மகன் தந்தைக்கு ஆற்றுக்கும் உதவி……..? (சிறுகதை)

0
மகன் தந்தைக்கு ஆற்றுக்கும் உதவி……..? (சிறுகதை)

வளவ. துரையன்

காத்தவராயன் நேற்றிரவு காலமானார். எந்தக் காத்தவராயன் என்று கேட்பீர்கள்? நீங்கள் கேட்பதும் ஒருவகையில் நியாயம்தான். அற்பிசம்பாளையத்தில் மூன்று காத்தவராயன்கள் இருந்தனர். முதலாமவர் கால்நொண்டிக் காத்தவராயன். இவரைச் சிலபேர் இவர் காதில் விழாமல் களவாணிக் காத்தவராயன் என்றும் சொல்வர். எந்த வீட்டில் மாங்காய்கள் காய்த்திருக்கின்றன? எங்குத் தேங்காய்கள் பறிக்கலாம்?. எந்த வீட்டுத் தோட்டத்தில் எலுமிச்சை காய்த்துக் குலுங்குகிறது? என்பதெல்லாம் தெரிந்து யாரும் அறியாவண்ணம் திருடுவதில் வல்லவர். அப்படித் தென்னை மரம் ஏறும்போதுதான் வீட்டுச் சொந்தக்காரர் வந்துவிட அவசரத்தில்  இறங்கக் கீழே விழுந்து கால் முறிந்து கால்நொண்டிக் காத்தவராயன் ஆனார்.

இரண்டாமவர் கடுவனூர் காத்தவராயன்; இவர் மூதாதையர் யாரோ கடுவனூரிலிருந்து இங்கு வந்து குடியேற அவர் குடும்பத்திற்கே கடுவனூர் பட்டப் பெயராக வந்து ஒட்டிக் கொண்டுவிட்டது. மூன்றாமவர்தான் இப்பொழுது காலமான கல்லுவீட்டுக் காத்தவராயன். முதன் முதல் அந்த ஐயப்பன் கோயில் தெருவிலேயே கல் வீடு கட்டியவர் அவர் என்பதால் அப்பெயர் வந்தது. அப்படி வாழ்ந்தவர் அவர். ஆனால் போனமாதம் கூட அவர் சொன்னார். ”ஆமாம் அந்தக் காலத்தில் அனுமாரு கூடக் கடலைத் தாண்டினாராம். இப்ப ஒரு வாழைப்பழத்துக்குப் பிச்சை எடுக்கராரு”.

காலை மணி ஏழாகி விட்டது. வாசலில் இருந்து பார்க்கும்போதே காத்தவராயனைக் கூடத்தில் பெஞ்ச் ஒன்றில் கிடத்தி இருப்பது தெரிந்தது. அவரைச் சுற்றி ஆறேழு பெண்கள் உட்கார்ந்து கொண்டிருந்தனர். நேற்று இரவிலிருந்து தொடங்கி அவர்கள் அழுது முடித்து விட்டனர். இளையமகன் சீனுதான் உள்ளுக்கும் வெளிப்பக்கத்துக்கும் வந்து போய்க்கொண்டிருந்தான். அவன் வெளியில் வந்த போது, பல்லக்குக் கட்ட வந்தவர்கள், “ஏங்க வேலய ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டது, நாட்டாமை சுப்பிரமணியக் கவுண்டர் காதில் விழுந்தது.

அவரே பதில் சொன்னார், ”யார்ரா இவன், பல்லக்குக் கட்டிக் காக்கக் கூடாதில்ல; பெரிய புள்ளயும் செங்கல்பட்டுலக் குடுத்திருக்கற பொண்ணும் வரணும்ல; அப்படிப் போயி ஒக்காரு; நானே கூப்பிடறேன்;” ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் தனஞ்செயன். ”அவனுவளுக்கு அவங்க வேலய முடிச்சுட்டுப் போலாம்முன்னு நெனப்பு” என்றார். தெருவெங்கும் அவரவர் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டு வாசலுக்கு வந்து உட்கார்ந்த அடுத்தத் தெரு கம்சலா, சும்மா இருக்காமல் அந்த வீட்டுப் பவுனாம்பாளின் வாயைக் கிளறினாள். “ஏன் ஆயா; இன்னும் யாரு வரணும்னு இப்படிக் காத்திருக்காங்க” அது போதாதா பவுனாம்பாளுக்கு. அவள் ஆரம்பித்து விட்டாள்.

“ஆமாண்டி நீ சொல்லுவ; ஒனக்கென்னா தெரியும்? நீ அசலூர்லேந்து வந்து வாக்கப்பட்டவ; பெரியமவனப் படிக்க வச்சு வக்கீலாக்கி மெட்ராசுல ஒக்கார வச்சிருக்காரு. அவன் பொண்டாட்டி காலேசுல வாத்தியாரு. ரெண்டு புள்ளங்க அவனுக்கு; அவன் தங்கச்சியைச் செங்கல்பட்டுல ஒரு டாக்டருக்குக் குடுத்திருக்கு. அவங்கள்ளாம் வரவேணாமா?” “அப்படியா ஆயா? இங்க இருக்கவருக்கு மேல ஒரு அண்ணாரும், கீழ ஒரு தங்கச்சியும் இருக்காங்களா?” ”ஆமாண்டி, அவங்கள்ளாம் ரொம்பவே நல்லா இருக்காங்க. சீனுதான் பாவம்; அப்பாருக்காக நெலத்தைப் பாத்துக்கிட்டான். வேலக்கே போகல. இவனுக்கும் ரெண்டு புள்ளங்கதான். ஒருத்தன் இப்பதான் வாத்தியார் வேலைக்குப் போயிருக்கான். மத்தவன் வளவனூர்லக் கடை வச்சிருக்கான்”.

சீனு வெளியே வந்தவன் நாற்காலியில் உட்கார்ந்தான். ”ஏண்டா, எங்க வராங்களாம்? கேட்டியா?” என்று கேட்டார் நாட்டாமை. “இப்ப கேக்கல மாமா; இந்தாங்க நீங்களே கேளுங்க” என்று கூறிய சீனு தன் கைப்பேசியில் அண்ணன் காமராசின் எண்ணைப் போட்டுக் கொடுத்தான். அவர், ”என்னா ராசு எங்க வரீங்க?” “இதோ வந்துட்டன் மாமா; பாண்டிச்சேரியில நுழைஞ்சிட்டோம்” “ஏம்பா இவ்ளோ நேரம்?” “இல்ல மாமா அப்படியே செங்கல்பட்டு வந்து ராசாத்தியையும் கூட்டுக்கிட்டு வரேன்; அதான்” ”சரி, சீக்கிரம் வந்து சேருங்க; இன்னிக்கு செவ்வாக் கெழமை; பன்னண்டு ஒண்னரை குளிகன்; அதுக்குள்ள எடுக்கணும்” என்று பேசி முடித்து விட்டார்.

தனஞ்செயன் “என்னா சொல்றாங்க” என்று கேட்டார். “ம்….வழியிலத் தங்கச்சியையும் கூட்டுக்கிட்டு வரானாம். அதான் இவ்ளோ நேரம் ஆடுயிடுச்சாம்” என்றார் நாட்டாமை. “ஏங்க ராத்திரி பத்து மணிக்கு உசிரு போன ஒடனேயே மொதல்ல அவனுக்குதான் தகவல் சொன்னோம்; ஒடனே கெளம்பியிருந்தா விடியறதுக்குள்ள வந்திருக்கலாம்” என்று சொல்லிய ஊர்த் தலைவர் சீனுவைப் பார்த்தார்.

அவனோ தனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போலத் தலையைக் குனிந்து உட்கார்ந்திருந்தான். நாட்டாமையின் குரலே கொஞ்சம் உச்சக்கட்டம்தான். பவுனாம்பாளின் காதிலும் அது விழுந்தது. அவள் ஆரம்பித்து விட்டாள்.

“ஏண்டி கம்சலா கேட்டியா கதையை. தங்கச்சி ஊட்டுக்குப் போயி சீராடிட்டு வரான் போலிருக்கு. என்னாடா அங்கத் தம்பி தனியா இருப்பானே ராப்பொணம் காத்துக்கிட்டுன்னு நெனப்பு இருந்தா கோழி கூவறதுக்கு முன்ன வந்திருக்க வேணாம்” அதற்குக் கம்சலா, “அவங்களுக்கு உள்ள என்னா இருக்குதோ யாரு கண்டா?” என்றாள். “என்னா இருக்குது? வசதிதான் காரணம். ரெண்டு காசு சேந்ததுமே அப்பாரு, அம்மாக்காரி யாருமே வாணாம். அவங்கள்ளாம் நகரத்து வாசியா ஆகியாட்டாங்க இல்ல”

“அதுக்காக சொந்தம்லாம் உட்டுப் போயிடுமா?” ”அட போடி இவளே; ஆறு மாசம் முன்னாடி காயலா கெடந்து செத்துப் போனாளே ராக்காயி, அதாண்டி சீனுவோட அம்மா அவ கண்ணால தண்ணி உட்டுக் கதைகதையா சொல்லியிருக்கா. அங்க போனாலே பெரியவன் ரெண்டு பேரையும் வேலைக்காரனாதான் நடத்துவானாம். அவன் தங்கச்சி அதுக்கு மேல; அவ ஆசையா ஆயான்னு வர்றப் புள்ளயக் கூட சேர உடமாட்டாளாம்.அப்பறம் ஏன் இவங்க போனாங்கன்னு கேப்ப? எல்லாம் பேரப்புள்ளங்க மேல இருக்கற ஆசைதான்”

வாசலில் பெரிய கார் ஒன்று வந்து நின்றது. நான்கு பெரியவர்களும் நான்கு சிறுவர்களும் இறங்கியது தெரிந்தது. காமராசு தூக்கவே முடியாமல் பெரிய மாலையைத் தூக்கிக் கொண்டு உள்ளே போனான். அவன் தங்கை காரை உட்டு இறங்கியதுமே, ”அப்பா என்னை நடுத்தெருவுல உட்டுட்டுப் போயிட்டியே?” என்று பெருங்குரலெடுத்துக் கத்திக் கொண்டு உள்ளே போனாள். சிறுவர்களும் காமராசுவின் மனைவியும், டாக்டர் மருமகனும் சென்றனர். சிறிதுநேரம் உள்ளே அழுகையாக இருந்தது. அதற்குள் பல்லக்குக் காரர்கள் வந்துவிட நாட்டாமை ”ஆரம்பிங்கடா’ என்று உத்தரவிட்டார்.

உள்ளிருந்து ஒருவர் ஒருவராக வெளியே வர ஆரம்பித்தனர். முதலில் வந்த டாக்டர் தனியாக இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டனர். காமராசுவின் மனைவி மட்டும் உள்ளேயே இருந்தாள். காமராசும் அவன் தங்கையும் வந்தனர். காமராசு சீனுவுக்கும் நாட்டாண்மைக்கும் நடுவில் உட்கார்ந்து கொள்ள, அவன் தங்கை ராசாத்தி பக்கத்து வீட்டுப் பவுனாம்பாளைப் பார்க்கச் சென்றாள். சற்று நேரம் கழித்து அவளும் அங்கே வந்து திண்ணையில் உட்கார்ந்தாள்.

“எத்தினி நாளு கெடந்தாரு?” என்று பொதுவாகக் கேட்டான் காமராசு. தனஞ்செயன் உடனே  ”படுத்த படுக்கையாக் கெடந்தது என்னமோ நாலு நாளுதான். ஆனா ஒரு பத்துப் பதினைஞ்சு நாளாவே அவருக்கு சொகமில்ல” என்றார். “அவ்ளோ சீரியஸ்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நான் வந்து கண்டுக்கிட்டுப் போயிருப்பேன்ல” என்றான் அவன் பதிலுக்கு. சீனு மௌனமாக இருந்தான். நாட்டாண்மைக்குத்தான் தாங்க முடியவில்லை. “ஏம்பா, இந்தப் பத்து நாள்ல ஒங்கிட்ட ஆறு முறை சொல்லியாச்சு; நானே நாலு தடவ போட்டுப் பேசினேன். நீ ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒரு காரணம் சொல்லிக்கிட்டுத்தானே இருந்த” என்று அவர் உரக்கப் பேச எல்லார் கவனமும் இங்கே திரும்பியது.

காமராசுவிற்கு ”ஏண்டா கேட்டோம்” என்றாகி விட்டது. ஏதாவது பேச வேண்டுமே என்று சீனு பக்கம் திரும்பி, மெதுவாக “எப்படா உசிரு போச்சு” என்றான். சீனு, ”பத்து மாசம் இருக்கும்ணே” என்றான். எல்லாரும் சீனுவைப் பார்த்தனர். ”என்னாடா சொல்ற” “ஆமாண்ணே; அப்பாரு செத்துப் போயிப் பத்து மாசம் ஆகியிருக்கும்ணே” காமராசு நாட்டாண்மை பக்கம் திரும்பி “என்னாங்க இவன் பேசறான்?” என்றான். “சீனு என்னா ஒடம்பு சரியா இல்லியா?” என்றார் நாட்டாண்மை. இல்லீங்க; எனக்கு ஒண்ணுமில்ல;  நான் உண்மையத்தான் சொல்றேன். அவரு எப்ப செத்துப் போனார் தெரியுமா?” என்று கேட்டு சும்மா இருந்தான்.

யாரும் ஒன்றும் புரியாமல் இருக்க சீனு எழுந்திருந்தான். அவன் குரல் உச்சமாக எழுந்தது. “நாட்டாமை ஒங்களுக்கு ஞாபகம் இருக்கா? இதே எடத்துல, நீங்க. தலைவரு, அப்பறம் இன்னும் ஆறேழு பெரிய மனுஷங்கள்ளாம் வந்திருந்தீங்க; அன்னிக்குதான் இவரு அதான் எங்கண்ணன், சொத்தைப் பிரிக்கணும்னு ஒத்தக் கால்ல இருந்தாரு. சரின்னு அப்பாருவும் ஒத்துக்கிட்டுத்தான் ஒங்கள எல்லாம் வரவழைச்சாரு; அப்பக் கூட எனக்கு இந்த ஊட்டத் தர்றதால நெலத்தைக் கொஞ்சம் கொறச்சிக்கணும்னு இவரு ஒரே பிடிவாதமாகத்தான் இருந்தாரு.

ஊட்டை வச்சுக்கிட்டு அவன் என்னா செய்யப்போறான்? நெலமா இருந்தாலும் அவனுக்கு ஏதாவது வருமானம் வரும். ராசு நீ வேணா ஊட்டை எடுத்துக்க. நெலத்தைக் கொறைச்சுக்கன்னு அப்பாரு சொன்னாரு. அதுக்கு இவரு எனக்கு எதுக்கு இந்த ஊடு? மெட்ராசுல பெரிய ஊடு கட்டப் போறேன்; பாகம் பிரிச்சு ஒடனேயே நெலத்த விக்கப்போறேன்னு சொன்னாரு. அப்பாருக்கு அப்பதான் விஷயம் புரிஞ்சிருக்கு. நெலத்தை மட்டும் விக்காதடா; நான் கெஞ்சிக் கேட்டுக்கறேன்னாரு. இவரு அதை நீ சொல்லாதன்னாரு. அப்படியே பேச்சு அதிகமாச்சு. நீங்களும் எவ்வளவோ தடுத்துப் பாத்தீங்க.

ஒரு சமயத்துல அப்பாரு, ஊடு கட்ட நான் வேணாப் பணம் தரேன்னாரு.  இவரு ஒடனே என்னா செஞ்சாரு ஞாபகம் இருக்காருங்களா? ஓடிப் போயி காருலேந்து எடுத்தாந்த மூணோ இல்ல நாலோ ரூபாக் கட்டுகளை அப்பாரு மேலியே போட்டாரு; நீ எனக்குப் பணம் தரியா? எங்கிட்ட இல்லாதப் பணமா? ஒங்க சங்காத்தமே வாணாம்னுதான நான் எல்லாத்தையும் உட்டுட்டுப் போறேன்னாரு. அந்த சொல்லைக் கேட்டதுமே அப்பாரு உசிரு போயிடுச்சு. ஊரு ஜனங்க மத்தியில இவ்ளோ அவமானமா போயிடுச்சேன்னு அவரு ஒண்ணுமே பேசாம உள்ளப் போயிப் படுத்துக்கிட்டாரு”

இதெல்லாம் காதில் விழுந்ததும் அவன் தங்கை ராசாத்தி வேகமாக எழுந்து வந்தாள். சத்தமாக, ”என்னாண்ணே, நீ பாட்டுக்கு பெரியண்ணனைப் பேசிக்கிட்டே போற?” என்று கேட்டாள். சீனு, ”வாடியம்மா என் தங்கச்சி ராசாத்தி; அப்பாரைப் பொதைக்க மாட்டாங்கம்மா; எரிக்கத்தான் போறாங்க தெரியும்ல” என்றான். எல்லாரும் சீனுவை வியப்புடன் பார்த்தனர். காமராசு தலை நிமிரவே இல்லை. ”என்னா சொல்ற சீனு?” என்றார் ஊர்த்தலைவர். பல்லக்கு வேலையை முடித்துவிட்டவர்கள் தொலைவில் நின்று வேடிக்கை பார்த்தனர். மேளச் சத்தமும் ஓய்ந்து விட்டது. வாசலில் ஒரு பெஞ்ச் கொண்டுவது போடப்பட்டது.

சீனு ஊர்த்தலைவரைப் பார்த்தான். “இல்லீங்கய்யா, ராசாத்திக்குத் தெரியும்; பாகம் பிரிச்சப் பத்தாவது நாளு இவ வந்தா. சரி அப்பாரு எப்படி இருக்காருன்னுப் பாக்க வந்திருக்கான்னு நெனச்சா, அம்மாக்கிட்டப் போயி ரகசியமா, ”அம்மா, எனக்கு அந்த ரெட்டைவடம் சங்கிலியைக் குடு”ன்னு கேக்கறா. அம்மா, “அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ போயி ஒங்கப்பாருகிட்டக் கேட்டுக்கன்னு சொல்லிட்டாங்க; நேர அப்பாருக்கிட்ட வந்தா. நானும் அப்ப கிட்ட இருக்கேன். அப்பா நல்லாவே சொல்லிட்டாங்க.

”ராசாத்தி, ஒனக்கு எல்லாம் வேணும்ற அளவுக்குச் செஞ்சாச்சு; அறுபது பவுனு போட்டுதான் கட்டிக் குடுத்தது. வெள்ளி சாமான்லாம் நம்ம சாதி சனங்க இவ்ளோ வாங்கியே தரமாட்டாங்கன்னு ஊரே அதிசயித்துப் போச்சு. இன்னும் மிக்சி, கிரைண்டர், மரக்கட்டிலு, மேசை, நாற்காலி, பிரிட்ஜு, மரபீரோன்னு எல்லாம் ஒரு கொறையுமில்லாம செஞ்சாச்சு; அப்பறம் ஒன் புருசன் கிளினிக்கு வைக்கப் போறார்னு ரெண்டு லட்சம் பணம் குடுத்தேன். கல்யாணத்துலப் பெரிய வண்டி வாங்கித் தரலன்னு அப்பதான் கேட்ட நீ. அதையும் வாங்கிக் குடுத்தேன். இப்ப இதைக் கேக்காத” “ஏம்பா அம்மா சங்கிலி எனக்குக் குடுக்கக்கூடாதா? அதை நீ என்னா செய்யப்போற?”

”என்னாவோ செஞ்சுட்டுப் போறேன்; ஆனா ஒனக்கு மட்டும் கெடையாது. இது நிச்சயம்னு சொல்லிட்டாரு. அதைக் கேட்டதும் இவ சாமி வந்தமாதிரி ஒரு ஆட்டம் ஆடினா. அப்பா அம்மான்னு ஒரு மரியாதை இல்லாம என்னா பேச்சுப் பேசினா தெரியுமா? கடைசில என்னா சொல்லிட்டுப் போனா தெரியுமா? அந்தச் சங்கிலியை ஒன்னோடயே போட்டுப் பொதைச்சுக்கன்னு சொல்லிட்டுப் போனா; இல்லன்னு சொல்லச்சொல்லுங்க பாப்போம்” ராசாத்தி பேசாமல் நின்று கொண்டிருந்தாள். சீனு தொடர்ந்தான். ”அந்த சொல்லுக் கேட்டப் பத்தாம் நாளு எங்கம்மா நெஞ்சு வலி வந்து போயிட்டாங்க” சொன்னவன் அழுதுவிடுவான் போல இருந்தது. தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தான்.

காமராசு எழுந்து வந்தான். “சரிடா, நீ இப்ப என்னா செய்யணும்னு சொல்ற? நாங்கள்ளாம் இல்லன்னு ஆயிடுமா? நான் கொள்ளி வைக்கத்தான் வந்திருக்கன்; தெரியும்ல” சற்று நேரம் சும்மா இருந்த சீனு, ”அண்ணே! ஊர்ப்பெரியவங்க இருக்காங்க; அவங்க சொல்லுவாங்க” என்று மெதுவாகச் சொல்ல, காமராசு தலைவரையும், நாட்டாமையையும் மாறி மாறிப் பார்த்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நாட்டாமை உரக்கக் கூறினார். “ராசு, சீனு சொன்னதெல்லாம் எங்கக்கிட்ட ஒன் அப்பாரே பல தடவை சொல்லியிருக்காரு. அதெல்லாம் உடு; நம்ம வழக்கம் தாயிக்குத்தான் தலப்புள்ள; அப்பாருக்கு எளையவன்தான்; சீனு கொள்ளி வச்சாதான் ஒன் அப்பாரு நெஞ்சு வேகும். இஷ்டமிருந்தா இருங்க; இல்லன்னா சுடுகாட்டுப் பக்கமா கெழக்கப் பாத்து உழுந்து கும்பிட்டுப் போங்க” என்றார்.

பல்லக்கு கிளம்பி விட்டது. ஊர்வலம் புறப்பட்டு விட்டது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.