செண்பக ஜெகதீசன்

கவறுங் கழகமுங் கையுந் தருக்கி
யிவறியா ரில்லாகி யார்.
-திருக்குறள் -935(சூது)

புதுக் கவிதையில்…

சூது, சூதாடு களம்
சூதாடுவதில் வல்லமை
இவற்றை மேற்கொண்டு
கைவிடாதவர்கள்,
தாம் உயிரோடிருந்தும்
இல்லாமல் போனவர்களே…!

குறும்பாவில்…

சூது, சூதாடுமிடம், சூதாடுந்திறன்
இவற்றில் ஈடுபட்டுக் கைவிடாதவர்கள்
இருந்தும் இல்லாதவர்களே…!

மரபுக் கவிதையில்…

தீயதாம் சூதும் தெரிந்ததனைத்
தொடர்ந்தே ஆடிடும் களமதுவும்,
மாயக் கலையாம் சூதாட்டம்
முறையாய்க் கற்ற தேர்ச்சியெல்லாம்
நோயதாய்ப் பிடித்துக் கைவிடாத
நேர்மை யற்ற மாந்தரெல்லாம்,
காயம் கொண்டு உயிரிருந்தும்
கணக்கில் அவரெலாம் இலாதாரே…!

லிமரைக்கூ..

தேர்ச்சி, களத்துடன் சூது
மேற்கொண்டு கைவிடாதவர்க்கு உயிரிருந்தும்
இல்லாதாராய் வாழ்க்கை ஏது…!

கிராமிய பாணியில்…

சூதாடாத சூதாடாத
சூடுசெரண யில்லாம
சூதாடாத சூதாடாத..

சூதாட்டம்
அது ஆடுற எடம்,
நல்லா ஆடுற தெறம
எல்லாம் இருந்தும்,
கேடுண்ணு அதக்
கைவிடாதவன்
உயிரோட இருந்தாலும்
அவன் இல்லாதவன்தான்..

அதால
சூதாடாத சூதாடாத
சூடுசெரண யில்லாம
சூதாடாத சூதாடாத…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.