கதை வடிவில் பழமொழி நானூறு – 17

நாங்குநேரி வாசஸ்ரீ
பாடல் 35
மறுமனத்தன் அல்லாத மாநலத்த வேந்தன்
உறுமனத்த னாகி ஒழுகின் – செறுமனத்தார்
பாயிரம் கூறிப் படைதொக்கால் என்செய்ப?
‘ஆயிரம் காக்கைக்கோர் கல்’.
பழமொழி — ‘ஆயிரம் காக்கைக்கு ஓர்கல்’
ஈசிச்சேரில் படுத்துக்கொண்டு டீ குடித்துக்கொண்டு இருக்கிறேன். டீ குடிக்கிற நேரமா இது மனைவியின் குரல். அரை மணிநேரத்துல டின்னர் ரெடியாயிடும். சொன்னா கேட்டாதானே. எப்ப பாத்தாலும் நியூஸ்வேற. தனக்குத்தானே பேசிக்கொண்டு சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறாள். எனக்குத்தானே தெரியும் இன்னிக்கு என்ன நடந்ததுனு. காலையிலேருந்து நடந்ததச் சொன்னா டென்ஷன் ஆயிடுவா.அப்பறம் மெதுவா சொல்லலாம். நிகழ்வுகளை ஒவ்வொன்றாய் நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறேன். ”
காலையில்,
என்ன சார் இங்க கெடுபிடி. கேட்டுக்கொண்டே என் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அந்தப் பெரிய வணிகவளாகத்தினுள் நுழைந்தேன். சொந்தமாக மிட்டாய்க் கடை வைத்திருக்கும் எனக்கு இங்கு கூட்டம் கூடுவது ஒண்ணும் புதுசு இல்ல. இருந்தாலும் தெரிஞ்சிக்கிற ஆர்வம். ஏதும் சினிமா ஷூட்டிங் எடுக்கப்போறாங்களா. போலீசெல்லாம் வந்திருக்கு.
அது ஒண்ணுமில்ல சார். புதுசா ஒரு போலீஸ்அதிகாரி வந்திருக்கார் போல. அவர் எல்லா இடத்திலயும் பாதுகாப்ப உறுதி செய்யறார். அவ்ளோதான். சொல்லிவிட்டு பான்கடை வைத்திருக்கும் நண்பன் சதீஷ் சென்றுவிட்டான்.
எனக்கு என்னவோ சரியாகப் படல. வேறு என்னவோ இருக்கு. நேராப் போய் போலீஸ்கிட்டயே கேட்டுரலாம். தீர்மானத்துடன் நடந்தேன்.
ஆமாப்பா. நேத்தைக்கு நடந்த சம்பவத்த விசாரிச்சுட்டுப் போலாம்னு வந்திருக்கோம். இன்னும் இரண்டு அதிகாரிகள் வரணும். வந்தவொடனே ஒவ்வொரு கடையா விசாரிப்போம்.
சம்பவமா. என்ன ஆச்சு சார். பதட்டத்துடன் கேட்கிறேன்.
ஏம்பா.. இங்க கடை வைச்சிருக்கேன்னு சொல்லற. நடந்த திருட்டப் பத்தி ஒண்ணுமே தெரியாதா.
திருட்டா…… அச்சச்சோ.. என் கடை என்ன ஆச்சோ. பதட்டத்துடன் அவரிடம் விடைபெற்று ஓடினேன். கடையைத் திறந்தவுடன்தான் நிம்மதி. என் கடைக்கு ஒண்ணுமில்ல. வேற எங்க திருட்டு போயிருக்கும். எப்படியோ. நமக்கு ஒண்ணுமில்ல. அவங்க விசாரிச்சுட்டு வரும்போது தெரிஞ்சுக்கலாம்.
மொத்தம் நூற்றுநாற்பது கடைகள் உள்ள வணிக வளாகம். எங்க, யாருக்கு திருட்டு போச்சோ. இன்னிக்கு முழுசும் அப்டியே கழிஞ்சுபோச்சு. டீ குடுக்க வர பையன் தொடங்கி சுத்தம் செய்யற அண்ணா வர எல்லாரும் போலீஸ் விசாரணையப் பத்தியே பேசிக்கிறாங்க. ஆனா யாருக்கும் எதுவும் தெரியல.
மதிய உணவுக்கப்புறம்தான் என் கடைக்கு வந்தாங்க. சரியா இரண்டு நிமிடம் நின்னிருப்பாங்க. பிரச்சினை ஒண்ணுமில்லனு தெரிஞ்சவொடனே ஒரு போட்டோமட்டும் எடுத்துட்டுக் கிளம்பிட்டாங்க. அவங்க போனப்புறம் பக்கத்து பிளாக் இரண்டாவது தளத்துல மின்சாதனப் பொருட்கள் விக்கற கடையிலேந்து வாஷிங்மெஷின் திருடுபோயிடுச்சுனு பேசிக்கிட்டாங்க. எது எப்டியோ. ஒருவழியா கடைய மூடி வீட்டுக்குவந்து டிவி நியூஸ் பாத்துக்கிட்டு இருக்கேன்.
எல்லா சேனலிலயும் எங்க வணிகவளாகத்தோட போட்டோதான்.
போலீஸின் அதிரடி நடவடிக்கை. கயவர்கள் கட்டாயம் பிடிபடுவார்கள். போன்ற வாசகங்களுடன். இதில போலீஸ் உயரதிகாரி தன்னோட பேட்டியில காவல்துறை உங்கள் நண்பன். உங்களின் பாதுகாப்பு எங்கள் கையில். நிம்மதியாக இருங்க. ‘ஆயிரம் காக்கைக்கு ஓர்கல்’னு பழமொழி கேள்விப்பட்டிருப்பீங்க. அதுபோல இந்த ஒரு திருடனுக்கு நாங்க குடுக்கப்போற தண்டனையப் பாத்து மத்தவன் எவனும் சின்னப் பொருளக்கூட திருட நினைக்கமாட்டான்னு பேசிக்கிட்டிருக்கார்.
என்ன ஆச்சு திடீர்னு. நாட்டுல தினமும் ஒவ்வொரு இடத்துலயும் கொஞ்சநாளா திருட்டு அதிகரிச்சுட்டுதான் இருக்கு. ஒரு வாஷிங்மெஷின் திருடுபோனதுக்கு இவ்வளவு அளப்பறையா. ஒருவேள கடை ஓனர் அரசியல்வாதியா இருப்பாரோ. அல்லது புதுசா வந்திருக்கிற உயரதிகாரி நியாயமானவரோ. எப்படியோ அவர்சொல்ற மாதிரி திருடங்களே இல்லாமப் போனா என்னயமாதிரி வியாபாரிகளுக்கு நிம்மதிதான்.
சாப்பிட வாங்க. மனைவி அழைக்கிறாள்.
பாடல் 36
விளிந்தாரே போலப் பிறராகி நிற்கும்
முளிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா
அளிந்தார்கண் ஆயினும் ‘ஆராயா னாகித்
தெளிந்தான் விளிந்து விடும்‘.
பழமொழி – ‘ஆராயானாகித் தெளிந்தான் விளிந்து விடும்’
நான் சொன்னமாதிரியே ஆகிப்போச்சு பாத்தியா. ஊரிலிருந்து வந்திருக்கும் அம்மா புலம்பிக்கொண்டிருக்கிறாள். அந்த பொண்ணு மேல விழுந்து ஈஷிக்கிட்டு நிக்கறதப் பாத்தே நான் கண்டுபிட்டிச்சிட்டேன். இமாசலப்பிரதேசத்தில் கசௌலி எனும் ஊரில் வசிக்கும் என் வீட்டிற்கு அம்மா எப்போதாவது தான் வருகிறாள். நாங்க வருசத்துக்கு ஒருதடவ ஊருக்குப் போயிடறதால சந்தர்ப்பம் கிடைக்கறதில்ல. மேலும் மாலதியும் டீச்சரா வேல பாக்கறதால அம்மாக்கு இங்க வந்தா போர்தான். இந்த வருசம்தான் டில்லி சித்தப்பா பெண் கல்யாணத்த சாக்கா வச்சி ரெண்டுதடவ வந்திருக்காங்க.
மனைவி மாலதி அதிகம் பேசற டைப் இல்ல. அக்கம்பக்கத்து வீடுகள்ல எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் வச்சுக்குவா. இது மலைப் பகுதிங்கறதால தனித்தனி வீடுகள்.அதுவும் எங்கவீட்டுப்பக்கத்துல மூணு வீடுகள்தான் இருக்கு. மத்தபடி மேட்டுமேல ஏறிப்போனா என் நண்பன் விஜய் வீடு. கூட இரண்டு வீடுகள் இருக்கு. அவங்க யாரையும் எனக்குத் தெரியாது.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் அவனும் ஒருகிலோமீட்டர் நடந்தே போய் பாய் கடையில இஞ்சி டீ குடிச்சிட்டு வருவோம். இப்ப சமீபத்துலதான் வீட்டுப்பக்கத்துல குடியிருக்கிற பெங்காலி பொண்ணு தன்னு பாத்ரா ப்ரெண்ட் ஆனா. மாலதி வேலை பாக்கற சரஸ்வதி வித்யாலயால கணக்கு டீச்சரா சேந்திருக்கா. எனக்கு புத்தகம் வாசிக்கற பழக்கம் இருக்கறதால அப்பப்ப வந்து புக் வாங்கிக்கிட்டுப் போவா.
காலையில ரெண்டுபேரும் சேந்துதான் ஸ்கூல் போவாங்க. கொஞ்சம் பழகினப்புறம் சொல்ல ஆரம்பிச்சா உங்க மனைவி ரொம்ப ரிசர்வ்ட் டைப் போல. கேட்ட கேள்விக்குப் பதில் அவ்வளவுதான். எவ்வளவு முயற்சித்தும் பேசவே மாட்டேங்கிறாங்கனு. எல்லாம் கொஞ்சநாள் நல்லாத்தான் போயிக்கிட்டிருந்தது. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா வீட்டுக்குள்ள வர ஆரம்பிச்சா. மாலதி இருக்கிறதப் பத்தி கொஞ்சம் கூடக் கவலைப்படாம சத்தமா பேசிச் சிரிச்சு என்னய வம்புக்கு இழுப்பா.
சனி ஞாயிறுகளில் விஜய் குடும்பத்தோட சில சமயம் மங்கி ஹில்ஸ் வரை நடந்து ஏறிட்டுவருவோம். அவன் கிறித்துவன்ங்கறதால அனுமார் கோவிலுக்குள்ள வரமாட்டான். சிலநேரம் அவனுக்காக நாங்க எதிர் மேட்டிலிருக்கிற சர்ச்சுக்குப் போவோம். தன்னு வந்ததிலேந்து அவளும் அண்ணா அண்ணானு எங்ககூட ஒட்டிக்கிட்டு வர ஆரம்பிச்சா. எதுசெஞ்சாலும் அவ இல்லாம இல்லங்கற நெலமைக்கு வந்திருச்சு. அப்பதான் அம்மா சித்தப்பா பொண்ணு நிச்சயதார்த்தம் அட்டெண்ட் பண்ணிட்டு இங்க வந்திருந்தாங்க.
இந்தப் பொண்ணு யாரு என்னன்னு விசாரிடா. கூடப்பொறந்தவ மாதிரி உன் வீட்ல ரொம்பதான் உரிமை கொண்டாடறா. அப்பா அம்மா எங்க இருக்காங்களாம்? அடுக்கடுக்கான கேள்விகள். அதுவரை நாங்கள் அதைப்பற்றி கவலைகூடப் படவில்லை.
சொல்லிவச்சாமாதிரி அம்மா ஊருக்குப்போயிட்டு ஆறுமாசம் கழிச்சு திரும்ப இப்ப கல்யாணத்துக்கு வரதுக்குள்ள இவ்வளவு பிரச்சினை. அவ வீட்டுக்கு ஒரு சிடுமூஞ்சி ஆசாமி போனமாசம் வந்தாரு. அவர எங்களுக்கு மாமானு அறிமுகப்படுத்தினா. அவர் ஏதோ சுற்றுலாவுக்காக வரவங்க தங்கறதுக்கு ரிசார்ட் கட்டி வாடகைக்கு விடப்போறாராமா. அதனால இங்க ஒரு வருசம் தங்குவார்னு சொன்னா.
என்னமோ நாங்க தன்னுவோட கேர்டேக்கர் மாதிரி அவரும் உரிமையா எப்பபாத்தாலும் எங்க வீட்டுக்கு வர ஆரம்பிச்சார். இடம் பாத்து காண்ட்ராக்டர் புடிக்கிற வரை என்னயும் விஜயையும் கூட்டிக்கிட்டு திரிஞ்சாரு. சரி கார் இருக்கறதால உதவி கேக்கறாருனு நெனைச்சோம். விஜய்கூட என்னடாஇந்த ஆளு மூஞ்சிய சிடுசிடுனு வச்சிக்கிட்டு காரியத்திலயே குறியா இருக்காருனு சொன்னான். தன்னு கேட்டுக்கிட்டதால உதவி பண்ணினோம்.
திடீர்னு அந்த ஆளு ஓடிப்போயிட்டாராமா. தன்னு வந்து சொல்றா. அண்ணா அந்த மாமா எனக்கு தூரத்து உறவுதான். புரோக்கர், காண்ட்ராக்டர் எல்லாருக்கும் என் அட்ரசையும், உங்க ரெண்டுபேர் அட்ரசையும்தான் குடுத்திருக்காராம். புரோக்கர்பணம் கேட்டு போன்ல மிரட்டறான். எல்லாத்தையும் செட்டில் பண்ணி குளோஸ் பண்ண மூணுலட்சம் செலவாகும். போலீஸ் கேசாயிடுச்சின்னா நம்மளுக்குதான் பிரச்சினை.
என்கிட்ட ரெண்டு லட்சம் இருக்கு. நீங்களூம் விஜய் அண்ணாவும் ஒருலட்சம் ஏற்பாடு பண்ணினா போதும். தெளிவான ஹிந்தியில் பேசிவிட்டுப் போய்விட்டாள்.
மாலதி அம்மாவுக்கு மொழிபெயர்த்துச் சொன்னவுடன் கிடைக்கும் வசவுதான் இது. நம்மகிட்ட பாசமா இருக்கறவன்கிட்டயே பாத்துதான் பழகணும்னு இருக்குறப்போ இந்தமாதிரி யாரு என்னனு சொல்லாமயே வந்து உரிமை கொண்டாடற தன்னு மாதிரி ஆளுங்களையும் எப்ப பாத்தாலும் சிடுசிடுனு கோவக்காரன் மாதிரியே காட்டிக்கிட்டு காரியத்துலயே கண்ணா இருக்கற அவ மாமாவையும் ஆராயாம நம்பின உன் மாதிரி ஆளுங்க நெலமைய பழமொழி நானூறே சொல்லுதே. ‘ஆராயானாகித் தெளிந்தான் விளிந்து விடும்’னு.
பெரியவங்க பேச்ச எங்க கேக்கறீங்க. திரும்ப அந்தப் பொண்ணுவந்தா. உன் பிரச்சினை உன்னோடனு மூஞ்சியில அடிச்சா மாதிரி சொல்லிடு. போலீசு கீலீசு எல்லாம் ஒண்ணும் வராது. இவளே நாடகம் ஆடறாளோ என்னமோ. உன்னால முடியலன்னா சொல்லு நான் பேசறேன். அத அவளுக்குப் புரியறமாதிரி மொழிபெயர்த்து சொல்லிடு.
சொல்லிவிட்டுத் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள் அம்மா.