வாழ்த்துதல் வழங்கும் நற்பயன்கள்

0

-எம். மோகன்தாஸ் 

வாழ்த்தின் மகிமை

உலகில் வாழ்த்துதல் என்பது காலங் காலமாக இருந்துவரும் சிறந்த பண்பாடாகும். பிறர் நலமாக வாழவேண்டும் என்று எண்ணுவது உயர்ந்த பண்பாடாகும். அந்த எண்ணத்தை சொல் மூலம் வெளிப்படுத்துவதே வாழ்த்தாகும். வாழ்த்தும் போது மனதில் அமைதியான, இனிமையான அலை ஏற்படுகிறது. பிறர் நலம் கருதிய எண்ணத்தோடு “வாழ்க வளமுடன்” என்று வாழ்த்தும் போது எல்லா பேறுகளையும் பெறும் சிறப்பான வாழ்க்கைக்காண வாழ்த்தாக அமைகிறது “வாழ்க வையகம்” என்பது உலகம் சிறக்க வாழ்த்துவதாக அமைகிறது.

அணு முதல் அண்டங்கள் வரை சுழன்று கொண்டேயிருப்பதால் ஓர் அலை தோன்றிக்கொண்டே இருக்கிறது அந்த அலை மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், ஊடுருவுதல், இரண்டு பொருள்களுக்கிடையே ஓடிக்கொண்டு இருத்தல் என்ற தன்மைகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லோரிடத்திலும் ஒரு அலை இயக்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது. வாழ்த்தும் போது அந்த அலை மற்றவர்கள் மேல் மோதும், ஓரளவு திரும்பும் ,ஓரளவு சிதறும், ஓரளவு ஊடுருவிப் போகும்.பிறகு இரண்டு பேருக்கு இடையே ஓடிக் கொண்டிருக்கும். அந்த இனிமையான, அமைதியான, நுண்மையான அலை இயக்கம் மனித சமுதாயம் முழுவதும் பரவும், பேரியக்க மண்டலம் முழுவதும் சென்று நிரம்புகிறது.

மன அலைச்சுழல்

மனித மனதின் எண்ண ஓட்டத்தினை “ELECTRO ENCEPHALOGRAM” கொண்டு ஆராயும்போது மனது ஒன்று முதல் நாற்பது வரையிலான அதிர்வெண்களைக் கொண்ட மன அலைச்சுழல்களாக இயங்குவது கண்டறியப்பட்டுள்ளது.

மனித மனம் ஐம்புலன்களின் வழியாக இயங்கும்போது பீட்டா அலையில் 14 முதல் 40 வரை யிலான அலைச் சுழலில் இயங்குகிறது. அப்போது தான் தனது என்ற உணர்ச்சி மயமான எண்ணங்கள் உண்டாகின்றன. பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்ற அறுகுண வயப்பட்டு துன்பத்திலேயே வாழும் சூழ்நிலை உண்டாகிறது. கோவிலுக்கு சென்று மனதை ஒருநிலைப்படுத்தி வழிபடும் போதும், தவம் செய்யும் பொழுதும் மனம் ஆல்பா நிலைக்கு வருகிறது. அப்பொழுது மன அலைச்சுழல் 8 முதல் 13 வரையிலான அதிர்வெண்களில் இயங்கும். தவத்தில் இருக்கும் பொழுது தூங்காமல் விழிப்புடன் இருகின்றோம் . இதையே பத்திரகிரியார், “தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்“ என்கிறார்.

தவத்தில் மனம் அமைதியான இனிமையான, ஓர் நுண்ணிய நிலையை அடைகிறது. இந்நிலையில் தான் வேண்டுதல் நல்ல பலன் அளிப்பதாக அமைகிறது வாழ்த்தும்போது வாழ்த்துபவர்க்கும் வாழ்த்துப் பெருபவர்க்கும் மிக விரைவில் நல்ல பலனை அளிக்கிறது. தவத்தில் மேலும் ஆழ்ந்து செல்லும் போது மனம் 4 முதல் 7 வரையிலான தீட்டா அலைச்சுழலில் இருக்கும் அப்பொழுது மனமானது கோள்கள், அண்டங்கள், பிரபஞ்சம் வரை விரிவடைகின்றது, அவற்றை அறியும் பரந்த மனத்துடன் இயங்குகிறது. மேலும் தவத்தில் ஆழும்போது 1 முதல் 3 வரை அலைச்சுழலான டெல்டா நிலையில் இறைநிலையாகவே மாறி விடுகின்றது. இந்த நிலையத்தான் “ சமாதி நிலை”,” முக்தி நிலை” ,”வீடுபேறு” என்கிறோம்

வாழ்த்தின் ரகசியம்

“வாழ்க வளமுடன்” என்று வாழ்த்தும் பொழுது ‘ழ்’ என்ற சிறப்பான எழுத்தை உச்சரிக்கும்போது நாக்கு மடிந்து மேலண்ணத்தைத் தொட்டு அழுத்துகின்றது. இந்த அழுத்தம் மேலே இருக்கும் பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகளை நன்கு இயங்க வைக்கின்றது. உடல் இயக்கத் தலைமைச் சுரப்பியான பிட்யூட்டரியும், மன இயக்க தலைமைச் சுரப்பியான பீனியலும் தூண்டப்பட்டு நன்கு இயக்கப்படுவதன் மூலம் உடலும் மனமும் சிறப்படைகின்றன. பீனியல் சுரப்பி, மனத்திற்குள்ளாக உள்ள ரத்தினம் எனும் பொருள் கொள்ளும்படி “மனோன்மணி” (மனம் + உள்+மணி) என்று அழைக்கப்படுகிறது.

வாழ்த்தின் பயன்

“வாழ்க வளமுடன்” என்று வாழ்த்தும் போது நாம் மனோன்மணியோடு தொடர்பு கொள்கிறோம் மனம் நுண்ணிய நிலையில் வாழ்த்தும்போது வாழ்த்து செயலாகிறது. பிறர் உள்ளத்திலே நமது கருத்தும் உயிராற்றலும் ஊடுருவி இரண்டு பேருக்கு இடையே ஓர் இனிய நட்பை வளர்க்கும். இருவரது ஜீவகாந்த அலையும் ஒருமித்து செயல்படும் நிலை உருவாகும். ஒரு செடியைப் பார்த்து தொடர்ந்து வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி வந்தால் அதன் பலவீனம் நீங்கி பலம் பெறுவது போல் நாமும் பலம் பெறுவோம். நோய் நீங்கி நலம் பெறுவோம்.

வாழ்த்து எல்லா மந்திரங்களுக்கும் மேலான மந்திரமாகும். வாழ்த்து பேரறிவில் பதிவாகி அதன் மூலம் அடி மனத்திற்கு பரவி நாளாக நாளாக நட்புணர்ச்சி வளர உதவும். வெறுப்புணர்ச்சி தானே மறைந்துவிடும். நாம் ஒருவரை வாழ்த்தும் போது நம் உயிராற்றலுக்கும் அவரது உயிராற்றலுக்கும் உயிர்த்தொடர்பு ஏற்பட்டு அதன் மூலம் வாழ்த்து வேலை செய்யும்.

தவம் செய்யும்போது மனம் நுண்ணிய நிலையில் இருப்பதால் நாம் செல்லும் வாழ்த்துக்கு பலம் அதிகம். நமக்காக வேண்டும் தன் வாழ்த்தை விட பிறருக்காக வேண்டும் போது விரைவாக பலன் கிடைக்கும். நினைப்பதெல்லாம் நடக்கும், சொல்லும் வாக்குகள் எல்லாம் பலிக்கும்.

முதலில் வாழ்க்கைத் துணையை வாழ்த்துவதன் மூலம் குடும்பத்தில் இனிமையான அமைதியான சூழ்நிலை ஏற்படுகிறது. பின்னர் குழந்தைகளை வாழ்த்துவதன் மூலம் நல்ல குணங்களுடன் ஆரோக்கியமான எண்ணங்களை உடைய குழந்தைகளை வளர்க்க முடிகிறது. சகோதர சகோதரிகள், உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்தப்படும் போது நல்ல உறவு ஏற்படுகிறது. எதிரிகளை வாழ்த்தும் போதும் அவர்கள் மனம் திருந்தி நற்செயல் புரியும் நண்பர்களாக மாறிவிடுவார்கள். உலகை வாழ்த்தும் போது உலகம் நல்ல நிலைக்கு திரும்பும். இந்த வகையில்தான் நோயாளியைப் பார்த்து வாழ்த்தும்போது நோயின் தாக்கம் குறைந்து குணம் பெறுவது நிகழ்கிறது . இந்த உண்மையை நிரூபிக்கும் வகையில் இக்கட்டுரையாளர் மூலம் “உயர் ரத்த அழுத்தத்தின் மீது வாழ்த்தின் தாக்கம்” என்ற ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. தொடக்க நிலையிலேயே நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது எனவே நாம் அனைவரும் பிறர் வாழ வாழ்த்துவோம், நாமும் நலமுடன் வளமுடன் வாழ்ந்திடுவோம். .

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.