புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006. 
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

பலரும் பரவிய பத்தினி ‘ஆற்றல்’!

முன்னுரை

திருக்குறளில் பெரும் விவாதத்திற்கும் கருத்து மாறுபாடுகளுக்கும் ஆளான குறட்பாக்களில் ஒன்று இந்தக் கிழமை ‘பரிமேலழகர் உரைத்திறன்’ என்ற தலைப்பில் ஆராயப்பட உள்ளது. இக்கட்டுரையினால் அக்குறட்பாவின் எளிய பொருளை எல்லாரும் புரிந்து கொண்டு சிக்கலுக்கு முடிவு வந்துவிடும் என்னும் நம்பிக்கையெல்லாம் கட்டுரையாளருக்கு அறவே கிடையாது. ‘தூங்குபவனை  எழுப்பலாம். தூங்குவதுபோல நடிப்பவனை எழுப்ப இயலாது’ என்னும் உண்மை இலக்கிய விவாதங்களுக்கும் பொருந்தும். திருக்குறள் அதிகாரம் ‘ஒரு பொருளே நுதலியது’ என்ற கருத்தியல் நிலையும், திருக்குறளைத் தனித்தனி அலகாகக் கொண்டு உரை செய்யலாம் என்னும் தாராளமய ‘உரைநெறியும்’ நிலவும் வரையிலும் இத்தகைய உரைக்குழப்பங்களையும் குளறுபடிகளையும் நீக்கவே முடியாது. திருக்குறளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் முடியாது. புத்துரை காண்பார்தம் அவசரத்தையும் துடிப்பையும் யாரும் தடுக்கவும் இயலாது.

திறனறியும் குறட்பாவும் உரையும்

‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் அதிகாரத்தில் ஐந்தாவதாக அமைந்திருப்பது

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை” (55)

என்னும் குறட்பாவாகும். இதற்குத்,

  • தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் — பிற தெய்வம் தொழாது தன் தெய்வமாகிய கொழுநனைத் தொழாநின்று துயில் எழுவாள்
  • பெய்யெனப் பெய்யும் மழை — ‘பெய்’ என்று சொல்ல மழை பெய்யும்

 என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் விளக்கவுரையையும் தந்திருக்கிறார்.

பொழிப்புரை நுட்பம்

  • ‘தெய்வம்’ என வாளா திருக்குறளில் இருக்கப், பரிமேலழகர் ‘பிற தெய்வம்’ என உரை காண்கிறார். இதனால் கணவன் உள்ளிட்ட தெய்வங்களுள் பிறதெய்வத்தினும் கணவனையே தெய்வமாகக் கருதும் மனைவியின் மனநிலையைப் பெற வைக்கிறார். அதாவது மற்ற தெய்வங்கள் எல்லாருக்கும் பொது. ‘கணவனோ தனக்கு மட்டுமே தெய்வம்’ என்பது பெறலாயிற்று. இந்த நுட்பத்தைத் ‘தன் தெய்வம்’ என்னும் தொடரால் அவர் குறிப்பது காண்க.
  • ‘பெய்யெனப் பெய்யும் மழை’ என்பதற்குப் ‘பெய்’ என்று சொன்னால் மழை பெய்யும்.’ என மிக எளிமையாக உலகியல் நோக்கி உரை காண்கிறார்.

விளக்கவுரை

“தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயில் எழும் காலத்தாகலின் தொழுது எழுவாள்” என்றார். ‘தொழா நின்று’ என்பது தொழுது எனத் திரிந்து நின்றது. தெய்வம் தான் ஏவல் செய்யும் என்பதாம். இதனால் கற்புடையாளது ஆற்றல் கூறப்பட்டது”.

விளக்கவுரையில் கண்ட உரையருமை 

  • இறைவழிபாடு என்பது மனந் தெளிந்தார்க்கே உரியதாம். திருக்குறள் கடவுள் வாழ்த்தில் ‘மனநிலை – மெய்ந்நிலை’ ஆகிய இருவகை வழிபாட்டில் ‘மாணடி சேர்தல்’ என்பதனான் மனவழிபாட்டையும் ‘எண்குணத்தான் தாளை வணங்காத் தலை’ என்பதனான் மெய்வழிபாட்டையும் திருவள்ளுவர் குறித்திருப்பதைக் காணலாம். இந்தக் குறட்பாவில் இல்லத்தரசி தன் கணவனையே வழிபடுதற்குரிய தெய்வம் என்னும் தெளிவு பெற்றவள் என்பதனைத் ‘தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது’ என்னும் பரிமேலழகர் குறிப்பால் உணர்க.
  • தொழுதல் மனத்தது வினை. எழுதல் மெய்யினது வினை. எழுதல் என்னும் வினையால் துயில் நீங்கும் காலம் பெறப்பட்டது. இறை வழிபாட்டிற்கு ஏற்றதும் உரியதும் வைகறைப் பொழுதே என்பது தமிழ்ப்பண்பாடு. ‘திருப்பள்ளியெழுச்சி’, ‘திருவெம்பாவை’, ‘திருப்பாவை’ என்பவைகளும் வைகறையில் பாடப்படும் இலக்கியங்கள் என்பது அறிக.
  • இனித் ‘தொழுதெழுவாள்’ என்பதற்கு மனத்தால் தொழுதுகொண்டே துயில் நீங்குவாள் என்றே பரிமேலழகர் உரை கொள்ள, பிற உரையாசிரியர்கள் தொழுதெழுவாள் என்பதனை முன்பின்னாக மாற்றி ‘எழுந்துத் தொழுவாள்’ என உரை காண்கின்றனர். ‘சிரித்து வந்தான்’, ‘ஓடி வந்தான்’ என்பன போலத் ‘தொழுது எழுவது’ என்பது ஆகாது என்பது அவர் கருத்து.
  • ‘தொழாஅநின்று எழுவாள் என்னும் நிகழ்கால வினையெச்சம் தொழுது எழுவாள் என இறந்தகால வினையெச்சமாகத் திரிந்து நின்றது என்பதைத் ‘’தொழா நின்று’ என்பது ‘தொழுது’ எனத் திரிந்து நின்றது என்னும் தொடரால் குறிக்கின்றார். இதனால் ‘தொழுது முடித்த பின் எழுவாள்’ என்றில்லாமல் ‘தொழுதுகொண்டே எழுவாள்’ என்பது பெறப்படும்.
  • ஐம்பெரும்பூதங்களில் ஒன்றாகிய மழையைப் ‘பெய்யென’ ஏவல் கொள்ளும் பேராற்றல் உடையவள் என்பதனால் தெய்வத்தையும் ஏவல் கொள்ளும் ஆற்றல் உடையவள் என்பார், ‘தெய்வந்தான் ஏவல் செய்யும்’ என்பதாம் என நுண்பொருள் காண்கிறார். என்ன நுண்பொருள்? இவள் ஆணைக்காகத் தெய்வம் காத்திருக்குமாம்!
  • இந்தக் குறட்பாவின் ஒருவரிக் கருத்தாக (இதன் விரிவு பின்வரும் பத்தியில் காணலாம்) ‘இதனான் கற்புடையாளது ஆற்றல் கூறப்பட்டது’ என எழுதிக் காட்டுகிறார். அதாவது இந்தப் பாட்டுக் கற்பின் சிறப்பையோ, கற்புடையாளது சிறப்பையோ கூறவில்லை. கற்புடையாளது ஆற்றலைக் கூறுகிறது எனத் தெளிவுபடுத்துகிறார். இதனால் ஒரு பண்பின் சிறப்பு வேறு, அப்பண்பை உடையார் சிறப்பு அதனினும் வேறு, அப்புண்புடையாரின் ஆற்றல் அவற்றினும் வேறு என்பது தெளிவாகும்.

அதிகாரப் பொருண்மை பகுப்பு

திருக்குறள் அவ்வதிகாரக் கருத்துக்கள் அதிகாரத் தலைப்பினை விளக்குவதாக மட்டுமே அமைந்துள்ளன என்பதில் பரிமேலழகருக்கு உடன்பாடில்லை. பிறருக்கும் பரிமேலழகருக்கும் உள்ள அடிப்படை வேறுபாடே அதுதான். அவர் தலைப்பின் பல பரிமாணங்களையும் திருக்குறள் ஆராய்வதாகக் கருதுகிறார். அதாவது கடவுள் வாழ்த்து என்னும் தலைப்பை மட்டுமே கருத்திற் கொண்டால் ‘கடவுளை வாழ்த்துவது’ மட்டுமே பொருளாகிவிடும். ஆனால் அந்த அதிகாரத்தில், கடவுளை வாழ்த்துவது மட்டும் பொருளாக அமைந்திருக்கவில்லை. இத்தொடரின் முந்தைய கட்டுரைகள் பலவற்றிலும் இக்கருத்து தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. .’வாழ்க்கைத் துணை நலம்’ என்பதற்கு அவ்வில்வாழ்க்கைக்குத் துணையாகிய இல்லாளது நன்மை. வாழ்க்கைக்குத்தான் அவள் துணையே தவிர கணவனுக்கு அல்ல. இருந்திருந்தால் ‘கணவன் துணை நலம்’ என எழுதியிருப்பார். இந்த நுண்ணியம் பிறிதொரு கட்டுரையில் விளக்கப்படும்.

வாழ்க்கைத் துணைநலம் அதிகாரப் பொருண்மை பகுப்பு

வாழ்க்கைத் துணைநலம் (6) என்னும் அதிகாரப் பொருண்மையைப் பின்வருமாறு பரிமேலழகர் பகுத்துக் கொள்கிறார். பத்துப் பாடல்களும் ஒன்பது வகையான கருத்துக்களைச் சொல்வதற்காகத் திருவள்ளுவர் எழுதியிருக்கிறார் எனக் கருதுகிறார்.

  1. இரண்டு நன்மையும் சிறந்தன (நற்குண நற்செய்கைகள் வருவாய்க்குத் தக்க வாழ்க்கை என்னும் இரண்டு) (1)
  2. இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல (2-3)
  3. கற்பு நலத்தது சிறப்பு (4)
  4. கற்புடையாளது ஆற்றல் (5)
  5. கற்புடையாளது சிறப்பு (6)
  6. தற்காத்தற் சிறப்பு (7)
  7. புத்தேளிரால் பேணப்படுவாள் (8)
  8. தகைசான்ற சொற்காவா வழிப் படும் குற்றம் (9)
  9. வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலன் (10)

இதுபோல அதிகாரப் பொருண்மை பகுப்பு எல்லா அதிகாரங்களிலும் செய்திருந்தாலும் அறன் வலியுறுத்தல் (4), மெய்யுணர்தல் (36), அவா அறுத்தல் (37), கயமை (108) ஆகியன உட்பட ஐந்து அதிகாரங்களில் மட்டுமே ‘பத்துக்கு ஒன்பது’ எனப் பகுத்துக் கொள்வதைக் காணமுடிகிறது. வான்சிறப்பு (2) என்னும் அதிகாரத்தை மட்டும் ‘உலகம் நடத்தற்கு ஏது’ என்பதாக ஏழுகுறட்பாக்களையும் (1-7) ‘அறம் பொருள் இன்பம் நடத்துவதற்கு ஏது’ என்பதாக மூன்று குறட்பாக்களையும் (8-10) பகுத்துக் குறைவான பகுப்புக்கு உரிய அதிகாரமாகக் காட்சிப்படுத்துகிறார். இந்த அடிப்படையில் ‘தெய்வந்தொழாஅள்’ எனத் தொடங்கும் இக்குறட்பா ‘கற்புடையாளது ஆற்றல் கூறியது’ எனத் தெளிவுபடுத்திக் காட்டுகிறார். இந்தப் பாட்டில் வேறு எதனையும் எதிர்பார்க்கக்கூடாது. அவற்றுக்கான களம் இப்பா அன்று. பரிமேலழகரின் இந்த உரை புலனெறி வழக்கம் மற்றும் உலகியல் ஆகிய இரண்டும் சார்ந்து எழுதப்பட்டது என்பது இனி விளக்கப்படும்.

புலனெறி வழக்கத்தில் கற்பின் பேராற்றல்

உலகியலைச் சாராத புலனெறிவழக்கு நிலைக்காது. அது வெற்றுப் புனைவாகவே முடியும். அதனால்தான் சான்றோர்கள் இலக்கியப் புனைவினை “உள்ளோன் தலைவனாக இல்லது புணர்த்தலும், உள்ளோன் தலைவனாக உள்ளது புணர்த்தலும், இல்லோன் தலைவனாக உள்ளது புணர்த்தலும்,  இல்லோன் தலைவனாக இல்லது புணர்த்தலும்’ எனப் பகுத்துக் கொண்டார்கள். உலகியல் என்பது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. போலிப்பகுத்தறிவுக்கு அங்கு இடமில்லை. அந்த நம்பிக்கை தொடர்ச்சியாகப் பலிக்க வேண்டும் என்னும் தேவையும் இல்லை. நம்பிக்கை மக்கள் சமுதாயத்து உரிமை. மூடநம்பிக்கையையும் மரபு சார்ந்த பழக்கவழக்கங்களையும் ஒன்றாகக் கருதிக் குழப்பிக் கொள்ளுதல் நெறியன்று.

“என்தோழி அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே!” (குறிஞ்சிக் கலி)

“வள்ளி கீழ்விழா., வரைமிசைத் தேன் தொடா., கொல்லை குரல் வாங்கி ஈனா., – மலை வாழ்நர் அல்ல புரிந்தொழுகலான்” (குறிஞ்சிக்கலி 3)

“கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி கொண்டன
செய்வகை செய்வான் தவசி, கொடிது ஒரீஇ
நல்லவை செய்வான் அரசன் இவர்மூவர்
பெய்யெனப் பெய்யும் மழை” (திரிகடுகம் 96)

“நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும்
பெய்யும் மழை’ (மூதுரை) என்பது ஔவையின் நம்பிக்கை.

“வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை
நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை
மாதர் கற்புடைய மங்கையர்க்கோர் மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே!”

என்னும் விவேக சிந்தாமணி மக்கள் சமுதாயத்தின் நம்பிக்கையைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.

  • ‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி’ என்பது ஆண்டாள் வாக்கு.
  • பாரதி ஒருபடி மேலே போய் ‘மூவருக்கு மூன்று மழை’ என்பதை மாற்றி,

 “முன்னாளில் ஐயரெல்லாம் வேதம்— ஓத
மூன்று மழை பெய்யுமடா மாதம்
இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார்—இவர்
ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பார்” (பாரதி  மறவன் பாட்டு)

வேதம் ஓதிய அந்தணர்களுக்காகவே மழை என்கிறார். இது அவரது நம்பிக்கை. இவைகளெல்லாம் மூட நம்பிக்கைகள் அன்று. என்ன பாவம் செய்தாலும் இறைவன் மன்னிப்பார் என்பதுதான் மூடநம்பிக்கை. ‘பரிகாரத்திற்காகவே பாவம்’ என்பதுதான் மூடநம்பிக்கை. இவைபோக புலவர்களும் கவிஞர்களும் இயலாததையெல்லாம் இயலும் என்பதாக உலகியல் நோக்கிப் பாடியிருப்பதையும் காணமுடியும்.

  • ஒரு நாட்டில் பத்தினிப் பெண்டிர் வாழ்வார்களேயானால் அந்நாட்டில் “வானம் பொய்யாது, வளம் பிழைப்பு அறியாது, நீணில வேந்தர் கொற்றம் சிதையாது” (சிலப். 2475-77) என்னும் கருத்தியல் கவுந்தியடிகள் காலத்துக்கும் முற்பட்ட சமுதாய நிலைப்பாடு.
  • “ஆடகப் பூம்பாவை அவள்போல்வார் நீடிய மட்டார் குழலார் பிறந்த பதிபிறந்தேன்” என்பதற்காகப் பெருமைப்பட்டுப் “பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசொடு ஒழிப்பேன்” (சிலப். 3160- 62) என்று வஞ்சினம் கூறிய கண்ணகிக்குத் தகுதியாக இருந்தது அவள் பத்தினி என்பதுதான்.
  • “மாபத்தினி நின்னை” (சிலப். 3174) என அங்கியங்கடவுள் கண்ணகியை வழிபட்டதற்கும், “யார் பிழைப்பா ஈங்கு?” (சிலப். 3176) எனக் கண்ணகியின் ஏவல் கேட்டதற்கும் அவள் மாபெரும் பத்தினி என்பதுதான் காரணம்.
  • ‘எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன்’ (கம்ப. 5362) என்னும் சீதையின் மன உறுதி அவளுடைய கற்பொழுக்கத்தின் மேல் வைத்த நம்பிக்கையைக் காட்டுகிறது
  • “காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம் காதல் பெண்களின் கடைக்கண் பார்வையிலே” (பெண்மை) என்று பாரதி சொல்வது கடைக்கண் பார்வை தரும் ஆற்றலால் அல்லவா?
  • “கார்த்தடங்கண்ணி எந்தேவி அவள் கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை” (பாஞ்சாலி சபதம்) என அர்ச்சுணன் செய்யும் சபதத்தைக் காண்பார்க்கு என்ன தோன்றும்? காண்டிவத்தின் மீது ஆணை என்பது சரி! பாஞ்சாலியின் கடைக்கண்ணை மையமாக்கி வஞ்சினம் கூறுவது எப்படிக் கொள்வது?
  • “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்

மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்!”

(சஞ்சீவி பர்வதத்தின் சாரல்) பாரதியின் நண்பர் பாரதிதாசன் தன் குருவை அப்படியே பின்பற்றுகிறார்.

நிறைவுரை

திருக்குறளில் “ஒவ்வொரு அதிகாரமும் பல பொருண்மைகளை ஆராய்வதாக அமைக்கப்பட்டுள்ளது” என்னும் செந்நெறி கண்டவர் பரிமேலழகர். அந்நுண்ணியத்தால் “தெய்வம் தான் ஏவல் செய்யும் என்பதாம்., இதனால் கற்புடையாளது ஆற்றல் கூறப்பட்டது” என இரண்டு தொடர்களில் ‘இதுவே இப்பாட்டுக்கான மையக்கருத்து’ என உலகியல் நோக்கி உரைகண்டதே பரிமேலழகரின் உரைத்திறனாகும்.

 (தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *