குறளின் கதிர்களாய்…(316)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(316)
விருப்பறாச் சுற்ற மியையி னருப்பறா
வாக்கம் பலவுந் தரும்.
-திருக்குறள் – 522 (சுற்றந்தழால்)
புதுக் கவிதையில்...
அன்பு
அகலாத சுற்றம்
ஒருவன்
அடைவது பெருஞ்சிறப்பு..
அவ்வாறு கிடைப்பது,
அவனுக்கு
அதிகமாய் வளர்தல் நீங்காத
அளவற்ற செல்வங்கள்
பலவற்றை
அள்ளிக் கொடுக்கும்…!
குறும்பாவில்...
அன்பு நீங்காச் சுற்றமதை
அடைந்திடும் ஒருவனுக்கு வளர்தல் நீங்காப் ,
பலசெல்வம் வந்து சேரும்…!
மரபுக் கவிதையில்...
அகில வாழ்வி லொருவனுக்கு
அன்ப தகலாச் சுற்றமது
மகிழ்ச்சி யளிக்கும் பெரும்பேறாய்
மனதில் தருமே இன்பமதை,
மகிமை மிக்கப் பேறிதுதான்
மறைத லில்லா வளர்ச்சியுடன்
வகைகள் பலவாய்ச் செல்வங்கள்
வரவே வைக்கு மவனுக்கே…!
லிமரைக்கூ..
அன்பு அகலாச் சுற்றம்
அமைந்தவன் இருப்பிடமே குறையாச் செல்வம்
பலவும் சேரும் முற்றம்…!
கிராமிய பாணியில்...
செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்,
நல்ல ஒறவுகளோடச் சேந்திருப்பது
செல்வத்தில யெல்லாம் பெருஞ்செல்வம்..
அன்பு கொறயாத
ஒறவு கெடைப்பது பெருஞ்செல்வம்,
அது கெடைச்சவங்கிட்ட
அள்ளக் கொறயாத
பலவக செல்வமெல்லாம்
அதுவா வந்து சேருமே..
அதால
செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்,
நல்ல ஒறவுகளோடச் சேந்திருப்பது
செல்வத்தில யெல்லாம் பெருஞ்செல்வம்…!