Tag: சு.விமல்ராஜ்

  • மகாபாரதம் திருக்குறள்: அறம் தழுவா நிலைக்களம்

    சு.விமல்ராஜ்,
    உதவிப்பேராசிரியர்,
    ஏ.வி.சி.கல்லூரி,
    மன்னன்பந்தல்
    மயிலாடுதுறை

    முன்னுரை:

    அறம் என்பது மனிதன் மனிதனை நசுக்காமல் என்பதோடு மட்டுமல்லாது, ஏனைய உயிரிணங்கள் மீதும் வன்மை கொள்ளாதிருத்தல் எனப்படும்.   மகாபாரதமும் திருகுறளும் அறச்சிந்தனைகளை போதிப்பதாக சான்றோர்கள் பகர்வர். அவ்வகையில் இவ்விரு இலக்கியப்படைப்புகளில் வெளிப்படும் அறச்சிந்தனைகளை நோக்கிப் பயணிக்கிறது இக்கட்டுரை. இப்பெரும் படைப்புகளை ஆய்வுக்களமாக எடுத்துக்கொண்டு ஆய்வு நிகழ்த்தும்போது ஏற்படும் சிக்கல்கள் எவை எவை என்றும்,  அந்த சிக்கல்களுக்கான தீர்வுகள் எது என்றும் ஆராய்வது மிக முக்கியம். எடுத்துக்கொண்ட ஆய்வுக்கான மூலங்கள் மிகப்பெரியவை. இரண்டும் அதனதன் பணிகளில் அதன் உச்சத்தை எட்டியவை என்று கூறலாம். மகாபாரதமும் திருக்குறளும் மிக எளியப்படைப்புகள் இல்லை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை மட்டுமல்லாது வரலாறு படைத்த இலக்கியங்களாகும். சிக்கல்கள்  என்பது எது?

    இப்பெரும்படைப்புகளை எடுத்துக்கொண்டு ஒப்பாய்வு நிகழ்த்தும்போது ஏற்படும் சிக்கல் எதுவாக இருக்கும் என்றால் இவ்விரண்டும் சமகாலத்து இலக்கியப்படைப்புகளா? என்பதுதான். ஒப்பிலக்கிய ஆய்வு நிகழ்த்த சம கால இலக்கியங்களை எடுத்துக்கொள்வது தான் வழக்கம். மாறாக இரு வெவ்வேறு காலகட்டத்து இலக்கியங்களை எடுத்துக்கொண்டு ஒப்பாய்வு நிகழ்த்தும்போது அதில் பொருந்துவதையும் பொருந்தாத தையும் வேறுபடுத்தி எடுத்துக்காட்டுவது மிகக்கடினம். ஆய்வு என்பதே சிக்கல்களை அவிழ்ப்பதுதான். ஆனால்  இதில் இருக்கும் சிக்கல் என்பது வேறு. ஒப்பாய்வுக்கு என்ற நிலைப்பாட்டிலிருந்து சற்று விலகி மிகக்கடினமான ஒரு ஆய்வுப்போக்குக்கு உட்பட்டதே இந்த மகாபாரத திருக்குறள் ஒப்பாய்வு சிக்கல்கள்.

    மகாபாரத கட்டமைப்பு

    காப்பியங்கள்:

    உலகம் முழுவதும் பல்வேறுபட்ட செம்மொழிகளில் காப்பியங்கள் பல உள்ளன. அந்தந்த காப்பியங்கள் அந்த நாட்டு பழமையான வரலாற்றை உணர்த்துவனவாக உள்ளன. காப்பியத்திற்கென்று பொதுமையான வடிவம் ஏதும் இல்லை. காப்பிய வகையை அக்காலத்து  புலவர்கள் ஆங்காங்கே அவர்களின் நுட்ப உணர்வுக்கு ஏற்ப பல வடிவங்களில் படைத்திருந்தாலும்,காப்பியங்களில்  மக்கள் வாழ்வை, வரலாற்றை கொஞ்சம் கற்பனை கலந்து அளித்துள்ளனர். கற்பனை முற்றிலும் இல்லாததா? இல்லை கற்பனை ஓரளவு உள்ளதா? என்பது ஆய்வுக்குரியதாகவே உள்ளது.

    ”இதிகாசம் என்ற சொல்லை இதி-ஹ-ஆச என்று பிரித்து இப்படி ஒருவன் இருந்தான் அல்லவா? என்று பொருள் கொள்வர்” (வியாசர் அருளிய மகாபாரதம்.அ.லெ. நடராஜர்.அருணா பப்ளிகேசன்.சென்னை.1961.பக்கம்.3)

    “அறம்,பொருள்,இன்பம்,வீடு என்னும் நான்கனுள் ஒன்றும் பலவும் குறைந்து வருவது. இருவகை காப்பியங்களும் ஒரு வகை செய்யுளாளும் பலவகை செய்யுளாளும் உரை பரவியும் மொழி விரவியும் வரும்”(அபிதான சிந்தாமணி ஆ.சிங்காரவேலு முதலியார்.சாரதா பதிப்பகம்.சென்னை.2001.பக்கம்.407)

    வியாசர் பாரதம்:

    மகாபாரதக் கதையின் மூலவடிவத்தை வியாசர் கதை கேட்ககேட்க சொல்லும் அமைப்பில் படைத்துள்ளார். கதை சொல்லும் வடிவத்திலும் நாடக உருவமைப்பிலும் அமையத்தக்கதாய் இதை உணரலாம்.

    சனமேசயன் என்னும் பாத்திரம் கதையை கேட்க வைசம்பாயனார் என்னும் பாத்திரம் கதையைச் சொல்லுவதுபோல் அமைத்துள்ளார். இடையில் இவ்விரு பாத்திரங்களும் உரையாடல் மேற்கொள்வது போல் அமைந்துள்ளது.

    மகாபாரதத்தின் பெரும்பிரிவுக்கு பருவம் என்று பெயரிட்டு வியாசர் சிறு பிரிவுக்கும் அதே பெயரையே வைத்துள்ளார்.

    பருவங்கள் 18:

    1.ஆதி பருவம்

    2.சபா பருவம்

    3.ஆரணிய பருவம்

    4.விராட பருவம்

    5.உத்தியோக பருவம்

    6.வீடும பருவம்

    7.துரோண பருவம்

    8.கண்ண பருவம்

    9.சல்லிய பருவம்

    10.செளப்திக பருவம்

    11.ஷ்திரி பருவம்

    12.சாந்தி பருவம்

    13.அறுசானிக பருவம்

    14.அசுவமேத பருவம்

    15.ஆசிரமவாசிக பருவம்

    16.மெளசல பருவம்

    17.மகப்பிரதானி பருவம்

    18.சொர்க்கரோகன பருவம்

    மனிதர்கள் கூடிவாழும் வாழ்க்கை, அவர்களுக்குள் நிகழும் மன உணர்ச்சி, செயல்பாடு இதை பிரதிபலிப்பதாய் இந்த இதிகாசம் அமைந்துள்ளது.

    திருக்குறள் கட்டமைப்பு

    பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக கருதப்படும் திருக்குறள் நீதிக்கருத்துகளின் பெட்டகம் என்று எண்ணப்படுகிறது. அறம்,பொருள், இன்பம் என்னும் மூன்று உறுதிப்பொருள்களை எடுத்துச்சொல்வது. இது திருவள்ளுவ நாயனாரால் எழுதப்பட்டது என்பர். இது 7 இயல்களைக் கொண்டது.  இந்த நூலுக்கு தருமர்,மணக்குடவர்,தாமத்தர், நச்சர்,பரிதி,பரிமேல் அழகர்,திருமலையர்,மல்லர், கவிப்பெருமால், காலிங்கர் ஆகியோர் உரை எழுதியுள்ளனர். இந்த உரைகளுள் பரிமேல் அழகரின் உரையை சிறந்த உரை என்பர்.

    திருக்குறளுக்கு முப்பால் நூல், உத்தரவேதம்,தெய்வ நூல், திருவள்ளுவம், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை,பொதுமறை எனப்பல பெயருண்டு.(அபிதான சிந்தாமணி.ஆ.சிங்காரவேலு முதலியார்.சாரதா பதிப்பகம்.சென்னை.2001.பக்கம்.829.

    கீழ்க்கணக்கு நூல்கள்:

    1.திருக்குறள்

    2.நாலடியார்

    3.நாண்மணிக்கடிகை

    4.திரிகடுகம்

    5.சிறுபஞ்சமூலம்

    6.ஆசாரக்கோவை

    7.ஏலாதி

    8.இன்னா நாற்பது

    9.இனியவை நாற்பது

    10.முதுமொழி

    11.திணை மாலை நூற்றைம்பது

    12.ஐந்திணை எழுபது

    13.ஐந்திணை ஐம்பது

    14.திணைமொழி ஐம்பது

    15.கைந்நிலை

    16.கார் நாற்பது

    17.களவழி நாற்பது

    18.பழமொழி

    திருக்குறள் இயல் அமைப்பு:

    நூற் பிரிவுகள்

    திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையான அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது. ஆனால், குறளின் அதிகாரங்கள் ஏன் 10 குறள்களைக் கொண்டுள்ளன என்பதற்கான விளக்கத்தினை இன்றைய ஆய்வாளர்கள் அறியவில்லை.

    அறத்துப்பால்

    திருக்குறளின் அறத்துப்பாலில் பாயிரவியலைத் தொடர்ந்து முதலாவதாக 20 அதிகாரங்களுடன் “இல்லறவியல்” அடுத்து 13 அதிகாரங்கள்  கொண்ட துறவறவியல் இறுதியில் “ஊழ்” என்னும் ஒரே அதிகாரம் கொண்ட “ஊழியல்” என வகைபடுத்தப் பட்டுள்ளது. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் “ஊழியல்” மட்டுமே. முதற்பாலாகிய அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள்.

    பொருட்பால்

    அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களுமாக மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன.

    இன்பத்துப்பால்

    கடைசிப்பாலாகிய “இன்பத்துப்பால்” அல்லது “காமத்துப்பாலில்” களவியல் மற்றும் கற்பியல் என இரண்டு இயல்கள். களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களுமாக மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன. ஆகமொத்தம் 9 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார்.

    திருக்குறள் நூலமைப்பைப் பொறுத்தமட்டில், அது மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. பாயிரத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களுள் கடவுள் வாழ்த்து, அறன் வலியுறுத்தல், நீத்தார் பெருமை என்பவை மக்களின் முழு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாகவும், வான் சிறப்பு மட்டும் மக்களின் முழு கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகவும் உள்ளது.

    ஒப்பாய்வு வரையறை:

    ஒப்பாய்வு நிகழ்த்தும்போது ஆய்வு நிகழ்த்தும் இலக்கியப்படைப்புகளின் களமானது பெரும்பாலும் வடிவத்தால் ஒன்றுபட்டதாக இருக்கும். சான்றாக திருக்குறளை எடுத்துக்கொண்டால் அத்திருக்குறல் போல்

    தமிழிலுள்ள வேறு ஒரு அற நூல் அல்லது இந்தியமொழிகளிலுள்ள ஏதேனும் ஒரு அறக்கருத்தை எடுத்துரைக்கும் நூல் அல்லது உலகமொழிகள் ஏதேனும் ஒன்றிலுள்ள அறநூல் இவற்றை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். வடிவம் ஒன்றுபட வேண்டும்.

    பக்தி இலக்கியம் ஒன்றை எடுத்துக்கொண்டு அதனோடு ஒப்பிலக்கிய ஆய்வு செய்யவேண்டும் என்றால் அதே நிலைப்பாடுடைய பக்தி இலக்கியத்தை எடுக்கவேண்டும். அவ்வாறு ஆய்வு செய்யும்போது தான் கடவுள்,கடவுள்மீது மக்கள் காட்டும் அன்பு,கடவுளை அணுகும் முறைகள்,வழிபாட்டுமுறை ஆகியவற்றில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை தெளிவாக எடுத்துக்காட்டமுடியும். தமிழிலுள்ள ஒரு இலக்கிய வடிவ நூலை எடுத்துக்கொண்டு அதே சமகால கிரேக்கம் அல்லது லத்தீன் மொழியிலுள்ள நூலை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு ஆய்வு நிகழ்த்தும்போது தான் சமகாலத்து கவிஞர்களின்  ஒற்றுமை வேற்றுமைகளை எளிதாக எடுத்துக் காட்டமுடியும்.   ஒப்பாய்வுக்கு வடிவமும்,காலமும்,பாடுபொருளும் மிகமுக்கியம்.

     தற்காலத்தில் ஒப்பாய்வுத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. நவீன காலத்து அறிஞர்கள்,புதிய சிந்தனையாளர்கள் இத்துறையை நல்ல வளர்ச்சி நிலைக்கு எடுத்துச்சென்றுள்ளனர். சமகாலம் அல்லாத படைப்புகளையும் இரு வெவ்வேறு வடிவ இலக்கியங்களையும் எடுத்துக்கொண்டும் ஆய்வு செய்கின்றனர்.

    மூல நூல்களின் ஆசிரியர்களின் நோக்கத்தை தெளிவாக எடுத்துக்காட்டிவிடுகின்றனர்.

    ஒப்பாய்வின்உண்மைத்தன்மை:

    1.ஒரே இலக்கிய வகை

    2.ஒரே இலக்கிய வடிவம்

    3.ஒரே பாடுபொருள்

    வெவ்வேறு மொழியாக இருந்தாலும் அந்த படைப்பின் வடிவம்,பாடுபொருள் ஒன்றாக இருக்கலாம். அப்படி இருக்கும் நிலையில் அதை ஒப்பாய்வுக்கு உட்படுத்தினால் சரியாக  அதன் ஒப்புமைப்பொருளை வெளிக்கொண்டுவர முடியும்.

    மகாபாரதஉண்மைத்தன்மை:

    பாரதம் அது தன் காலகட்டத்தில் மக்களிடத்தில் இருந்த நான்குவகை பிரிவுகளைஎடுத்துக்காட்டுகிறது. அது வேதகாலத்து நடைமுறை. அந்த பழம்பெரும் பாரத நாட்டில் அந்த காலகட்டத்தில்  நிகழ்ந்த நிகழ்வுகளை செவிவழியாக மக்கள் கதை வடிவில் சொல்லிவந்தனர்.

     இவ்வாறு மக்களின் செவிவழி செய்தியை இலக்கியமாக படைக்கப்பெற்றதுதான் மகாபாரதம். மகாபாரதத்தின்  காலம் இன்னும் ஆய்வுக்கு உட்பட்டதே. இன்றைக்கும் அறிஞர்கள் ஆராய்ந்து கொண்டே  இருக்கிறார்கள்.

    திருக்குறள் உண்மைதன்மை :

    சங்கம் மருவிய காலத்தில் நீதியானது மறைந்து மக்களிடத்தில் குற்றங்கள் பல நிகழ்ந்தபோது மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று  அறக்கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கில் எழுதப்பட்டதுதான் திருக்குறள். திருக்குறளின் காலமும் இன்னும் அறிஞர்களால்  ஆராயப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    அற இலக்கியங்கள்

    அற இலக்கியங்கள் உருவாகுவதற்கு ஒரு சரியான காரணம் உண்டு. உலகத்தில் தீமைகள் பெருகும்போது அறிஞர்கள்  மக்களை நல்வழிப்படுத்த அற இலக்கியங்களை பாடுவதாகக்  குறிப்பிடுவர். இது உலகத்தில் உள்ள எல்லா மொழிக்கும் பொருந்தும். மகாபாரதம்-திருக்குறள் இவற்றில் உள்ள அறக்கருத்துகளை ஆய்வு செய்வதால் அறம் என்ற சொல் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

    (Ethiks) எனும் ரஷிய புத்தகம்:

    1989ல் ரஷிய மொழியிலிருந்து நடாலியா பேல்ஷ்கயா என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட எதிக்ஷ் என்னும் நூலில் இருந்து இதன் தொடர்பான சில செய்திகள்.

    1.எதிக்ஷ் எனும் ஆங்கிலச் சொல் எதோஷ் எனும் கிரேக்கச் சொல்லில் இருந்து வந்ததாகும். கிரேக்கக் கவிஞர் ஹோமர் இலியட் எனும் இதிகாசத்தில் மக்கள் கூட்டமாக கூடி இருக்கும் இடத்தை இச்சொல்லால் குறிப்பிடுகிறார்.

    2.எதிக்ஷ் எனும் தலைப்பிலான  தனி இயல் கி.மு.4ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அரிஸ்டாட்டில்  இச்சொல்லை இப்பொருளில் முதன் முதலில் கையாண்டார்.

    3.பண்டைய ரோம் நகரில் இலத்தின் மொழியில் மொராலீஷ்  இச்சொல்லை கி.பி.4ஆம் நூற்றாண்டு அளவில் இப்பொருளில் கையாண்டனர். மாரல்,மாரலிட்டி எனும் சொல்கள் இலத்தினிலிருந்து ஆங்கிலத்தில் வரவழைக்கப்பட்டவை ஆகும்.

    4.மார்க்சிய கருத்துப்படி ஆளும் வர்க்கம் அறக்கருத்துக்களையும் கொள்கைகளையும் உழைப்பாளி வர்க்கத்தின் மேல் திணிக்கிறது.

    5.அறம் என்பது இனத்திற்கு இனம்,இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் வேறுபடுகிறது. சரியான வரையறைக்கு உட்பட்டதாக இல்லை. மிக பழமையான காலத்தில் வாழ்ந்த பழங்குடிகள் தங்களுடைய பகைவர்களையும் தங்கள் குழுவைச் சேர்ந்த முதியவர்களையும் நோயாளிகளையும் கொன்று தின்னும் பழக்கமுடையவர்களாக இருந்தனர். சார்லசுடார்வின்  “தியாரா டேல்ஃபியுகோ” என்ற இடத்தில் உள்ள பழங்குடி மக்களை பார்வையிட்ட போது, அந்த மக்கள் கொடும் பனியாலும், உணவே கிடைக்காத பஞ்சத்தாலும் வாடி,வதங்கி கொண்டிருந்தனர். அந்த நேரங்களில் தங்கள் குழுவை சேர்ந்த முதுமை அடைந்த பெண்களை கொன்று தின்றனர். வேட்டை நாய்களுக்கு அவர்களையே உணவாகக் கொடுத்தனர். ஏன் என்று அவர்களிடம் கேட்ட பொழுது அவர்கள் வேட்டை நாய்கள் நாங்கள் உண்பதற்கு புதிய உணவை வேட்டையாடி தரும். இந்தக் கிழப்பெண்கள் தருவார்களா? என்றார்களாம்.

    6.இரத்த உறவு,அன்பு உறவு என்பதெல்லாம் பழங்குடிகளிடம் இல்லை. பிற்காலத்தில்தான் அது உருவாகியிருக்கிறது.

    7.அறம்,அறம் அல்லாதன என்பன, காரணம் தேவை ஆகிய அடிப்படையில் உருவாகின்றன. அறத்தை நல்லது என்கிறோம். அதன் பொருள் உண்மையாக பயன் அளிக்கக்கூடியது என்றே தொடக்கத்தில் இருந்திருக்க வேண்டும்.

    8.மனித குலத்தில் அறவாழ்க்கை என்பது படிப்படியாக உணவுப் போராட்டம், உடைப் போராட்டம், கால்நடை வளர்ப்பு,வேளாண்மை, பானை செய்தல்,இரும்பை உருக்குதல், நெசவு நெய்தல் போன்றவை கண்டுபிடிக்கப் பட்டபொழுது படிப்படியாக உருவாகியிருக்க வேண்டும்.

    9.தொடக்க காலத்தில் நல்லவை என்பது உடல் பலம்,உறுதி கிடைக்கும் நல்ல பயன் ஆகியவற்றோடு தொடர்பு உடையதாக இருந்தது. நல்லது,அழகு, சரியானது ஆகிய சொல்கள் ஒரு காலத்தில் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையதாக வழங்கப்பட்டன.

    10.பழங்குடி மக்களிடம் வெளிப்படையான மோதல்கள் இல்லை. அம்மக்களை அவர்கள் தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வந்த பழக்க வழக்கங்கள் ஒருங்கிணைத்திருந்தன. அவர்களிடம் என்னுடைய,எங்களுடைய என்பன நல்லனவற்றையும்,பழக்கமானவற்றையும்,சரியானவற்றையும் குறித்தன. அவனுடைய,அவர்களுடைய என்பன அபாயகரமானதையும்,பகைமை உடையதையும் கொடியவற்றையும் குறித்தன.

    11.பழங்குடி மக்களின் ஒழுங்கை அவர்களுடைய பழக்க வழக்கங்கள்,மரபுகள், கூடாதவை என்று ஒதுக்கின.வேலைக்குரிய சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியனவே அமைத்துக் கொடுத்தன.

    12.பழங்குடி மக்களின் கூட்டமைப்பு, திருட்டு, கற்பழிப்பு, ஏமாற்று, துரோகம் ஆகியவற்றால் சிதறத்தொடங்கியது.

    13.மேல்,நடு,கடை என்னும் அமைப்பில் சமுதாயம் பிரிவு வகையாக பிரியத் தொடங்கும் போதுதான் அறநெறிப் பிழை தொடங்கியது.

    14.கிரேக்க,ரோம சமுதாயத்தில் பிரபுக்கள்,போர்வீரர்கள்,அடிமைகள் என வகுப்பு பிரிவுகள் தோன்றத்தொடங்கின. இந்தப் பிரிவுகள் தோன்றத் தோடங்கிய பிறகே வகுப்பிற்கு ஏற்ற அறமுறைகள் வகுக்கப் பட்டன.

    15.கிரேக்க,ரோம அடிமைகளிடம் அவர்களின் எஜமானர்களுக்கே அவர்கள் சொந்தமான அடிமைகள் என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டனர். ரோமர்களிடம் எஜமானர்களை வணங்கும் பழக்கம் வளர்ந்தது.

    16.அடிமைகளிடையே போற்றப்பட்ட அறஒழுங்குகள் பின்னாளில் உருவான அறஇலக்கியங்களிலும் நீதி இலக்கியங்களிலும் எதிரொலித்தன.

    17.ஒரு வித தந்தைக் கோட்பாடு திட்டமிட்டு நிலவுடைமை சமுதாயத்தில் வளர்க்கப்பட்டது.வேளாண் உழவர்கள், நிலக்கிழாரின் குழந்தைகள் போன்றவர்கள் தந்தைக்கு நிகரானவர்கள் என்றும்,அரசர், எல்லாருக்கும்  தந்தை போன்றவர் என்றும் ஒரு கருத்து உருவாக்கப்பட்டது. இதன் விரிவாக்கமே கிருத்துவத்தில் கடவுளே தந்தை என்றும் மக்கள் எல்லாம் அவரின் குழந்தை என்றும் ஒரு கருத்து வளர்க்கப்பட்டது.

    18.ஃப்ரன்சில் நிலக்கிழார்கள் ஏழு திறமைகளை உடையவராக இருக்க வேண்டும். ஈட்டி எறிய தெரிந்தவராக, காப்பு வேலி அமைக்க தெரிந்தவராக, வேட்டையாடுபவராக, குதிரை ஓட்டுபவராக,  நீச்சல் தெரிந்தவராக ,சூதாடதெரிந்தவராக, செய்யுள் இயற்ற தெரிந்தவராக.

    19.எஜமானர் தந்தைக்கு நிகரானவர். அவர் இறந்துவிட்டால் அவருக்கு கீழ் வேலை செய்வோர் இறந்துவிடுதல் உயர்ந்த குணமாக கருதப்பட்டது. ஜப்பானில் சாமுரே அரசர்களுக்காக தற்கொலை செய்துகொள்ளும் படையினர் ஆவர்.

    20.பாதிரியார் கால்வின் கருத்துப்படி கிருத்துவத்தில் ஒருவர் வணிகத்தில் வெற்றி பெற்றுவிட்டால் அது கடவுளின் கருணை என்று கருதப்பட்டது. மாறாக ஏழ்மை, கடவுளால் கைவிடப்பட்ட பாவம் செய்தவர்களின் நிலைமை என்று கருதப்பட்டது.

    21.தனி மனித வாதம் என்பது மனிதத்திற்கு எதிரானது.

    22.At the time of the French Revolution, Maximilien Robespourem demanded that honour be replaced by honesty, the rule of fashion by the rule of reason,conventions by responsibilities, and good form by good people.(p.83)

    தமிழில் அற இலக்கியம் உருவான பின்புலம்:

    சங்க காலத்தில் சேர,சோழ,பாண்டியர்கள் தமிழகத்தை ஆண்டனர். கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.575 வரை களப்பிரர்கள் தமிழகத்தை ஆண்டனர். களப்பிரர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்று இன்றும் ஆய்வு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் அவர்களை ஜைனர்கள், பெளத்தர்கள் என்னும் கூற்று உண்டு. களப்பிரர் வருகையால் ஜைனமும்,பெளத்தமும் தமிழகத்திற்கு வந்தன. தமிழர்களின் மொழி பண்பாடு ஆகியன சீர்குலைந்தன என்பர். இவற்றை மீட்கவே சான்றோர்கள் பலர் நீதி செய்யுள்களை எழுதினர் என்பர். சங்ககால தமிழர்களிடம் காணப்பட்ட கொலை,ஊன் உண்ணுதல்,கள் உண்ணுதல், விபச்சாரப் பெண்கள், ஆறலைக்களவு ஆகியன களப்பிரர் கால அற புத்தகங்களில் கண்டித்து எழுதப்பட்டன. சீர்கெட்ட ஒழுக்கங்களை இக்கால அற நூல்கள் சரிசெய்ய முயற்சி செய்தது. அசோகரின் கலிங்கப் போருக்குப் பிறகு பெளத்த துறவிகளின் தலையீட்டால் போர் குறைக்கப் பட்டது. பெளத்த மதத்தின் செல்வாக்கால் போர் செய்யும் உணர்வு குறைக்கப் பட்டது. சங்ககால பாடல்கள் போர் உணர்ச்சியை தூண்டும் தன்மை உடையது. ஆனால் சங்கம் மறுவிய கால பாடல்கள் போரை வெறுக்கும் பாடல்களை கொண்டது.

    சங்ககாலத்து மூவேந்தரும்,வேளிரும்,குறுநில மன்னர்களும், ஓயாது போர் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். இதன் எதிரொலியை புறநானூற்றிலும், பதிற்றுப்பத்திலும், மதுரைக்காஞ்சியிலும், பட்டினப்பாலை நெடுநல்வாடையிலும் காணலாம். சங்ககாலம் முடிவுற்று களப்பிரர் ஆட்சி தமிழகத்திற்கு வந்தது. களப்பிரர், சைன, பெளத்த மதத்தினர். எனவே, போர் உணர்ச்சிக்கு எதிரான கொல்லாமையும்,புலால் உண்ணாமையும் போதித்தனர். இப்போதனையின் பதிவுகளைப் பதினென் கீழ்க்கணக்கு அற நூல்களில் பார்க்கிறோம். இந்த அற நூல்களில் திருவள்ளுவர் சொன்ன படைமாட்சி(77), படைச்செருக்கு(78), படைத்திறன்(88) ஆகியன வற்புறுத்தப் பெறவில்லை. மாறாக, மென்மை பண்புகள் வற்புறுத்தப் பெறுகின்றன.

     இவற்றில் இருந்து உணரவேண்டியவை:

    1.களப்பிரர் காலம் சங்ககாலத்தைப் போல் போர்க்காலமாக இல்லை. போர் முடிந்த அமைதிக் காலமாகப் பேணப் பெற்றது. இந்த அமைதிக்காலம் பல படைப்புகளுக்கு வித்திட்டது. சான்று, பதினென்கீழ்க்கணக்கு நூல்கள், சிலம்பு, மணிமேகலை முதலானவை.ஏனைய

    2.ஜைன, பெளத்த மதச் செல்வாக்கால் போர் உணர்ச்சி தவிர்க்கப்பெற்றது. அற நெறிக்கே முதலிடம் அளிக்கப் பெற்றது. எனவே, சங்கால தமிழரால் பின்பற்றப் பட்ட தீயொழுக்கங்களை கண்டித்து, தமிழரை நல்வழிப்படுத்த வேண்டி அற இலக்கியங்கள் படைக்கப்பெற்றன.

    ஆகவே, போர் அற்ற அமைதிக் காலத்திலேயே அற நூல்கள் பலவாகப் படைக்கப்பெற்றன. கி.பி.14 ஆம் நூற்றாண்டில் நாயக்கர், தமிழகத்தை ஆளத்தொடங்கினர். பாண்டியர், இசுலாமியர், போர்க்காலம் முடிவுற்று கிட்டத்தட்ட 200 ஆண்டுக்காலம் மிகுந்த போர்கள் இல்லாது இருந்தது. விளைவாக ஒளவையாரால் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி ஆகியனவும் அதிவீரராம பாண்டியரால் வெற்றி வேற்கையும், தினகரரால் தினகர வெண்பாவும்,பெயர் தெரியாத ஆசிரியரால் நீதி வெண்பாவும், உலக நாத பண்டிதரால் உலக நீதியும் குமரகுருபரரால் நீதிநெறி விளக்கமும், சிவப்பிரகாசரால் நன்னெறியும், முனைப்பாடியாரால் அறநெறிச் சாரமும், அடுத்து அடுத்துப் படக்கப்பெற்றன. அரசியல் அமைதிக்கும், அற நூல் எழுச்சிக்கும் தொடர்புகள் இருக்கின்றன.

    அற இலக்கியங்கள் தமிழரால் பின்பற்றப்படாமல்  போனதற்கான காரணங்கள்:

    அற இலக்கியங்கள் அறிவுறுத்திய அறிவுரைகளை தமிழகம் பின்பற்ற வில்லை என்பது வெளிப்படையான உண்மை. அவற்றிற்குரிய காரணங்களுல் இன்னொன்று சுட்டத்தக்கது. அற இலக்கியங்களைச் செவி நிறைய தமிழர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால், கேட்டபடி பின்பற்றவில்லை.  காரணம் ரசனை உணர்வு, கண்ணால் பார்ப்பவற்றை ரசிக்கும், காதால் கேட்பவற்றை ரசிக்கும், ஆனால் கருத்துள்ள காட்சிகளையோ,கேள்விகளையோ நெஞ்சில் வாங்கி செரித்துக்கொள்ளாது. மென்று தின்னாமல் அப்படியே விழுங்கிவிட்ட சத்துணவு உடம்பிலும் இரத்ததிலும் சேராமல் கழிவாக வெளியேறிவிடுதல் போல கருத்துள்ள காட்சிகளையும், கேள்வி ஞானங்களையும் இவர்கள் ரசித்த அளவில் புறக்கணித்து விடுகிறார்கள்.

    திரை இசையில் வரும் தத்துவப் பாடல்களை கேட்டு, பல வீர உணர்ச்சி மிக்க காட்சிகளை பார்த்து அத்தோடு மறந்துவிடுகின்றனர். அதற்கு மாறாக அவர்கள் தீயோரை எதிர்ப்பதில்லை. சூட்டில் பால் பொங்கி வழியும், பின்பு சூடு ஆறியவுடன் அது அடங்கிவிடுவது போல இவர்களும் அடங்கிவிடுகிறார்கள்.

    செய்யுளில் உள்ள கற்பனை, உவமை, வீர உணர்வு ஆகியவற்றை இரசிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள். ஆனால் பின்பற்ற வில்லை. பின்பற்றுதல் என்பது ஒரு புதிய பழக்கத்திற்கு தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்வதும் ஆளாக்குவதும் ஆகும். பொய் பேசுவதில்லை என்னும் கருத்தை கேட்ட அளவில் இனி பொய்யே பேசுவதில்லை என்று தன்னை தயார்செய்து கொள்ள வேண்டும். அதனைப் பின்பற்றுவதன் மூலம் ஆளாக்கிக்கொள்ள வேண்டும். அதிக காலங்கள் பொய் பேசி பழக்கப்பட்டவன் தன் வயதான காலத்தில் பொய் பேசாத நிலைக்கு தன்னை மாற்றிக்கொள்வது அவ்வளவு எளிதன்று. நெடுங்காலம் கெட்டப்பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்ட சமுதாயத்திற்கு இந்த விதி பொருந்தும். தமிழில் படைக்கப்பெற்ற திருக்குறள், நாலடியார், பழமொழி ஆகிய அற இலக்கியங்கள் கற்றறிந்து வளர்ந்த வயதில் அவர்களால் அந்த இலக்கியங்களை படிக்க முடியும், கேட்க முடியும், இரசிக்க முடியும், பின்பற்றுதல் எல்லார்க்கும் எளிதானது அல்ல. மிகச்சிலரே அதைப் பின்பற்றி வாழ முடியும். பாரதத்தில் மக்களை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட நிலை உள்ளது.

     அது

     1.பிரமணர்கள் 2.சத்ரியர்கள் 3.வைசியர்கல். 4.சூத்திரர்கள் என்பதே ஆகும். மகாபாரதம் இந்த நான்கு வகையான பிரிவினையுடைய மக்களுக்கு அறம் என்ற ஒன்றை வகுத்து வைத்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு அறம் உண்டு .மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே அறம் என்று கிடையாது. இந்த நான்கு பிரிவு மக்களுக்கும் தனித்தனியே அறம் என்பது மாறுபடும். இந்த நான்கு வகையினரையும் நாம் தனித்தனியே விரிவாக காணலாம்.

    1.பிரமணர்கள்.

    பிரமணர்கள் என்பவர்கள் கற்றல் என்னும் அறத்தை உடையவர்கள். இவர்களின் வேலை அல்லது கடமை கற்றல் அதை வைத்துக்கொண்டு தான் கற்றதை பிறருக்கு கற்பித்தல். இந்த அறத்திலிருந்து இவர்கள் மாறவே கூடாது. அவர்களின் கடமை கற்றல் கற்பித்தல். உலகத்தில் உள்ள எல்லா வகையான அறிவையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதை பிறருக்கு கற்பிக்கவேண்டும். இதுதான் அவர்களின் கடமை.யார் யாருக்கு கல்வியை கற்பிக்கவேண்டும் என்ற ஒரு அறத்தையும் இவர்கள் பின்பற்றினர். கற்ற கல்வியையும் ஒரு சிலருக்குத்தான் சொல்லிக்கொடுப்பார். அதிலும் சில அறமுண்டு.

    2.சத்ரியர்கள்.

    சத்ரியர்கள் நாட்டைக் காக்கவேண்டும்.சத்ரியன் வீரமுடையவன்.அவன் அந்த வீரத்தின் மூலம் இந்த நாட்டைக் காக்கவேண்டும். அன்னியர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் நாட்டு மக்களை அவன் காக்கவேண்டும். சத்ரியர்களின் அறம் நாட்டைக் காப்பதே. அவர்களின் தொழில் அல்லது கடமை நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பதே ஆகும். அதை தவிர வேறு ஒருவரின் அறத்தில் இவர்கள் தலையிடக்கூடாது. அவரவர்கள்  அவரவர்களின் தர்மத்தை மட்டுமே கடைபிடிக்கவேண்டும்.

    3.வைசியர்கள்

    வைசியர்கள் என்பவர்கள் வணிகத்தில் ஈடுபடுபவர்கள். வைசியர்களின் தொழில் அல்லது கடமை எது என்றால் வாணிகத்தில் ஈடுபட்டு பொருள் ஈட்டுவது.நாட்டையும் நாட்டு மக்களையும் வளமாக்க வேண்டும். வைசியர்கள் அவர்களின் அறத்தில் இருந்து மாறாமல் அதை அவர்கள் ஒழுங்காக செய்யவேண்டும். வணிகத்தின் மூலம் நாட்டை வளப்படுத்துவதே அவர்களின் கடமை.

    4சூத்திரர்கள்.

    சூத்திரர்கள் என்பவர்கள் மூன்று பிரிவினரும் செய்யாத கடைநிலை தொழில் அல்லது வேலைகளை செய்யவேண்டும். மக்கள் பிரிவில் இவர்கள் கடைசியில் உள்ளவர்கள். இவர்களும் இந்த அறத்தை மீறக்கூடாது. சூத்திரர்களின் அறம் எதுவோ அதை மட்டும்தான் செய்யவேண்டும்.

    இதுதான் மகாபாரதம் கூறும் அறம். மகாபாரதத்தில் இந்த அறம்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த அறத்தைதான் கூறுகிறது. இந்த உலகத்தில் உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்று கருதப்படுபவர்கள் தவம் செய்வதால், நீதியை நிலை நாட்டுவதால், ஆண்மையால், குற்றம் இல்லாத நல்ல செயல்களால் வாழ்பவர்களே கருதப்படுவார்கள். இவ்வாறு வாழ்பவர்களே இந்த மண் உலகை பல ஆண்டுகள் ஆட்சி செய்து விண் உலகையும் ஆள்வார்கள். இது உறுதியானது என்பதாகும்.

    இல்வாழ்க்கை-விருந்து:

    பரதன் குரு நாட்டை ஆட்சிப்பொருப்பு ஏற்று நடத்திவரும் காலத்தில் அவனது இல்லறத்தின் சிறப்பை கூற வரும் கவிஞர்,

    “இறந்தவர்கள் எதிர்காலத்தில் வருவோர்கள் என்று எல்லோருக்கும் தன்னுடைய பெயர் புகழோடு தெரியும்படி சிறப்பாக விளங்கியவன் என்கிறார்.

    திருக்குறள் விருந்து முடித்து போவோரை சிறப்பாக வழி நடத்தி, வருகின்ற விருந்தினருக்காக காத்திருப்பான் என்கிறது.

    அகத்தியர் உலோபமுத்திரையை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிள்ளைகள் எதற்கு என்று எல்லோரும் கேள்வி எழுப்பினர். அகத்தியருக்கும் உலோப முத்திரைக்கும் பிள்ளைகள் பிறந்து என்ன செய்ய போகிறார்கள் என்பது கேள்வி. அதற்கு தெற்கே உள்ளவர்களுக்கு உதவி செய்வதற்கும், சூரிய குலத்தைச் சார்ந்தவர்களுக்கு யாகத்தின் பயனைக் கொடுப்பதற்கும், மண்ணின் உரிமையாளர்களுக்கு உணவு வழங்குவதற்கும் எங்கள் குலத்தில் பிள்ளை வேண்டும் என்கிறாள்.

    கௌசிகருக்கு தன்னுடைய இயல்பை கூற்கின்ற வியாதன் தன்னுடைய வருமானத்தை பகுத்து உண்ணும் முறையை எடுத்துக் கூறுகிறான். அதாவது, அந்தணர்கள், ஆசிரியர்கள், தாய்தந்தையர்கள், புதியதாக வந்த விருந்தினர்கள் கடவுள் முதலியவர்களுக்கு உண்ணக்கொடுத்துவிட்டு பிறகு மீதி இருக்கும் உணவை உண்ணுவேன் என்கிறான். இந்தக்கருத்தை அறிவிக்கும் பாடல் ஆரண்ய காண்டம்.கௌசிகசருக்கம்.39

    திருவள்ளுவர் துறவு மேற்கொள்வதை விட இல்லறம் சிறந்தது என்கிறார். வரலாற்று அமைப்புப்படி துறந்த அரசனை மீண்டும் ஆட்சி பொருப்பில் அமர்த்தும் நோக்கத்தில் பாரதம் கூறுகிறது. ஆனாலும் அரசாட்சி என்பது இல்லறத்தை கடைபிடிப்பவன் செய்ய வேண்டியது. ஆகவே இல்லறத்தை விட்டுவிட்டு துறவுக்கு செல்லாதீர்கள் என்று சொல்லும் குறளின் கருத்தோடு ஒத்து உள்ளது.

    மனைவிக்கான நல்ல குணங்களைப் பெற்றவள்

    மனைவி இல்லறத்திற்கு தேவையான நல்ல குணங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பது திருக்குறள் கருத்து. கணவனுக்கு தேவையானவற்றை செய்து முடிக்கும் தன்மை உடையவளாக இருக்க வேண்டும் என்று திருக்குறள் எடுத்துக்கூறுகிறது.  இந்தக் கருத்தை ஒத்திருக்கும் பல இடங்கள் நல்லாப்பிள்ளை பாரததத்தில் இடம்பெற்றுள்ளது.

    பூருவின் மனைவியாகிய கௌசலையை மனைவியின் மான்பு உடைய கௌசலை என்று சிறப்பிக்கின்றார்.

    கௌசிக முனிவருக்கு மனைவியின் கற்பு நிலையை உணர்த்தும்போது கடவுளைப்போற்றியவள் இல்லை. இவள் கனவனைப் போற்றியவள் என்று கூறுகிறார்.(கௌசிக சருக்கம்.23)

    உயிர் பெற்ற சத்தியவான் சாவித்திரியை புகழ்வதாக வரும் சாவித்திரி கதை சருக்கம் 77 திருக்குறளில் 53வது குறளை ஒத்து உள்ளது.

    பல ஒழுக்கங்களும் படிக்கும் புத்தகங்களால் பயன் அடைவதும் அதனால் கிடைக்கக்கூடிய ஒளியும் வெற்றியும் புகழும் இன்பமும் கற்பு உடைய மனைவியால் கணவன்  பெறலாம் என்று நாடு கரந்துரை சருக்கத்தில் 67 வது பாடலில் கூறப்பெற்றுள்ளது.

    கற்பு என்பது திருமணம் நடப்பதற்கு முன்பு தாயும் தந்தையும் சொல்லிக்கொடுத்ததன் வழியாகக் நடப்பதும் அல்லது நடைமுறைப்படுத்துவதும், திருமணத்திற்கு பிறகு கனவனின் சொல்லை கேட்டு அதன்படி நடப்பதும், பிறகு மக்கள் சிறந்த ஒழுக்கம் என்று கருதுவதை பின்பற்றுவதும் பெண்ணின் கடமை என்று அற புத்தகங்கள் சொல்லும் அந்த கருத்தை திருவள்ளுவர் 54வது குறளில் கூறியிருக்கிறார்.

    இந்தக்கருத்தை ஆசிரியர் கணவனின் சொற்படி நடப்பது மனைவிக்கு அணி, நெறி இவற்றை அளிக்கும் என்கிறார்.

    தன்னை நினைத்து அழைத்த திருதராட்டிரனை நோக்கி வியாசன் கூறுகிறான் ”கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு அருமையானது ஒன்றும் உலகில் இல்லை; எளிதில் கிடைக்கும்” என்கின்றான்.

    இதனை விளக்குவது,

    மாதவன் கமல மங்கை கேள்வனரி

    வாசுதேவன் முகில் வண்ணன்

    பாத பங்கயம் உளங்கொள்வோர்க்கு அரிது

    பாரில் இல்லை (சஞயன் தூது.234)

    திருக்குறளில்,

    வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தாருக்கு

    யாண்டும் இடும்பை இல

    என்று உள்ளது.

    யாயாதி சருக்கத்தில் கடவுள் வாழ்த்தில் கண்ணனை,

    இணை இல்லாதவன் இறப்போடு பிறப்பென்னும் கடலுக்கோர்

    புணையும் ஆனவன் புனிதர்கள் மனத்துறை புனிதன் (யாயாதிசருக்கம் 1)

    என்று பாராட்டுகிறார். இவற்றுள், இணையில்லாதவன் என்பது தனக்கு உவமை இல்லாதவன் என்பதுடன், இறப்போடு பிறப்பென்னும் கடலுக்கோர் புணையும் ஆனவன் என்பது பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் என்கிறார் வள்ளூவர்.

    முடிவுரை:

     வள்ளுவர் ஒரு போதும் தனி மனிதனுக்கென்று அறத்தைச் சொல்லவில்லை.

    ஒருவன் செய்வதை பாராட்டியும் மற்றாவர்கள் செய்வதை தாழ்த்தியும் பேசவில்லை.

    குற்றத்தை உயர்ந்தவர்கள் செய்யலாம் என்ற சிந்தனை இல்லை.

    தவறு யார் செய்தாலும் தவறு.

    மனிதர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் இல்லை.

    மனிதன் செயலால்தான் உயர முடியும்.

    வர்க்க பேதங்கள் அறவே இல்லை.

    மனிதர்களுக்குள் வேறுபாடு  ஏற்புடையதன்று.

    வள்ளுவரின் அறச்சிந்தனைகள் பொதுமைப்பண்புடையது.

    மகாபாரதச் சிந்தனைகள் அவ்வாறின்றி அதன் எதிர் சிந்தனையில் பயணம் செய்கிறது.

    Share
  • தமிழ் இலக்கியங்களில் தாவர அறிவியல்

    -சு.விமல்ராஜ்

    சங்க இலக்கியங்கள் பழையனவற்றைப் பாதுகாக்கின்ற ஆவணங்களாக விளங்குகின்றன. பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்து அதன் முழுமைத்தன்மையைச் சிதைத்துவிடாமல் மிக நுணுக்கமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த இலக்கியங்கள் மிகச்சரியான சான்றுகளாக விளங்குகின்றன. தமிழர்களின் இந்த நுணுக்கம், வானியல்,தாவரவியல்,விலங்கியல்,உளவியல், மொழியியல் போன்ற பல்துறைப் புலமை இவைகளெல்லாம் பல நூற்றாண்டுகள் காடு, மலை, கடல், விலங்கு, பறவை, வானம் என்ற இயற்கையின் எல்லா நிலைகளையும் அதன் ஆழ அகலங்களில் நுழைந்து அனுபவித்து வாழ்ந்ததன் மூலம் பெற்ற பட்டறிவின் வெளிப்பாடே என்று சொல்லலாம்.

    தமிழிலக்கியத்தில் இருக்கக்கூடிய தாவார அறிவியல் உண்மைகள், தாவர மேலாண்மை, சுற்றுச்சூழல் அல்லது இயற்கை மீதான முழுமையான அன்பு இவைகளைப் பார்ப்பதற்குமுன்னால் தமிழர்களின் உயிர்க்கொள்கையைச் சற்று நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். காரணம், அந்த உயிர்க்கொள்கையே மிக அற்புதமானது. மேலைநாட்டு அறிஞர் பெருமக்கள் உயிர்க்கொள்கை, தாவரம் சார்ந்த கொள்கை இவைகளைப் பதிவுசெய்தது 19ஆம் நூற்றாண்டு. ஆனால் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக இலக்கிய இலக்கண நூல்களின் வாயிலாகப் பல்வேறு அறிவியல் நுணுக்கங்களைத் தமிழர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

    ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
    இரண்டறி வதுவே அவற்றோடு நாவே
    மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே
    நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே
    ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே
    ஆறறி வதுவே அவற்றோடு மனனே
    (தொல்.மர.1526)

    என்று உயிர்களை அதன் அறிவின் தன்மைக்கேற்ப வகைப்படுத்துகிறார் தொல்காப்பியர். கரோலஸ் லின்னேயஸ் உலக உயிர்களை இரண்டு பிரிவாக பிரித்தார். ஒன்று தாவர உலகம், மற்றொன்று விலங்கு உலகம். தொல்காப்பியர் சுட்டும் ஓரறிவு உயிர் தாவர உலகம். ஏனைய நான்கு உயிர்களும் விலங்கு உலகத்தைச் சார்ந்தது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து புலன்களின் அறிவுகளை வைத்தே உயிர்களின் வகைப்பாட்டியலைத் தொல்காப்பியர் முன்வைக்கிறார். ஆறாவது புலனாக மனத்தைச் சுட்டியே மனத்தின் ஆற்றல் பயன்படுத்தப்படுகிற உயிராக மனித விலங்கை அடையாளப்படுத்துகிறார். அதுமட்டுமின்றி மனிதனை உயர்திணை என்று பிரித்துக்காட்டி, மனிதனைத் தவிர்த்த ஏனைய உயிர்களை அல்திணை என்றார் அவர். ஹிப்போகிரேட்டஸ், அரிஸ்டாடில், தியோஃபரஸ்டஸீம், ப்ளைனி த எல்டர், ஜான்ரே, கரோலஸ் லின்னேயஸ், அகஸ்டின் பாரமஸ்டின் கண்டோல் ஆகிய இவர்களெல்லாம் உயிரினம் தொடர்பாகவும், தாவரத்தின் வகைப்பாடுகள் தொடர்பாகவும் விதியைப் படைத்தவர்கள்.

    தொல்காப்பியர் புலன் அறிவை வைத்துப்பேசுகிறார். மேலை நாட்டு அறிஞர் பெருமக்கள் உயிர் இயங்குதல் அல்லது திசுக்களின் அடிப்படையில் பிரிக்கிறார்கள். 19-ஆம் நூற்றாண்டில் வார்மிங் நீர்வாழ் தாவரங்கள், இடைனிலைத் தாவரங்கள், வறள்நிலத் தாவரங்கள் என்று மூன்றாகப் பிரித்தார். தாவர வகைப்பாடு என்பது அதன் வளரும் தன்மையை வைத்துத்தான் பிரிக்கப்படுகிறது. தாவரங்கள் வளரும் இடம், அதன் சூழல் எது என்பதை வைத்து அதன் தன்மையைப் பிரிக்கிறார்கள் அறிவியலாளர்கள். தமிழர்களின் தாவர வகைப்பாடு வளர்நிலை அடிப்படையில் இருந்தது, மேலை நாட்டு வகைப்பாடும் வளர்நிலை அடிப்படையில் இருந்தபோதும் 18-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு நுண்ணோக்கி கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாகத் தாவரங்களின் இனப்பெருக்க உறுப்பு அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டது. தமிழில் இத்தகைய செயல்முறை அறிவியல் வளர்ச்சி இல்லை.

    மேனாட்டு அறிஞர்களின் பார்வையில் தாவரங்கள் தாலோபைட்டா, பிரையோபைட்டா, டெரிட்டோபைட்டா என்று மூன்று பெரும்பிரிவாகப் பார்க்கப்படுகிறது. தாலோபைட்டாவை தகட்டுத்தாவரங்கள் என்றும் பிரையோபைட்டாவை பாசத்தாவரங்கள் என்றும் டெரிட்டோபைட்டாவை குழாய்த்தாவரங்கள் என்றும் தமிழில் அழைப்பர். குழாய்த்தாவரம் என்னும் அமைப்பில்தான் பெரும்பாலான புல், மரம், செடி, கொடி ஆகிய அனைத்தும் அடங்கும். மேலும் விதைமூடிய தாவரம் விதைமூடாத தாவரம் என்றும் சுட்டுவர். விதை மூடியது ஆஞ்சியோஸ்பெர்ம் என்னும் பொதுவானது. விதை மூடாதது ஜிம்னோஸ்பெர்ம். இது குளிர்பகுதிகளில் வளரக்கூடியது.

    இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்று அறிஞர்கள் கருதும் தொல்காப்பியர் ஓரறிவு உடையது என்று தாவரத்தையே சுட்டுகிறார். “புல்லும் மரனும் ஓரறி வினவே”(தொல்.மர.1527) என்கிறார். இந்த இடத்தில் புல் என்றும், மரம் என்றும் தாவரத்தை இரண்டாக பிரிக்கிறார். புறக்காழ் உடையது புல், அகக்காழ் உடையது மரம், காழ் என்பதை வைரம் என்று பேச்சு வழக்கில் கூறுவார்கள். இந்த வகைப்பாடு உள்ளீடு அடிப்படையிலானது. உலகில் உள்ள அனைத்துத் தாவரங்களையும் இந்த வகைப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்பது தொல்காப்பியரின் எண்ணம். புறவயிர்ப்பு உடைய புல்லின வகைத் தாவரத்திற்குரிய உறுப்புகளைக் குறிப்பதற்கென்று தனியே பெயர் வழக்குகள் உள்ளனவென்பதைத் தொல்காப்பியர்,

    தோடே மடலே ஓலை என்றா
    ஏடே இதழே பாளை என்றா
    ஈர்க்கே குலையென நேர்ந்தன பிறவும்
    புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்
    (தொல்.மர.1586)

    என்று குறிப்பிடுகிறார். புல்லினத்தின் இலை தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ் என்னும் பெயர்களால் வழங்கப்படுகிறது. அவற்றின் பூவுறுப்பு பாளை எனப்படுகிறது. பழம் கொத்தாகத் தோன்றுவதால் அவை குலை என்று பெயரிட்டுக் கூறப்படுகிறது. நீண்ட இலையின் மைய நரம்புகள் ஈர்க்கு என்று அழைக்கப்படுகிறது.

    அகவயிர்ப்பு உடைய மரவகைத் தாவரத்திற்கு உரிய உறுப்புகளைக் குறிப்பதற்கு தொல்காப்பியர்,

    இலையே முறியே தளிரே தோடே
    சினையே குழையே பூவே அரும்பே
    நனையே உள்ளுறுத்த அனையவை எல்லாம்
    மரனோடு வரூஉம் கிளவி
    (தொல்.மர.1587) என்கிறார்.

    புல்லினம் மரஇனம் என்ற இரண்டிற்கும் பொதுவான உறுப்புகளைச் சுட்டிக்காட்டுவதற்கு,

    காயே பழமே தோலே செதிளே
    வீழோடு என்றாங்கு அவையும் அன்ன
    (தொல்.மர.1588)

    என்கிறார். தென்னையும் கமுகு என்னும் பாக்கும்  புல்வகையைச் சார்ந்தது இதன் காய் தேங்காய் கமுகங்காய் எனப்படுகிறது. வேம்பு மருதம் இவ்விரண்டும் மரவகையைச் சார்ந்தது. இதன் காய் வேப்பங்காய் மருதங்காய் எனப்படுகிறது. பழத்திற்கும் இதையே கூறுவர். பனை புல்வகையைச் சார்ந்தது; வேம்பு மரவகையைச் சார்ந்தது. இவ்விரண்டிற்கும் பனந்தோல், வேப்பதந்தோல், பனஞ்செதில் வேப்பஞ்செதில் என்பன பொதுவாக உள்ளன.

    புல் மரம் என்ற பகுப்பு அதன் உள்ளீடு தொடர்பானது. அதுமட்டுமல்லாமல் தமிழில் வளரியல்பு நோக்கில் தாவரம் வகைப்படுத்தப்படுகிறது. அவை மரத்தாவரம், கொடித்தாவரம், நிலத்தாவரம், நீர்த்தாவரம் என்பனவாகும். இந்த வகைப்பாடு பூவை முன்னிலைப்படுத்தியே பிரித்துப்பார்க்கப்படுகிறது. இந்த அடிப்படையில் பூவை மரத்தில் பூக்கக்கூடிய கோட்டுப்பூ, கொடிப்பூ, செடி அல்லது புல்லினங்களில் பூக்கக்கூடிய நிலப்பூ, நீர்ப்பூ என்று நான்காக வகைப்படுத்தப் படுகிறது.

    கோட்டுப்பூ கொடிப்பூ நீர்ப் பூவொடு
    புதல்பூ
    என்று இவை நால்வகைப் பூவே ( பிங். நிகண்.2781) என்கிறது பிங்கல நிகண்டு. இந்த நான்குவகை அடிப்படையில் பல்வேறு சான்றுகளைத் தாங்கி நிற்கிறது சங்க இலக்கியங்கள். கோங்க மரத்தின் பூந்தாதினைச் சொல்லும்பொழுது அகநானூற்றில் சினைப் பூங் கோங்கின் நுண் தாது’ (அகம்.25.10) என்று இடம்பெற்றிருக்கிறது. சினை என்பது மரத்தாவரத்தின் உறுப்புப்பெயர். வண்டுகள் மாலை நேரத்தில் கூம்பும் இயல்புடைய நீர்ப்பூக்களில் இருந்து விலகி மரத்தின் பூக்களைப் போய்ச்சேர்ந்தன என்னும் செய்தியை அகநானூற்றின் ஒரு பாடல் வழியே பெறமுடிகிறது.

    அதாவது,
    வண்டினம்
    சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர
    (அகம்.71.4) என்று சுட்டுகிறது.

    புதலில் பூக்கள் பூத்திருந்ததைப் புறநானூற்றுப்பாடல் “வயலகம் நிறைய புதல்பூ மலர” (புறம்.117.3) என்கிறது.

    சங்க இலக்கியத்தில் இருக்கக்கூடிய வகைப்பாடுகளை எடுத்துக்கொண்டால், மரம், கொடி, புதல், செடி, பூண்டு, பயிர், நீர்த்தாவரம், புல், பாசி, காளான், நார், புலன் உணர்வுத்தாவரங்கள், விரிவாக எடுத்துக்கொண்டால் அதில் மரங்கள் வளரியல்பு அடிப்படையில் எடுத்தாளப்படுகிறது. மரம் என்ற சொல் திராவிட மொழிகளில் மரம், மரனு, மர, மேன், மர்ம், மாக், மக் என்று ஒரே பொருளை உணர்த்தியும் ஒலித்திரிபு அடைந்தும் வழங்கப்படுகிறது. மரவழிபாடுதான் மிகப்பழமையான வழிபாடு.

    சங்க இலக்கியம், வாவல் பழுமரம் (குறுந்.172), காடே நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த ( நற்.256), மரம் தலை மணந்த நனந்தலை கானத்து ( நற்.246) என்று மரவகையைச் சுட்டி நிற்கிறது. மரவகைக்கு மேலை நாட்டு அறிவியல் அறிஞர்கள் கூறும் நெறிமுறைகள் சங்கத்தமிழில் நிறைந்து காணப்படுகிறது. பராரை (அகம்.69) என்னும் அதன் திண்மையுடைய வைரம் அகநானூற்றில் குறிப்பிடப்படுகிறது. மீமிசைச்சாந்து (நற்.1), வான் பொரு நெடுஞ்சினை ( நற்.3) என்ற நற்றிணைப்பாடல் வரிகள் மரம் உயர்ந்து வளரக்கூடியது என்பதை எடுத்துக்காட்டுகிறது. தொல் மூதாலம் (குறுந்.15) என்னும் குறுந்தொகைக் கவிதை மரம் நீண்டநாள் உயிர் வாழக்கூடியது என்பதை உணர்த்துகிறது. காழ் என்னும் மரத்தின் வயிர்ப்பை உணர்த்துவது போல் வெளிறுஇல் காழ்வேலம் [வேல மரம்] (நற்.302.), நறுங்காழ் ஆரம் [சந்தன மரம்] ( நற்.5) புறக்காழ் உடைய புல் இனமான மூங்கிலைக் குறுந்தொகைப்பாடல் (304) ‘முளிவெதிர் நோன்காழ்’ என்கிறது.

    அரைப்புல்லுருவி வகையாகச் சந்தனத்தைக் கூறுகிறது,

    குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்
    நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப
    ( நற்.5) என்பது நற்றிணைப்பாடல். இது தமக்கு உரிய உணவைத் தயாரித்துக்கொண்டு மீதமுள்ள உணவுக்கு ஏனைய தாவரங்களில் இருந்து எடுத்துக்கொள்ளும். புல்லுருவி வகை என்பது உண்டு. இது தமக்கு உரிய உணவைத் தாமே தயாரிக்கும் ஆற்றல் இல்லாமல் பிற தாவரம் அல்லது உயிர்களைச் சார்ந்து அவற்றிலிருந்து உணவைப் பெறுபவை ஆகும். இதைப் புல்லுருவி அல்லது சாறுண்ணி என்று அழைப்பர்.

    அடுத்து கொடிவகைகள் நீண்டு வளரக்கூடியவை. ஆனால் தாமாகவே தனித்து நிற்கும் ஆற்றல் இல்லாமல் பிறவற்றைச்சார்ந்து நிற்கக்கூடியது. இவற்றின் தண்டுப்பகுதி மிக மெல்லியவை. கயிறு போன்று இருக்கக்கூடியவை. வேர்க்கொடி, படர்க்கொடி, பற்றுக் கம்பிக்கொடி, சுற்றுக்கொடி, பெருங்கொடி என்று ஐந்துவகையாகக் கொடியைப் பிரிப்பர். கொடியின் மெலிந்த தன்மையை நுண்கொடி(அகம்.237), புன்கொடி(மலைபடு.101), மென்கொடி(குறுந்தொ.186) என்பனவும், பரூஉக்கொடி (மலைபடு.216) தண்டின் பருத்த தன்மையைக் காட்டுகிறது. நெடுங்கொடி(ஐங்குறு.6),  மாக்கொடி(குறுந்தொ.256) என்பன கொடியின் வளமான தன்மையை எடுத்துக்காட்டுகிறது. வெண்கொடி(ஐங்.456),கருங்கொடி(மலைபடு.521),செங்கொடி(ஐங்குறு.25),பைங்கொடி(பெரும்பாண்.337) என்பன கொடியின் நிறத்தை உணர்த்துகிறது. நறுங்கொடி தாமலம்(நற்.292) என்பது மணத்தைக் குறிக்கிறது. இவர் கொடிப்பீரம் (ஐங்.464), இவர்ந்த அதர்கொடி அதிரல் (அகம்.159), இவர்ந்த பைங்கொடி அவரை (குறுந்தொ.240), தவழ்கொடி(கலி.102), நெடுங்கண் ஆரத்து அலங்குசினை வலந்த பசுங்கேழ் இலைய நறுங்கொடித் தமாலம்  ( நற்.292),  குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர் நறுங்காழ் ஆரம் சுற்றுவன( நற்.5) என்னும் இடங்கள் எல்லாம் படரியல்பு அடிப்படையில் படர்கொடி இதனை ஆங்கிலத்தில் கிரீப்பர் என்பர், ஏறுகொடி என்பதை ஆங்கிலத்தில் கிளைம்பர் என்பர். இவ்வகை கொடிக்கு இவை சான்றாக அமைகின்றன. கொடிக்கு பவர் என்னும் பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    புதல் வகையை எடுத்துக்கொண்டால் செடி என்|றும் பொருள் கொள்ளலாம். ஏனெனில் இது நிலத்தில் புதர் புதராய் மண்டி வளரக்கூடியது.  சிறு செடிகளையும், குற்று மரங்களையும் செடி என்று வழங்குவர். செடியை அவற்றின் வாழ்நாள் அடிப்படையில் ஒரு பருவச்செடி, இருபருவச்செடி, பல பருவச்செடி என்று மூன்றாகக்கொள்வர். ஒரு பருவச்செடி ஒரு குறிப்பிட்ட பருவத்தில் தோன்றிச் சிலவாரம் அல்லது மாதங்களில் இலையும், பூவும் கனியும் உண்டாகி விதைமுற்றி அப்பருவத்திலேயே பட்டுப்போகும். இருபருவச் செடியில் முறையே சேமித்தல் முதல் பருவத்திலும் அவ்வுணவைக் கொண்டு பூவும் கனியும் உண்டாக்குதல் இரண்டாம் பருவத்திலும் நிகழும். இரண்டாம் பருவத்தின் முடிவில் அத்தாவரம் முழுமையும் பட்டுப்போகும். பல பருவச்செடியில் ஒருமுறை செடி தோன்றியபின் அது வளர்ந்து பூ, கனிகளை உண்டாக்கியதும் மேற்புறமிருக்கும் தண்டுக்கிளை மட்டுமே அழிந்து போகும். நிலப்பரப்பின் உட்புறம் உள்ள கிழங்கு அல்லது மட்டத் தண்டுக்கிழங்கு முதலியவற்றிலிருந்து புதிய தண்டுக்கிளை முளைத்து வளரும் இத்தகைய வளர்ச்சி முறை மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் வரை நிகழும். இந்த பகுப்பை வைத்துப்பார்த்தால் பலபருவச்செடி என்பது குறுமர வகுப்பு அல்லது புதலை குறிப்பதாகும். இருபருவ வாழ்விகளை செடி என்று கொள்ளலாம். ஒரு பருவ வாழ்விகளைப் பூடு என்று அழைக்கலாம்.

    அணிலின் வால்போல் கதிர்கொண்ட ஊகம்புல், மணமிக்க புல்லாகிய நரந்தம், பசும்புல், நுண்புல் முற்றா இளம்புல், முளிபுல் என்று ஊகம்புல்லும், நரந்தம்புல்லும், பொது நிலையில் புல்லின் வளரி இயல்பும் கோடிட்டுக்காட்டப்படுகிறது.

    விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா
    வழும்பு கண் புதைத்த நுண்ணீர்ப் பாசி
    அடிநிலை தளர்க்கும் அருப்பம்
    (மலைபடு.220-22) என்ற மலைபடுகடாம் வரிகள் பாசித்தாவரத்தின் வழுக்கும் இயல்பை வழும்பு என்ற சொல்லால் குறிக்கிறது. பாசியின் வழுக்கும் தன்மைக்குக் காரணம் மியூக்கஸ் என்னும் நெய்ப்புத்தன்மையுடைய ஒரு திரவம்தான். அந்த மியூக்கஸை வழும்பு என்ற சொல்லால் சங்க இலக்கியம் குறித்துவைத்திருக்கிறது.

    கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான்யாற்று
    கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ (நற்.65.2-3) என்று நீரின் அலையால் பிரிந்தும் சேர்ந்தும் பரவும் தன்மைக்கொண்ட பசிய நிறமுடைய பச்சைப்பாசியை குறிக்கிறது., இவை அன்றி இழைப்பாசி, கொட்டைப்பாசி ஆகியனவும் காட்டப்படுகிறது. பசுங்கனிகங்கள் பொருந்தித் தம் உணவைத் தாமே தயாரித்துக்கொள்ளும் இயல்பால் அமைந்த இதைத் தாவரமாக உணர்ந்து பாசி என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர் சங்கக்கவிஞர்கள்.

    தம் உணவைத் தாமே தயாரிக்காமல் பிறவற்றைச் சார்ந்து வாழக்கூடியவை காளான்கள். இது பெசிடியோமைசீட் என்னும் வகையைச் சார்ந்தது. சங்க இலக்கியத்தில் காளான்கள், காளான், ஆம்பி என்ற பெயரால் வழங்கப்பட்டுள்ளது.

    ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ்
    உறையமை தீந்தயிர் கலக்கி நிரைதெரிந்து
    (பெரு.157-58)

    ஆடு நனி மறந்த கோடுயர் அடுப்பின்
    ஆம்பி பூத்த
    (புறம்.164)

    புல்லென் அட்டில்
    காழ் சேர்முது சுவர்க் கணச்சிதல் அரித்த
    பூழி படர்ந்த புழற்காளாம்பி
    (சிறுபாண்.132-34)

    என்று காளான் குறிக்கப்படுகிறது. காளானின் தன்மை ஈரப்பசை பொருந்திய இருண்ட இடங்களில் குறிப்பாக புழுதியில் தோன்றுவன. அதையே, பல நாள்கள் அடுதொழில் நடைபெறாத அடுப்பு, சமையலறைச் சுவர்கள் ஆகியவற்றின் மீது முளைத்திருப்பதைக் காட்டியிருக்கிறது.

    நார் என்பது மிக முக்கிய ஒன்றாகும். தாவரங்களின் சத்துக்களைக் கடத்துவதற்கு இந்த நார் பங்குவகிக்கிறது. முருங்கை மரத்தின் நார் தொடர்ச்சியற்றது. இதை,

    சுரம் புல்லென்ற அற்ற அலங்குசினை
    நாரில் முருங்கை நவிரல் வான்பூ
    (அகம்.1)

    என்ற அகநானூற்றுப்பாடல் சுட்டிக்காட்டுகிரது. எளிதில் முறியும் இயல்பினாலே இது முருங்கை என்னும் பெயர் பெற்றதென்பர்.

    வாழை, தென்னை, மரல், சணல், பாலை, ஆம்பல் ஆகியவற்றில் நீர் கடத்தும் நார் பற்றிய உண்மை சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    புலன் உணர்வுபெற்ற தாவரங்களாக நெருஞ்சி, அனிச்சம் ஆகியன காட்டப்பெறுகிறது. தரைத்தாவரமான நெருஞ்சி மலர்ந்ததும் கதிரவனின் ஒளியை நோக்கி திரியும் தன்மையை,

    சுடரொடு திரிதரும் நெருஞ்சி(அகம்.336)

    பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ ஏர்தரு சுடரின் எதிர்கொண்டாஅங்கு(புறம்.155)

    என்ற பாடல் வரிகளும்,

    தூநீர் பயந்த துணையமை பிணையல்
    மோயினள் உயிர்த்த காலை மாமலர்
    மணியுரு இழந்த அணி அழிதோற்றம் (அகம்.5)

    என்ற வரிகளும் தாவரங்களின் புலன்உணர்வை எடுத்துக்காட்டுவனவாக உள்ளன.

    உலகில் தற்போது வாழ்ந்து வரும் தாவரங்கள் ஏறத்தாழ 3,63,730 தாவரப் பேரினங்களில் அடங்கும். இவை பரிணாம முறையில் நுண்மங்கள், பாசிகள், காளான்கள், ஈரற்செடிகள், பெரணைகள், விதை மூடாத தாவரங்கள் பூக்கும் தாவரங்கள் எனப் பாகுபடுத்தப்பட்டுள்ளன. பூக்கும் தாவரங்களில் மட்டும் 96,680 பேரினங்கள் உலகெங்கிலும் வளர்கின்றன. ஒரு பேரினத்தில் பல சிற்றினங்கள் உண்டு. பண்டைய இந்திய நாட்டில் மட்டும் வளரும் சற்றேறக்குறைய 47,200 சிற்றினங்கள் பற்றிய விளக்கங்களை ஜெ.டி.ஹூக்கர் (1897) என்பவர் எழுதியுள்ளார்.பழைய சென்னை மாநிலத்தில் 9300 சிற்றினங்கள் பற்றிய விளக்கங்களை ஜெ.எஸ். காம்பில்(1915) எழுதியுள்ளார். இம்மாநிலத்தில் வளரும் ஏறக்குறைய 10,640 மரம், செடி, கொடிகளின் தாவரச் சிற்றினப் பெயர்களையும் அவற்றின் தமிழ்ப்பெயர்களையும் ஏ.டபுள்யூ.லஷிங்டன் (1915) என்பவர் பட்டியலிட்டுள்ளார்.

    சங்க இலக்கியங்களில் மட்டும் 210 மரம் செடி கொடிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட தாவரங்கள், இனி புதிய தாவரத்தைக் கண்டறிந்தாலும் அதை இண்டர்நேஷனல் கொட் ஆஃப் பொடான்னிகல் நோமென்க்லேச்சர்- ஐ சி பி என் என்ற விதிமுறைக்கு உட்பட்டே பகுக்கின்றனர். புதிய அனுமதி பெறுவதற்கு லண்டல் கியூ நிறுவனத்தை நாடவேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தாவரப்பட்டியல் வெளியிடப்படுகிறது., அதற்கு இண்டெக்ஸ் கெவென்சிஸ் என்று பெயர்.

    பழந்தமிழர்கள் இயற்கையை மிக ஆழமாக நேசித்திருக்கிறார்கள். தங்களின் ஒவ்வொரு அசைவையும் இயற்கையின் விதியை மீறாமல் நடத்தியிருக்கிறார்கள். இன்று இயற்கையை மதியாத பல விதிமீறல்கள்  நடைபெறுவதால் தான் வானம் பொய்க்கிறது; இல்லையேல் காலம் மாறிப் பெய்கிறது. சுற்றுச்சூழலை மனிதன் மதித்து நடக்கவேண்டும். கவிஞர் வைரமுத்து அவர்கள் மரத்தின் பயனாகா பட்டியலிடுவார்,

    “பிறந்தோம்
    தொட்டில்
    மரத்தின் உபயம்
    நடந்தோம்
    நடைவண்டி
    மரத்தின் உபயம்
    ………………………………………
    இறந்தோம்
    சவப்பெட்டி பாடை
    எரிந்தோம்
    சுடலை விறகு
    மரத்தின் உபயம்”(இ.பூ.168)

    மரம் மனிதனுக்குக்கொடுப்பது…..

    உண்ணக்கனி- ஒதுங்க நிழல்
    உடலுக்கு மருந்து – உணர்வுக்கு விருந்து
    அடையக்குடில் – அடைக்கக் கதவு
    அழகு வேலி – ஆடத்தூளி
    தடவத் தைலம் – தாளிக்க எண்ணெய்
    எழுதக் காகிதம் – எரிக்க விறகு (இ.பூ.166)

    இத்தனைப் பயன்களையும் பெற்றுக்கொண்டு இயற்கையை

    மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான் என்று மரத்தை உயர்த்தியும் மனிதனின் தவற்றை உணர்த்தியும் கூறியிருக்கிறார். இயற்கையை இனிது போற்றுவோம்; எழிலார்ந்த வாழ்வை கூடிப்பெறுவோம்.

    *****

    சு.விமல்ராஜ்
    உதவிப்பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை,
    அ.வ.அ.கல்லூரி(தன்.)
    மன்னன்பந்தல்.
    அலை:8220470590
    மின்:thamizvimal@gmail.com

     

     

    Share
  • ரஷிய இலக்கிய உருவவியல் கட்டமைப்பு தழுவலும் எதிர்த்தழுவலும் (19ஆம் நூற்றாண்டு)

    ரஷிய இலக்கிய உருவவியல் கட்டமைப்பு

    தழுவலும் எதிர்த்தழுவலும் (19ஆம் நூற்றாண்டு)

    சு. விமல்ராஜ்.

    இலக்கியம் என்பது மனித இனத்தின் உணர்வுகளை பரிமாறிக்கொள்ள உதவும் கருவி மட்டும் அல்ல, அது சமூகம் என்னும் அமைப்புக்குள் கீழே விழுந்துவிட்டவனைக் கைப்பிடித்து தூக்கி நிறுத்தவும் உதவும். மனித இனம் காலங்காலமாய் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள, மாற்றிக்கொள்ள இலக்கியத்தை ஒரு கருவியாகக் கொண்டு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரஷிய இலக்கிய வரலாற்றின் ஆழமான பார்வைப் பதிவுகளில் படைப்பின் முக்கியத்துவம் சாதாரண மக்களுக்கான இலக்கியமாக, இலக்கியம் தன்னை மாற்றிக்கொள்ளும்போதுதான் அதன் அடர்த்தி உண்மையானதாக இருக்கும் என்ற நிலை உள்ளது. உருவம், உள்ளடக்கம், இலக்கணத்தன்மை இவை இலக்கியத்தை ஒரு மேல் தளத்தில் வைத்துப் பார்க்காமல் சாதாரண குடிமக்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்வதாக இருக்கவேண்டும் என்பது ஒரு கருத்து. இதற்கு எதிரிடையான கருத்து வழியும் உண்டு. ஏனென்றால் இலக்கியம் என்பது எப்போதும் இலக்கியமாக இருக்க வேண்டும் என்ற ஒரு கூற்று உண்டு.

    அதிகார வர்க்கங்களின் முகமூடியைக் கிழித்து எறியும் விதமாக உருவான ரஷிய இலக்கிய முகம் நடுத்தர மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களுக்காகப் போராடும் கருவியாகவும் பயன்பட்டது. நவம்பர் புரட்சிக்குப் பிறகு ரஷ்யாவில் இலக்கியத்துறையில் காணப்பட்ட மாற்றம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்து ஒன்றிலிருந்து இருபத்து ஐந்தில் உருவான உருவவியல் கோட்பாட்டின் வெற்றி என்று சொல்லுகிற அளவுக்கு அது அமைந்திருந்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளில் ‘ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹிஸ்ட்ரி ஆஃப் ஆர்ட்’ என்னும் அரசு நிறுவனம் நிறுவப்பட்டு அதனுடைய இலக்கிய வரலாற்றுப் பிரிவாக ஒன்று இயங்கியது. இந்நேரத்தில் உருவவியல் இயங்குதளம் விரைவாக இயங்கியது. அங்கே காணப்பட்ட மார்க்சியத்தின் அழகியலுக்கு நேர் எதிரான ஒரு திறனாய்வுக் கோட்பாட்டை திட்டவட்டமான முறையில் உருவவியல் முன் வைத்தது. அது, ஒரு இலக்கியப்படைப்புக்கு சமூகவியல் அல்லது உளவியல் விளக்கத்தையோ அல்லது படைப்பாளிகளின் வாழ்க்கை வரலாற்றினை அடிப்படையாகக் கொண்ட விளக்கத்தையோ கொடுப்பதைப் புறக்கணித்தது. கவிதைப் படைப்பு, அதன் கட்டுமானம், அதன் சீர்கள், தளைகள், பாணிகள் ஆகியவற்றின் மீது அக்கறை காட்டியது.

    ஓபாயாஸ் என்ற பெயரில் விக்டர் ஸ்க்ளொவ்ஸ்கி என்பவரின் தலைமையில் இயங்கிய உருவவியலை சார்ந்தவர்கள் ஒரு படைப்பின் உள் அடக்கத்தைப் பொருட்படுத்தாமல் அதிலுள்ள சிறப்பான இலக்கிய உத்திகளை மட்டுமே ஆய்வு செய்ய தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டனர். கலை இலக்கியப்படைப்புகளுக்கு அதன் உள் கட்டமைப்புக்கு மட்டுமே முதன்மைக்கொடுத்தும் அவற்றை வெறும் சமூகவியல் நோக்கில் மட்டுமே பார்த்தும் வந்த பிளாக்கானோவியப் பார்வைக்கான எதிர்ப்பாகவே உருவவியல் என்றே கூறலாம். புரட்சிக்கு முந்தைய ரஷியாவில் இருந்த மொழியியல் ஆய்வுகளில் ஏற்பட்டிருந்த முன்னேற்றங்களைப் பயன்படுத்திக் கொண்ட உருவவியல் ஆய்வாளர்கள், ஃப்யூச்சரிசம் போன்ற நவீனப்போக்குகளை ஆதரித்தனர். பாட்டாளி வர்க்கம் பழைய சமுதாயத்தை உதறித்தள்ளியதைப் போல் தாங்கள் பழைய மரபுகளை எதிர்ப்பதாகக் கூறினர். தோஸ்தோவெஸ்கியின் படைப்புகளிலோ அல்லது நிகோலாய் பெர்டியெவின் தத்துவத்திலோ காணப்படுகின்ற கருத்துகளின் செல்வாக்கில் இருந்து இலக்கியத் திறனாய்வை விடுவிக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணம் உருவவியலை ஆதரித்தவர்களுக்கு இருந்தது. ஏன் என்றால் ரஷியர்களிடம் இறை நம்பிக்கை அதிகமாக இருந்தது.

    உருவவியல் கோட்பாட்டாளர்களின் கருத்துகள் விமர்சனங்களுக்கு உள்ளானது. முழுவதும் கடவுள் இல்லை என்னும் கொள்கை உடையவர்கள் என்று கருதத்தக்கவர்களால் ஏற்பட்ட புரட்சியால் மயக்கப்பட்டவர்கள் என்ற நிலையிலும்கூட கடவுள் செயல் என்ற தன்மையில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர் என்று உருவவியல் கோட்பாடு கொண்டவர்கள் கருதுகின்றனர். ரஷிய நாட்டின் குறியீட்டுக்கவிஞர் அலெக்சாண்டர் பிளாக்கை அவர்கள் சுட்டிக்காட்டினர் (ரஷிய புரட்சி இலக்கியம்.ப.85 .ராஜதுரை) தமது பன்னிருவர் என்ற கவிதையில் ஏசு கிருத்துவை செங்காவலரை வழி நடத்திச் செல்பவராக வர்ணிக்கிறார்.

    கவிதைப்பாணியினை விடுதலை செய்வதும் பணிந்து போகும் சிம்பலிஸ்டுகளை மேன்மேலும் அடிமைப்படுத்தி வந்துள்ள தத்துவ சமயப் போக்குகளுக்கு தலை வணங்க மறுப்பதும் உருவவியலாளர்களின் முதன்மையான நோக்கமாகும் என்று போரிஸ் ஐசன்பாம் கூறுகிறார். எனவே, ஓபாயாஸ் குழுவானது மார்க்சிய அழகியல் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது, கட்சிக்குத் துணை புரிகின்ற இலக்கிய விமர்சனப் போக்குதான் என்று கட்சித்தலைவர்கள் சிலர் கருதியதில் நியாயம் இருந்தது. உருவவியலாளர்கள் தங்கள் கருத்துகளை தடையேதும் இல்லாமலும், மிகுந்த செருக்கோடும் பிரகடனப்படுத்தினர். இலக்கியத்தை வெறும் மேல் கட்டுமானம் என்று கருதுவதை முற்றிலும் மறுத்த ஐசன் பாம் ஏதாவது ஒரு பொருளாதார அல்லது சமூக அறிவியல் அடிப்படையில் ஒரு இலக்கியப் படைப்பை விளக்க முயற்சி செய்வது இலக்கியத்தின் உள் இயக்கங்களை அல்லது அதன் தனித்த இயக்கத்தை மறுப்பதற்கு ஒத்ததாகும் என்றும் கூறினார்.

    உருவமும் உள் அடக்கமும் ஒன்றுக்கு ஒன்று நெருக்கமான தொடர்பு உள்ளவை என்பதைக் கேள்விக்கு உட்படுத்தும் அளவுக்கு ஸ்க்ளோவ்ஸ்கியால் தன் கருத்துகளை அன்று அச்சமின்றி வெளிப்படுத்த முடிந்தது. “கலையின் வடிவங்கள் அவற்றில் கலைக்குரிய நியாயங்கள் உண்டா இல்லையா என்பதைக் கொண்டே மதிப்பிட வேண்டும். ஒரு புதிய வடிவம் ஏதோவொரு புதிய உள்ளடக்கத்தை வெளியீடு செய்வதாகத் தோன்றுவதில்லை. மாறாக தன் இலக்கிய மதிப்பை இழந்துவிட்ட பழைய இலக்கியத்துக்கான மாற்றீடாகத்தான் அப்புதிய வடிவம் தோன்றுகிறது.”(சான்று. விக்டர் க்ளொவ்ஸ்கி, கார்னல் யுனிவர்சிடி பிரஸ், லண்டன்.1977பக்கம்.85)

    செயலின் ஒளிசார்ந்த நிழல்:
    ஆரம்ப காலகட்டத்தில் உருவ இயல் மீதான போல்ஷ்வில் தலைவர்களின் நிலைப்பாடு இறுக்கமானதாக இருக்கவில்லை. பொதுவாக அவர்கள் இலக்கிய விவகாரங்களை எச்சரிக்கையுடன் அணுகுவதையே விரும்பினர். கருத்துப் போராட்டத்தின் மூலம் எதிர்தரப்பினரை முறியடிப்பதிலும் வென்று எடுப்பதிலும் நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்கள் கடைப்பிடித்த அளவுகோல் எழுத்தாளர்கள் புரட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்களா? இல்லையா? என்பதுதான்.

    உருவ இயலாளர்கள் கவிதையின் உத்தி நிலையைப் பற்றி ஒரு பட்டியலை உருவாக்கினார்கள். இத்தகைய பகுப்பு ஆய்வுக்காக அவர்களைப் பாராட்ட வேண்டும் என்று புகாரின் கூறினார். இலக்கியத்தைப் பற்றிய காரண காரிய விளக்கம் தரக்கூடிய ஒரே தத்துவம் மார்க்சியம் மட்டுமே என்றும் ஒரு குறிப்பிட்ட போக்கு ஏன் எவ்வாறு தோன்றியது என்பதை மார்க்சியத்தால் மட்டுமே விளக்கமுடியும் என்றும் கூறினார் த்ரோத்ஸ்கி.

    அழகியல் பற்றிய மதிப்பீடுகளுக்கான அளவுகோல்கள் அனைத்தையும் மார்க்சியத்தால் மட்டுமே வழங்கிவிட முடியாது என்றும் ஒரு இலக்கிய வடிவத்திலுள்ள குறிப்பிட்ட கலையம்சங்கள் மீது அழுத்தம் தருவதில் நியாயம் உண்டு என்றும் ஒப்புக்கொண்ட த்ரோத்ஸ்கி உருவ இயல் பகுப்பாய்வு நுட்பங்களைப் புறக்கணிக்கவில்லை. ஏனெனில் கலை, உலகை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி அல்ல; மாறாகக் கலைக்கே உரிய விதிகளுக்கு ஏற்ப எதார்த்தத்தை உருமாற்றம் செய்வதாகும். ஆனால் கலைகளை அவற்றின் நுட்பங்களை மட்டும் கொண்டு விளக்குவதோ அல்லது இலக்கியம் முழுவதையும் சொல்வெளியீட்டு பாணியாகக் குறுக்கி விடுவதோ தவறானது என்று அவர்கூறினார். ஒரு கவிதையின் உயிரெழுத்து, மெய்யெழுத்து, வேர்ச்சொல், வாக்கியத்தின் அமைப்பு ஆகியவற்றைப் பற்றிய புள்ளி விவரம் சொல்வது மட்டும் ஒரு திறானாய்வாளனின் பணியல்ல என்ற அவர், “ உருவ இயலாளர்கள் புனித ஜானின் சீடர்கள். முதலில் சொல் இருந்தது என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் நாங்கள் கருதுகிறோம்; ஆரம்பத்தில் இருந்தது செயல்- பிறகே சொல் வந்தது- செயலின் ஒலி சார்ந்த நிழலாக ” (சான்று:பக்கம் லியோ த்ரோஸ்கி தி பார்மலிஸ்ட் ஆஃப் பொயட்ரி அண்ட் மார்க்சிஸ்ட் டேவிட் கிரெய்க் பெங்குயின் , லண்டன்,1975ப.374.)

    அகத்தூண்டல்:
    கலைப்படைப்புக்கு அகத்தூண்டுதல் என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது என்பது ஒரு கோட்பாடு. கலைப்படைப்பில் தர்க்கத்திற்கு மாறான அம்சங்கள் உள்ளன. நனவிலி என்னும் மனத்தின் செயல்பாட்டை அதில் காணலாம் என்ற கருத்துகளையும், கலையின் உளவியல் செயல்பாட்டையும் உருவவியல் கோட்பாட்டை உடையவர்கள், மயாகோவ்ஸ்கி, ஓசிப் ப்ரிக், புரோலிட்கள் ஆகியோரையும் சேர்த்து மறுத்தனர். இந்த அம்சங்களை மரபான மார்க்சிய இலக்கிய விமர்சகர்கள் சக பயணிகள் த்ரோஸ்கி முதலானோர் ஒப்புக்கொண்டனர். கட்சி-அரசு தலைவர்களில் உருவ இயல் பற்றிய கடுமையான திறனாய்வைச் செய்தவர்கள் லுனாசார்கிஸ்தான். உள்ளடக்கத்தைத் தவிர்த்து கவிதை உத்திகளை மட்டுமே கருத்தில் கொள்ளும் உருவ இயல் இலக்கிய விமர்சனம் உண்மையான மனிதப் பிரச்சனைகளை தவிர்க்கின்ற நழுவுதல் தொடர்பானதே என்றும் நசிந்து போன ஆளும் வர்க்கத்தின் மலட்டுப் படைப்பே என்றும் கூறினார். “நவீன முதலாளி வர்க்கத்தால் அனுபவித்து மகிழக்கூடிய புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒரே கலை வகை, புற உலகம் சாராத வெறும் உருவம்மட்டும் உள்ள கலைதான். அக்டோபர் புரட்சிக்கு முன்பு உருவவியல் பழுத்துக் கொண்டு வந்த ஒரு காயமாக இருந்தது. இன்று அது பழைய அமைப்பின் பிடிவாதமிக்க எச்சமாக உள்ளது. இன்னும் மாற்றத்துக்கு உட்படாத ஐரோப்பிய முதலாளி வர்க்கத்தைப் பார்த்து கள்ளத்தனமாகக் கண் சிமிட்டுகிற அறிவாளிகளின் கடைசிப் புகலிடமாக உள்ளது ” [சான்று: 87]

    இலக்கியமும் எடுத்தியம்பலும்:
    இலக்கியத்தை எடுத்து இயம்புவதின் மொழியைப் பல்வேறு சொற்களைப் பயன்படுத்திப் பாகுபடுத்தி ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஒவ்வொரு சொல் வகைகளையும் கிட்டத்தட்ட ஒரு உரையாடலின் வடிவம் ஆகும். எடுத்து உரைத்தலின் நீண்ட பகுதிகள் கதையைச் சொல்பவனின் குரலில் எழுதப்பட்டிருப்பதாக தோன்றுவதாகத் தெரிந்தாலும் இரண்டு அல்லது அதற்கும் கூடுதலான குரல்கள் இயக்க அசைவுடன் நல்ல தொடர்பு கொண்டிருப்பதாகக் கொள்ளமுடியும். வெவ்வேறு கால வரலாற்று நிலைகளின் இந்தச் சொல் அமைப்புகளின் தொடர்பு உடைமை வேறு வகையானதாக இருக்கின்றன. உண்மைத் தன்மையின் உயிர் குரலாக எது ஒலிக்கிறதோ அது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

    தோயஸ்தோவ்ஸ்கியின் படைப்புகள் பலகுரல் தன்மையுடையவை ஆகும். இந்தக் குரல்களில் எதையுமே படைப்பாளியின் குரலாக எடுத்துக்கொள்ள முடியாது. படைப்பின் உச்சம் என்பது குரலின் மொழி என்ன சொல்கிறது என்பதுதான். ஆனால், இது படைப்பாளியின் எதேச்சகார குரலுக்குக் கட்டுப்படும் அமைப்பிலும் இல்லை. அந்தக் குரல்கள் தம்மைப் படைத்துவிட்ட ஆசிரியனுக்கும் அவனது குரலுக்கும் அருகில் நிற்கக்கூடியவை. அவனுடன் ஒத்துப்போக மறுப்பவை. அவனுக்கு எதிராகக் கலகம் செய்யவும் தயங்காது. ஆனால் இதைப் பல பாணிகளின் வேறுபட்ட புதிய வடிவம் என்றும் எடுத்துக்கொள்ளக்கூடாது. இவரின் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தன் தனித்த தன்மைக்கே உரிய தனித்த பாணியில் பேசுவதில்லை. இவரின் இரட்டை ஆளுமையை நாம் உணரவும் முடியும். லுனா சார்க்கியின் நூலின் இருந்து தோவ்ஸ்தயோஸ்கியின் உயிர்ப்பை உணரமுடியும். லூனாசார்க்கின் தனித்தன்மையையும் தெரிந்துகொள்ள முடியும். இவரது நாவல்களில் இந்த பல குரல்கள் கொள்ளும் முரண்பாடு, மோதல் ஆகியவை ஒன்றாக இணைந்து முழுமையான படைப்பு உருவாக்கும் படைப்பு ஆசிரியனின் குரல் இவரின் இரட்டை ஆளுமையைத் தனித்துக் காட்டுகிறது.

    சு.விமல்ராஜ்,
    உதவிப்பேராசிரியர்,
    அ.வ.அ.கல்லூரி,
    மயிலாடுதுறை.
    அலை:8220470590
    thamizhvimal@gmail.com

    Share
  • சங்கத்தமிழர் கடவுட்கொள்கையின் வேரிற்கிடக்கும் பதுக்கையும் நடுகல்லும்

    –சு.விமல்ராஜ்.

    வழிபாட்டு மரபு என்பது மானிட வரலாற்றின் தொல்பழங்காலம் முதற்கொண்டு இயல்பாய் தோன்றி வளர்ந்தது. உலக மானிடவியல் வரலாற்றின் முதற்படியிலிருந்து பயணம் மேற்கொள்ளின் அதன் இயற்கை சார்ந்த படிநிலை வளர்ச்சியை உணரமுடியும். செம்மொழி மக்கள்-மொழி-இலக்கியம் என்னும் பார்வையில் பண்டு வரலாற்றுத் தொன்மையுடைய தன்மையில் வைத்து எண்ணத்தக்க மொழியாகவும் இலக்கியமாகவும் மாந்தராகவும் கருதத்தக்க சங்கத்தமிழரின் கடவுட்கொள்கையை ஊன்றிப்பார்க்கின் இந்திய வைதீகக் கொள்கையும் அதன் வழி பெறப்படும் மேலை ஆரிய வேதமரபும்; தென்னிந்திய கடவுட்கொள்கையில் கிடக்கும் மூத்தோர் வணக்கச் செயல்பாடுகளையும் உணரமுடியும்

    இந்திய வைதீக வழிபாடு:
    இந்திய புராண வரலாற்றுத் தொன்மம் பிரசாபதி, ருத்ர, விஷ்ணு, சிவ பிம்பங்களை முன்னிருத்தி வைத்திருக்கிறது. வேத மரபென்பது தொல் இந்திய கடவுட் கோட்பாட்டு மரபைச் சுட்டி நிற்கிறது. யூதமரபும் அதையொட்டி ஆரியத்தின் மேல் எழுப்பப்படுகிற மேலை ஆரிய கீழை ஆரிய வகைப்பாட்டு பார்வை வரலாற்றின் மீது இருக்கும் காரணத்தினால் திருசூலம்-சூலம் எவ்வகை வேறுபாடு என்பதை ஆழப்பார்க்க வேண்டும். யூத வேரின் மீதான மேலை ஆரியப்பார்வை இந்திய வேதங்களின் மீது வைத்துப்பார்க்கப்படுகிறது. பிரஜாபதி எனும் சொல் குறித்து சில கூற்றுகள் இருக்கின்றது.(ஆதி வேத ஆகமத்தில் சொல்லப்பட்ட பிரஜாபதி – இந்திய ஆதிவேத பிரஜாபதி இரண்டும் ஒன்று என்பது [In Hinduism, Prajapati (Sanskrit: प्रजापति (IAST: prajā-pati)) “lord of people” is a group of Hindu deity presiding over procreation and protection of life, and thereby a King of Kings (Rajanya or Rajan). Vedic commentators also identify him with the creator referred to in the NasadiyaSukta.]1 இந்த திரிசுலம் எதன் குறியீடு என்பதை வேர்வரையில் சென்று பார்த்தால் விளங்கும்.

    வழிபடு-வழிபாடு:
    வழிபாடு என்பது ஒன்றின் மையப்பொருளில் ஒன்றித்து பயணப்படுதல். இலக்கை மையமாகக் கொண்ட தமிழர் வாழ்வில் கடவுள் என்னும் கோட்பாடு இழைந்து காணப்படுகிறது. பதுக்கையும் நடுகல்லும் சான்றாய் நின்று விளங்கும்.

    “விழுத்தொடை மறவர; வில்லிடத் தொலைந்தோர்
    எழுத்துஉடை நடுகல் அன்ன’’ 2

    தொல்லியலார் கல்திட்டைகளையும் பதுக்கைகளையும் பல இடங்களில் கண்டுபிடித்துள்ளனர். சங்க காலத்தில் இத்தகைய கல் பதுக்கைகள் இருந்தன. தரையைத் தோண்டிச் சிறிது நிலத்திற்கடியில் இருக்குமாறோ அல்லது முழுவதும் அடியிலிருக்குமாறோ பிணக் குழியை அமைப்பர். நன்கு செதுக்கப்பட்ட கருங்கற் பட்டைகளை இதற்குப் பயன்படுத்தனர். இக்குழியைச் சுற்றிலும் ஒன்றிரண்டு வரிசைகளில் கல்சுவர்கள் எடுப்பர். ஈமப் பொருளைக் குழியிற் போட்டபின் ஒரு கல்லால் மூடிவிடுவர். அதற்குப் பிறகு மேலே கூழாங்கற்கள் பரப்பப்பட்டன. இது புதைபொருள் ஆய்வாளர் கண்டுள்ள பதுக்கைகளின் அமைப்பாகும்.

    ‘‘நல்லிசை வலித்த நாணுடை மனத்தர்
    கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்தோர்
    படுகளத்து உயர்த்த மயிர்தலைப் பதுக்கை’’3

    நடுகல் வழிபாடு- போரில் இறந்துபட்ட வீரர்கட்குக் கல் நட்டு அவர்களைக் கடவுளாக வழிபட்ட மரபினை இலக்கியம் பலபடப் பேசுகிறது. வெட்சித் திணையின் பகுதியில் காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், பெரும்படை வாழ்த்து என்றும் நடுகல் வணக்கத்தின் ஆறு படிநிலைகளைத் தொல்காப்பியம் கூறியுள்ளது நோக்க இம்மரபு அவர் காலமாகிய கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதெனத் தெரிகின்றது. மாடுகளே பண்டு செல்வமாகக் கருதப்பட்டன. எனவே, பகைவரிடமிருந்து மாடுகளைக் காக்கும் முயற்சியிலீடுபட்டு உயிர் நீத்த கரந்தை வீரர்கட்கே பெரும்பான்மையான கற்கள் நடப்பட்ன என்று அறிய வேண்டியுள்ளது. நடுகற்கள் ஊருக்குப் புறத்தே தொலைவில் இருந்த திடல்களில் நடப்பட்டன. ஒரு வீரனுக்குக் கல் நட்டதைப் புறநானூற்றுப் பாடலொன்று கூறுகின்றது.

    ‘‘ஊர்நனி யிறந்த பார்மூதிர் பறந்தலை
    ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீப்
    போந்தையந் தோட்டில் புனைந்தனர்
    மல்லான் கோவலர் படலை சூட்டக்
    கல்லா யினையே கடுமான் தோன்றல்’’4

    இக்கற்களில் வீரனுடைய பெயரும்பீடும் எழுதப்பட்டன. அணிமயிற் பீலியும் மலர் மாலைகளும் சூட்டப்பட்டன.

    ‘‘நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
    பெயரும் பீடும் எழுதி அதன்தொறும்
    பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்’’5

    பழந்தமிழர்களுக் கென்ற தனித்துவமான வழிபாட்டு மரபுகள், நம்பிக்கைகள் என்பவை பண்டைய தமிழர் தொன்மையை நிலை நிறுத்துகிறது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் பெயர் கி.பி. பதினோறாம் பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் வந்ததாகக் குறிப்பர். இதில் மாறுபாடு உண்டு. பன்னிருபாட்டியலும் பின்னால் கி.பி.பதிமூன்றாம், பதினான்காம் நூற்றாண்டைச் சார்ந்ததாக கொள்ளப்படும் மயிலைநாதர் உரைகளிலும் காணப்படுகிறது. தொல்தமிழர் வழிபட்ட கடவுள் மரபை நுண்ணித்து பார்த்தால் இயற்கையின் மீது பிடிப்போடு இருந்து ஒழுகியதை உணரமுடியும்.

    தொல்காப்பியத்தில் கடவுள்:
    தொல்காப்பியனார் திணைகள் ஒவ்வொன்றுக்குமான கடவுளரின் பெயர்களை விவரித்துக் கூறியிருப்பார்.

    “மாயோன்மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்
    முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச்
    சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”6

    என்பது தொல்காப்பியம். தொல்காப்பியர், – மாயோன் – சேயோன் – வேந்தன் – வருணன் என்று நான்கு கடவுளரைப் பற்றி முதலில் கூறி, அக்கடவுளர் நெறியைப் போற்றி வணங்கிய நிலங்களைக் குறிப்பிடுகிறார்.

    இந்த நூற்பாவின் படி, காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தின் கடவுளாக மாயோனாகிய திருமாலும்[“மாயோன் வழிபாடு தமிழ் நாட்டின் பூர்வீக வழிபாடுகளில் ஒன்றானதாகும். மாயோன் என்பது கருமை நிறமுடையவன், திருமால் எனப் பொருள்படும்”]7, மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தின் கடவுளாக சேயோனாகிய முருகப்பெருமானும், வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தின் கடவுளாக “வேந்தன்” ஆகிய இந்திரனும், கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தின் கடவுளாக வருண பகவானும் குறிக்கப்பட்டுள்ளனர். முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து காணப்பெற்ற பாலைப் பகுதியில் “கொற்றவை” வழிபாடு நிகழ்ந்ததாக சங்க நூல் வழியும், “முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து” என்று சங்கம் சார்ந்த சிலப்பதிகாரம் போன்ற நூல் வழியும் அறிய முடிகிறது.

    முருகன், திருமால், வேந்தன், கொற்றவை, வருணன் என்ற திணைக்கடவுட் கோட்பாடென்பது சிறு தெய்வ வணக்க வழிமுறையாக கருதப்படுகிற மூத்தோர் வணக்கத்தின் படி நிலை என்பதையும் உணரவேண்டும். பதுக்கையும் அதைத்தொடர்ந்த நடுகல்லும் எத்தகைய நிலையை உணர்த்தி நிற்கிறது என்பதை தெளிந்து நோக்க வேண்டும். முருகு, திருமால் வழிபாட்டளவில் ஏனைய கடவுளர்கள் பதிவு செய்யப்படவில்லை என்பதை இங்கு நோக்குதல் நன்று.

    முருகு-முருகன்:
    முருகு+அன்=முருகன். முருகு என்னும் சொல்லுக்கு சதுரகராதி அகில்,அழகு, இளமை, எழுச்சி, கள், திருவிழா, முருகன், வாசனை என்று பலபொருளைச் சுட்டுகிறது.8
    முருகன் பெயருக்கு இளையோன், குமரன், வெறியாட்டாளன் என்கிறது.9
    குறிஞ்சி நிலத் தெய்வம் முருகன். மக்கள் தோன்றிய இடமும் வாழ்வு தொடங்கிய இடமுமாகக் கருதப்பெறும் மலையை முருகன் இடமாகக் கொண்டான்.
    முருகன் வேலை போர்க்கருவியாகவும், சேவலைக் கொடியாகவும் கொண்டான். இந்திரன் பணியாளரான நெருப்பையும், காற்றையும் சுப்பிரமணியர் என்று அழைத்தனர் என்று தைத்ரீய ஆரணியகம் கூறுகிறது. தமிழ் இலக்கியங்கள் முருகனைத் தாய்வழி உரிமை பெறும் திராவிடத் தெய்வமாகக் காட்டுகின்றன. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் முருக வழிபாடு முறையாகிய வெறியாட்டு மிகப் பழைமையானது என்பதும், சமுதாயக் கூட்டு வாழ்க்கையின் அடிப்படையில் தோன்றியது என்பதும் அறியப்படுகின்றன. கடவுட் கோட்பாட்டில் முதலில் தோன்றியது முருக வழிபாடு குறித்த கோட்பாடே. தமிழ் நாட்டில் முருக வழிபாட்டிற்குத் தோற்றமாயிருந்தது. வேலன் வெறியாடல். இஃது ஓர் இனக்குழு வழிபாட்டு முறை என்பர். கடவுள் வழிபாட்டிற்குத் தொடக்க நிலையில் உருவங்கள் வைத்து வணங்கப்படவில்லை. குறிப்பிட்ட அடையாளங்களை வைத்தே வழிபட்டனர். அதுபோல முருகனுக்கு அடையாளமாக வேலாயுதம் வைத்து வணங்கப்பட்டது.

    வேலாயுதம் என்னும் கருவியின் மீதான ஆய்வும் வைக்கத்தக்கது. கிரேக்க தேசத்தில் பொசைடன் என்னும் கடல் கடவுளின் குறியீடாய் மூன்று முனைகளை உடைய ஒன்று காட்டப்படுகிறது. சிவனின் சூலாயுதம் மூன்று குறியீடுகள் உடையதாய் காட்டப்படுகிறது. இஃது தனித்து ஆய்வு நிகழ்த்துவதற்கு உரியது.
    சங்க இலக்கியம் முழுவதும்ஒன்பது இடங்களில் முருகன் பெயர்வருகிறது.

    “உருவப்பல்தேர்இளையோன்சிறுவன்
    முருகற்சீற்றத்துஉருகெழு குருசில்”10
    “முருகன்தாள்தொழு தன்பரங்குன்று”11
    “முருகன்நற்போர்நெடுவேள் ஆவி”12
    “சினம்மிகுமுருகன்தன்பரங் குன்றத்து”13
    “முருகன்ஆர்அணங்கு என்றலின்”14
    “முருகன் அன்ன”15
    “முருகற் சீற்றத்து உருகெழு குருசில்”16
    “முருகன் சுற்றத்து அன்ன”17
    “அணங்குடை முருகன் கோட்டத்து”18
    முருகு என்னும் சொல் முருகன் என்னும் பொருளில் இடம்பெற்றுள்ளது. முருகு, முருகநழகு என்னும் பொருளைச் சுட்டி நிற்கும்.

    “முருகு இயம் நிறுத்து, முரணினர் உட்க முருகு ஆற்றுப் படுத்த உருகெழு வியல்நகர்”19
    “முருகு அயர”20
    “அருங்கடி வேலன் முருகொடு வளைஇ”21
    முருகு, முருகன் கடவுள் அல்லது நிலத்தலைவனின் பெயர் உணர்த்தி செவ்விய முருகியற்பொருந்திய இடத்தை எடுத்துக்காட்டுகிறது.

    வேலன்/வேலான்/வேல்வல்லான்/செவ்வேலான்:
    வேலன் பெயர் சங்க இலக்கியத்தில் முப்பத்து ஓரிடங்களில் இடம்பெற்று வந்துள்ளது. வேல் என்னும் கருவியினை உடையவன் என்னும் பொருளில் வேலுடையான் பொருளுணர்த்தி நிற்கிறது. கருவியை உடையவனாதலால் வேலின் பெயர் ஆளுக்காகி வேலன் என்றானது. வேல்+அன்= வேலன். வெறியாட்டு நிகழ்த்துதல் நிகழிடத்தில் கருவியானது முதன்மை. வழிபடு முறைகளுள் ஆள் ஒருவன் தன்மேல் முருகன் வருவதாய் ஆடி நிகழ்த்துவது சங்கப்பாடல்கள் பலவற்றில் பயின்று வந்துள்ளது.

    வேல்+ஆன்=வேலான் என்று பரிபாடலின் ஈரிடங்களில் வருகிறது.22 வேற்சொல்லுடன் ஆன் விகுதிப்பெற்று வேலான் என்று வழங்கியுள்ளது. முருகனை வேலுடையவன் என்னும் பொருளில் வேலன், வேலான் என்றவாரு வழங்கிவந்துள்ளது.
    வேல்வல்லான் – வேலில் வல்லான். குறிஞ்சி நிலத்தவனை/ தலைவனை/ முதன்மையுடையவனை முருகு, முருகன், வேலன், வேலான் என்று உணர்த்தி நின்று வேலில் வல்லானாய் முருகனைக் காட்டி வந்துள்ளது. செவ்விய வேலையுடையவன் என்னும் பொருளில் செவ்வேலான் என்றது.23

    முருகன் கோயில்:
    சங்க காலத்தில் முருகன் கோயில் கொண்டிருந்த இடங்களைப் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. கடம்ப மரத்தடியில் முருகன் வீற்றிருந்ததை,

    ‘‘….. . ..புகழ் பூத்தகடம்ப மர்ந்து
    அருமுளி மரபின் ஆன்றவர் நுகர்ச்சியின்
    இந்நிலத்தோடும் இயைகெனக் கீத்தநின்
    தண்பரங்குன்றத்து’’24

    என்ற பரிபாடல் அடிகளிலிருந்தும் உணரலாம். குறிஞ்சி நில மக்கள் தம் பண்டைய மரபு முறையிலேயே வழிபாடுசெய்து வந்தனர் இலக்கியங்களில் முருகக் கடவுளைப் பற்றி எழுந்த பழைமையான நீண்ட முதல் தனிப்பாட்டு திருமுருகாற்றுப்படையாகும்.

    முருகன் வழிபாடு பற்றி அகநானூறு :
    முருகன் வழிபாடு பற்றி அகநானூறு குறிப்பிடும்போது,

    ‘‘சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல்
    சினம்மிகு வேந்தன் தண்பரங்குன்றத்து’’25

    என்ற வரிகளில், முருகன் தெய்வப் பண்புகளையன்றி, வீரப்பண்பு உடையவனாகத் திகழ்ந்திருக்கிறான். தமது பகைவனாகிய சூரபன்மாவினைச் சுற்றத்தோடு அழித்துச் சுடரும் முனையினையுடைய நெடுவேலினையுடையவன் சினம் மிகுந்த முருகன்; அச்சினம் தணிந்து அவன் அருளுடையவனாகக் கோயில் கொண்டிருக்கும் தட்பம் வாய்ந்த அறுபடைவீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் பற்றியதில் தெரியவருகிறது.

    ‘‘புரிக்கணத் தன்ன நாய்தொடர் விட்டு
    முருகன் அன்ன சீற்றத்துக் கருந்திறல்’’26

    என்ற அகநானூற்று வரிகளில் ஒலியையொத்தக் கடுஞ்சீற்றத்துடனும் பகைவரை எதிர்க்கக் கூடியவனாகிய முருகனின் வலிமையை இவ்வடிகள் தெளிவுறுத்துகின்றன.

    முருக வழிபாடும் வைதீகமும்:
    முருகன் குறித்து வரும் பல்வேறு பெயர்கள் மலை நிலக் கடவுளாக முருகனைக் கொள்வதற்கு துணை நிற்கிறது. முருகனின் பல்வேறு பெயர்களும் வணக்கமுறைகளும் அவரை வீரவணக்கப் பின்புலம் உடையவராகக் காட்டுகிறது. சிவனுக்கும் முருகனுக்குமான வைதீகச் சார்பு டையக்கருத்துகள் ஆய்வுக்கு உரியதாக உள்ளது.

    தொல்தமிழரின் மூத்தோர் வணக்கம் வீரர்கள், தலைமைப் பண்புடையவர்கள், உறவுகளில் முதிர்ந்தவர்கள் ஆகியோரை வணங்கும் முறை பழக்கத்தில் இருந்ததைக் காட்டுகிறது. வழிபாட்டு வரலாறு ஆதிமனிதன் இயற்கையைக் கண்டு நடுங்கி கதிரோனையும், திங்களையும் மதித்து வழிபடுவது என்ற வழித்தடத்தில் மரத்தைத் தான் முதன்முதலாக வழிபட்டான்.

    “நாகரிகம் தோன்றிய காலம் முதலாகக் கொண்டு உலகமெங்கும் மனிதன் மரங்களை வழிபடத் தொடங்கினான் என்பதே ஆய்வாளர்களின் கருத்து “27
    மரவழிபாட்டிற்கு அடுத்த நிலையில் விலங்கு வழிபாட்டில் நாகம் தொன்மையானது. இந்தியாவில் நாகர்கள் பழமையான குடிகள். நாகர் என்பதற்கு ஒரு பழைய சாதியர்28,
    நாகநாடு என்பதற்கு நாகர் என்னும் மனித சாதியார் வாழும் நாடு29 என்றும் பொருள் கொள்வர்.

    இவ்வழிபாட்டு அமைப்பில் தமிழர்களின் தொன்மையான முறைகளுள் ஒன்றான நடுகல் வழிபாடு உள்ளது. இவற்றுள் இரண்டுள்ளது. ஒன்று பெருங்கற்படை என்னும் பதுக்கைகள் இரண்டாவது அதன் நீட்சியான நடுகல் என்பதுமாகும்.

    பதுக்கை (Cist) என்னும் பெயர் சங்க இலக்கியத்தில் பதினான்கு இடங்களில் வருகிறது.30நடுகல்

    “அம்பின் விசை இடை வீழ்ந்தோர்
    எண்ணு வரம்பு அறியா உவல்இரு பதுக்கி “31

    நடுகல் என்னும் பெயர் சங்க இலக்கித்தில் பதினெட்டு இடங்களில் வருகிறது.

    “நடுகல் பீலி சூட்டி “32
    “நடுகல்லின் அரண் போல “33

    என்றுவரும் இவற்றிலிருந்து பதுக்கை, நடுகல் வழிபாடிருந்ததை உணரமுடியும். இறந்தவர்களை புதைப்பதும் எரிப்பதுமான பழக்கம் இருந்தது. வீரர்களை, உயர்குடியில் பிறந்தவர்களில்தான் பதுக்கை, நடுகல்லும் கொண்டு வழிபடும் முறை இருந்தது. (தொல்லியல் நோக்கில் சங்க காலம்.கே.ராஜன்.)

    புதைப்பதையும் எரிப்பதையும்,

    “இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ
    படு வழிப்பாடுக “34

    என்னும் பேரெயில் முறுவலார் பாடல் எடுத்துக் காட்டுகிறது. இதற்கு சான்றாக மணிமேகலை,

    “சுடுவேள் இடுவேள் தொடு குழிப் படுவேள்
    தாழ் வயின் அடைப்போர் தாழியிற் கவிப்போர் “35

    என சுடுபவர்களையும்(Cremation), இறந்தவர்களை ஓரிடத்தில் வைப்பதை(Post Excarnation burial), குழியில் இடுவதை(Pit burial), நிலத்திற்கு அடியில் கல்லறை வைப்பதை(Rock chamber or Cist burial), தாழிகள் இட்டு அதன் மேல் மூடிகள் கொண்டு மூடுவதை(Urn burial encapped with lid), [“தாழி இடுவதை மாயிருந் தாழி கவிப்ப “36 என்பர் பரணர்] விளக்கி நிற்கிறது.

    இறந்தவர்களை மதிப்போடு இடுவதும், சுடுவதும், பதுக்கை, நடுகல் அமைத்து அவர்களை வழிபடுவதும் தமிழர்களின் வீரவனக்கச் செயற்பாடுகளுள் ஒன்றாக விளங்கியது. முருகு வழிபாடும் அத்தகு வீரவனக்கச் செயற்பாடுகளின் தலைமுறை கடந்த மாற்றுருவே ஆகும். குறிஞ்சி நிலத்தலைவன் மதிப்பு மிகு நிலையில் வீரவணக்கம் செய்யப்பெற்று அதுவே கடவுள் நிலைக்கு உயர்த்தப் பெற்றிருக்கிறது.

    வைதீகக் கோட்பாடுகள் முருகனை சிவனின் பிள்ளை, நெற்றிக்கண்ணில் உதித்தவர் என்கிறது. இந்நிகழ்வும் பரிபாடலில் சுட்டப்பெறுகிறது37 பூர்வகுடி வழிபாட்டு அமைப்புக்கும் இவ்வைதீகம் சுட்டும் புராண நிகழ்வியல் கோட்பாட்டுக்கும் முரண்பாடு உடையதாய் உள்ளது. ஸ்கந்தன் என்னும் வடமொழிப் பெயர் கந்தன் என தமிழில் வழங்குவதாய் ஒரு கூற்றுண்டு. கந்தழி என்றால் பரம்பொருள் மற்றொன்று மதிலழித்தல் என்னும் பொருளுண்டு38) கந்து எனின் தெய்வம் உறையும் தூண்.39 எதிர் நாட்டினரை, வீரரை அழிப்பவர் என்னும் பொருளில் அவ்வாறான வீரருக்கு வணங்கும் மதிப்பு உருவாகி பின்னர் நிலம் சார்ந்த கடவுளாக மாற்றம்பெற்றது.

    சான்றெண் விளக்கம்:

    1.விக்கிபீடியா -பிரஜாபதி
    2. ஐங்குநுறூறு.352
    3. அகம். 231)
    4.புறம். 265.1 – 5
    5. அகம். 67
    6.தொல்.அகத்.5
    7.தமிழில் இலக்கிய வரலாறு, கா.சிவத்தம்பி, பக்.58.]
    8.சதுரகராதி.ப.158.
    9.மேலது.ப.188
    10.பொருணர்.131-132
    11.பரிபாடல்.8-81
    12.அக.1.3
    13.மேலது.59.11
    14.மேலது.98.10
    15மேலது.158.16
    16.புறம்.16.2
    17.மேலது.23.4
    18.மேலது.299.6
    19.திருமுரு.243-244
    20.மது.38
    21.மேலது.611
    22.பரிபாடல்.9.68, கலி.27.16
    23.கலி.93.26
    24.பரிபாடல்.19
    25.அகம். 59
    26. மேலது.68
    27கு.சேது.சுப்பிரமணியன்.திருமுறைத் திருத்தலத் தெய்வீக மரங்கள். முன்னுரை
    28. ச.வே.சுப்பிரமணியன்.மாணவர் தமிழ் அகராதி.ப.310
    29மேலது .310
    30.ச.இ.சொல்.அடைவு.த.பல்கலை.ப.448
    31அக.109.7-8
    32.அக.35-8
    33பட்டிணப்.79
    34.புறம்.239.20-21
    35மணிமேகலை.6.111.66-67
    36.நற்.271.11
    37.பரி.5.21-54
    38. ச.வே.சுப்பிரமணியன்.மாணவர் தமிழ் அகராதி.ப.127
    39.மேலது.ப.127

    சு.விமல்ராஜ்,
    உதவிப்பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை,
    அ.வ.அ.கல்லூரி,
    மன்னன்பந்தல்
    மயிலாடுதுறை
    அலை.8220470590
    மின்:thamizhvimal@gmail.com

    Share