி – 223

அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
கீதா மதிவாணன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் திங்கட்கிழமை (09.09.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
உயிரோவியம்…
கலைஞனின் காலம் முடிந்தாலும்
கால மெல்லாம் நிலைத்திருக்கும்
கலைஞனின் தரமிகு படைப்பெல்லாம்
காட்சிப் பொருளாய்த் திறமைக்கே,
விலையிலா உயிரைச் சிலைக்களித்தே
வியக்க வைத்தான் உலகோரை,
சிலையில் தெரியும் அழகெல்லாம்
சிறந்த சிற்பியின் இன்னுயிரே…!
செண்பக ஜெகதீசன்…
நினைவு சின்னம்
ஆடை கூட பாரமாய் நழுவிடுமே
உன் பட்டு மேனி அழகை கண்டு
தீயில் சிக்கி தவிக்கும் சில்வண்டாய்
ஆசையில் திரியும் ஆண்களிடம்
தினம் சிக்கி தவிக்கும் இவள்
வெந்து மடிந்து வேதனையில்
மெழுகாய் தினம் உருகி நின்றாள்
பாதை மாறி வந்த பாவை இவள்
மாயையில் சிக்க வைக்க
போலியாய் சிரித்து பேசி
ஆட்களை வீழ்த்தியவளிடம்
ஆடும் வீழ்ந்ததோ
மாறுதலாய் ஆறுதல் வேண்டி
செய்யும் பாவங்களுக்கு பிராயச்சித்தமாய்
ஆட்டிடம் அன்பை அள்ளி பொழிந்திட
பாதை மாறி வந்த ஆடு
அடைக்கலமாய் இவளிடம் தங்கியதோ
திசை மாறி சென்ற இரு மனமும்
ஒன்றுக்கொன்று ஆறுதலாய்
அன்பை மட்டும் பொழிந்திடவே
நினைவில் என்றும் நின்றிடுமே
நீங்காத நினைவு சின்னமாய்