குருஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரிப் பயிலரங்கில் எனது உரை

அண்ணாகண்ணன்
கர்ணன் கவச குண்டலத்துடன் பிறந்தது போல், இந்தத் தலைமுறையில் பிறந்த நீங்கள் ஒவ்வொருவரும் அறிவியலுடனும் தொழில்நுட்பத்துடனும் பிறந்துள்ளீர்கள் என்று என் உரையைத் தொடங்கினேன்.
சென்னை, வேப்பேரியில் உள்ள குருஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவை சார்பில் 20.02.2020 அன்று நடைபெற்ற பயிலரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன். இணையமும் தமிழ்ப் பயன்பாடும் என்ற தலைப்பில் ஓர் அமர்வை நடத்தினேன். கணித்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஹெலன், நிகழ்வைத் திட்டமிட்டு நடத்தினார். பேரவையின் செயலாளர் பூஜா எனக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
அரங்கில் மாணவியர் இருவரை அழைத்து, அவர்களின் செல்பேசியில் குரல்வழியே தட்டச்சு செய்ய வைத்தேன். இணையத்தை அவரவர் தாய்மொழியில் அணுக வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தேன். இணையத்தில் தமிழுக்கு உள்ள வாய்ப்புகளை விளக்கினேன்.
கணித்தமிழ்ப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்குச் சான்றிதழ்களை வழங்கினேன். நிகழ்ச்சி முடிந்த பிறகும் மாணவியர் தங்கள் கேள்விகளைத் தொடுத்து உரையாடினர்.