குறளின் கதிர்களாய்…(319)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(319)

உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு.

– திருக்குறள் – 425 (அறிவுடைமை)

புதுக் கவிதையில்...

உலக மாந்தரில்
உயர்ந்தோரை நட்பாக்கிடல்
ஒருவனுக்கு
உயர்ந்த அறிவுடைமையாகும்..
இந் நட்பில்
முதலில் முகம்மலர்தலும்,
பின்னர்
வருந்தி வாடுதலுமிலாமல்
ஒன்றாய்
வைத்துக்கொள்வதுதான்
சிறந்த அறிவுடைமை…!

குறும்பாவில்...

உயர்ந்தோரை நட்பாக்கிடல் அறிவுடைமை,
நட்பதில் முகம்மலர்தல் வாடுதலொன்றாய் வைத்திருத்தல்
மிகவும் சிறந்த அறிவாம்…!

மரபுக் கவிதையில்...

உலகி லுயர்ந்த குணத்தோரை
உற்ற நட்பாய்க் கொள்ளுதலே
பலமே மிக்க அறிவுடைமை,
பார்க்கு மிந்த நட்பினிலே
நலமா யிருந்தால் நகைத்திடலும்
நலிந்தால் முகமே வாடுதலும்
இலதா யொன்றாய்க் கொள்வோனின்
இருப்பா மறிவே மிகச்சிறப்பே…!

லிமரைக்கூ..

அறிவினுக் கடையாள மிதுதான்
உயர்ந்தோரை நட்பாக்குதல், முகமலர்தல் வாடுதலிலாதொன்றாய்ப்
பார்த்தாலதில், பேரறிவே அதுதான்…!

கிராமிய பாணியில்...

அறிவிருக்கணும் அறிவிருக்கணும்
கொறயில்லாம வாழவேதான்
அறிவிருக்கணும்- நல்ல
அறிவிருக்கணும்..

ஒலக வாழ்க்யில
அறிவுங்கிறது ஒருத்தன்
கொணத்தில ஒசந்தவங்கள
நட்பாக்கறதுதான்..

அந்த நட்புல
மொதலுல ரெம்ப
மொக மலர்ச்சியாவும்,
அப்புறமா
மொக வாட்டமுமில்லாமப்
எப்பவும் ஒண்ணுபோல
வச்சிருக்கதுதான்
ஒசந்த அறிவு..

அதால
அறிவிருக்கணும் அறிவிருக்கணும்
கொறயில்லாம வாழவேதான்
அறிவிருக்கணும்- நல்ல
அறிவிருக்கணும்…!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *