Tag: வெங்கட் சாமிநாதன்

  • அஞ்சலி: க்ரியா ராமகிருஷ்ணன்

    அஞ்சலி: க்ரியா ராமகிருஷ்ணன்

    அண்ணாகண்ணன்

    தமிழ்ப் பதிப்பியலை, அகராதியியலை நவீன கண்ணோட்டத்துடன் அணுகி, தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப, புதிய பரிமாணங்களுடன் மிளிரச் செய்த க்ரியா ராமகிருஷ்ணன், இன்று (17.11.2020) மறைந்த செய்தி அறிந்து வருந்துகிறேன்.

    க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களை நான் ஓரிரு முறைகள் சந்தித்துப் பேசியிருக்கிறேன். முதல் முறை, 2004 காலக்கட்டத்தில் அமுதசுரபியில் நான் பொறுப்பில் இருந்தபோது, வெங்கட் சாமிநாதனின் கட்டுரைகளைத் தொடர்ந்து பதிப்பித்தேன். அப்போது ஒரு கூட்டத்தில் அவர், க்ரியா ராமகிருஷ்ணனை எனக்கு அறிமுகம் செய்வித்தார். க்ரியா என மெய்யெழுத்தில் தொடங்குமாறு ஏன் வைத்தீர்கள் எனக் கேட்டேன். அதுதான் அதன் உச்சரிப்பு என்றார். அப்படியானால், ராமக்ருஷ்ணன் என்றுதானே எழுத வேண்டும். அங்கு மட்டும் ஏன் கிருஷ்ணன் என எழுதுகிறீர்கள் எனக் கேட்டதாக ஞாபகம்.

    க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் சைக்கிள் உள்ளிட்ட பிறமொழிச் சொற்கள் எப்படி இடம்பெற்றன? என அதன் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய பேராசிரியர் இ.அண்ணாமலை அவர்களிடம் கேட்டேன். ஆனால், பிறகு இதற்கான தேவையைப் புரிந்துகொண்டேன். தமிழர் நாவில் புழங்கும் சொற்கள் அனைத்தையும் திரட்டித் தொகுக்கும் முயற்சியில் ராமகிருஷ்ணன், ஒரு முன்னோடி.

    க்ரியா வலைத்தளத்தையும் (https://www.crea.in) செயலியையும் அவர் உருவாக்கியிருந்தார். தமிழில் அதிக அளவு சொற்களைத் திரட்டி, சொல்வங்கி ஒன்றை அவர் வைத்திருந்தார். தமிழில் மென்பொருள் கருவிகளை உருவாக்கும் நண்பர்கள், சொற்றொகுதிகள் தேவை எனக் கேட்டபோது, விக்கிப்பீடியாவையும் க்ரியாவையும் பரிந்துரைத்துள்ளேன்.

    க்ரியா ஆண்ட்ராய்டு செயலியைத் தரவிறக்கினால் 10 முறைகள் மட்டுமே இலவசமாகத் தேட முடியும்; அதற்கு மேல் தேடுவதானால், ரூ.199 கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டிருந்தார். இதற்காக அந்தச் செயலிக்கு மிகக் குறைவான மதிப்பீடு அளித்து, அவரை வசைமாரி பொழிந்திருப்பதைக் காணும்போது வருத்தமாக உள்ளது. தமிழ் மென்பொருள்கள், தமிழ்ச் செயலிகள், தமிழுக்காக உருவாகும் தொழில்நுட்பக் கருவிகளின் வணிகச் சந்தை, மிக பலவீனமாக இருக்கிறது. இந்த இடர்களை எதிர்கொண்டே, கடந்தே தமிழுக்கும் தமிழ்கூறு நல்லுலகிற்கும் தொண்டாற்ற வேண்டியிருக்கிறது.

    புதிய சிந்தனை, புதிய ஆக்கங்கள், சமரசம் இல்லாத தரம், செம்மை ஆகியவற்றை முன்னிறுத்தி, 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொய்வின்றி உழைத்த க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களின் மறைவு, தமிழுலகிற்குப் பேரிழப்பு. அவர் என்றென்றும் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.

    அவரது முக்கியமான ஒரு நேர்காணல் இங்கே – https://tamil.asiavillenews.com

    படத்துக்கு நன்றி: ஆசியாவில்லி

    Share
  • வ. விஜயபாஸ்கரனின் சமரன் களஞ்சியம் – ஆவணமாகிவிட்ட ஒரு அரசியல் இதழின் எளிய ஆரம்பங்கள்.

    வெங்கட் சாமிநாதன்

    சரஸ்வதி என்ற பெயரில் ஒரு இலக்கிய மாதப் பத்திரிகையை, சுமார் ஐந்து அல்லது ஆறுவருட காலம் 1956 – 1961) ஆசிரியப்பொறுப்புடன் நடத்தி வந்தவர் என்றே நான் அறிந்திருந்த, வ. விஜயபாஸ்கரன், 11.5.1962 லிருந்து 3.5.64 வரை இரண்டு ஆண்டுகள், சமரன் என்ற ஒரு அரசியல் இதழையும் நடத்தி வந்திருக்கிறார். சுமார் இரண்டு வருஷங்கள். தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த கால கட்டம் அது. தமிழக அரசியலில் மாத்திரம் இல்லை. இந்திய அரசியலிலும் தான். இந்திய அரசியல் கட்சிகள் பெரும் சவால்களை எதிர்கொண்ட கால கட்டமும் அது. அவற்றின் நம்பிக்கை களுக்கும் , கொள்கைகளுக்கும் எழுந்த பெரும் சவால்கள் அவை. தேசீய தளத்திலும் சர்வ தேசீய தளத்திலுமான சவால்கள். தமிழக அரசியலிலோ எழுந்த சவால்கள் அதன் பண்பாட்டு, வரலாற்று, தார்மீக சவால்களாக அவை இருந்தன. இரண்டு தளங்களிலும் ஒரு பெரும் திருப்பு முனையாக முன்னின்ற கால கட்டம் அது.

    தேசீய தளத்தில் முன் நின்ற பெரும் சவால், சீன ஆக்கிரமிப்பும் அதன் வரலாற்றிலேயே பதிந்திருந்த ஏகாதிபத்ய முனைப்புகளும் கனவுகளும். இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளை தீர்மானிக்கும் நிபுணத்வமும் உலக வரலாற்று அறிவும் நிறைந்த பெட்டகமாக தன்னை நினைத்துக்கொண்டிருந்த நேருவுக்கு கிடைத்த பலத்த அடி. அதை சீனாவின் நயவஞ்சகமாக, துரோகமாக நேரு பிரகடனம் செய்தார். நேரு போன்ற சீனாவின் வரலாறு அறிந்த ஒரு தேசத்தை ஆளும் பொறுப்பேற்ற தலைவர்களுக்கு, அதன் ஏகாதிபத்ய குணங்களும் வல்லரசு ஆசைகளும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஏமாந்தது நேருதானே ஒழிய, சீனா நட்புத் துரோகம் செய்ததாக சொல்ல முடியாது. அது தன் வரலாற்றில் அனேக நூற்றாண்டுகளாக பதிந்திருந்த தன் தேசீய குணத்தின் படி செயல்பட்டது. எப்பொழுதெல்லாம் சீனா ஒன்றுபட்டதோ, அப்போதெல்லாம் அதன் ஆக்கிரமிப்பு குணம் வெளிப்படும். திபெத்தை விழுங்கியதிலிருந்து இன்று ஜப்பானிலிருந்து ஒரு பெரும் அரைவட்டமாக அஸ்ஸாம் வரை, பின்னும் நீண்டு லதாக் வரை அதன் ஆக்கிரமிப்பு 60 வருடங்களுக்கு மேலாக தொடர்வதைக் காணலாம். நேருவின் வரலாற்று அறிவுக்கும் வெளிநாட்டு உறவு பற்றிய பரிச்சயத்துக்கும் நேருவுடன் போட்டியிடாத, வல்லபாய் படேல், சைனா திபெத்தை ஆக்கிரமித்த அந்த ஆரம்ப கட்டத்திலேயே நேருவை எச்சரித்தும் அதை அலட்சிய செய்தவர் நேரு.

    சைனாவின் ஆக்கிரமிப்பும், அதன் வெளிக்கிளர்ந்த ஏகாதிபத்திய பேராசைகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பெரும் குழப்பத்தை உண்டாக்கியது. ஒரு வாய்ப்பாடாக அதற்கு கற்பிக்கப்பட்டிருந்த கொள்கை, ஒரு சோஷலிஸ நாட்டுக்கு ஆக்கிரமிப்பு உணர்வோ எண்ணங்கள் இருப்பது சாத்தியமே இல்லை. ஆக, சீனா ஒரு ஆக்கிரமிப்பு நாடல்ல. அது ஒரு நட்புணர்வு கொண்ட நாடு. என்று பிரசாரம் செய்தது இதைப் போன்ற ஒரு மடமையும் மூர்க்கத்தனமும் ராஜத்துவேஷமும் ஒன்று கலந்த ஒரு வெளிப்பாட்டையும் நடைமுறையையும் ஒரு அரசியல் கட்சியின் கொள்கை யாக எங்கும் காணமுடியுமா, என்றால், நாம் அன்று உலகெங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் காணமுடிந்திருக்கிறது.

    இந்த துரோக கோமாளித்தனத்தின் இன்னொரு உருவமாக, நேரு அமெரிக்காவுடன் அணி சேராது ரஷ்யாவுடன் நட்புணர்வை வளர்த்துகொண்ட காரணத்தால், ரஷ்யாவும் ஒரு புதிய வாய்ப்பாட்டை உருவாக்கிக் கொண்டது. சமயத்துக்கு ஏற்ப பேசுவது தானே ராஜதந்திரம்! ”சீனாவுடன் எங்கள் உறவு சகோதர உறவாக்கும்.. இந்தியாவுடனோ எங்கள் உறவு நட்புணர்வு” என்று ஒரு புதிய பிரகடனம் வந்தது ரஷ்யாவிடமிருந்து. ஆக, நேருவின் கண்ணையும் துடைத்தாயிற்று சீனாவுக்கும் ஓரக் கண்ணாலொரு கண் சிமிட்டலும் தந்தாயிற்று. (மார்க்ஸிஸம் ஒரு விஞ்ஞானம் – ஜ்யோதி பாசு) இந்த வாத பிரதி வாதங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் பிரதிபலித்தன.

    இந்நிலை கொஞ்ச காலம் நீடித்தது. அது வரை இந்திய கம்யுனிஸ்ட் கட்சிக்குள் வாக்கு வாதமே உள்நாட்டுச் சண்டையாக வளர்ந்து வந்தது. இந்த கால கட்டத்தில் தான் சமரன் இதழ் தொடங்கியது. அகில இந்திய தளத்தில் நடந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சி வாத விவாதங்களின் பாதிப்புகளை சமரன் இதழிலும் பார்க்கலாம். சமரன் ஒரு புறம் என்றால், தீக்கதிர் என்றொரு தமிழ் பத்திரிகை சமரனின் நிலைப்பாட்டை எதிர்த்து குரல் எழுப்பி வந்திருக்கிறது என்பதையும் அவ்வப்போது சில கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும், சீன ஆதரவுக் குரல் எழுப்பி வந்திருக்கிறார்கள் என்பதையும் சமரன் இதழில் காணலாம். இவர்கள் எல்லாம் பின்னர் பிரிந்து கம்யூனிஸ்ட் பார்ட்டி (மார்க்ஸிஸ்ட்) என்று தமக்கு பெயர் சூட்டிக்கொண்டனர். சீனாவுக்கு ரஷ்யாவுடனும் எல்லைத் தகராறு எழவே, (சீனா சகோதர நாடு, இந்தியா நட்பு நாடு என்ற வாய்ப்பாடும் ஒரு சோஷலிஸ நாடு என்றும் ஆக்கிரமிப்பு நாடாகாது என்ற வாய்ப்பாடும், கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே கூட அரசியல் செலாவணி இழந்து போயின, மறுக்கவில்லை. மௌனம் சாதித்தார்கள். அவ்வளவே.
    இவையெல்லாம் உலக தளத்திலும், அகில இந்திய தளத்திலும் நிகழும் நிகழ்ச்சிகளாயிற்றே, இதற்கு என்று தமிழில் ஒரு பத்திரிகை தொடங்குவானேன் என்றால், விஜய பாஸ்கரன், ஒரு சுதந்திர உணர்வோடு, சுய சிந்தனை கொண்ட போராளியாக, தமிழ் நாடு கம்யூனிஸ்ட் கட்சியுடன் உறவாடியவர். அந்த சித்தாந்தத்துடன் அவருக்கு ஒட்டுணர்வு உண்டு. சமரன் பத்திரிகை தொடங்கியது, அந்நாளைய தமிழக அரசியலில் தன் குரலை எழுப்பத்தான் என்றாலும், கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடக்கும் கொள்கைப் போரிலும் தன் குரலை பதியவேண்டியது முக்கியமாயிற்று. இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் சமரன் இதழ்களில் இவ்விரண்டு நிலைகளிலும் சமரனின் குரல் அழுத்தமாகப் பதிவாகியிருப்பதைப் பார்க்கலாம். அதில் பெரும் பகுதி அப்போது திராவிட முன்னேற்ற கழகத்தின் குரல், மற்ற எந்த அரசியல் கட்சியின் குரலை விட ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய காரணத்தால் அதையும் எதிர்த்து, குரல் எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. சொல்லப் போனால் தேர்தல் வரவிருக்கும் கட்டத்தில், திராவிட முன்னேற்ற கழகத்தை எதிர்த்து, குரல் எழுப்புவது தான் சமரனின் தலையாய கடமையும் ஆயிற்று.

    சரஸ்வதி என்று ஒரு வித்தியாசமான இலக்கிய மாத இதழை நடத்தி வந்தார். அது முதன் முறையாக, தமிழகத்திற்கும் இலங்கைத் தமிழருக்கும் ஒரு பாலமாக இருந்து, ஒரு சீரிய இலக்கிய தளத்தில் இரு நாட்டுத் தமிழ் இலக்கிய பரிமாற்றத்துக்கு வழி அமைத்திருந்தது. அதில் க.நா.சுப்பிரமணியத்தின் ”திருக்குறள் இலக்கியமல்ல” என்ற பிரகடனத்தையும் படிக்கலாம். சிதம்பர ரகுநாதன் சாகித்ய அகாடமியின் தமிழ் இலக்கிய பரிசுகளின் அவலத்தை எதிர்த்த கட்டுரையையும் படிக்கலாம். மௌனி வெகு கால இடைவெளிக்குப் பிறகு எழுதிய சிறுகதை ஒன்றையும் படிக்கலாம். அது கூட காணப் பொறுக்காத இலங்கை பேராசிரியர் ஏ. ஜெ. கனகரட்னா, மௌனி வழிபாடு என்று காலம் தாழ்த்தாது உடன் எழுதி அனுப்பிய கண்டனக் குரலுக்கும் அதில் இடம் இருந்தது. இப்படி இடது சாரி ஆதரவாளர் ஒருவர், எல்லோருக்கும் இடம் தந்து ஒரு பத்திரிகை நடத்துவதை எப்படி, எந்த நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கீகரிக்க முடியும்? அதுவும் தமிழ் நாட்டிலா? சுதந்திரமாக இயங்கும் ஒரு இலக்கிய பத்திரிகையைப் பொறுத்துக்கொள்ள முடியாத கட்சித் தலைவர், கம்பனையும் பாரதியையும் போற்றி தமிழ்நாடு முழுதும் முழக்கமிட்டுக்கொண்டிருந்த ஜீவாவாக இருந்தது ஒரு முரண் தான். சரஸ்வதி கடை மூட வைப்பதுதான் உடன் நடந்தது. ஜன சக்தி பிரஸ் சரஸ்வதியை அச்சிடாமல் தாமதம் செய்தது. சரஸ்வதி காலி செய்த இடத்தில், கட்சி சார்பில், ஜீவானந்தத்தின் ஆசியுடன், தாமரை என்று ஒரு புதிய பத்திரிகை வெளிவரத் தொடங்கியது. இது எங்கும் எந்த கம்யூனிஸ்ட் கட்சியிலும் நடப்பது தான். விஜய பாஸ்கரனின் சரஸ்வதி இதழை எப்படி ஜீவா ஆறு வருடங்கள் பொறுத்திருந்தார் என்னும் அதிசயம் தான் ஆராயச்சிக்கான விஷயம். இந்த தகவலையும் நாம் எந்த வம்புக்கும் சச்சரவுக்கும் போகாத நல்ல பிள்ளையாகவே எண்பத்து சொச்சம் ஆண்டுகள் வாழ்ந்த வல்லிக்கண்ணனிடமிருந்து தான் தெரிந்து கொள்ள முடிகிறது. சுவர் மேல் பூனையாக கண்மூடி சுகமாய்த் தியானித்து இருந்த அவர் தான் தன் வாழ்விலேயே முதல் தடவையாக கண் திறந்து பார்த்ததும், சுவரை விட்டு ஒரு பக்கமாக கீழே குதித்து, இதை வெளிக்கொணர்கிறார். எந்த கம்யூனிஸ்ட் கட்சி தொண்டரோ தலைவரோவும் அல்ல. நம்ப முடிகிறதா? ஆனால் நடந்திருக்கிறது. வல்லிக்கண்ணனுக்கு நம் நன்றி அரசியலிலும் சரி, இலக்கியத்திலும் சரி கோமாளிகள் இருக்கும் வரை விடம்பன நிகழ்வுகளுக்கு பஞ்சம் இருப்பதில்லை சரஸ்வதி மூச்சடைக்கப்பட்டதும், விஜய பாஸ்கரனுக்கு அன்றிருந்த அரசியல் சூழலில், தன் பார்வையிலான அரசியல் வெளிப்பாட்டுக்கு என்றே ஒரு இதழ் வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. சமரன் பிறந்தது. தமிழக அரசியல் களம் இதற்கு முன் என்றும் இல்லாதவாறு பல வேறு சக்திகளின் மோதல் தளமாக மாறியிருந்தது. அனேகமாக எல்லாம் சுயநலத்தையும் தன் தனிமனித அக்கறைகளையுமே, அரசியல் கொள்கைகளாக முன்னிறுத்திய தலைவர்களின், கட்சிகளின் மோதலாக அது இருந்தது.

    சமரன் பத்திரிகையின் இத்தொகுப்பைப் பார்க்கும் போது, தம்மை முற்றிலும் ஒரு அரசியல் கட்சிக்கு தொண்டனாக பாவித்துக் கொள்ளாதவர்களும் அரசியல் தவிர நவீன இலக்கியம், மாற்று சினிமா, கம்பன் போன்று வேறு சீரிய அக்கறைகள் கொண்டவர்களுமே அதிகம் எழுதி யிருக்கிறார்கள் என்று தெரிய வரும். ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், எஸ் ராமகிருஷ்ணன். பின் ஆசிரியருக்குள்ள உரிமையில், தன் பெயரைக் குறிப்பிட்டும், குறிப்பிடாமலும், வ.விஜயபாஸ்கரனும், பின், பால தண்டாயுதம், தா. பாண்டியன் போன்ற கட்சி பிரமுகர்களையும் கூட சமரனின் பக்கங்களில் காணலாம்.

    ஒரு கால கட்ட அரசியல் நெருக்கடி, கம்யூனிஸ்ட் கட்சியில் வெடித்த கருத்து மோதல்கள், சீன, ரஷ்ய, விசுவாச மோதல்கள், கட்சி சார்ந்த நெருக்கடி என்பதற்கும் மேலாக, அம்மோதல்கள், இந்திய இறையான்மைக்கே, கட்சி விசுவாசம் தம் நாட்டுப் பற்றைக் கறைபடுத்தும் விசுவாசமாக மாறிவிடும் போது எழும் நெருக்கடிகள், இவற்றினிடையே கம்யூனிஸ்ட் கட்சியின் எந்த பிரிவுக்கும் தன்னை இழந்து விடாது, பொதுவான இடது சாரி சித்தாந்த ஈடுபாட்டையும் விடாது தன் சுயாதீனத்தையும் விடாது வாழ்வேண்டிய நிர்ப்பந்தத்தில் பிறந்தது சமரன் என்று தெரிகிறது. அந்த காலகட்டம் இன்னொரு பரிமாணத்தையும் பெற்றிருந்தது. அந்தப் பரிமாணம் தான் இப்போது தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

    அது தமிழக அரசியலில் நிகழ்ந்து வந்த தீவிர குணமாற்றம். அது ஏதோ ஒரு பெரிய புரட்சிகர மாற்றமாக, பேசப்பட்டு வந்தது அதற்குக் காரணமானவர் களால். அதன் ஆரம்பங்களில் கடந்த நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில், அதன் பின் அதன் வளர்ச்சியின் போதும், அதை அலட்சியத்துடன் புறமொதுக்கி வந்தவர்கள், இந்த அலட்சியத்தாலேயே அது எவ்வித தீவிர எதிர்ப்பும் இன்றி வளர்ந்து பலம் பெற்று ஒரு தரங்கெட்ட இயக்கமாக தோற்றம் பெறத்தொடங்கியதும், விஷக் கிருமிகள் என்று வெளிப்படையாக அதன் குணத்தைச் சொன்னவர் பக்தவத்சலம் தான். அவர் சொல்லக் காரணம் அவர் அக்கிருமிகளின் நேரடித் தாக்குதலுக்கு ஆளான போதுதான். அப்போதும் அவர் கட்சி மாச்சரியத்தால் சொன்னதாகவே கருதப்பட்டது. தமிழ் நாட்டின் மற்ற அரசியல் தலைமைகள் அப்படிச் சொல்லவில்லை. பத்திரிகைகள், புத்திஜீவிகள் அப்படிச் சொல்லவில்லை. இந்த அலட்சியத்தின் காரணமாக விஷக் கிருமிகள் என்று சரியாக கணிக்கப்பட்ட திராவிட இயக்கத்தினருக்கு ஒரு அரசியல் மதிப்பும், புத்தி ஜீவிகளின் ஒரு கணிசமான பகுதியினரிடையே மதிப்பும் ஏற்பட்டது. பெரும்பாலான பொது மக்களிடையே ஒரு வியப்பு. மாறுதலுக்கான ஒரு சாத்தியப்பாடு என்றும் ஒரு கருத்து நிலவியது. இது தான் ஒரு பரிதாபகரமான காட்சி. காரணம், என்றும் தமிழகத்தில் அறிவு ஜீவிகள் மத்தியில் நிலவும், என்ன ஆனாலும் தற்காப்பு யுக்தியாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் குணம்.

    நான் திராவிட இயக்கத்தின் வாழ்வை என் பள்ளிப் பருவ காலத்திலிருந்து பார்த்து வருகிறேன். அதன் சிந்தனையும் செயலும், பேச்சும் எழுத்தும் தரங்கெட்டவை. அதன் பெரியார் என்று துதிக்கப்படும் தலைமையிலிருந்து அடிமட்ட தொண்டன் வரை, அண்ணாதுரை அங்கு நான் கணட ஒரே விதிவிலக்கு. அவர் பேச்சில் தான் அலங்காரமும், மென்மையும், நாகரீகமும் இருக்குமே தவிர அவர் சொல்லவரும் கருத்துக்கள் அவர் சார்ந்த இயக்கத்தினரின் தரம் மீறீயதில்லை. இதைக் கேள்வி கேட்டவர் அப்போது யாருமில்லை. காரணம் அவரது மென்மையான சுபாவம். தளபதியிலிருந்து, அறிஞராகி, பின்னர் பேரறிஞருமாகி பெற்ற ஒளிவட்டம். இதற்கும் மேல்,

    காரணங்கள் என்று நான் கருதுவது ”நமக்கேன் வம்பு நாகரீகமற்றுப் பேசும் இவர்களிடம் இன்னும் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டுமா? என்று வாய் பொத்தி இருக்கும் சுபாவம். பின் காற்று எப்படி வீசுமோ, அதற்கு ஏற்ப நடந்து கொள்ளலாம் என்ற குணம். இது தமிழ்க் குணம் என்றே சொல்லக் கூடும் அளவு எல்லாத் தளங்களிலும் காணக் கிடைப்பது. ஒரு அலட்சியம் ”இவங்களையெல்லாம் மதிக்கணுமா என்ன?” எனறு மூக்கு வானை நோக்கும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
    இந்த சுபாவங்களுக்கு திராவிட இயக்கத்தினரும், தொண்டனிலிருந்து தலைமைகள் வரை, விலக்கல்ல. சந்தர்ப்பத்திற்கேற்ப இவர்கள் காலில் விழும் வேகம் தீவிரமடையும். சடேரென்று மூக்கு தரையைத் தொடும். குனியும் முதுகின் வளைவும் இன்னமும் குறுகும். தலை அவர்கள் பாதத்தைத் தொடும். இது நெடுங்காலப் பயிற்சியில் கிட்டிய சௌபாக்கியம். .

    மிக மிக தரங்கெட்ட அரசியல் சம்வாதம், வாழ்க்கை இவர்களது. ஆயினும், எதிர்ப்பே இல்லாத காரணத்தால், தடையில்லாத வளர்ச்சி பெற்றவர்கள் திராவிட இயக்கத்தினர். காட்டு விளைச்சல் இது.

    இதன் ஆரம்பங்களைப் பற்றியோ, பின் வந்த வருடங்களில் இவர்களது அரசியல் வாழ்க்கையின் குணம் பற்றியோ இன்றைய தலைமுறை யினருக்கும் சற்று மூத்த தலைமுறையினருக்கும் ஏதும் தெரியாது அது பற்றி தெரிந்து கொள்ள முயல்பவர்களுக்கு அன்றைய பத்திரிகைகள் ஏதும் சொல்லாது. இவர்களது அன்றைய மேடைப் பேச்சின் தரம் பற்றிச் சொல்லும் பத்திரிகைகளோ, அன்றைய விமர்சனங்கள் கொண்ட எழுத்துக்களோ ஏதும் கிடைக்காது. அது பற்றித் தேடச் சென்றால், இவர்கள் தம்மையே புகழ்ந்து எழுதிக்கொள்ளும் பண்பை வளர்த்துக் கொண்ட இயக்கத்தினரின் பத்திரிகைகள் தான் கிடைக்கும். இது தமிழ் நாட்டின் அறிவு ஜீவிகளின் நிலை. என் பள்ளிப் பருவத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் ரமணர் வெகு நாட்கள் நோய்வாய்ப்பட்டு இறந்தார். இது பற்றி விடுதலை பத்திரிகை எழுதுகிறது. “அவாள் பகவான் புழுத்துச் செத்தார்” என்று. இக் கீழ்த்தர வெறுப்பு உமிழும் மன நிலை கொண்ட இயக்கம் என்றோ, இது பற்றியோ விடுதலை தவிர வேறு எந்த தமிழ்ப் பத்திரிகையிலும் செய்தி இராது. இது ஒரு சிலரின் நினைவில் தான் இருக்குமே தவிர பரவலாக அச்சில் காணமுடியாத.என் நினைவிலிருந்து இதை எழுதுகிறேன். ரமணர் திராவிட கழகங்களின் அரசியலையோ அதன் தலைமைகளையோ எவ்விதத்திலும் பாதித்ததாகவோ அது பற்றி அவர் கவலைப்பட்டதாகவோ ஏதும் இல்லை. விடுதலை பத்திரிகைக்கு அவரிடம் இவ்வளவு வன்மம் இருக்கக் காரணம் அவர் பிராமணர், எங்கோ ஒரு மூலையில் ஒதுங்கி யிருந்த போதிலும் அவர் காலத்தில் அவர் தனித்த ஆஸ்ரம வாழ்க்கையை மீறி அவர் தமிழக எல்லையையும் மீறி புகழ் பெற்று விட்டது கண்ட வெறுப்புதான் இத்தகைய கீழ்த்தர வெளிப்பாடாகியுள்ளது. இந்த அறிவுக்கு ஏலாத மனப்போக்கு திராவிட ப்ராண்ட் பகுத்தறிவு அரசியலுக்கு, அடித்தளமான ஒன்று. திராவிட அரசியலை ஆராயும் ஒருவருக்கு இந்த நிகழ்வின் சான்று எங்கு கிடைக்கும்? எந்த தமிழ் நாட்டு பத்திரிகையிலும் ஆங்கிலமோ தமிழோ எதிலும் கிடைக்காது. ஒன்று நாகரீகமற்றவர்களோடு விவகாரம் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற வாழ்க்கை நோக்கு. இரண்டு இது பற்றி எழுதவோ, பேசவோ தகுதியற்ற ஒரு நிகழ்வு இது என்ற பார்வை. இப்படி எத்தனையோ விஷயங்கள், நம் வாழ்க்கை தர்மங்களையும் தனிப்பட்ட ஒதுங்கி வாழும் நியதியிலும் இன்று நம் முன் பொன்னாடை போர்த்தி உலவும் தலைமைகளின் நேற்றைய படு பாதாள அவலங்கள் மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, இல்லாதனவாகிவிடுகின்றன. இந்த அவலங்கள் நிகழ்ந்த காலத்தில் அவை அவலங்கள் என உணர்த்தப்பட்டு, இன்று அவை பொன்னாடை போர்த்தி உலா வரும்போது, இது பொன்னாடை அல்ல, உள்ளிருப்பது அவலம் என்பது இன்று காணும்போதும் அது நிதர்சனமாக வேண்டும்

    இத்தகைய பதிவுகளை, அன்று ஒரு அரசியல் போராட்டத்தின் நிர்ப்பந்தமாக சமரன் பத்திரிகை தன் பக்கங்களில் தந்திருந்த பதிலடிகளில் காணலாம். ஆனால் அவை வெளிவந்த அன்றோடு பலசரக்குக் கடைகளில் பொட்டலமாக மடிக்கப்பட்டு காலத்தில் கரைந்திருக்க்கும். அவையெல்லாம் இன்று தொகுக்கப்பட்டு இன்று மறு ஜீவனம் பெற்று நமக்குத் தரப்படும் போது, தான் நினைத்த போதெல்லாம் குல்லுக பட்டர் என்று கேலிசெய்த ஒரு தலைவரை இன்று அரசியல் சாணக்கியர் என்று தானும், தன் தலைவர் அறிஞர் அண்ணாவும், தன் கட்சித் தொண்டர்களும் போற்றிப் புகழ வேண்டி யிருக்கிறதே. இதை என்ன முரசொலி பத்திரிகையிலா காணமுடியும்? பதிவாகியிருக்கிறதா என்று தேடினாலும் அது கிடைக்காது. அந்த சரித்திரத்தைப் பற்றியெல்லாம், எதைச் சொல்லலாம், எதை மறைக்கலாம், எதை புதிதாக கற்பித்து இன்றைய தேவைக்கு உருவாக்கலாம் என்பதை தலைவரே தீர்மானித்து தன் வரலாற்றை எழுதித் தருவார். அது தான் அதிகார பூர்வமானது. மற்றதெல்லாம் கைபர் கணவாய் வழி வந்த பார்ப்பன சதி வேலைகள்.

    சமரன் வெளிவந்த அந்த கால கட்டத்தில் தான், திமுக பதவி வேட்டையாடத் தொடங்கிய காலம். முதலில் முனிசிபல் பதவிகள். பதவி வேட்டையில் தன் தந்திரோபாயங்களை, அதன் பலன்களை அனுபவிக்கக் கற்கத் தொடங்கிய காலம். அப்போது மிகப் பிரபலமான மந்திர வாக்கியம் திமுகவுக்கே ப்ராண்ட் ஆகிப்போன மந்திர வாக்கியம்” காட்டுவதைக் காட்டி, பெறுவதைப் பெற்ற” யுத்த தந்திரம். இப்படிச் சூளுரைத்து வெற்றியும் பெற்றவர். அண்ணாதுரை யின் பாராட்டையும் பெற்றவர் திருக்குவளைக் காரர்.க் இந்த அசாத்திய வீரச் செயலுக்காகவே அண்ணாதுரை ஒரு மோதிரமும் பரிசளித்தார் என்று சொல்லப்பட்டது. அது கருணாநிதியே வாங்கி அண்ணவிடம் கொடுத்து மேடையில் சூட்டிக்கொண்டது என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். “கருணாநிதியே வாங்கி” என்பதில் தான் சந்தேகம் வருகிறது.

    ஆக, அன்று தொடங்கியது தான் ஒரு மரபாக, வாழையடி வாழையாக இன்றும் தொடர்ந்து காப்பாற்றப்படுகிறது. 2-ஜி, கலைஞர் டிவி-க்கு 200 கோடி என்று. இடைபட்ட காலங்களில் அது சர்க்காரியா கமிஷன் என்றெல்லாம் பெயர் பெறும். அது ஒரு நீண்ட தொடர்ந்த இடைவெளி இல்லாத வரலாறு. இதையெல்லாம் முரசொலியிலோ, “உடன் பிறப்பே” கடிதங்களிலோ காணமுடியாது. அது வேற்று மொழியில் வந்திருந்தாலும் வந்திருக்கலாம். வேற்று மொழியில் என்றால்….அது சமயத்துக்கு, அவ்வப்போதைய பதவி வேட்கைக்கு ஏற்ப, தற்காப்புக்கு ஏற்ப மொழி மாற்றம் பெறும்.
    சமரன் இதழ் மேற்கோள் காட்டும் ஒரு முரசொலி துணுக்கு:

    கேள்வி: நாட்டுப் பிரிவினையைத் தடுக்கும் சட்டம் வந்தால் தி.மு.கழகம் தன் விடுதலைக் கொள்கையை விட்டு விடுமா?
    பதில்: வரப் போகிற சட்டம் இராணுவ பலத்தோடு வந்தாலும் சரி, பீரங்கி சகிதம் வந்தாலும் சரி, அணுகுண்டுகளை மடியில் கட்டிக்கொண்டு வந்தாலும் சரி, எங்கள் குடும்பங்கள், குழந்தை குட்டிகள் கூண்டோடு அழிய நேரிட்டாலும் சரி, “திராவிட நாடு திராவிடருக்கே” என்ற முழக்கத்தை, வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி,ஊருக்கு ஊர் ஒலித்தே தீருவோம்.
    கேள்வி: கட்சியைத் தடை செய்தால் எத்தனை பேர் சிறை செல்லக் கூடும்?

    பதில்: அப்படிக் கேட்காதே. எத்தனை சிறைச் சாலைகள் புதிதாகக் கட்ட வேண்டியிருக்கும் என்று கேள்.

    முரசொலி 19.8.61

    எப்போதும் இவருக்கு கைவருவது தமிழ் சினிமாத்தனமான வீரவசனம் தான். 14 வயதில் தொடங்கியதாக மு.க. சொல்லும் கையெழுத்துப் பத்திரிகை தொடங்கி, குமாரி பராசக்தி, மந்திரி எல்லாம் கடந்து நேற்றைய முரசொலி யில் அவரே எழுதி பதில் சொல்லிக்கொள்ளும் கேள்வி பதில், பின் உடன் பிறப்புக்கு எழுதும் கடிதம் வரை.
    அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்ற வசனத்தின் இன்னொரு மொழி மாற்றம், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி. இதன் இன்னோரு வடிவம், “நேருவென் மகளே வருக, நிலையான ஆட்சி தருக”. இது தன் முதன் மந்திரி பதவியைக் காப்பாற்றிக்கொள்ள.காட்டுவதைக் காட்டி, பெறுவதைப் பெறும் மாமந்திரத்துக்கு கருணாநிதியின் இன்னொரு விளக்க உரையாகவும் கொள்ளலாம்.

    இந்த வீரவசனங்கள் கேலிப்பொருளாகியது சமரன் இருந்த காலகட்டத்தில் தான். இதற்கு சில வருடங்க்ள் சற்று முன்னும், சிலவருடங்கள் பின்னும். சமரன் இன்னம் சற்றுக்காலம் முன்னர் தோன்றி, இன்னம் சற்றுக்காலம் 1965-க்கு பின்னரும் நீடித்திருந்தால் இந்த திராவிட நாடு காமெடியும் முழுதாக பதிவாகியிருக்கும். இருப்பினும் அவ்வப்போது இத்தலைமைகள் வெளியிட்ட கருத்துக்கள் சமரனில் காணக் கிடைக்கும். முதலில் திராவிடர் யார்? திராவிட நாடு? எது என்பதை விளக்குவதிலேயே தவித்துப் போவது தெரிகிறது. இந்த கருத்துக்கள் எங்கேயோ பிறப்பெடுத்தவை. புழு குளவியான கதை தான். பதவி வேட்டையில் பிறந்த பொறாமையில் வெள்ளைக்காரனுக்கு அடிமை சேவகம். பிராமண துவேஷம். ஒதுக்கீடு. அடுத்து பிராமண துவேஷம் தந்த சுய மரியாதை இயக்கம்.. வெள்ளைக்காரனுக்கு சேவகம் செய்துகொண்டே சுயமரியாதையை காப்பது எப்படி? பிராமண எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு என்று வர்ணம் பூசப்பட்டது. பின்னர் நிறையப் படிதத வரலாறு தெரிந்த அண்ணாவின் வாக்கு வளமை பெரியாரை ஈர்க்க, திராவிட நாடு என்ற கருத்தும், கைபர் கணவாய் வழி ஆரியர் என்ற கோஷமும், சூத்திரர் எல்லாம் திராவிடர் என்றும், திராவிட நாடு என்ற கோஷமும் ஒரு சேர ஒரு மாநாட்டில் பிறந்தது பெரியாருக்கு பிராமணன் சூத்திரன் தான் தெரியும். அவர் எங்கே திராவிடனையும் கைபர் கணவாயையும் கண்டார்? அவருக்கு சென்னை மாகாணாம் தான் திராவிட நாடு. அதற்குத் தான் ஜின்னாவிடம் போனார். வெள்ளையனிடம் சென்னை மாகாணத்தை விட்டுப் போகாதே. ஆரிய வலையில் நாங்கள் விழுந்து விடுவோம். என்று சரணாகதி. மொழி வழி நாட்டின் சீரமைப்பு ஏற்பட்டதும், நான்கு திராவிட மொழி பேசும் பிரதேசங்கள் தான் திராவிட நாடு என்று சொன்னார் அண்ணா. (கால்ட் வெல்லுக்கு நன்றி) கேரளா, கர்நாடகா, ஆந்திராவுக்குத் தெரியாமலேயே திமுக திராவிட நாடு வரைபடம் வரைந்து கொண்டது, கோமாளித் தனம் இல்லையா? அன்றிலிருந்து இன்று வரை மற்ற திராவிடர்களுக்கு தமிக திராவிடர்களோடு சண்டை. காவிரி, முல்லைப் பெரியாறு கிருஷ்ணா நதி எல்லாம் நினைவுக்கு வரும். இந்த வரை படம் வரைந்த திமுக வுக்கே இதில் உடன்பாடு இல்லை. ராஜாஜி இந்த நான்கு மாநிலங்களையும் ஒன்றாக்கி தக்ஷிணபிரதேசம் என்று ஒன்றாக்கிவிடலாம் (இது தானே அன்ணா வரைந்த திராவிட நாடு!) என்று சொன்னதற்கு தீவிர எதிர்ப்பு “அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு” என்று கோஷமிட்டவர்களுக்கு அதில் இஷ்டமில்லை. காரணம் சொல்லவில்லை. கூத்து தானே.

    இப்படித்தான் திமுக வினதும், பெரியாரினதும் ஒவ்வொரு கோஷமும் பொய்மையில் தோய்ந்து ஊறியவை. கோஷம் சொல்வது ஒன்று. அதன் பின் சொல்லாது மறைக்கப்பட்டிருக்கும் அவர்களது ஆசை வேறாக இருக்கும்.1925 வரை ஈ.வே.ரா நாத்திகர் இல்லை. குடியரசு அலுவலகம் துவக்க விழாவில், பிறந்த நாளிலிருந்து நாத்திகராக இருந்த தாகச் சொல்லப்படும் பகுத்தறிவுப் பகலவன் பேசுகிறார்:”

    “இப்பத்திரிகாலயத்தை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலை பெற, மற்ற பத்திரிகைகளிடமுள்ள குறையாதுமின்றிச் செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசிர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டிக்கொள்கிறேன்.” (திருப்பாதிரிப்புலியூர் ஞானிகள் மடம் ஸ்ரீல ஸ்ரீ சிவசண்முகம் மெய்ஞான சிவாச்சாரி சுவாமிகளின் ஆசீர்வாதத்தைத் தான் பெரியார் வேண்டுகிறார்.

    பிராமண வெறுப்பே சாதி ஒழிப்பாகக் கண்ட ஞானம் பிறந்தது எப்போது?

    பிட்டி தியாகராஜ செட்டியார் இறந்ததும் பெரியார் இரங்கல் எழுதுகிறார்”

    “”அரசியல் உலகில் அப்பெரியாருக்கும் எனக்கும் உள்ள வட துருவம், தென் துருவமெனில் அது குன்றக் கூறலாகும். நம் தமிழ் நாட்டின் தவப்பேற்றின் குறைவினால் பாப்பனர் அல்லாதார் கூட்டம் ஒன்று கண்டார். அத்தகைய கூட்டம் ஒன்று காணாது, காங்கிரஸ் வழி நின்று தேசத் தொண்டாற்ற வந்திருப்பாராயின், நமது நாட்டில் நிலமை இன்று வேறு விதமாகத் தோன்றும் என்பது எனது கொள்கை.”

    இதுவும் 1925 பெரியார். குடியரசு இதழில்.

    ஒரு சில இதழ்களுக்குப் பிறகு, முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த பாரதியார் படமும் கவிதை வரிகளும் காணால் போயின. ஏன்? பெரியார் நாத்திகரானார். கடவுள் இல்லவே இல்லை என்று கண்டார். பார்ப்பனர் துவேஷத்துக்குரியவர் ஆயினர். அவர்க்ள் இன்னும் கைபர் கணவாய் வழி வரவில்லை. அதற்கு இன்ன்ம் கொஞ்ச் காலம் காத்திருக்க வேண்டும்.
    இந்தக் கூத்தெல்லாம் பகுத்தறிவுப் பகலவனதும், பேரறிஞர் அண்ணாதுரை யினதும் திமுகவின் பகுத்தறிவுகள் யாரும் அண்ணாவையோ, பெரியாரையோ கேள்வி கேட்டதில்லை. இந்தக் கூத்து என்றிலிருந்து? என்று.

    திமுக பிரிந்து தேர்தலில் நிற்பது என்று முடிவு செய்ததும், அவரை எதிர்த்து பிரசாரம் செய்தது பெரியார் தான். அவர் தேர்தலில் பிரசாரம் செய்தது பிராமண வேட்பாளருக்காக. திமுகவை எதிர்த்து.

    இந்தப் பெரியாரும், அண்ணாவும் தான், கருணாநிதி முதன் மந்திரியாக இருக்கும் போதெல்லாம் அவரை தூங்க விடுவதில்லை. தினம் கனவில் வந்து அவரது முடிவுகளுக்கெல்லாம் வழிகாட்டுவார்கள். இவரைப் பீடித்திருப்பதும் திராவிட கழக ப்ராண்ட் பகுத்தறிவு தான். இன்று வரை கோபால புரம் குடும்பத்தின் மூன்று தலைமுறையினர் யாரும் எது பற்றியும் பதட்டம் நேரும்போதெல்லாம் கோவிலுக்கு சென்று அம்மனை வேண்டிக்கொள்ளாது இருப்பதில்லை. அம்மன் எதுக்கு இருக்கா? வேட்பாளர் மனு பதிவு செய்ய, தேர்தலில் வெற்றி பெற, ஊழல் வழக்குகளிலிருந்து காப்பாற்ற, இதை விட வேறு என்ன வேலை அந்த அம்மனுக்கு? இது முரசொலியில் எங்காவது பதிவாகுமோ, இல்லை கேள்வி ஒன்றை தானா கேட்டு பதில் தந்திருப்பாரோ தெரியாது.

    ஆனால், இந்த இரண்டு சொச்சம் வருஷங்களில், சமரன் இருந்த காலத்தில், செய்திகளில் சிக்கும் விஷயங்கள் சமரனில் பதிவாகியுள்ளன. அவற்றைப் படிக்கும் போது முன்னும் பின்னுமான பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் சமீபத்திய இரண்டு தலைமுறையினருக்கு, இவை ஏதும் தெரிந்திராது. இன்று திமுக தலைமையின் சுய பிரதாப தலைமைகளும் இவற்றைப் பற்றிப் பேசாது. தொண்டர்களும் ஏதோ செவி வழி செய்தி கேட்டிருந்தாலும் வாய் திறக்க மாட்டார்கள்.

    அது பற்றியெல்லாம், அன்று பத்திரிகைகளோ,மற்ற கட்சித் தலைவர்களோ பேசாத விஷயங்களை சமரன் தான் பேசியது. ஆனால் அதற்கு முந்திய, பிந்திய விஷயங்களை யார் நினைவு கொள்வார்கள்? யாரும் பேசினால் யார் ஆமாம் என்று ஒத்துக்கொள்வார்கள்.

    பகுத்தறிவுப் பகலவன், சாதியை ஒழிக்க வந்த பெரியார், “இப்போ பறச்சிகள் எல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சுட்டாளுங்க. பின்னே துணிப்பஞ்சம் வராதாய்யா? என்று கேட்டதை எந்த கழக தலைமையோ தொண்டனோ கேள்வி கேட்பான். திருமாவலவன் கேட்பாரா? அன்று சமரன் இல்லை. மா.இளைய பெருமாள் பெரியாரிடம்,” கழிவறைகளை மனிதரே சுத்தம் செய்யும் அவலம் நீங்கவேண்டும்.” என்று சொல்ல “இவங்க தான் இதுநாள் வரைக்கு செஞ்சிட்டு வராங்க. இவங்க செய்யாட்டி வேறெ யார் செய்வாங்க. நீங்களே சொல்லுங்க” ன்னு பகுத்தறிவுப் பகலவன் பதில் சொன்னாராம்.

    “ஆச்சாரியார் என் நண்பர்தான்.ஆனா அவர் பாப்பானாச்சே. அவர் பாப்பானுக்கு நல்லது செய்வாரா, நமக்கு நல்லது செய்வாரா? என்று கேட்ட பகுத்தறிவுப் பகலவன், மணி அம்மையைக் கல்யாணம் செய்துகொள்ளும் தீர்மானத்தோடு, அந்த பாப்பானுக்கே சாதகமாகச் செயல்படும் ஆச்சாரியாரை ரகசியமாகப் போய் ஆலோசனை செய்வானேன்? யாரும் கேட்டார்களா? அண்ணா கேட்டார். ஏன் அவரிடம் போனீர்கள்? என்று கேட்கவில்லை. என்ன பேசினீர்கள்? என்று தான் கெட்டார். அடுத்து சில வருஷங்களில், அண்ணாவே குல்லுக பட்டர், மூதறிஞர், அரசியல் சாணக்கியர் என்று மாறி மாறி பட்டங்கள் கொடுக்கப்படும் ஆச்சாரியரோடு அணி சேர விருந்தார். யாரும் திமுக வில் இந்த சரணாகதி ஏன் என்று கேட்டார்களா? திமுக வை விடுங்கள். ஹிந்து, சுதேசமித்திரன், முரசொலி?

    சரி, கட்சிப் பணத்துக்குத் தான் ஏற்பாடு, கல்யாண ஆசை இல்லை என்றால், 26 வயசுப் பெண்ணை 70 வயசு கணவனாக நீங்கள் மணம் செய்து, அவளது அப்பருவ வாழ்க்கையைக் கெடுக்கிறீர்களே? நீங்கள் பேசிய பெண்ணுரிமை என்ன ஆகிறது? ஈரோட்டில் நீங்கள் விளையாடிய பால்ய கால விளையாட்டையெல்லாம் நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு ஒரு நியாயம், மணி அம்மைக்கு ஒரு நியாயமா?” என்று கருணாநிதி கேட்கலாமல்லவா? கேட்க வில்லை.இதுபற்றி யாருக்கும் அன்று கவலை எழவே இல்லை. அவர்கள் எதிர்ப்பு எல்லாம் திராவிட இயக்கம் என்னாவது? என்று தான். இழந்த அந்தப் பதவியைப் பெறத் தானே திமுக என்று ஒரு தனிக்கட்சி. அவர்கள் தான் தனியாகப் போய்விட்டார்கள். பெரியாரையே அண்டியிருந்த வீரமணி ஏன் கேட்கவில்லை?

    இந்தக் கட்டத்தில் அண்ணாவிடம் கொண்ட கோபம், அன்ணா தன்னைக் கொல்ல சதி செய்தார் என்ற பழி வேறு. இதை தாங்க முடியாத அண்ணா வழக்குத் தொடுக்க, பெரியார்,பகுத்தறிவுப் பகலவன் மன்னிப்புக் கேட்டு தன் பழியை வாபஸ் பெற்றார் என்பதை எந்த திக, திமுக, ஒப்புக் கொள்ளும்?

    இந்தப் பெரியார் கருணாநிதியின் கனவில் அடிக்கடி வந்த காரணத்தாலோ என்னவோ, வை. கோ பேரிலும் தன்னை கொல்ல சதி செய்ததாகவோ என்னவோ ஒரு கட்டத்தில், கருணாநிதி குற்றம் சாட்டினார். அவர் தான் எப்போதும் பெரியார் வழி நடப்பதாகச் சொல்பவராயிற்றே. அந்தந்த சமயத்துக்கேற்ப கருணாநிதிக்கு கற்பனைகள் நிறையப் பெருகும்.
    திமுக தேர்தலில் நின்றபோது, பாப்பானையே ஆதரித்து திமுகவுக்கு எதிராக பெரியார் பிரசாரம் செய்தது ஏன்? அன்று பெரியார் பேச்சில் எவ்வளவு ஆத்திரம், ஆத்திரத்தில் பிறந்த வசைகள். இதைப் போல ஒரு துரோகத்தை ஒரு பகுத்தறிவுப் பகலவன், ஒரு சாதி எதிர்ப்பாளன் செய்யலாமா?

    இந்த மாதிரி குணமும் பொறாமையும் எரிச்சலும் பட்டு திராவிட இயக்கத்துக்கு எதிராக செயபட்ட, இந்த பெரியார் ஏன் கருணாநிதியின் கனவில் அடிக்கடி வந்து அரசுப் பணியில் தலையிடுகிறார்? அதை ஏன் கலைஞர் பக்தியோடு கேட்டுச் செயல்படுகிறார்.

    இதை யார் அக்காலங்களில் கேட்டார்கள்? கேட்பதில்லை. ஏன்? 1971 லிருந்து தமிழ் நாட்டில் இருந்த காங்கிரஸும் சரி, மற்ற சில்லரைக் கட்சிகளும் சரி, கம்யூனிஸ்ட்டுகளையும் சேர்த்து, திமுக, அல்லது அதிமுக வை அண்டியே வாய் பொத்தி,சிரம் தாழ்த்தி, சேவக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். ஏதோ ஒருவரை மாறி மாறி சேவகம் புரிந்தார்கள். வாய் திறக்க மாட்டார்கள். காற்றோடு போகும் சொல்லே வெளிவராத போது, எழுத்திலா பதிவார்கள்? கட்சிகளும் சரி, பத்திரிகைகளும் சரி. இப்போது தான் எல்லோரும் வாய் திறக்க, எழுத கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

    மகா கேவலமான வாழ்க்கை. ஏதாவது தப்பித் தவறி, திருக்குவளைக் கலைஞரை, எந்த காங்கிரஸ்காரனாவது லேசாக விமர்சித்து விட்டாலும் சரி, அன்னை சோனியா, சொக்கத் தங்கம் சோனியா, மணிமேகலை சோனியா உடனே “கலைஞரைப் போய் பார்த்து அவரைச் சமாதானம் செய்யுங்கள் என்று ஒரு தாக்கீது அனுப்பிவிடுவார். இதற்கு சிதம்பரமோ, ஈ.வி.கே.எஸ் இளங்கோவனோ, தங்கபாலுவோ யாரும் விலக்கில்லை. பீட்டர் அல்ஃபான்ஸோ தான் அருகிலேயே தஞ்சம் அடைந்திருப்பவர். கவலை இல்லை. இம்மாதிரி தாக்கீது ஏதும் வராது பார்த்துக்கொள்வார். அவரது இதயத்தில் காமராஜ் இருந்த இடத்தில் அமர்ந்திருப்பது கலைஞர். இப்படி இருக்க எந்த காங்கிரஸ்காரர் எவ்வளவு அகங்காரத்தோடும், அநாகரீக மாகவும் கழகத்தினர் பேசினாலும், வாய் பொத்தி இருக்க பழக்கப்பட்டவர், எழுத்திலும் பேச்சிலுமா நடந்த சரித்திரத்தின் பதிவு இருக்க முடியும்?

    கம்யூனிஸ்டுகளே ஒரு சமயம் அதிமுக இன்னொரு சமயம் திமுக என்று அணிசேரவோ, இல்லை ராஜ்ய சபா சீட்டுக்கோ, இல்லை சட்ட மன்ற தொகுதிக்கோ என்று அருள் வேண்டி, அம்மையாரிடமோ, திருக்குவளைக்காரரிடமோ போய் காத்திருக்க வேண்டியிருந்தால்… என்ன செய்ய? மாறி மாறி இது எத்தனை தடவை நிகழ்ந்துள்ளது! கடந்த ஒரு தலைமுறை காலத்துக்கும் மேல் அவர்கள் மார்க்ஸையும், லெனினையும் மறந்து அதன் இடத்தில் திமுக/அதிமுக வுக்கு சேர்ந்திருக்கும் அணிக்கு ஏற்ப, அம்மையாரோ, கலைஞரோ வந்து அமர, சட்ட மன்றத்தில் கை தூக்குபவர்களாக, அல்லது வெளிநடப்பு செய்பவர்களாக ஆகிவிட்டார்கள். சுருக்கமாக, அவர்கள் சுயத்தை இழந்தாயிற்று. இப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள் (இரண்டு பிரிவுகளிலும் யார் என்பது யாருக்காவது தெரியுமா? யாராவது கவலைப் படுகிறார்களா?) இப்போது ராஜா பெற்றிருக்கும் ராஜ்ய சபா அங்கத்தினர் பதவி, பிரகாஷ் காரத் சிபாரிஸோடு ராஜா ஜெயலலிதாவை சந்தித்து அவர் தந்த வோட்டில் பெற்றது.

    காமராஜர் இருந்த காலத்தில், கலைஞரின், அவர் அடிக்கடி, சொல்லி தம்மையே பாராட்டிக் கொள்ளும், நயத்தக்க நாகரீகமான மொழியில் “காமராஜரின் தோலை உரித்தால், நாலு மத்தளத்துக்கு ஆகும்” என்று பேசக்கேட்டவர் என் எழுத்தாள நண்பர். அதை அவர் தான் தன் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். அத்தகைய பண்பாளரான, கலைஞர் தான், “காமராஜ், ஒரு சகாப்தம்” என்ற தன் நூலை வெளியிடத் தகுந்தவர்” என்று கோபண்ணா என்னும் காங்கிரஸ்காரர், கலைஞர் தலைமையில் வெளியிட்டு விழா நடந்தது. பதிலுக்கு கலைஞரும் கோபண்ணாவுக்கு விருது ஒன்று அளித்து அழகு பார்த்து மகிழ்ந்தார் இப்படி ஒரு சரித்திரம் இன்றைய காங்கிரஸுக்கு.

    மிகச் சிறந்த பேச்சாளராக கழகத்தார் கொண்டாடும், திமுகவின் இரண்டாம் படித்தலைவரான, துரை முருகன், திமுகவினருக்கே உரிய நயத்தக்க நாகரீக மொழியில், “இந்திரா அம்மையார் கலைஞரின் விதவை மறுவாழ்வுத்திட்டத்துக்கு மனுச்செய்துகொண்டால், அம்மனுவை கலைஞர் மனிதாபிமானத்தோடு கவனிப்பார்” என்று கருணாநிதி தலைமை தாங்கிய கூட்டத்திலேயே, அவரைத் தாஜா செய்யும் நோக்கத்தில் கருணாநிதி மனம் மகிழ அருகில் அமர்ந்து கேட்க, ஒரு யோசனை முன்வைத்தாராம். அவ்வப்போது இருவருக்குள்ளும் உரசல் வரும்போது, இப்படி ஏதாவது பேசி தாஜா செய்வது துரை முருகன் கையாளும் உத்தி.

    இப்படியான ஒரு கூட்டத்தினரிடமா, ஒவ்வொருவருடைய உண்மை வரலாறு பதிவாகும். நான் கழகத்தின் செயற்குழு கூட்டத்திலோ, அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் தனிப்பட்ட குலாவலிலோ, ஏன் சட்டமன்றத்தில், கருணாநிதி, மைக்கைத் தன் கைகளுக்குள் மூடிக்கொண்டோ பேசிய வற்றையோ இங்கு மேற்கோள் காட்டவில்லை. பத்திரிகைகளில் வந்தவை, அன்றன்று மறக்கப்பட்டவை, நினைவிலிருப்பவற்றைத் தான் எடுத்துச் சொல்கிறேன். அவற்றில் சில நான் என் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதிலும் இந்த ப்ராண்ட் நயத்தக்க நாகரீகம் பொங்கித் ததும்பும். அவற்றைச் சொல்வது சரியல்ல. சட்ட மன்றத்தில் நடந்த மகாபாரதக் காட்சி எல்லோரும் அறிந்தது.

    இன்று சுமார் ஒரு பத்து வருஷங்களாக, பத்திரிகைகள் முன்னர் இல்லாத சுதந்திர உணர்வு பெற்று எழுதுகின்றன. ஆனால் திராவிட கழகத்தின் தோற்றத்திலிருந்து, நடந்த அநாகரீகங்கள், சொல்லிலும் நடத்தையிலும், இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. அவர்கள் அறியவும் வாய்ப்பில்லை. பத்திரிகைகள், எதிர்க்கட்சிகள், ஒன்று அலட்சியப்படுத்தின. பின்னர் அவற்றின் இரைச்சல் அதிகமாக, இந்த சாக்கடையில் கல்லெறியத் தயங்கின. அடுத்த கட்டத்தில் இவை பலம் பெறவே, அந்த பலத்தைக் கண்டு பயந்தன.

    ஒரு சிலர் தமக்கு நல்லதாக, பாராட்டத் தக்கதாகப் பட்டதைப் பற்றி எழுதின. அப்போது இவை, பார்ப்பன ஏடுகளே பாராட்ட வேண்டியதாயிற்று”. என்று சொல்லப்படும். மாறாக, கண்டனமாக இருந்து விட்டாலோ, ”பார்ப்பன ஏடுகளுக்கு பாராட்ட மனம் எப்படி வரும்?” என்று சொல்லப்படும்.

    சமரன் இதழின் இத்தொகுப்பில், அன்றைய enfant terrible ஜெயகாந்தனின் எழுத்துக்கள் கணிசமாக உள்ளன., அனேகம் கருணாநிதியைப் பற்றியவை. அவை இந்த அரசியல் அநாகரீகத்தை, ஆபாசத்தைக் கண்டு எழும் தன் மனக்கொதிப்பை எவ்வளவு காட்டமாகக் கொட்டியிருக்கிறார் என்று சொல்லும். இளம் ரத்தம். “எந்தக் கொம்பனுக்கும்” நான் பயந்தவனில்லை என்றோ, என்னவோ அவர் அடிக்கடி சூளுரைப்பது வழக்கம் இது சமீப காலம் வரை உண்மையாகத் தான் இருந்தது. அக்காலத்தில் இப்படிப் பேசி யாரும் கால் கை சேதமடையாமல் வீடு திரும்ப முடியாது. அந்த நிலைகளுக்கு அவர் இரையானதும் உண்டு என்று சொல்லக் கேள்விப் படுகிறேன். ஆனால் இன்று, மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு அல்ல, நேரே கோபாலபுரத்துக்குத் தான் நன்றி சொல்ல விரைந்ததாகச் சொல்லப் பட்டது. இதையும் தாண்டி, மேடையில் கலைஞர் மனம் மகிழ புகழ் மழை பொழிகிறார் என்றும் பத்திரிகைகளில் படிக்கிறேன். எந்தக் கொம் பனுக்கும் .நான்……” என்று ஜெய காந்தன் அக்காலங்களில் பேசியது நினைவுக்கு வரலாம். இல்லையெனில் சமரனில் பதிவாகியிருப்பதைப் பார்த்து நினைவு படுத்திக்கொள்ளலாம். அது மகிழ்ச்சி தரும், கர்வம் கொள்ளத் தக்க கணங்களாக இராது. காலம் யாரையெல்லாம் என்ன அலங்கோலம் செய்து விடுகிறது!

    தமிழகம் அக்காலங்களில் தன் எதிர்ப்பைக் காட்டாததும், பதிவு செய்யாததும் எத்தகைய சீரழிவுக்கு காரணமாகியிருக்கிறது என்பது சமரன் தொகுப்பு நமக்குச் சொல்லும். இன்று அனேகமாக பத்திரிகைகள் அன்றைய பயத்தில் இல்லை. எழுதுகின்றன. ஆனால் கட்சிகளின் தலைமைகள் வாய் திறப்பதில்லை. மத்திய அரசுடன் ஏதோ கொடுக்கல் வாங்கல் பேரத்தில் எல்லாம் சிக்கியிருக்கின்றன. கட்சிகளும் தலைமைகளும்.

    எந்த சுதந்திரத்தை தலைமைகள் அன்றிலிருந்து இன்று வரை, பத்திரிகைகள் சமீப காலம் வரை இழந்திருக்கின்றன? அதன் பாதிப்புகள் என்ன? என்பதை, சுமார் இரண்டே வருஷங்கள் வாழ்ந்த சமரன் கொண்டிருந்த சுதந்திரத்தின் பதிவுகளை, இத்தொகுப்பு சொல்லும்.தன்னளவுக்கு தன் காலத்தில் கண்ட அளவுக்குச் சுட்டிக் காட்டும்.

    பேசவேண்டியதை, எழுத வேண்டியதைப் பேசுவதும், எழுதுவதும், பின் அவை காற்றோடு மறையாது பதிவு செய்வதும் அடுத்த தலைமுறைக்கு தருவதும் எவ்வளவு முக்கியமானது என்பது சமரன் தொகுப்பிலிருந்து தெரிய வரும்.

    இல்லையெனில் தம் உண்மையான கடந்த காலம் தெரியவராது தடுக்க, தாமே தம் வரலாற்றை தமக்குப் பிடித்த வகையில் பதிவு செய்து மகிழ்வார்கள். முரசொலியின் உடன் பிறப்பே கடிதங்களும், ஆத்திரம் தாங்காது புனைபெயரில் எழுதப்பட்டவையும் தொகுக்கப் பட்டால் எப்படி யிருக்கும்? எனக்குச் சட்டென்று நினைவுக்கு வருவது, ஜெயமோஹன், திராவிட இயக்கத் தலைமைகள் எழுதுவது எதுவும் இலக்கியமில்லை என்று சொன்னதற்கு, யாரும் பதில் தரவில்லை. மாறாக, முரசொலியில் யாரோ புனை பெயரில் “ நீ நாய் மலையாளத்து நரி, யானையிடமா மோதுகிறாய்… ? ரகத்து வசைகள் தான் பிறந்தன. புனை பெயரில் யார் எழுதியிருப்பார்கள்? இது வசையோடு போயிற்று. அக்காலங்களில் “ஆட்டோ” வீடு தேடி வரும் என்பார்கள்.

    சிலர் புத்தகங்களாக எழுதியிருக்கிறார்கள். மலர் மன்னன், பி. ராமமூர்த்தி, அரவிந்தன் நீலகண்டன், சுப்பு, ம. வெங்கடேசன் கே. சி. லக்ஷ்மி நாராயணன், பழ. கருப்பையா போன்றோர். (இப்போதைக்கு நினைவுக்கு வருபவர்கள்) எழுதியிருக்கிறார்கள். ஒப்பீட்டுக்கு கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி, ஆறு பாகங்களையும் படித்துக்கொள்ளலாம். இவற்றோடு, சமரன் போன்ற, தொகுப்புகளும் வருமாயின் நம்மை கண்விழிக்கச் செய்யும். மிக முக்கியமாக குடியரசு இதழ் தொகுப்பு பற்றி ஒரு அன்பர் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அது இல்லையெனில் பெரியாரின் 1925 எழுத்துக்கள், பேச்சுக்கள் பற்றி எப்படி நான் அறிந்திருக்க முடியும். விடுதலையையும், முரசொலியையும் யாரும் தொகுக்க முயன்றால், அதற்கு எதிர்ப்பு அவர்களிடமிருந்தே வரும். அது தான் வரலாற்றுப் பதிவுகளின் பலம்.

    வெங்கட் சாமிநாதன்/14.2.2015.

    Share
  • தி.க.சி. யின் நினைவில்

    வெங்கட் சாமிநாதன்

    tkc1

    என்னை மிகவும் திகைப்புக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கிய மனிதர் சமீபத்தில் மறைந்த தி.க.சி. அறுபதுகளின் இடை வருடங்களிலிருந்து தான் தி.க.சி. எனக்குத் தெரிய வந்ததே.  தாமரை என்னும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகையின் ஆசிரியராக. தமிழ் நாட்டு முற்[போக்கு எழுத்தாளர்களுக்கு ஆதரவாளராக, கட்சிக் கோட்பாடுகளுக்கு ;பிரசாரகராக, வழிகாட்டியாக. இவையெல்லாம் அவரது வெளித்தெரிந்த ரூபங்கள் பலவென்றாலும் அதிகம் கேட்கப்படும் குரல் ஒன்று தான். பின்னிருந்து தூண்டும் சக்தியும் ஒன்றுதான்.  இவை எதுவும் எனக்கு பிடித்தமான காரியங்கள் அல்ல.  அதே காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த, எழுத்து, இலக்கிய வட்டம் போன்ற பத்திரிகைகள் எனக்குப் பிடித்த மானவையாக, என் பார்வைக்கு ஒத்திசைவு கொண்டவையாக இருந்தன. தாமரை அல்ல.

    ஆனால், இந்த முற்போக்கு முகாமில் இருப்பவர்கள் பற்றியோ அவர்கள் செயல்பாடுகள் பற்றியோ எதுவும் கறாராகச் சொல்லி விட முடிந்ததில்லை. முற்போக்கு கூடாரத்திலிருந்தவர்களோடு மிக நெருக்கமாக இருந்த வல்லிக்கண்ணன், தாமரை இதழ் கட்சிக்கென தொடங்கப் பட்டதே விஜய பாஸ்கரன் நடத்தி வந்த சரஸ்வதியின் திறந்த மனப்போக்கும் செயல்பாடுகளும் ஜீவாவுக்குப் பிடிக்காமல் போய்விடவே,  கட்சியின் குரலை முழுக்க பதிவு செய்வதற்கென்றே தொடங்கப்பட்டது தான் தாமரை என்று சொல்லியிருக்கிறார். இதை அவர் சொன்னது, தாமரை தொடங்கப்பட்ட போது அல்ல.  வெகு காலம் பின்பு. அனேகமாக, என் நினைவு சரியெனில், தீபம் பத்திரிகையில், சரஸ்வதி காலம் என்னும் தொடரின் கடைசி பக்கங்களில் அதன் மரணத்தைப் பற்றிச் சொல்லும் போது இந்த திரைக்குப் பின் நடந்த கதையைச் சொல்கிறார். சரஸ்வதி பத்திரிகை  அச்சாகி வந்த ஜனசக்தி பிரஸ்ஸில் அதைத் தாமதப் படுத்தியே ஜீவா சரஸ்வதியை கடை மூட வைத்தாராம். அவர் சொல்லியிராவிட்டால் இந்த ரகசியங்கள் வெளிவராமலே போயிருக்கும். வல்லிக்கண்ணன் தைரியமாக தன் மனதில் பட்டதை, தான் பார்த்த உண்மைகளைப் பதிவு செய்த மிக அரிதான  சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. இன்னொன்றையும் சொல்லி விடுகிறேனே. விஜய பாஸ்கரனின் சமரன் என்ற இதழில் திமுகவையும் அதன் தலைவர்களையும் சாட்டையடி என்று தான் அந்த விளாசலைச் சொல்ல வேண்டும். அப்படி விளாசியவர் தான் அதற்கு முன்னரும் மௌனம். பின்னரும் சுமார் 50 வருடங்களுக்கு வாயைத் திறக்கவில்லை. இவை யெல்லாம்  எப்படி நிகழ்கின்றன என்பது எனக்கு இன்னமும் புரியாத புதிராக, ஆச்சரியமாக இருந்து வருகிறது.

    விஜய பாஸ்கரன் தன் சரஸ்வதி இதழில் தன்னை ஒரு செஞ்சட்டை அணிந்த தெருக்களில் கட்சி கோஷமிட்டுச் செல்பவராகக் காணவில்லை. அதில் க.நா.சு. சி.சு. செல்லப்பா, ஈழத்து கே டேனியல், டொமினிக் ஜீவா, என எல்லோருக்கும் இடமிருந்தது. மறக்கப்பட்டிருந்த மௌனியின் கதைகள் தொகுக்கப்பட்டதே கூட மௌனி வழிபாடாகிவிட்டதாக குற்றம் சாட்டிய ஈழத்துப் பேராசிரியர் ஏ ஜெ. கனகரத்னா வின் மௌனி வழிபாடு என்ற ஒரு கண்டன கட்டுரைக்குக் கூட இடம் இருந்தது. சரஸ்வதியில் வெளிவந்த ரகுநாதனின் எழுத்துக்களில்  கட்சி கோஷங்கள் இருக்கவில்லை.

    ஏன், முதன் முதலாக செல்லப்பா என்னை சரஸ்வதி காரியாலயத்துக்கு அழைத்துச் சென்ற போது (1961) விஜய பாஸ்கரன் என்னையும் சரஸ்வதிக்கு எழுதச் சொன்னார். யாரை? யாருக்கு அந்த அழைப்பு? அமெரிக்க முதலாளித்துவத்துக்கும், ஏகாதிபத்யத்துக்கும் அடிவருடியும், சி.ஐ.ஏ. ஏஜெண்ட்டும், ஆன என்னை, அமெரிக்காவிலிருந்து மணிஆர்டரில் பணம்  பெற்றுவருவதாக முற்போக்குகள் எல்லாம் ஒரே குரலாக விடாது குற்றம் சாட்டி வந்த என்னைத் தான் எழுதச் சொன்னார். அது ஆரம்ப காலம். நான் என்னங்க எழுதப் போறேன்?” என்று சொல்லி என்னை அறியாதே பின்னர் அந்தக் கட்சிக்குள் ஒரு பயங்கர சுனாமி புயல் வீசக்கூடும்  அபாயத்தைத்  தடுத்துவிட்டேன்.

    அப்படியும் கூட, ஜீவா ஒன்றும் ஒரு பயங்கர புரட்சித் தீ கக்கும் கோஷங்களே அறிந்த கட்சிக் காரர் இல்லை. இலக்கியத்தில் தோய்ந்தவர். பாரதி பற்றி மணிக்கணக்கில் பேசுபவர். கட்சிப் பிரசாரம் என்று வந்து விட்டால், அது வேறு விஷயம். ஏழை விவசாயியின் வாழ்க்கையில் ஒரு ட்ராக்டரின் வருகை எத்தகைய முக மலர்ச்சியைத் தரும் என்று கிட்டத்தட்ட கருணாநிதி பாணி வசனத்தில் வர்ணித்து மாய்ந்து போவார். இப்படி அவர் எழுத்தைப் படித்த ஞாபகம் இருக்கிறது எனக்கு. சின்னப் பையன் சுந்தர ராமசாமியை, “நீ பூணூல் போட்டுக்கணும்” என்று உபதேசித்து, ”எங்கே, நீ சந்தியா வந்தன மந்திரம் சொல்லு பாப்பம்” என்றும் கேட்பார். நல்ல மனிதர் ஆனால் அப்பப்போ கட்சி தான் அவரை சாமியாடச் சொல்லும் போலும். என்ன செய்ய?, வல்லிக்கண்ணன் சொல்வதை நம்பித் தான் ஆகணும்.

    ஆனால், தி.க.சியின் ஆசிரியத்வத்தில் வந்த தாமரை தன்னை ஒரு கட்சித் பத்திரிகை என்று பிரகடனப்படுத்துவதற்கான சமாசாரங்களையும் தவறாது பிரசுரித்து வந்தாலும்,(அச்சாவது ஜனசக்தி பிரஸ்ஸிலாக்கும்) பூமணி, பா. செயப்ரகாசம், கி. ராஜநாராயணன், பிரபஞ்சன், ஆ.பழனியப்பன் (பெயர் சரிதானா?) சார்வாஹன், வண்ணநிலவன், இப்படி பலர், அதில் எழுதினார்கள். தஞ்சை பிரகாஷ் நாடோடிக் கதைகள் நிறைய எழுதினார் என்று நினைவு. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் எழுத்து பத்திரிகையும் க.நா.சு.வின் இலக்கிய வட்டமும் புதுக்கவிதைக்கு களம் தந்ததும் அதை தீவிரமாக எதிர்த்து வந்த சிதம்பர ரகுநாதன், நா.வானமாமலை, கலாநிதி கைலாசபதி எம்.ஏ. பிஹெச் டி ஆகியோரின் புதுக்கவிதைக்கு எதிரான தொடர்ந்த பிரசாரத்துக்கும் இடம் தந்தது. அத்தோடு, நிற்கவில்லை. வானம்பாடிகளின் “புதுக்கவிதைகளும்(?):” அதில் பிரசுரமாயின. சி.மணி நா.வானமாமலையின் புதுக்கவிதை எதிர்ப்புக்கு பதிலளித்த கட்டுரையையும் தாமரை பிரசுரித்தது. தருமு சிவராமூவின் E = mc2 என்னும் கவிதைக்கு வானம்பாடிகளின் ஆசிரியக் குழுவினரும் முற்போக்கு கவிஞருமான சிற்பி அவர்களின் நீண்ட பாஷ்யத்தையும் பிரசுரித்தது. யாருடைய கவிதையை?, அராஜக வாதியும், இருள்மய வாதியும் மாயாவாதியும் இன்னும் என்னென்னவோ வாதியும் மட்ட ரக புளுகனும், அற்ப புத்தி படைத்த அவதூறுக்காரனும், (எல்லாம் திகசி அவர்கள் கொடுத்த பட்டங்கள் தாம்) ஆன, அரூப் சீவராம் என்று தனக்கு அந்த சில நாட்களில் பெயர் சூட்டிக்கொண்ட இன்றைய பிரமிள் கவிதையை. பிரமீள்  ஒவ்வொரு முறையும் எழுத உட்காரும்போது தன் பெயரை, அல்லது அதன் உச்சரிப்பை மாற்றிக் கொள்வார். வேறு வழியின்றி பிரமிள் என்ற பெயர் நிலைத்தது அவர் மறைவுக்குப் பிறகு தான்.

    tkc

    இதற்கிடையில் புதுக்கவிதையை ஏதொ கொள்கை என்று அவர் கற்பித்துக் கொண்டவகையில் எதிர்த்து வந்த கலாநிதி கைலாசபதி எம்.ஏ. பிஎச் டி அவர்கள், வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவரான தமிழன்பனின்  தோணி  என்ற தலைப்பின் ”புதுக்கவிதை” தொகுப்புக்கு பாராட்டுக்களும் தன் ரசனையும் நிறைந்த நீண்ட முன்னுரை ஒன்று எழுதி ஆசீர்வதித்து இருந்தார்.  தமிழன்பனுக்கும் அவர் கட்சியின் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்ற பட்டம் கிடைத்த சந்தோஷம். ஆனால் யாருமே தாமரை பிரசுரித்த சார்வாகனின் கவிதைகளைப் பற்றி மூச்சு விடவில்லை. தாமரையில் எழுதுவதால் அவர் முற்போக்காகத் தானே இருக்க வேண்டும், திகசி யும் தீர விசாரிக்காமல் போட்டிருக்க மாட்டாரே  என்ற நினைப்பில்  கட்சிப் பெரியவர்கள் ஏதும் மறுப்புச் சொல்லவில்லை. கா. சிவத்தம்பிக்கு கலாநிதி கைலாசபதி எம். ஏ. பிஹெச். டியின் புதுக்கவிதை எதிர்ப்புப் பிரசாரத்தையும் ஆதரித்துப் பேசவேண்டும்.  தாமரையில் புதுக்கவிதைத் தோற்றம் தரும் சமாசாரங்களுக்கும் சமாதானம் சொல்லவேண்டும் என்னும் திக்குமுக்காடலில் தவிப்பு. இப்படியா?, அப்படியா? என்ற தீர்மானத்துக்கு வரமுடியாமல் தவித்தார். தாமரை ஆசிரியர் தி.க.சியைச் சாடமுடியுமோ? அல்லது தன் சித்தாந்த மூலவரான கலாநிதி கைலாசபதிக்குத் தான் எதிராக ஒரு நிலை எடுக்கமுடியுமோ? எனவே,”முன்னாலே பாத்தா செட்டியார் குதிரை, பின்னாலே பாத்தா கௌண்டர் குதிரையாட்டும் தெரியுது? என்ற அவரது ஒரு சமாளிப்பைக் கீழே பார்க்கலாம்.

    “எனவே, முற்போக்குக் கடப்பாடுடைய தாமரை புதுக்கவிதைக்குத் தரும் முதலிடம் ஆராயப்படவேண்டியதொன்றாகும். தமிழ் நாட்டில் கிராமீயக் கலை ஆய்வுக்கு இலக்கியத் தளம் அமைத்துக்கொடுத்த தாமரை, இன்று புதுக்கவிதை பயில்வுக்கு முக்கிய இடம் கொடுக்கின்றது. இது மேனிலைத் தழுவலா (elitism-ஆ) அன்றேல் அடிநிலை மக்களை ஆற்றுப்படுத்தலா என்பது பற்றிய கருத்துத் தெளிவு எனக்கு ஏற்படவில்லை. ஆகஸ்ட் 1973 மல்லிகை இதழில் கா.சிவத்தம்பி)

    கா. சிவத்தம்பி நல்ல படிப்பாளி, கைலாசபதி எம்.ஏ.பிஎச் டிக்கு இல்லாத இலக்கிய உணர்வும் ரசனையும் வாய்க்கப் பெற்றவர் என்றாலும் கலாநிதிக்கு ஒத்து ஊதியே பழக்கப் பட்டவர். அந்தப் பழக்கத்தின் காரணமாக, செம்மொழி மாநாட்டுக்கு வந்து கருணாநிதி புகழ்பாடியும் சென்றார். கருணாநிதி சாதாரண பாராட்டுக்களில் திருப்தி அடைபவரில்லை என்பது உலகம் அறியும்.

    என்னமோ என்று நான் நினைத்திருந்த தி.க.சி. தன் தாமரை ஆசிரியத்வத்தில் பெரிய பெரிய அறிஞர் பெருமக்களை எல்லாம் கழைக்கூத்தாட வைத்துள்ளார் என்று பார்க்கும் போது, எனக்கு எல்லாம் தமாஷாகத் தான் இருந்தது. நான் ரசித்தேன். வேறு யாரும் நினைவு படுத்தாதையெல்லாம் நான் இப்போது நினைவு படுத்துகிறேன்.

    வெகு ஆச்சரியமான நிகழ்வுகள் இவை. க.நா.சுவின் இலக்கிய வட்டம்  1948 – 1964 கால கட்டத்திய இலக்கிய நிகழ்வுகள் குறித்து சாதனை இதழ் என்றோ என்னவோ பெயரில் வெளியிட்டிருந்தது. அதில் நானோ, நகுலனோ, க.நா.சு. வோ எழுதியது பெரிய விஷயம் இல்லை. எனக்கு ஆச்சரியம் தந்தது தி.க. சியும் அதில் ஒரு மிக மிக நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். நினைவிலிருந்து எழுதுகிறேன். அதில் வணிக பத்திரிகைகளும் எழுத்தாளர்களும் செய்யும் நாசவேலைகளுக்கு ”மரண அடி” தந்தது மட்டுமல்லாமல் முதலாளித்துவத்துக்கு எதிராக, சோஷலிஸ சமுதாய உருவாக்கத்துக்கு எழுத்தாளர் பாடு படவேண்டும் என்றோ என்னவோ எழுதி, சில நல்ல எழுத்துக்களையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அவர் பாராட்டுக்கள், எழுத்து மக்களுக்காகவே தானே ஒழிய, வணிகத்துக்காக அல்ல, கலையும் உழைக்கும் பாட்டாளி மக்களின் எழுச்சிக்காக…….வகையறா வகையறாவாக வே இருந்ததாக என் நினைப்பு.  பிராபல்யங்களை எதிர்த்த வரையில் சரி என்பது என் நினைப்பாக இருந்தது. கூரான இலக்கியப் பார்வை இல்லாத ஒரு நீண்ட கட்டுரைக்கு க.நா.சு இடம் கொடுத்ததும், அதிகப் பேர் எழுதாத போது எழுதக் கேட்டு வந்ததை மறுப்பானேன் என்றும் இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் மாறாக, தி.க.சி. எல்லோரிடமும் சகஜ பாவத்தோடு பழகி வந்தவர் தன்னோடு கொள்கையளவில் மாறுபட்டு விரோதம் கொண்டவர்களுடனும் சினேகம் கொண்டிருந்தார் என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை.

    கடுமையான, காரசாரமான  வாத விவாதங்கள் புதுக்கவிதை பற்றி நிகழ்ந்து வந்த கட்டம் அது. வானமாமலைக்கு எழுத்து பத்திரிகையிலும் அவரது புதுக்கவிதை எதிர்ப்புக்கு நீண்ட பதில் தந்திருந்தார் செல்லப்பா அதற்கு முன்னோ பின்னோ நான் விடுமுறையில் தெற்கே வந்திருந்த போது சென்னையில் செல்லப்பாவைப் பார்க்க வந்த போது அங்கு அவர் வீட்டில் சார்வாகனையும் தி.க.சியையும் செல்லப்பாவுடன் வெகு கால சினேகிதர்கள் போல உரையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். செல்லப்பா அவர்கள் இருவருக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

    அப்போது நான் சார்வாஹனிடம் சொன்னேன். “ இங்கு தி.க.சியை இங்கு பார்ப்பதும் அவர்  வெகு சகஜ பாவத்தோடு உங்களோடும் செல்லப்பாவோடும் உரையாடிக்கொண்டிருப்பார் என்று நான் நினைக்கவே இல்லை. சந்தோஷமாக இருக்கிறது” என்றேன். அதற்கு சார்வாஹன் சொன்னார். “தாமரையே இப்போதெல்லாம் அவ்வளவு கடுமையாக இல்லையே” என்றார். “ஆமாம், கட்சியையும் மீறி சில விஷயங்கள் அதில் வருகின்றன, பார்த்தேன்” என்றேன்

    ஜெயகாந்தன் முற்போக்கு எழுத்தாளர்களின் கட்சிக்காரர்களின் சூழலில் வளர்ந்தவர். சிறு வயதிலிருந்தே அவரை ஆதரித்தவர்கள் அவர்கள் தான்.

    உன்னைப் போல் ஒருவன் படம் தில்லியில் ஷீலா தியேட்டரில் ஒரு நாள் திரையிடப்பட்டது. பார்த்தேன். வெகு தைரியமான தீவிர முயற்சி என்று எனக்குப் பட்டது. அதற்கு உதவியவர்கள், படத்தில் பேராசிரியராக நடித்தவர் எல்லோரும் முற்போக்கு முகாமைச் சேர்ந்தவர்கள். தில்லியில் இருந்தவர் ஒருவர் சோவியத் லாண்ட் பத்திரிகையில் வேலை பார்த்தவர். அவர் வீட்டில் தான் ஜெயகாந்தன் கரோல்பாகில் தங்கியிருந்தார். அவரை வரவேற்றுப் பாராட்டிப் பேசிய கூட்டத்தில் தலைமை தாங்கிய பால தண்டாயுதமும் இருந்தார். ஜெயகாந்தன் பேசும் போது, ஏதோ ஒரு கட்டத்தில் ”பாலா அவர்கள் சார்ந்திருக்கும் இயக்கம்”. என்று தன்னை அன்னியப்படுத்திக் கொண்டு பேசினார். எனக்கு இது என்ன புதிர் என்று பட்டது. சில வருடங்களுக்குப் பின் கசடதபற இதழில் நான் ஜெயகாந்தனைக் கடுமையாகத் தாக்கி எழுத நேர்ந்தது. அப்போது திகசி எனக்கு எழுதிய கடிதத்தில் “இதற்கெல்லாம் காரணம் நீங்களும் உங்களைப் போன்றவர்களும் தான். நீங்கள் வளர்த்து விட்ட ஜெயகாந்தன் வேறு எப்படி நடந்து கொள்வார்?” என்ற அர்த்தத்தில் எழுதியிருந்தார். ஜெயகாந்தன் தன்னை முற்போக்கு முகாமிலிருந்து விலக்கிக் கொண்டுவிட்டார் என்று தெரிந்தது. ஆனந்த விகடனிலும் சாவியின் ஆசிரியத்வத்தில் இருந்த தினமணிக் கதிரிலும் வெகுவேகமாக ஜெயகாந்தன் வளர்ந்துவிட்டதன் விளைவு என்று நினைத்துக்கொண்டேன். இந்தக் கடிதம் கசடதபற பத்திரிகையோடு நிகழ்ந்த சர்ச்சையில் அதற்கு எதிராக தருமு சிவராமு எழுதிய “கோணல்கள்” கட்டுரையில் பிரசுரமானது. கட்சியின் தலைமைக்கு திகசி எழுதிய கடிதம் சம்மதமாக இருக்கவில்லை என்று பின்னர் தெரிய வந்தது பேச்சு வாக்கில் தான்.

    இதெல்லாம் பெரிய விஷயமில்லை. சின்ன சின்ன உரசல்கள். திகசியையும் கட்சியின் தலைமையையும் பொருத்த வரை. திகசியின் பொறுப்பில் தாமரை கட்சிப் பத்திரிகை என்ற பெயர் பெற்றிருந்தாலும், கட்சி சார்பும் கொள்கை விளக்கங்களும் நன்கு வெளித்தெரிய இருந்தாலும், திகசி அவர் காலத்திய இளைய தலைமுறை எழுத்தாளர்களிடையே தம்மை ஊக்குவிக்கும் பெரியவர் என்ற ஸ்தானம் பெற்றவராக இருந்தார். வல்லிக்கண்ணனிட மிருந்தும் கூட தன்னை ஊக்குவிக்கும்  ஒரு கார்டு கட்டாயம் வந்து விடும் தான். ஆனால் திகசி தாமரையில் இடமும் கொடுப்பாரே. பிரசுரமும் ஆகுமே.

    ”நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் பாட்டாளி மக்கள் புரட்சிக்கு உங்கள் எழுத்து வித்திடும்”, என்று வேறு ஊக்குவித்து நேரிலும் சொல்வார். ஒரு கார்டும் வந்து சாட்சியம் சொல்லுமே. அவரை நன்றியுடன் பார்க்கும் ஒரு பெரிய இளைஞர் பட்டாளமே உருவானது அவர் காலத்தில். அந்த பழக்கம் அவர் தாமரை ஆசிரியத்வத்தில் இல்லாத போதும் தொடர்ந்தது. அதிலும் திருநெல்வேலி இளைஞர் கூட்டத்துடன் திர்நேலி தமிழில் பேரப்புள்ளைகளை உற்சாகப் படுத்துவது இருக்கே அது மிக இனிமையும் வாத்சல்ய பாவமும் கொண்டது. பின்னாட்களில் அவரைச் சந்தித்தவர் தரும் புகைப்படங்களில் அவர் தன் சுடலை மாடன் தெரு வீட்டின் தாழ்வாரத்தில் தன் அறைக்கு எதிரில் ஒரு நாற்காலியில் அமர்ந்து குனிந்த வண்ணம் ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் காட்சியே காணக் கிடைக்கும். காந்தி என்றால் சர்க்காவில் நூல் நூற்கும் காட்சி. சிவாஜி என்றால் முறுக்கிய மீசையும்  வாளேந்திய கையுமாக நிமிர்ந்து நிற்கும் கட்டபொம்மன் வேஷம் தரித்து, தி.க.சி.க்கு தன் இளைய தலைமுறைக்கு கடிதம் எழுதும் காட்சி.

    தி.க.சியின் ஆரம்பங்கள், நாற்பதுகளில், தாமரையில் நாம் கண்ட தி.க.சி உருவாவதற்கான ஆரம்பங்கள் இல்லையென என் நினைப்பு. அப்போது அவர் தொடர்புகள், கு.ப.ரா. கிராம ஊழியன் என்று எப்படி இருந்திருக்க முடியும்?.  வென்றிலன் என்ற போதும், ஐந்தாம் படை போன்ற கதைகள் எழுதிய ரகுநாதன் தான் பின்னர் தீவிர முற்போக்கு ஆனார்.  இந்த மாயம் எல்லாம் எப்படி நடக்கிறது என்பதை ஆராய்வது கஷ்டம். சோமன துடி மாதிரி ஏன் தமிழில் ஒரு திரைப்படம் வருவதில்லை என்று ஒரு இடத்தில் ஏங்கும் தி.க.சி. தான், அகிலனின் சித்திரப் பாவை நாவலுக்கு ஞானபீடப் பரிசு கிடைத்ததும்,  “இது தமிழ் இலக்கியத்துக்குப் பெருமை சேர்ப்பது, என்றும், அகிலன், சுதந்திரம், ஜனநாயகம், சமாதானம் சோஷலிஸம் ஆகிய லட்சியங்களுக்காக போராடுகிறவர்” என்று பாராட்டுக்களை அள்ளிச் சொரிந்தார். வேடிக்கை இல்லை. சிரிக்க வேண்டாம். நிஜமாகவே தான். ஒரு வேளை இடைப்பட்ட காலத்தில் அகிலனுக்கு சோவியத் ரஷ்ய அழைப்பு விடுத்து அவருக்கு ரஷ்ய சுற்றுப் பயணத்துக்கு உதவியதால் ஒரு வேளை திடீரென அகிலனை இந்த புஷ்பார்ச்சனைக்கு தகுதியாக்கியிருக்கலாம். அகிலனும் தன் பங்குக்கு தன் ரஷ்ய பயணம் பற்றி வெகு பரவசம் அடைந்து ரஷ்ய புகழ் பாடி கட்டுரைகள் எழுதினார். ஆனால் அத்தோடு அந்தக் கதை சரி.

    ஆனாலும் தன் கட்சி ஆசான்களும் கட்சியும் புதுக்கவிதைக்கு எதிராக தொடர்ந்த பிரசாரம் நடத்திக்கொண்டிருக்கு போது தாமரையில் புதுக்கவிதை தோற்றம் அளிக்கும் வானம்பாடிகளுக்கும் இன்னம் மற்றோருக்கும் தொடர்ந்து இடமளித்து அதுபற்றி விவாதங்களுக்கும் களம் தந்த ஆசிரியரின் தாராள மனதை என்னவென்று சொல்வது? அது மட்டுமல்ல. பூமணி, வண்ணநிலவன், சார்வாகனுக்கெல்லாம் இடமென்றால், பாட்டாளி மக்களின் சர்வாதிகாரத்தை எப்படி கொணர இயலும்? இதையெல்லாம் எதிர்த்து கட்சி எழுத்தாளர்களும் தலைமையும் போராடிக்கொண்டிருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளவேண்டாமா? கட்சித் தலைமையிடமிருந்து கேள்விகளும் எதிர்ப்பும் எழவே, தி.க.சி என்ன செய்தார்?. தாமரையை விட்டு விலகினார் என்று வல்லிக்கண்ணன் சொல்கிறார். திகசி பற்றிய இந்த உள் விவகாரங்களில் வல்லிக்கண்ணனை நம்பாமல் வேறு யாரை நம்புவது?. தன் பதவியைத் துறந்த திகசி யை நாம் பாராட்டவேண்டும். இன்னொன்றுக்கும்  நாம் திகசி யை பாராட்டவேண்டும். தன் மகன், வண்ணதாசன், பின் தன் திர்நேலி சீட இளவல்கள், கலாப்ரியா, வண்ணநிலவன் யாரையும் அவர் முற்போக்கு ப்ராண்ட் எழுத்தை வற்புறுத்தவில்லை. அவர்களை அவர்கள் சுதந்திரத்துக்கு விட்டு விட்டது பெரிய விஷயம் இல்லையா? யாருக்கும் இதில் சந்தேகமிருப்பின், சு.கா. வுக்கு திகசி அவ்வப்போது தரும் பாராட்டுக்களையும் உற்சாகத்தையும் சுகாவே எழுதியிருப்பதைத் தான் நான் சுட்டவேண்டும். எந்த வகைக்கும் உட்படாத சுகாவின் எழுத்தைப் பாராட்டுவது என்றால், அதில் முற்போக்கு எங்கே என்று தேடத்தான் வேண்டும். கிடைக்காது.

    தி.க.சி யின் ஆசிரிய பீடத்தில் தொ.மு.சி. ரகுநாதன் வந்து அமர்ந்தார். திகசியின் காலத்திலும் சரி, பின்னரும் சரி, தாமரை இதழ்களை அவ்வப்போது பார்க்கத் தான் எனக்குக் கிடைக்குமே தவிர, தொடர்ந்து அதை நான் கவனித்தவனில்லை.

    நவீன விருட்சம் பத்திரிகைக்கு மதிப்புரை எழுதச் சொல்லி எனக்குக் கிடைத்த புத்தகம் திகசி யின் கட்டுரைகளையெல்லாம் தொகுத்திருந்த விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள். அப்புத்தகம் என்னிடம் இல்லை. நவீன விருட்சம் இதழும் இல்லை. என் பார்வையில் நாவல்கள், சிறுகதைகள்………….. ……….. என்ற என் கட்டுரைத் தொகுப்பு 2000-ல் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது, அதில் சேர்க்கப்பட்டுள்ள, தி.க.சியின் புத்தகத்துக்கு நான் எழுதிய மதிப்புரையிலிருந்து (பக்கம் 201 – 204) எழுதுகிறேன். மேலே தரப்பட்டிருக்கும் மற்ற மேற்கோள்களும் சுந்தர ராமசாமியின் கட்டுரைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை தான்.

    திகசி யின் இத்தொகுப்பு பல ஆச்சரியங்களைத் தந்தது. ஆச்சரியம் என்ன. முற்போக்கும், கட்சி சேவகமும் திகசியை முற்றாக மாற்றிவிடவில்லை என்று எண்ணத்தை ஏற்படுத்தியது.

    அதிலிருந்து என் வார்த்தைகள் சிலவற்றையும் திகசி யின் வார்த்தைகள் சிலவற்றையும் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். அனேகமாக பலருக்கு இது திகசி யின் கேட்காத குரலாக இருக்கும்.

    (இப்புத்தகத்தின்) 330 பக்கங்களும் படிக்க மிக சுவாரஸ்யமாக இருக்கின்றன. வெளித்தெரிந்த திகசியை விடுங்கள். உண்மையான திகசி யாரென்பது  சுவாரஸ்யமான புதிராக இருக்கிறது. கட்சி நிர்ப்பந்தங்களை மீறி, ஒதுக்கி, ஒரு நெருக்கம் ஏற்படும் எனில், திகசி பழகுவதற்கு மிக நல்ல மனிதராக இருக்கவேண்டும்.

    இனி ஒரு நேர்காணல் (ப. 303)

    கேள்வி:  ஒரு நல்ல படைப்பை நீங்கள் எப்படி இனம் கண்டு கொள்வீர்கள்?

    திகசி: கலாபூர்வமாக மனசுக்கு நிறைவு அளிக்கும்படியான படைப்பு எதுவும் மிகச் சிறந்த படைப்பு தான். ஒரு தனித்தன்மை இனம் காட்டிவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக அது நம் நெஞ்சை நெருட வேண்டும். (it must disturb) படித்தபின் என்னவோ பண்ணுகிறது. அப்படியே புரட்டிப் போட்டு விடுகிறது. படிக்குமுன் இருந்த நான் வேறு.  இப்போதைய நான் வேறு என்கிற மாதிரியான பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. இத்தகைய ரஸவாதம் எல்லா கலைகளுக்கும் உண்டு.”

    இன்னும் சில கருத்துக்கள் வெவ்வேறு பக்கங்களிலிருந்து:

    ”சமூக சீர்திருத்த வேட்கை நிரம்பிய இவற்றில் (40 வருட திராவிட இயக்க படைப்புகளில்) பிரசார அம்சம் அதிகம். கலை அம்சம் குறைவு (ப. 29). கலை அம்சத்தைவிட கருத்து வலியுறுத்தலுக்கே சிறப்பிடம் (ப. 57). உரத்த குரலில் பேசுவதைத் தவிர்த்திருப்பாராயின்  (ப. 73). சில கவிதைகளில் பிரசார நெடி பலமாக அடிக்கிறது. (ப.146)  படைப்புகளில் கலை அம்சம் இருக்க வேண்டும்……சமூக நீதி கேட்கும் மக்கள் பகுதியின் வாழ்க்கையும் குரல்களும்……..படைப்புகளாகும் போது எவ்வளவு தூரம் கலை மதிப்பும், கலைத் தரமும் கொண்டதாக இருக்கின்றன என்பதைப் பொறுத்தே அவற்றின் தகுதி நிர்ணயிக்கப்படும் (ப. 309)

    இவையெல்லாம் எப்போது சொல்லப்பட்ட கருத்துக்கள் என்பது தெரியவில்லை. இந்தத் திகசியை பொதுவாக அறியப்பட்ட திகசியில் அடையாளம் காணமுடியாது. ஆனல்,  இதற்குப் பின்னும் திகசி கட்சி கோஷங்களை விட்டவரில்லை.

    அதற்கு ஒரு சோறு பதமாக அவர் பாராட்டும் ஒரு கவிதையையும் அவர் பாராட்டையும் தரவேண்டும்.

    எங்கள் இலக்கியப் படைப்புகள் யாவும்

    அறுசுவை கொண்ட

    அரிசியின் சிற்றுண்டிகளை

    நினைவுறுத்த வல்லவை. ஆம்

    அவை யாவும் அடிப்படையில்

    அரிசிக் கவிதை கதை கட்டுரைகளே!

    அவற்றைப் படைக்கும் நாங்களும்

    அரிசிப் படைப்பு பண்பாட்டாளர்களே!”

     

    இது கவிதை எனவும், இவற்றில் நயம் அழகு, அருமையான முத்தாய்ப்பு எல்லாம் இருப்பதாக திகசி பாராட்டுகிறார்.(ப. 319) ஆனால் ஒன்று, கட்சியும் அது தந்த கொள்கைகளும் திகசி என்ற மனிதரை முற்றிலுமாக மாற்றிவிடவில்லை. ஆனால் சுமார் ஐம்பது வருட காலம் நீடித்து வந்துள்ளது.

    திகசி யின் இந்த கட்டுரைத் தொகுப்பு 1999- ஆண்டுக்கான  சாஹித்ய அகாடமியின் தமிழ் விருது பெற்றது. நான் நிரந்தரமாகச் சென்னைக்குத் திரும்பியதும், பங்கு பெற்ற முதல் இலக்கியக் கூட்டம் திகசி-க்கான பாராட்டு விழா தான். திகசி தன் நன்றியுரையில் மேடையில் இருந்த சிவகாமி பக்கம் பார்த்த வாறே அடுத்த ஆண்டு விருது ஒரு பெண் எழுத்தாளருக்குத் தரப்படவேண்டும் என்பது தன் விருப்பம் என்று சொல்லி அகாடமியின் செயலர் சச்சிதானந்திடம், “இதை ப்ரெசிடெண்ட் ரமா காந்த் ராத்திடம்  ஆங்கிலத்தில் சொல்லுங்கள்” என்றார். இந்த விருது அவருக்கு மன நிறைவைத் தந்த ஒன்று என எனக்குத் தோன்றியது. எண்பது வருட வயதினருக்கு 60 வருட கால உழைப்பிற்குப் பிறகு வந்த அந்த சந்தோஷத்திற்கு உரியவர் தான் அவர்.

    பல சமயங்களில் அவர் கட்சிக்காரராகவே நடந்து கொள்வதில்லை. அந்த சமயம் திகசியின் நினைப்பும் பேச்சும், ஐந்து சித்தாந்தங்களை ஒரு சேர பிரகடனம் செய்து வந்தது. “பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம், சூழலியம், தமிழியம். என்பன அந்த ஐந்து சித்தாந்தங்கள்.  அவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு பொதிகை தொலைக்காட்சியின் நேர்காணலில் தனக்கு வழிகாட்டியாக,தம் வாழ்க்கையை வடிவமைத்தவர்களாக, திருவள்ளுவரிலிருந்து தொடங்கி கம்பன், வள்ளலார் என்று எல்லாரையும் கடந்து வந்து பாரதி, ஜீவா வரை ஒரு நீண்ட பட்டியலையே வாசித்தார். வம்பற்ற பாடு. தவறிப் போய்க்கூட மார்க்ஸிலிருந்து தொடங்கி, ஸ்டாலின், ராமமூர்த்தி நம்பூதிரிபாத் பாட்டையில் அவர் செல்லவில்லை.

    தாமரையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு அவரை ஒரு கூண்டுக்குள், என்ன, எந்தக் கூண்டுக்குள்ளும் அவர் அடைபடவில்லை.  90 வயதை எட்டிப் பார்ப்பவரிடம் கட்சியும் அவர் இஷ்டத்துக்கு விட்டு விட்டார்கள். ஓய்வு பெற்றுவிட்டவரை எந்த நிர்வாகம் தான் என்ன செய்யும்?

    நான் இங்கு பங்களூருக்கு குடி பெயர்ந்த பிறகு ஒரு நாள் திடீரென்று சித்தன் பிரசாதிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் யுகமாயினியில் என்னை எழுத அழைத்ததிலிருந்து பழக்கம். நேரில் பார்த்ததுமில்லை. பழகியதுமில்லை. உறவை வளர்த்தது தொலைபேசிதான். தமிழை இனி உய்விக்கவேண்டிய அவசியம் தனக்கில்லை யுகமாயினி கடையைப் பூட்டிவிட்டு தமிழ் சினிமாவுக்கு ஏதாவது சேவை செய்யமுடியுமா? என்று கிளம்பிவிட்டார். 2012 வருட இடைப்பட்ட  மாதஙகளில் ஒரு நாள் முன்னிரவு நேரம் என்று நினைவு, அவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. “நான் சித்தன் பிரசாத் பேசறேன், சாமிநாதன். திருநெல்வேலியிலே இருக்கேன் இப்போது. திகசி வீட்டில் அவர் என் பக்கத்தில் தான் உட்கார்ந்திருக்கார். அவருக்கு உங்களோட பேசணுமாம். பேசுங்க” என்றார். திகசி பேசினார். எனது சௌக்கியம் பற்றி விசாரணையோடு, “அங்கே நீங்க என்ன பண்றீங்க. இங்கே ஒருக்கா வாங்களேன். நானும் தனியாத் தான் இருக்கேன். நீங்களும் இப்போ தனி ஆளாப் போயிட்டிங்க. நீங்க வாங்க இங்கே. என்னொடு பத்து நாள் இருங்க” என்றார். ஆச்சரியமாக இருந்தது. சந்தோஷமாக இருந்தது. அதிலும் ஒருவர் பெயர் இன்னொருவருக்குத் தெரிந்த காலத்திலிருந்தே சண்டை தான்  போட்டுக் கொண்டிருந்தோம். கடைசியில் இந்த சிஐஏ ஏஜெண்டை இவ்வளவு பரிவுடன், சினேக பாவத்துடன் அழைக்கிறாரே. மனித ஹிருதயம் தான் எத்தனை விசித்திரமான ஒன்று! எனக்கு அவரைக் கொஞ்சம் சீண்டத் தோன்றியது. “எதுக்கு ஐயா. நாம எழுத்திலே ஐம்பது வருஷமா சண்டை போட்டதை நேரிலேயே தொடரலாம்னா?” என்று கேட்டேன். அதற்கு அவர் சளைக்கவில்லை. “வாங்க நிறைய பேசலாம் .சண்டையும் போடலாம். திரும்பிப் போய் திகசி இன்னமும் அதே முட்டாளாத் தான் இருக்கான்னு எழுதுங்க” என்றார். சிரித்துக் கொண்டோம். இந்த வயசிலே எவ்வளவு உரக்கவும் சௌஜன்யத்துடனும் பேசமுடிகிறது அவரால்!

    ”சந்திக்கலாம் வரேன் எப்போ வாய்க்கிறதோ பார்க்கலாம்” என்றேன். சரி மனசிலே வச்சுக்கங்க. இப்போ வேண்டாம். ஒரே வெக்கையா இருக்கு. பவர் கட் வேறே நாள்முழுக்க. இது கொஞ்சம் சீரானதும் சொல்றேன். வாங்க” என்றார்.

    இதற்கு கொஞ்ச நாள் பிறகு ஃபேஸ் புக்கில் சு.கா. திடீரென அசரீரியாக தரிசனம் தந்தார். அது தான் அவரோடு முதல் பரிச்சயம். அவரது குரல் அல்ல. எழுத்து தான் பேசிற்று. உலகத்து எழுத்தாளர்கள் எல்லோரையும் நாம் அப்படித்தானே தெரிந்து பரிச்சயம் கொள்கிறோம், அந்த மரபு கெட்டு விடக்கூடாது என்றிருப்பவர் சு.கா. என்று தெரிந்து கொண்டேன்.  அதற்கு ஒரு வருடத்திற்கு முன் “வாதங்கள், விவாதங்கள்” வெளியீட்டின் போது அவர் வந்திருந்ததாகச் சொன்னார்கள். அப்போது தரிசனம் தருவதற்கு இன்னம் வேளை வரவில்லை என்று நினைத்திருக்கலாம். பிறகு ஒரு நாள் அவர் குரலையும் கேட்டேன். அவரும் சொன்னார்,  ”நீங்கள் ஒரு முறை திருநெல்வேலி வந்து அவருடன் சில நாட்கள் இருக்கவேண்டும் என்று திகசி உங்களிடம் சொல்லச் சொன்னார்.  இதற்கு முன்னரே  அவர் அழைப்பு எனக்கு தொலைபேசியில் வந்ததைச் சொன்னேன்.  எனக்கு துணையாக யாராவது வந்தால் தான் நான் எங்கும் செல்ல முடியும்.  எல்லோரும் சேர்ந்தே போகலாமே, நான் நீங்கள், சொல்வனம் சேது, பாரதி மணி எல்லோரும் சென்னை வழியாகவே போகலாம். எல்லோரும் சேர்ந்து பேசிக்கொண்டே பயணம் செல்வது சுகமாகவும் இருக்கும். எனக்கும் துணை இருக்கும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றேன். நாட்கள் கடந்தன. சேது ஃபின்லாந்து போய்விட்டார். பாரதி மணி தில்லிக்கோ குர்காவ்ன்க்கோ போய் விடுவார். சுகா வுக்கு அவரது நிர்பந்தங்கள். இப்படி நாட்கள் கடந்தன.

    இடையில் சொல்வனத்தில் சுகா அவர் தனக்கென அவரே உருவாக்கிக் கொண்டுள்ள ஒரு புதிய சுவாரஸ்யமான வடிவில் திகசியைப் பற்றிய பாசமும் வியப்பும் நிறைந்த ஒரு அழகான சித்திரம் வரைந்திருந்தார். அதில் மறுபடியும் திகசியின் அழைப்பு பற்றி. அதை சுகாவே அவரது எழுத்திலேயே சொல்லட்டும். என் வார்த்தைகளில் சொவது சுகாவின் எழுத்து அழகைக் கெடுத்துவிடும். சுகா எழுத்துக்கு நான் நியாயம் செய்ய வேண்டும்.

    தி..சி தாத்தாவை கடுமையாக விமர்சித்து எழுதிய, எழுதுகிற, எழுத இருக்கிறவரிடம் என்ன செய்தியைச் சொல்ல இருக்கிறாரோ என்ற கலக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல், ‘சொல்லுங்க தாத்தாஎன்றேன். ‘அவரு மனைவியும் காலமான பெறகு பெங்களூர்ல தனியா உக்காந்து என்ன செய்யுதாரு? இங்கன ஒத்தக்காட்டுக் கொரங்கா நானும் தனியாத்தானெய்யா இருக்கென்? இங்கெ வந்து ஒரு வாரம், பத்து நாளு எங்கூட இருக்கச் சொல்லுங்கய்யாஎன்றார்.

    உடனே பதில் சொல்லத் தெரியாமல் திணறினேன். ஆனால் அதை கவனிக்கும் மனநிலையில் தி..சி தாத்தா இல்லை. அவர் மனம் எங்கோ சென்று கொண்டிருந்ததை அவரது முகம் காட்டியது.

    என்னா மனுசன்யா அவரெல்லாம்? கருத்து ரீதியா நாங்க ரெண்டு பேரும் எதிர் எதிரானவங்கதான். எல்லாத்தயும் தாண்டி மனுசனுக்கு மனுசந்தானெ முக்கியம். அதத்தானெ எல்லா இலக்கியமும் சொல்லுது! தமிழ் இலக்கிய விமர்சனத்துக்கு அவரு எவ்வளவு செஞ்சிருக்காரு!’

    நான் குறுக்கிடாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டேயிருந்தேன்.

    சட்டென்று என் முகம் பார்த்து, ‘ஐயா, இங்கெ வந்து என் கூட கொஞ்ச நாளு இருந்துட்டு போயி, ‘தி..சி ஒரு முட்டாள்னு எளுதட்டுமெ! அதுக்காகவாது வெங்கட் சாமிநாதன் இங்கெ வரலாம்லா! என்ன சொல்லுதேரு?’.

    சொல்லிவிட்டு, சத்தமாக தனது வழக்கமான சிரிப்பைச் சிரித்தார்.

    (மூத்தோர் – சுகா – சொல்வனம் 21.10.2012)

    எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது சென்னை செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. குடும்பத்தோடு.  நான் நண்பரும் ஓவியரும், அண்ணா பல்கலைக் கழக பேராசிரியருமான (நான் என்னவாக இருந்தாலும் பெரியவர்களின் சிநேகம் எப்படியோ எனக்கு வாய்த்து விடும் பாக்கியம் எனக்கு) சீனிவாசனுடன் தங்கினேன். திடீரென நான் போய்ச் சேர்ந்த இரண்டாம் நாளே சீனுவாசன், ”வாங்க திருநெல்வேலி வரை என்னுடைய காரிலேயே போய் வருவோம்” என்று சொல்ல, கிளம்பி விட்டோம். கூட கோபியின் புது நட்பு. வழியில் ராஜபாளையத்தில் இறங்கி மணி, கடையத்தில் இறங்கி கலாப்ரியா சந்திப்புகள்.  காலை எழுந்ததும் காலை உணவுக்குப் பிறகு சுடலை மாடன் தெருவுக்கு திகசியைப் பார்க்க கிளம்பினோம். நான் ஆச்சரியத்தில் மூழ்கியிருந்தேன். எவ்வளவு காலம் திட்டமிட்டுக் கொண்டிருந்தது நடவாதது, திடீரென திட்டமிடாமலேயே எல்லாம் நடந்து விடுகிறது!! சின்ன குறுகிய தெருதான். ஆனால் நீண்ட தெரு. திகசியின் வீட்டு வெளிக்கதவைத் தாண்டி உள்ளே காலடி வைத்தால், சுகா தந்திருந்த புகைப்படத்தில் காணும் அதே காட்சி. தாழ்வாரத்தின் கோடியில் தன் அறைக்கு எதிரே ஒரு நாற்காலியில் அமர்ந்து குனிந்து எழுதிக்கொண்டிருக்கிறார். மெதுவாக உள்ளே சென்று அவர் அருகில் நிற்பதற்குள் ஏதோ நடமாட்டம் அறிந்து தலை நிமர்கிறார்.  சீனுவாசனுக்கு திகசியையும் அவரது திருநேலி சகாக்கள் வண்ணதாசன் கலாப்ரியா, எல்லோரையும் தெரியும். எங்களையெல்லாம் பார்த்ததும் அவரது முகக் களிப்பைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது.  மனித உறவுகளும் பாசமும் அந்த வயதில் அபரிமிதமாகப் பொங்கி எழும்.  இல்லாத போது ஏக்கம் சூழும். பேச்சு, படிப்பு, உற்சாகப்படுத்தி எழுதும் கடிதங்கள் இவை தான் அவரது தினசரி வாழ்க்கை. தனி மனிதர். தனித்து வாழவே ஆசை. பக்கத்தில் சில வீடுகள் தள்ளி ஒருவர் அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்கிறார். தினசரி பத்திரிகைகள் செய்தித் தாள்கள் வந்து சேர்ந்து விடுகிறது இன்னொரு நெடுங்கால அன்பரின் தயவில். போன உடன் பெரிதாக கொட்டை எழுத்தில் எழுதி வைக்கப் பட்டுள்ள அட்டையைக் காண்பிக்கிறார். அதிகம் அவரைப் பேச விடவேண்டாம். என்று ஒரு எச்சரிக்கை அதில் .  காது அவ்வளவாகக் கேட்பதில்லை. உரத்துப் பேசியும் பயனில்லை. எச்சரிக்கை அட்டையைக் காண்பித்து கீழே வைத்தவர் தான். அவர் தான் பேசிக்கொண்டிருக்கிறார். பயந்து பயந்து சில வார்த்தைகள் பேசியும் தலையை ஆட்டி பதில் தந்து கொண்டும் இருந்தோம் பக்கத்தில் உள்ள அன்பர்களும் வந்து சேர்ந்தார்கள். வயோதிகத்தையும் உடல் பலஹீனத்தையும் மீறி அவர்தான் எங்கள் எல்லொரையும் விட அதிக உற்சாகத்துடன் ஜீவனுடன் இருந்தார். (He was more lively and active than any of us there) பக்கத்துச் சிறிய அறை முழுதும் பத்திரிகைகள் புத்தகங்கள். ஏதோ பழைய பத்திரிகைக் கடை மாதிரி. வெளியே வராந்தாவில் அவர் காலடியிலும் பத்திரிகைகள் பரவிக் கிடந்தன.  அன்றாட உலகின் அக்கறை கொண்டும் அதே சமயம் விலகியும் தனித்து ஏதோ ஆஸ்ரமத்தில் வாழும் ரிஷி மாதிரி திகசி தந்த அந்த 2013 டிஸம்பர் காட்சி. சில மைல் தூரத்தில் வாழும் வண்ணதாசன் அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்கிறார்.  திகசி பிடிவாதமாக தனித்து வாழவே தேர்ந்து கொண்டுள்ளார். அதுவும் என் மனதில் அவரிடம் மரியாதை உணர்வையும்  வியப்பையும் உண்டாக்கியது. இந்த அமைதியும் தைரியமும் எனக்கும் ஆண்டவன் அருள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். தனிமை தான். இருப்பினும் உலகோடு உறவு அறவில்லை. நிறைய அன்பர்களும் நண்பர்களும் சிஷ்யகோடிகளும் வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.

    இரண்டு மணிநேரம் அங்கு இருந்திருப்போமா? இருக்கலாம். அவரிடமிருந்து விடை பெற்றுக்கொண்டோம். திருநெல்வேலியிலிருந்து அரவிந்தன் நீலகண்டனையும் அவரது அப்பாவையும் பார்க்க அவரைப் பார்த்து வருடங்கள் பல ஆகிவிட்டன. இனி எப்போது வாய்ப்பு கிட்டுமோ. நாகர் கோயில் போய்க்கொண்டிருந்தோம். சுபாஷிணி திகசியின் வீட்டில் இருப்பதாகவும் அவர் என்னைப் பார்க்க விரும்புவதாகவும் செய்தி வந்தது. நாங்கள் திருநெல்வேலியிலிருப்பதாக அவர்கள் நினைத்திருக்கிறார்கள்.

    நாங்கள் அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்ற சிலமணி  நேரத்துக்குள் சென்னையிலிருந்து சுபாஷிணி திகசியைப் பார்க்க அவர் வீட்டில். மனித உறவின் நெருக்கத்தை விடாத நிறை வாழ்வு தான். இதை விட வேறென்ன வேண்டும்

    2014 மார்ச் 25ம் தேதி அவர் மறைந்து விட்டார். இன்னம் ஐந்து நாட்களில் அவரது  90 வயது பூர்த்தியாகி, 91 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் வந்து கொண்டிருக்கும். அவருக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களில் இலக்கிய மற்றும் பத்திரிகை உலகினர் கூட்டம் ஆச்சரியம் இல்லை வை.கோவும் நல்லகண்ணுவும் கூட ஈர்க்கப்பட்டனர் என்பது திகசியின் ஆளுமையின் வியாபகத்தைச் சொல்லும். அவருக்கு அஞ்சலி செலுத்தியவர்களில் அவர் காலத்தில் காய்ச்சி வறுத்தெடுத்த வணிகப் பத்திரிகைகளும் இருந்தன.

    எவ்வளவு கடுமையான கருத்து வேறுபாட்டிலும், மனித உறவுகளை அவர் மறக்கவில்லை. எந்த வகைப் பாட்டிலும் அடங்காத சுகாவின் எழுத்தை உடன் இனம் கண்டு பாராட்டினார் என்றால், கட்சி வாய்ப்பாடு அவரது உணர்வுகளை மழுங்கடிக்கவில்லை என்று தானே அர்த்தம்? தாமிரபரணி தண்ணீரின் ஈர்ப்பும் இருக்கும் தான். ஆனால், பொது உலகில் அவருக்கு கட்சிரீதியாக எதிர்த் தரப்பில் நான் இருந்தாலும் மனதிற்குள் என்னிடம் அவர் சினேக உணர்வும் பாராட்டுமே கொண்டிருந்தார்.  நான் அவர் விருப்பப்படியே நேரில் சென்று அவருடன் சில மணி நேரங்களாவது சக மனிதர்களாக சந்தோஷத்துடன் கழித்தது அவருக்கும் சந்தோஷத்தைத் தந்திருக்கும். எனக்கும் கட்சி மறைத்து வைத்திருந்த ஒரு சக மனிதரைக் கண்டதில் சந்தோஷம்.

    வெங்கட் சாமிநாதன்/6.6.2014

    Share
  • பயணத்தின் அடுத்த கட்டம

    வெங்கட் சாமிநாதன்

    இது நினைவுகளின் சுவட்டில் இரண்டாம் பாகம். ஹிராகுட் அணைக்கட்டில் கழிந்த ஆறுவருட வாழ்க்கை. 1950 மார்ச்சிலிருந்து 1956 டிஸம்பர் வரை. எப்படியோ இது எழுதப்பட்டுக்கொண்டு வருகிறது. இரண்டு அன்பர்களின் தூண்டுதல் என் சிந்தையில் விதைத்தது. எழுதி வருகிறேன். இருப்பினும், என் வாழ்க்கை அப்படி ஒன்றும் வீர தீரச் செயல்கள் நிறைந்ததல்ல. பின்  நிறைந்தது தான்  என்ன? ஒன்றுமில்லை தான்.  எந்த பெரிய வரலாற்றினதும் ஒரு சின்ன அங்கமாகக் கூட இருக்கும் தகுதி பெற்றதல்ல இந்த என் வாழ்க்கை எவரது சுய சரிதமும் பதிவு பெறும் தகுதி தான் என்ன? அவரவரே தீர்மானித்துக் கொள்ள வேண்டியதுதான்.

    உதாரணமாகச் சொல்லப் போனால், ராஜாஜி இந்த தேசத்தின் வரலாற்றில் கணிசமான பங்காற்றியவர். அவர் அது பற்றி எழுதியவரில்லை. தமிழ் சமூகத்தின் வரலாற்றையே கிளறி வைத்துவிட்டவர்கள் பெரியாரும் அண்ணாவும். இவர்களும் கூட தம் சுயசரிதத்தை எழுதியவர்கள் இல்லை. காந்தியும் நேருவும் எழுதத் தொடங்கி பாதியில் நிறுத்தி தேசத்தின்  வரலாறு ஆகி மறைந்துவிட்டார்கள். இப்படி இருக்க,  தமிழ் எழுத்துலகில் கூட ஒரு பொருட்டாக இல்லாத நான் என் வாழ்க்கையை எழுதப் புகுந்தது ஏதோ சுயபிரமையில் ஆழ்ந்து செறுக்கு மிகுந்த காரியமாகப் படும். அது ஒரு பார்வை. அத்தகைய செறுக்கு மிகுந்த எழுத்துக்கள்தாம் பெரும்பாலும் இங்கு தமிழ் சமூகத்தில் உண்டு. அவர்கள் தமக்கு உகந்த ஒரு சித்திரத்தை தாமே உருவாக்கித் தமிழ் சமூகத்துக்குத் தந்து செல்கிறார்கள். எது தன்னைப் பற்றி அறியப்பட வேண்டும் என்று தானே எழுதிக் குவித்துவிடும் காரியங்கள் நடக்கின்றன. பெரிய பெரிய காரியங்கள் படைத்தவர்கள், தேசத்தின் போக்கையே நிர்ணயித்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அது பற்றி எழுதாவிட்டாலும் எழுதுபவர்கள் ஒரு மாதிரியான பக்தி நிறைந்தவர்கள். அவர்கள் எழுத்தில் வெட்டலும் கூட்டலும் நிறைந்திருக்கும். அவர்கள் வரம் வேண்டி நிற்பவர்கள். அல்லது வரங்கள் பல பெற்றதன் நன்றிக்கடன் செலுத்துபவர்கள். இன்றைய மாறிய சமூக அரசியல் சூழலில் இம்மாதிரி நிறைய நடந்தேறி வருகின்றன. பக்தியின் பிறழ்ச்சி.

    பக்தி இயக்கம் தோன்றியதே தமிழ் நாட்டில் தானே. உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெத்திலையும் எல்லாம் கண்ணனாகவே கண்ட ஒரு ஆழ்வார், “சிக்கென உன்னைப் பிடித்தேன், இனி எங்கு எழுந்தருளுவதே”  என்று பரவசப்படும் சமயக்குரவர், “அப்பன் நீ, அம்மை நீ, அன்புடைய மாமனும் மாமியும் நீ” என்று இன்னும் ஒரு சமயக் குரவர், இவர்கள் எல்லாம் காட்டிய வழிதான். அது தான் இன்றும் தொடர்கிறது ஆனாலும் அது இத்தகைய அகோர ரூபத்தில் குணம் மாறி தாண்டவமாடமாடுவது எல்லாம் அர்த்தமிழந்து போனதையே சாட்சியப்படுத்துகின்றன. இந்த நூற்றாண்டு பக்தியின் சொரூபம் இது. அன்றைய பக்தியைச் சாடும் இன்றைய பக்தர்கள். இது ஒரு பக்கம்.

    நான் சொல்லவந்தது இன்னொரு பக்கம். அது ஒரு துருவ கோடி என்றால், இது மற்றொரு துருவ கோடி. க.நா.சு. சொல்வார்,  ”யாரும் சிறு கதை எழுத அவர்கள் வாழ்க்கையில் சில அனுபவங்கள் கட்டாயம் இருக்கும்,” என்று அவர் எழுதியிருக்கிறார். எங்கோ நினைவில்லை. இப்படி அவர் நிறைய ஆங்காங்கே உதிர்த்துச் செல்வார், வெகு சாதாரணமாக, அவையெல்லாம் பொருள் பொதிந்தவை.

    அதையே கொஞ்சம் நீட்டிச் சொல்வதென்றால், எல்லோருடைய வாழ்க்கையிலும், எந்த சாதாரணனுடைய வாழ்க்கையிலும் தான், சொல்வதற்கு, என்று நிறையவே இருக்கும். அது மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்வம் மிக்கதாகவும் இருக்கும். பிரபலங்களின் அரசியல் வாழ்க்கையை விட ஒரு சாதாரணனின் வாழ்கையில் காணும் மனித உறவுகள், அதன் நெகிழ்ச்சிகள் உண்மையானவை, உன்னதமானவை. வாழ்க்கையை இனிமையாக்குபவை.

    இது எழுதத் தொடங்கிய பின் தான் கடந்த வாழ்க்கையை ஒவ்வொன்றாக நினைவு கொள்ளத் தொடங்கிய பின் தான் தெரியத் தொடங்கியது.  என்ன தான் இருக்கிறது எழுத?, அப்படி என்ன ஒரு அவதார வாழ்க்கை வாழ்ந்து விட்டோம்?, என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் தம்மை அவதார புருஷர்களாக எண்ணி தாமே எழுதியும், எழுதுவித்தும் நடமாடுபவர் களிடையே வாழும் காலத்தில், அகல் பதிப்பக பஷீரும், தமிழ் சிஃபி அண்ணா கண்ணனும் போயும் போயும் என்னை எழுதத் தூண்டியதும் சரி, மேடை கிடைக்கிறது, கேட்கிறார்கள் எழுதுவோமே, என்னதான் சாதாரணமான வாழ்க்கையே ஆன போதிலும், க.நா.சு. சொன்னது போல, யாருடைய வாழ்க்கையில் எழுதுவதற்கு விஷயங்கள், மனிதர்கள், சம்பவங்கள் இருக்கத் தான் செய்கின்றன என்று தெரிந்தது. ஏதோ எந்த முனைப்பும் இன்றி எழுதிச் சென்றேன். நடந்ததை நினைவில் கொண்டு நினைவில் வந்தவாறே. இயல்பாக எழுதிச் சென்றதில் சொல்ல கொஞ்சம் இருந்திருக்கிறது. அதிலிருந்து தனித்து பின் அட்டையில் பிரதானப்படுத்திச் சொல்ல என்று பஷீரை எடுக்கத் தூண்டியிருக்கிறது. அதுவே ஒரு விதத்தில் இந்த சுய வரலாற்றீன் ஆதார சுருதி என்றும் சொல்லலாம்..

    ”என் வாழ்க்கையில் அப்படி எழுத ஒன்றுமே இல்லை. எழுத்துலகிலும் வெளியிலும் சின உன்னதமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களது சில குறைகளையும் பலவீனங்களையும் மீறி. அவர்கள் உன்னதமான மனிதர்கள் தான். சில கடைத்தரமான இழிதகைகளையும் சந்தித்திருக்கிறேன். எழுத்துலகிலும் வெளியிலும், அவர்களது சில பலங்களையும் மீறி, அவர்கள் இழிந்த மனிதர்கள் தான்.

    எவ்வளவோ மாற்றங்கள், வாழ்க்கை நியதிகளில், கலாசாரத்தில், வாழ்க்கை மதிப்புகளில், அவற்றை நினைத்துப் பார்த்தால் திகைப்பாக இருக்கும்.”

    முதல் பாகம் எழுதத் தொடங்கும் போதே இதெல்லாம் தானாகவே எழுதிச் சென்றது என்று தான் சொல்ல வேண்டும். முதல் சில பக்கங்களிலேயே இது திட்டமிடாமலேயே தன் இயல்பில் தானாகவே எழுதிக்கொண்டுவிட்டது என்று சொல்லத் தோன்றுகிறது. நினைவில் வந்ததையெல்லாம் எழுதுகிறோம். நினைவுக்கு வந்த ஒழுங்கில், வரிசையில். முதல் பாகம் அச்சிட்டு வெளிவந்ததைப் பார்த்தால், அட்டையின் பின் பக்கத்தில் இந்த வாசகங்கள். தன்னையே எழுதிக்கொண்டது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?

    “உங்கள் சுய சரிதையை எழுதுங்கள்” என்று முதலில் அண்ணாகண்ணனும் பஷீரும் சொன்ன போது கொஞ்சம் அலட்சியமாகவே, என்ன இருக்கு எழுத? என்று நினைத்த போதிலும், பின்னர் எழுத தொடங்கியதும், அவ்வப்போது நினைவில் எழுந்ததை எழுதி வரும்போது, எந்த கட்டத்திலும் எந்த வயதிலும், எந்த இடத்திலும் வாழ்க்கை எனக்கு  வாழத் தகுதியான ஒன்றாகவே இருந்ததாகதான் எண்ணுகிறேன்.. அந்த அனுபவங்கள் எதாக இருந்தாலும் ஏமாற்றமோ, ஆச்சரியமோ, துன்பமோ சந்தோஷமோ எல்லாமே, அததற்குரிய மன நெகிழ்வைத் தருவனவாகவே இருந்தன. பாட்டியின் அன்பும், மாமாவின் கரிசனமும், உடலையும் மனத்தையும் வாட்டி வருத்தும் வறுமையையும் மீறி. எந்த பிரதி பலனையும் எதிர்பாராது, உறவுகளுடன் கொண்ட தன் சக்திக்கு மீறிய பாசம்

    இந்த பாசமும், உறவுகளின் நெருக்கமும், தான் இன்னமும் தொடர்கின்றன. அது பாட்டியோ மாமாவோ இல்லாமல் இருக்கலாம் அது 1935 தொடக்கம். அன்று தொடங்கிய மனதுக்கு இதமும் இனிமையுமான நினைவுகள் ஹிராகுட் என்று, ராஜா, மிருணால் காந்தி சக்கரவர்த்தி, அவன் தாயும் தங்கைகளும், ரோத்தக்கிலிருந்து வீட்டை விட்டும் அண்ணனைப் பார்க்க ரயிலேறி நாலைந்து இடங்களில் வண்டி மாறி, கிடைத்ததைச் சாப்பிட்டு புர்லா வந்து கதவைத் தட்டிய அந்தச் சிறுமி, சோப்ராவின் தங்கை, சீனிவாசன், என்று நீளும். எத்தனை சம்பவங்கள், விஜயலட்சுமி, அபிஜீத் சாக்ஸேனா, நீனா, வையெல்லாம் கடந்து தஞ்சை பிரகாஷ் வரை நீளும். ஜெயந்தன் வரைக்கும் கூடத்தான்.எனக்குத் தெரிந்தவரை எந்த கழகத்துடனும் அனுதாபம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால்,. பெரியாரிடம் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டை பக்தி என்றே சொல்லவேண்டும். . ஆனால் என்னுடனான அவரது சினேக பந்தத்திற்கு அதெல்லாம் ஒரு தடையாக இருந்ததில்லை. மறந்து விடுவார். அது பாட்டுக்கு அது. இது பாட்டுக்கு இது என்கிறமாதிரி. .இவ்வளவும் ஒருவனை வெறுப்பதற்கு பாப்பான் என்ற விவரம் போதும் என்னும் இரண்டு தலைமுறை தமிழகச் சமூகச் சூழலில்.அவர் சிக்கியதில்லை. ஜெயந்தனின் இந்த சினேகம் மிகப் பெரிய விஷயம் . அந்த வரலாறு பூராவும் சொல்லியாக வேண்டும். அந்த சினேகங்கள், நெகிழ்ச்சி தரும் அனுபவங்கள் எல்லாம் திரும்ப என் நினைவுகளில் ஓடும். அது ஒரு சுகமான அனுபவம். சாதாரண என் வாழ்க்கைக்கு இனிமை தந்தவர்கள்.  என்னால் ஆவதென்ன? இவர்கள் என்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. பம்பாயிலிருந்து தில்லி வரும் ஃப்ராண்டியர் மெயிலில குளிரில் படுத்து உறக்கத்திலிருக்கும் எனக்கு எதிர் சீட்டில் இருக்கும் யாரோ அன்னிய பெண்மணி தன்னிடமிருந்த ஒரு போர்வையை தூக்கத்திலிருந்த எனக்குப் போர்த்தியது என்ன எதிர்பார்த்து?  ராஜஸ்தானிலிருந்து வந்து ஆக்ராவில் வண்டியேறிய சென்னைக்குப் போகும் ஒரு குடும்பம், அவர்களில் ஒரு மூத்த ஸ்திரீ, ஆச்சரியத்தில்  என்னைப் பார்த்து  சந்தோஷத்துடன் முகம் மலர்ந்து ”அட நீங்களா?” என்று தான் கூச்சலே இட்டாள். அவளை பத்து நாட்களுக்கு முன் அதே வண்டியில் சென்னையிலிருந்து தில்லி செல்லும் பயணத்தில் பார்த்தேன். அப்போது நட்பு பாராட்டி, என்னோடு தம் உணவைப் பகிர்ந்து கொண்ட குடும்பத்தினள் அவள். என்னிடமிருந்து அவள் பெற்றது எதுவும் இல்லை. மீண்டும் சந்தித்த சந்தோஷத்தில் அவள் முகம் மலர்ந்தது, எதை எதிர்பார்த்து?

    இதெல்லாம் தான் என் வாழ்க்கை. அதற்கு அர்த்தம் தரும் கணங்கள். இந்த பழைய நினைவுகள் அவ்வப்போது மனதை வருடிச் செல்லும் போது மனத்திரையில் காட்சி தரும்போது ஒரு மெல்லிய இசை, மந்திர ஸ்தாயியில்,விளம்ப காலத்தில் இழையோடும்.  இந்த நினைவுகளை காற்றோடு கரைந்து விடாது நான் பதிவு செய்வது  இந்த இதமான வருடல்களை இந்த எழுத்து இருக்கும் வரையாவது வாழ வைக்கும் என்  ஆசையில் தான்.

    வைத்திய நாத சிவனும், தீக்ஷிதரும், தியாகய்யரும் பாடிக் கேட்கும் அனுபவம் எப்படி இருந்திருக்கும்? யாருக்குத் தெரியும்? மைலாப்பூர்  கௌரி அம்மாள் தன் யௌவன காலத்தில் கோயில் உற்சவத்தில்  நடனமாடும் காட்சி எப்படி இருந்திருக்கும்? என்று நினைத்துப் பார்ப்பதுண்டு காற்றில் கரைந்தது கரைந்தது தானே. என் நினைவுகளின் இனிமையை, என் அனுபவங்களின் சிலிர்ப்பை எழுதியாவது வைக்கலாமே. எனக்கு இவற்றை அளித்தவர்களுக்கு நான் காட்டும் நன்றி உணர்வு தான் இது.

    அன்போடு பழகிய மூத்த உறவினர்களின் புகைப்படங்களைப் பார்ப்பது போல. 1947 மதுரை கிழக்குச் சித்திரை வீதியின் மனித நடமாட்டத்தை புகைப்படத்தில் பார்ப்பது போல. அதைப் பார்த்ததும் மனதில் ஒரு கிளர்ச்சி. ஒரு சோக உணர்வின் இழையோடுமில்லையா? கிட்டப்பாவின் “எவரனி” டேப்பில் கேட்பது போல.

    எழுத்தில் நான் சொல்ல முடியும். ஆனால் அந்த எழுத்து அந்த நினைவுகளின் போது என் மனத்திரையில் ஓடும் காட்சிகளையும் உணர்வுகளையும் கொண்டு வருமா? அவை எனக்குள் சிறை பட்டது. அந்த புகைப்படங்கள் இருந்தால் அந்தப் பழைய வண்டியூர் தெப்பக்குளத்தைப் பார்ப்பது போல. இன்று அது உயிர் இழந்த, இழக்க வைக்கப்பட்ட ஒன்று. நினைவுகளின் சுவட்டில் முதல் பாகம் வெளியிடப்பட்ட போதாவது, உடையாளூரின் கோவில் தெருக்கள், என் மாமா, பெற்றோர் புகைப் படங்கள் கிடைத்தன. ஆனால் ஹிராகுட் வாழ்க்கையைக் காட்சிப் படுத்த,, உறவாடிய நண்பர்கள் யாருடைய புகைப்படங்களும் இல்லை. அந்நாட்களில் இப்போது போல, புகைப் படம் என்பது எல்லோருக்கும் எப்போதும் சுலபமாக கைவசப்படும் ஒன்றலல. 1952-53 ல் புர்லா நண்பர்கள் வெளியூரில் சுற்றிய போது எடுத்த படங்கள் இருந்தன. எங்கள் அலுவலக அதிகாரி லாமெக் பிலாய்க்கு மாற்றலாகிச் சென்ற போது எடுத்த க்ரூப் போட்டோ எனக்கு நினைவிலிருக்கிறது. அதில் மிருணால் இருப்பான். அது எதுவும் எங்கே போயிற்றோ. எனக்கு இவையெல்லாம் மிகப் பெரிய இழப்புக்கள். எண்ணும் போதே ஒரு சோகம் கப்பும் இழப்புக்கள்.

    இருப்பது மெல்ல மெல்ல மங்கி மறைந்து வரும் நினைவுகள். அந்நினைவுகள் தரும் இப்பதிவுகள். இவை ஓரளவுக்கு அந்நாளைய வாழ்க்கையை, மனிதர்களை, பேணிய வாழ்க்கை மதிப்புகளை, ஒரு வேளை சொல்லலாம். ஆனால் வாழ்ந்த உணர்வுகள். மனத்திலோடும் காட்சிகள்…..? அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. இருப்பினும் இந்த நினைவுகள் வல்லமை இணையத்தில் அவ்வப்போது எழுதப்பட்டு வரும் போது, நான் பேசும் ஹிராகுட், புர்லா பற்றியும் அந்நாளில் பேசப்பட்ட விஷயங்கள் பற்றியும் அறிந்த அன்பர் எங்கிருந்தோ வந்து அவ்வப்போது தன் மனப்பதிவுகளையும் சொல்லி வந்தார். அவை எனக்கு அளித்த சந்தோஷங்கள், எதிர்பாராது வந்தவை தான். இதோ அதில் ஒன்று.

    இன்னம்பூரான்
    08 10 2011

    இன்னம்பூரான் wrote on 8 October, 2011, 19:54

    கிட்டத்தட்ட 16 மாதங்களுக்கு முன் இது விஷயமாக, நான் கட்டுரை ஆசிரியருக்கு, வேறு ஒரு தளத்தில் எழுதியது:
    *
    அன்புள்ள திரு.வெ.சா. அவர்களுக்கு,
    அன்றொரு நாள் ஒரிஸ்ஸா பாலசுப்ரமண்யம் வந்திருந்தார். மகிழ்ச்சியுடன் இருவரும் ஒரிஸ்ஸாவின் புகழ் பாடிக்கொண்டிருந்தோம். இயற்கையின் மடியில் தூங்கி வடியும் அழகிய  பெண்குழந்தையல்லவா, அவள் ?  நான் 80-களில் ஒரிஸ்ஸாவில் பணி புரிந்தேன். ஸீதாகாந்த் மஹோபாத்ரா  அண்டைவீடு.  நினைத்தால் வரத்து போக்கு.  திரு.வெங்கட் ராமன்,  திருமதி .லீலா  வெங்கட் ராமன் ( அவர் தந்தை திரு கிருஷ்ணசாமியும்   நண்பர், ஆசான்), சுந்தரராஜன் (ஐஏஎஸ்), ஹபீப்அஹ்மத்   மீனாட்டி மிஸ்ரா [கலை உணர்வு: என்னுடன்  தமிழில் பேசினார், பந்தநல்லூரில்  குருகுலவாசம் பற்றி சொன்னார்.  கண்வெட்டு எப்படி என்று கலைஉணர்வுடன் அடித்துக் காண்பித்து என்னையும் என் மனைவியையும் அசத்தினார்.] ஆகியோர்  நட்பு.  கொரபேட் குக்கிராமத்திலிருந்து மயூர்பஞ்ச் இடிந்த அரண்மனைவரை அத்துபடி. சிமிலிபால் கோர் ஏரியாவில் அசந்தர்ப்பமான களிறு நேர்காணல், கைரி புலிக்குட்டியுடன் ஓடி விளையாட்டு, பீத்தர் கணிகா ராஜநாகம், முதலை.சம்பல்பூர் கரடி, பூரி ஜெகன்னாத் நபகளேபரில் குஷி, சாக்ஷிகோபாலில்தாருப்ரம்மன் தரிசனம். ஃபூல்பானி முதுகுடி விருந்து. சொல்லி மாளாது .போங்கள். சொல்வதில்  எனக்கு சந்தோஷம்.  ஒரு காசு கொடுத்து பாடச்சொன்னா, பத்துக்காசு கொடுத்து நிறுத்தச் சொல்லணும். நாடோடி சொன்னமாதிரி, ‘இதுவும்ஒரு ப்ருகிருதி’. கேட்பதில் மகிழ்ச்சி என்றீர்கள். அதான்.
    நீங்கள் ஒரிஸ்ஸாவில் இருந்தது 50களில்? அப்போது நான் சென்னைக்கேணியில் தவளை.


    இன்னம்பூர் பாடல் பெற்ற ஸ்தலம்; கஜப்ரிஷ்ட விமானம்    பெருமாள்  ஶ்ரீனிவாசர் நாவல்பாக்கத்தில் புலன் பெயர்ந்து  இருந்தாராம், சிலகாலம். கும்பகோணத்திலிருந்து  ஸ்வாமி மலை ரோட்டில் 3 மைல்கல், தள்ளி. நம்மூர்  இல்லை. நான் அந்த ஊர்   என்  இயர்பெயர்: ஸெளந்தரராஜன்.  ஒரு வார்த்தைகேட்டா, பத்து எழுதறேன்   சுருக்கி எழுதறான் ன்னு பேரு வேறே.
    நான் கேள்வி  கேட்கவே  இல்லையே. ‘உருப்படவைப்பது சாத்தியமேஎன்று  காமன்பாட்டு பாடினேன்.  தமிழ் நாடு அந்த வகையில் இயங்காததால், பொருள் வளம், கல்வி,  திறன்,  ஆகியவற்றில்  குறைந்த அளவே  உருப்பட்டிருக்கிறது.  மற்றவர்கள் எழுதிய  கருத்துக்களையும் படித்தேன்   உங்கள் கருத்துக்கள்  தெளிவாக இருந்தன, எனக்கு. என் ஆதங்கம் என்ன எனில், கலை உணர்வு அனிச்சமலர் போல.தொட்டாச்சிணுங்கி. சொரணை என்று ஒரு வார்த்தை சொன்னீர்கள். It is morethan aesthetics. It is more than sensitivity. It carries within itselfthe Saraswathi of ப்ரஞ்ஞை. நானும் மற்ற நாடுகளிலும், ஏன் மும்பை, டில்லி, கொல்கத்தாவில் காணப்படும் கலை ப்ரஞ்ஞையை  சென்னையில்  பார்க்க இயலவில்லை.  குறிப்பாக,  இங்கிலாந்து  கலைத்துறை விஷயங்கள்  பற்றி, குடும்ப ஈடுபாட்டினால்  தெரியும்.  நமது  பிரச்னை  இது தான். கலையும்,  அரசியலுக்கும், வணிகத்துக்கும் கைப்பொம்மையாக  இயங்கத் தொடங்கிவிட்டது.  ஒரு சின்ன உதாரணம்:  சாலியமங்கலத்தில் பாகவதமேளா நடக்கிறது.  உலகளவில்  ஒரளவு புகழப்படுகிறது.  அரசு இனி பார்க்காதது போல் பாசாங்கு  செய்யமுடியாதுவிருது  கொடுத்தார்கள்.  யாருக்கு?  நாதஸ்வர  வித்வானுக்கு மட்டும்!  அவர் கம்பீர நாட்டை ஜோராத்தான் வாசித்தார். அதுவா பாயிண்ட்?  ஏதோ பாகவத மேளா நிழலாட்டம் போல. இங்கு  சிலப்பதிகாரம்  எப்படி தழைக்கும்?

    இதுவே ஜாஸ்தி, மன்னிக்கணும்.


    அன்புடன்,
    *
    இன்னம்பூரான்
    08 10 2011

    எங்காவது ஒரு ஸஹ்ருதயர் எனக்குக் கிடைக்கமாட்டாரா என்ன? இதோ ஒருவர் இன்னம்பூரார்/

    வெங்கட் சாமிநாதன்/14.2.2014

    Share
  • ஓர் ஆல விருக்ஷம் பரப்பிய விழுதுகள்

    வெங்கட் சாமிநாதன்

    03-poorani-at-95-225x300தனக்குக் கொடுக்கப்பட்ட வாழ்வைப் பூரணமாக வாழ்ந்த பூரணி அம்மாள் தன் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது கூட தெரியாது மறைந்து விட்டார்கள். அமைதியாக. 1913-ம் ஆண்டு தமிழ் நாட்டின் ஒரு பிராமணக் குடும்பத்தில் ஒன்பது பேரில் ஒருவராகப் பிறந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? ஆனால், இப்போது அவரைப் பற்றி எண்ணும் போது, தெரிந்த ஒரு சில தகவல்களோடு தெரியாதவற்றையும் சேர்த்துப் பார்க்கும் போது தெரிகிறது, அவர் தன்னை மீறி, தன் சூழலை மீறி, தன் காலத்திய வாழ்க்கைக் கட்டுப்பாடுகளோடு வாழ்ந்தே அவற்றை மீறி தன்னை விகசித்துக்கொண்டு தன் இரண்டு தலைமுறை சந்ததிகளுக்கும் வாழ்ந்து காட்டிய ஆதர்சமாக இருந்தவர்.  தன் நூறாவது ஆண்டு பிறந்த தினத்தில் மறைந்த செய்தி கேட்டு 40 ஆண்டுகளூக்கு முன், தற்செயலாக சற்று நேரம், ஓர் இரவுச் சாப்பாட்டு நேரம் கொடுத்த ஒரு தற்செயலான அறிமுகம் தொடர்ந்த சந்திப்பு என வளர்க்கப் படாவிட்டாலும் அடிக்கடி நினைவு படுத்தி வியந்து, மனதுக்குள் சந்தோஷப்படும் கணங்கள் வந்து சென்றனதான்.

    அது ஓர் எதிர்பாராத சந்திப்பு, அறிமுகம். 1973 என்று தான் நினைவு. அப்போது  உருவாகி வந்த சிறுபான்மை இலக்கியச் சூழலில், நான் அனேகமாக எல்லோருடைய வெறுப்புக்கும் ஆளாகியிருந்த நாட்கள் அவை.  என் இயல்பில் எனக்கு மனதில் தோன்றியவற்றை தயக்கமில்லாது எழுதிச் சம்பாதித்துக்கொண்ட பகை நிறையவே.  மனதில் பட்டதை எழுதாது வேறு என்ன எழுதுவதாம் என்ற சாதாரணப் பொது அறிவின் பால், தர்மத்தின் பால் பட்ட விஷயங்கள் அவை. தாக்கப்பட்டது ஒரு சிலரே என்றாலும் அவர்களுக்கு வேண்டியவர்களும் எனக்கு பகையானார்கள்.  ஏதோ ஓர் அரசியல் கட்சியின் செயல்பாடு போலத்தான் இருந்தது. ராஜ தர்பாரில் ஒரு குழுவின் ஒருத்தரை ஏதும் சொல்லிவிட்டால் தர்பார் முழுதுமே மேலே விழுந்து பிடுங்கும் இல்லையா? கடைசியில் அது ராஜத்வேஷமாக வேறு பிரசாரப்படுத்தப்பட்டது. நிறையவே எழுத்திலும் காதோடு காதாகப் பேச்சுப் பரவலிலும் எனக்கு எதிராக நிறைய பிரசாரம் நடந்தாலும், என் கருத்துக்கு மாற்றுக் கருத்து வைக்கப்படாமலேயே, தனி மனித உறவுகள் துண்டிக்கப்பட்டன. இன்னமும் என் கருத்துக்கள் அப்படியே தொடர்ந்தாலும், எனக்கு எதிரான பகைகள் கூர் அற்றுப் போனாலும் அவை தொடர்கின்றனதான், இன்னும் பரவலாகின்றனதான்.

    எனக்கும் கொஞ்சம் சார்பாகப் பேசுகிறவர்கள் இடம் கொடுத்து கருத்து கேட்பவர்கள் இருப்பார்கள்தானே. இருந்தார்கள். அதில் ஒருவர் ஞான ரதம் என்னும் ஒரு மாதப்பத்திரிகை நடத்திவந்த இப்ராஹீம். ஜெயகாந்தனின் அத்யந்த ரசிகர், பக்தர். நான் விடுமுறையில் வந்திருந்தவன். சில நாட்கள் சென்னையில் கழிக்க வந்திருந்தேன். அந்தப் பதினைந்து இருபது நாட்கள் நான் பழகியிராத நட்புகள், நிகழ்ச்சிகள், சம்பவங்கள் நிறைந்த நாட்கள். புதிய நட்புகள். இறுகி அறுந்து விழும் பிணைப்புகள். தளர்ந்து மெலிந்து விட்டு பிரியும் சினேகங்கள் இவை எல்லாவற்றிற்கும் மையமான இருந்தது இலக்கியப் பகையும் ஜன்ம விரோதம் போன்ற புகைச்சலும்.

    அந்த மாதிரியான புதிய நிகழ்வுகள் உறவுகள் என்பதில் இருந்தவை இப்ராஹீமின் நட்பும் ஞானரத மேடையில் இடமும். இப்ராஹீமின் பத்திரிகைக்கு அதன் மூன்று விட்டு விட்டுத் தோன்றிய அவதாரங்களிலும் பெயர் ஞான ரதம் தான். கண்ணன் சாரதியாக தேர் ஓட்டும் சித்திரம் தான் அதன் அடையாளம். இது 1970 களில். இன்று சாத்தியமில்லை. இப்ராஹீமுக்கு ஒரு ஃபட்வா பிறந்திருக்கும். மீறினால் இருக்குமிடம் தெரியாது போயிருப்பார். அன்று அவர் எனக்கு அவர் மிக உறுதுணையாக இருந்தார். அடையாற்றில் ஏதோ ஒரு மெயின் ரோடின் ஓரத்தில் இருந்த தன் வீட்டுக்கு என்னையும் சிவராமுவையும் அழைத்து காலை விருந்து அளித்தார். நிறைய இட்லிகள் சாப்பிட்டோம். அப்போது நான் மௌபரீஸ் ரோடில் ஓர் உறவினர் வீட்டில் கொஞ்ச நாளும், திருமலைப் பிள்ளை ரோடில் சாரங்கன் என்னும் ஓவியரின் வீட்டில் கொஞ்ச நாளுமாக இருந்தேன். சாரங்கன் வீட்டில் இருந்தது தனிமை வேண்டி. ஜான் ஆபிரஹாமின் அக்கிரஹாரத்தில் கழுதை படத்திற்கு ஸ்க்ரிப்ட் எழுத வேண்டி.

    இப்ராஹீம் ஞானரதத்துக்கான ஒரு நேர்காணல் என்று நண்பர்கள் எல்லோரையும் சந்திக்கலாம், காந்தி மண்டப புல்வெளியில் என்றார்.  சந்தித்தோம். இப்ராஹீமையும் என்னையும் சேர்த்து சுமார் பத்துப் பேர் இருப்போம் என்று நினைவு. எனக்கு புல்வெளியில் சந்தித்தவர்களில் சுப்ரமண்ய ராஜூ, கே.வி. ராமசாமி, நா. ஜெயராமன் என்று ஒரு சிலரைத் தான் நினைவில் இருக்கிறது. எல்லோரையும் புதிதாக அன்று தான் பார்க்கிறேன். அன்று நான் சச்சரவான மனிதன் ஆனதால் கேள்விகள் நிறையக் கேட்கப்படும். பொறி பறக்கும் என்று தோன்றலாம். அப்படியெல்லாம் ஏதும் நடக்கவில்லை. மிகத் தோழமையோடு, சகஜ பாவத்தில்தான் அந்தப் பரிமாறல் நடந்தது. ஞான ரதம் கொணர்ந்த அன்பர்கள் என்பதால் வெட்டுக்குத்து இல்லாமல் போயிற்று எனக் கொள்ளலாம். இருட்டி வரும் நேரத்தில், கூட்டம் கலைந்தது. கே.வி. ராமசாமி சொன்னார். ”வாங்க இங்கே பக்கத்தில் தான் வீடு. அங்கே சாப்பிடலாம் என்றார். சென்றோம். அவர் வீடு பட்டினப் பாக்கத்தில் இருப்பதாகச் சொன்னார்கள்.

    பேசிக் கொண்டே நடந்து தான் சென்றோம் என்று நினைவு. நடப்பதற்குச் சலிக்காத நாட்கள். விரும்பிய நாட்கள். அப்போது கே.வி. ராமசாமி ஞானரதம் மூலம் அறிமுகமான பெயர். ரமணன் என்று அவ்வப்போது கவிதைகள் எழுதிய பெயரும் பழக்கமானது தான். பின்னர் தான் இருவரும் சகோதரர்கள் எனத் தெரிந்தது. கே.வி. ராமசாமியின் வீடு அடைந்ததும், நாங்கள் ஒரு நாலைந்து பேர் இருக்கும். நான் முதலில் உள்ளே நுழைந்ததும், என் முன் நின்றது ஓர் வயதான அம்மையார். ராமசாமி, என்னிடம் “இது அம்மா” என்றார். பின் தன் அம்மாவிடம் “இவர் தான் சாமிநாதன்” என்றும் அறிமுகப்படுத்தினார். உடனே அவர் சிரித்துக்கொண்டே “நீங்க என்ன எழுத உக்காந்தா, பச்சை மிளகாயைக் கடிச்சிண்டே தான் எழுதுவேளோ?” என்றார் இப்படியும் இருக்கலாம். அல்லது “கையிலே ஒரு மிளகாயை வச்சிண்டே தான் எழுதுவேளா?” என்றும் இருக்கலாம். எப்படியானால் என்ன? மைய பாத்திரம் வகித்தது ஒரு பச்சை மிளகாய்.  எல்லோரும் சிரித்து விட்டோம். இப்படி ஒரு வரவேற்பா? ஒரு குடும்பத்தில் இருக்கும் அறுபது வயது மூதாட்டி, கே.வி. ராமசாமியின் அம்மாவாகவே இருக்கட்டும். சுற்றி இலக்கிய உலகில் நடப்பதில் அவருக்கு ஈடுபாடு இருக்கும். தொடர்ந்து படித்து வருவார். அது பற்றிய அபிப்ராயமும் அவருக்கு இருக்கும் என்று எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? அதிலும், என் கடுமையான அபிப்ராயம் கொண்ட எழுத்துக்களில் விருப்பமும் சாதகமான எண்ணமும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா? ஆச்சரியம் அப்படித்தான் இருந்தது என்பது அந்த ஒரு கேள்வியிலும் அதோடு வந்த  அவருடைய மெல்லிய சிரிப்பும் சினேக பாவமும் அதேசமயம் இப்படி ஒரு கேள்வி. இது கேள்வி அல்ல. நான் சண்டைக்காரன் என்ற தீர்மானத்தோடு அது அவர் விரும்பிய சண்டை, சுவாரஸ்யமான சண்டை என்ற அபிப்ராயமோ முடிவோ அதன் பின்னிருப்பது. எனக்கு இம்மாதிரியான முதல் அறிமுகம் ஆச்சரியமாக இருந்தது. வீட்டின் நான்கு சுவர்களுக்கும் அடைந்து இருக்கும் ஓர் அறுபது வயது மூதாட்டியிடமிருந்து. சுற்றியிருந்த எழுத்தாளர் சமூகத்தின் பெரும்பாலோர் விரோதிக்க, இப்படி ஓர் ஆதரவுக் குரல் வீட்டினுள்ளிருந்து. அவர் பெறுவதற்கோ இழப்பதற்கோ ஏதுமில்லை. அந்தச் சிக்கல்கள் எழுத்தாளர்களுக்குத் தான் இருந்தது.  ஒரு மிகப் புகழ் பெற்ற எழுத்தாளர் எழுதினார், “நாங்கள் மௌனமாக இருந்தோம். அந்த மௌனமே உங்களுக்கு பலம் “ என்று. வேடிக்கையாக இல்லை?

    அந்த அம்மையார்தான் பூரணி. இந்த அம்மையார் நம் மதிப்புக்குரியவரா, இல்லை எங்கள் மௌனம் தான் உங்களுக்கு பலம் என்று மௌனித்து யாரையும் விரோதித்துக் கொள்ளப் பயந்து தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ள விரும்பிய எழுத்தாளரா?

    இன்னொரு முக்கியமானதும், சுவாரஸ்யமானதுமான விவரம். அன்று 1972- ல் ஒரு நாள் இரவு பட்டினப் பாக்கம் வீட்டில் ஒரு வயதான மூதாட்டி, எனக்கு அந்த மாதிரியான ஒரு பாராட்டை, வியப்பை வெளிப்படுத்தியது எந்த டெஹல்கா ஸ்டிங் ஆபரேஷனில் பதிவாகியிருக்கப் போகிறது? சட்ட சபையில் நடந்த அவலங்களே எப்படியெல்லாமோ மூடி மறைக்கப் பட்டு தான் ஏதோ அரசியல் நாகரீகத்தின் உச்ச உருவாக்கம் போலப் பேசப்படுகிறது. அப்போது இருந்தவர் அனேகர் இப்போது இல்லை. இருந்தாலும் யார் நினைவிலும் இருக்கப் போவதில்லை. எனக்கே என் நினைவிலிருந்து அனேகமாக நழுவிய விஷயம் தான். அது திரும்ப எங்கோ ஆழ்மனதில் முழ்கியிருந்ததை மேலெழுப்பி நினைவூட்டியது அன்று இதையெல்லாம் எங்கோ பின்னால் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்த ஒரு 20 வயதுப் பையன். கே.வி. ரமணனின் தோழன். அதை நினைவுக்குக் கொண்டு வந்து என்னை ஆச்சரியப்படுத்தியது கிட்டத்தட்ட 34 வருடங்களுக்குப் பின். அந்த நிகழ்வுக்குச் சாட்சி பூதமாக இருந்தது இப்போதைய பங்களூர் வாசியும் அன்று பூரணி அம்மாளுக்கு வேண்டிய செல்லப் பிள்ளையுமாக இருந்த ஹரி கிருஷ்ணன். அந்த பூரணி அம்மாள் ஓர் ஆலவிருக்ஷம் அந்த விருக்ஷத்தின் நிழலுக்குத்தான்  தான் அவரும் அன்று இருந்த தலைமுறையும் பின்னர் வரவிருந்த தலைமுறையினரும் பாரம்பரியம் என்ற பொருளில், வாழையடி வாழை என்போமே அந்த அர்த்ததில் தொடர்ந்தனர் என்பதை நான் பின்னர் வெகு காலம் பின்னர்தான் உணர்ந்து கொண்டேன்.

    சரி இதெல்லாம் போகட்டும். அன்று இரவு சாப்பாடு முடிந்து திரும்பும் போது வெகு நேரமாகிவிட்டது. என்னுடன் பஸ் ஸ்டாண்ட் வரை வந்திருந்து “இது தி.நகர் போகும் பஸ். இடையில் மௌபரீஸ் ரோடில் இறங்கிக் கொள்ளுங்கள்” என்று ஏற்றி விட்டனர். அது தான் கடைசி பஸ். எனக்கு மௌபரீஸ் ரோடில் இறங்கும் பஸ் ஸ்டாப் எது என்று தெரியவில்லை. ”நீங்க சொல்லியிருக்கக் கூடாது? என்று கண்டக்டர் முறைக்க, கடைசியில் தி.நகர் பஸ் ஸ்டாண்ட் வரை சென்று அங்கு ஒரு சிமெண்ட் பெஞ்சில் படுத்து இரவைக் கழிப்பது என்று தீர்மானித்தேன். பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே இருந்த கடையில் தொங்கிக்கொண்டிருந்த ஆங்கிலப் பத்திரிகை ஒன்றை வாங்கிக்கொண்டு படிக்கத் தொடங்கி…உறங்கி காலை எழுந்து மறுபடியும் பஸ் பிடித்து மௌபரீஸ் ரோடில் இறக்கி விட கண்டக்டரிடம் சொல்லி பக்கத்து இருக்கையிலேயே உட்கார்ந்து கொண்டேன்.  வீடு போய்ச் சேர்ந்ததும், “ஏன் ராத்திரி வரலை? என்ன ஆச்சு? என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்லி அசடு வழிந்திருப்பேன் என்று இங்கு எழுதுவது அவசியமா என்ன?  முக்கிய வரலாற்றுச் சிறப்பு  வாய்ந்த தகவல் இது: 1973-ல் தி.நகர் பஸ்டாண்டில் வீடு திரும்ப முடியாத ஒருவன் அங்குள்ள சிமெண்ட் பெஞ்சில் படுத்து உறங்கி இரவைக் கழிக்க முடியும். யாரும் ”யோவ், எந்திரி, யாரு நீ, இங்கே என்ன செய்யிறே” என்று விரட்ட மாட்டார்கள்.

    கே.வி. ராமசாமியுடன் அன்றிலிருந்து பழக்கம் அவ்வப்போது தொடர்ந்தது. ஞான ரதம் நின்று விட்ட பிறகும்.  1991-ல் ஹைதராபாதில், தில்லி சங்கீத நாடக அகாடமி நடத்திய தென்னிந்திய நாடக விழாவில். நாங்கள் போய் இறங்கிய தினம் தான் பாப்ரி மசூதி சமாசாரம் நடந்தது. ஹைதராபாதில் ஊரடங்கு சட்டம். இரவில் நாடகம் நடத்த முடியாது. பகலில் நடத்திக்கொள்ளுங்கள் என்று நிர்ப்பந்தம். இரவில் ஹோட்டலில் ஒரு சந்திப்புக்கு சங்கீத நாடக அகாடமியின் விழா பொறுப்பாளரான கே.எஸ் ராஜேந்திரன் ஒரு ஸ்வாதந்திரமான, அதிகார பூர்வமற்ற கருத்துப் பரிமாறல் வைத்துக்கொள்ளலாம் என்றார். அதில் பங்கேற்றது இந்திரா பார்த்தசாரதி, ந முத்துசாமி, செ.ரவீந்திரன், எஸ் ராமானுஜத்தின் வெறியாட்டத்தில் மையப் பாத்திரம் ஏற்ற காந்தி மேரி பின் மிக முக்கியமாக கே.வி. ராமசாமி. இதன் பதிவுகள் வெளி ரங்கராஜனின் வெளி பத்திரிகையில் பிரசுரமானது.

    கே வி ராமசாமியுடனான அடுத்த என் சந்திப்பு சில வருடங்களுக்குப் பின், கே.எஸ் ராஜேந்திரன் சென்னை மாக்ஸ்ம்யூல்லர் பவன் உதவியுடன் நடத்திய உத்பல் தத் விழாவில் என்று நினைவு. அந்நாட்களில் கே.எஸ் ராஜேந்திரனுடனான என் நட்பு இறுகும், பிரியும். ஆனால் எல்லாவற்றிலும் ஒரு பங்கேற்பு இருக்கும். அதற்கு முதற் காரணம் கே.எஸ் ராஜேந்திரன் தான். நாங்கள் இருவரும் சென்னை வந்ததும் அப்போது மடிப்பாக்கத்தில் ஓர் ஏரிக்கரையை ஒட்டிய ஷீலா நகரில் கே.வி.ராமசாமியுடன் சந்திப்பு நேர்ந்தது. அங்கு பூரணி அம்மையாரைப் பார்க்கவில்லை. அவர் வேறு யாருடனோ இருந்தார். வயது ஆகிக்கொண்டிருந்தது. ராமசாமியின் ஒரு மகன், இரு பெண்கள். இளையவள் அர்ச்சனா, மிக துடிப்பும் விளையாடும் நிறைந்த பெண். மூத்தவள் சட்டம் படித்துக்கொண்டிருந்தாள் என்று நினைவு. இளையவள் அப்பாவோடு எப்போதும் வாதாடிக்கொண்டிருப்பாள். 15/16 வயது செல்லப் பெண்ணுக்கு ”அப்பாவுக்கு ஒண்ணுமே தெரியாது”  என்று வாதாடுவதில் தான் சந்தோஷம். அப்போது தான் ராமசாமி நாடகங்களில் மிக ஈடுபாடு கொண்டிருந்தது தெரிந்தது. கே.எஸ் ராஜேந்திரனோடு அந்தக் குடும்பத்துக்கு மிக நெருங்கிய பிணைப்பு இருந்தது. தன் நாடக ஈடுபாடுகளில் கே.எஸ் ராஜேந்திரன் என்னையும் இணைத்துக்கொள்வது போல ராமசாமியையும் இணைத்துக் கொள்வதில் ஆர்வமாக இருந்தார். எனக்கும் கே.வி.யோடு நெருக்கம் உருவானது.

    அடுத்தச் சந்திப்பை நான் எதிர்பார்த்து வந்தது சென்னையில் ஒரு நாடகப் பட்டறையை தேசிய நாடகப் பள்ளியின் சார்பில், மறுபடியும் கே.எஸ் ராஜேந்திரனின் பொறுப்பில் தான்,  நடந்த போது. சென்னை சென்ட்ரலில் வந்து இறங்கியதும் எங்களைச் சந்தித்தது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தைச் சேர்ந்த துளசி. அவர் சொன்ன செய்தி கே.வி. ராமசாமி இறந்து விட்டார். என்னென்னமோ கனவுகளோடு வந்தது சட்டென எல்லாம் சரிந்தது.

    எப்போதோ சந்தித்த போதும் அன்போடும் ஆதரவோடும் பழகிய ஒரு நட்பை இழந்தாச்சு.  மடிப்பாக்கம் தான் மறுபடியும். முன்பு பார்த்த போது ஒரே விளையாட்டும் சகோதரப்பூசலும் அப்பாவைக் காலை வாருதலுமாக இரைச்சல் நிறைந்த இடம் இப்போது அமைதி அடைந்து கிடந்தது. பூரணி அம்மாள் வந்திருந்தார். எல்லோரும் ஒவ்வொரு மூலையில் எதையோ வெறித்து நோக்கிக் கிடந்தனர். அப்போது தான் முதன் முறையாக, கே.வி. ராமசாமியின் தங்கை கிருஷாங்கினியைப் பார்த்தேன். வாசலில் அவர் கணவர் நாகராஜன் உட்கார்ந்திருந்தார். ஏதோ பாங்கில் வேலை. ஆர்ட் ஸ்கூலில் பயின்றவர். ஓவியமும் அவர் ஆளுமையின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது என்று தெரிந்தது, இடையில் அர்ச்சனா சென்னையில் நாடகங்களில் பங்கு பெற்று வருவது பற்றியும் நடனம் பயில்வது பற்றியும் செய்திகள் வந்தன. மூத்த பெண் வக்கீலாக ஹைகோர்ட்டில் யாருக்கோ உதவியாக இருக்கிறாள். அர்ச்சனாவை புரிசை சம்பந்தம் பங்கு பெற்ற ப்ரெஹ்ட் நாடகம் ஒன்றில் (Caucasian Chalk circle – இதற்குத் தமிழில் என்ன பெயர் என்று நினைவில் இல்லை) நடித்திருந்தாள், என்றும் தகவல் வந்தது. கே.வி. ராமஸாமியின் நாடக ஈடுபாடும், அர்ச்சனாவின் துறுதுறுப்பும் தான் கே.வி. ராமசாமி தன்னோடு அர்ச்சனாவையும் நாடகங்களில் நடிககத் துண்டியது என்று நினைக்கிறேன். அந்த ஈடுபாடு பல வருடங்களாகத் தொடர்ந்துள்ளது பல ரூபங்களில் என்று நினைக்கத் தோன்றுகிறது. மணிரத்தினத்தின் ஆயுத எழுத்தோ என்னவோ, ஒரு படத்தில் அர்ச்சனா நடித்திருந்ததில் குறுந்தகட்டில் பார்த்தபோது யாரும் தகவல் சொல்லாமல் எனக்குத் தெரிந்தது.

    அடுத்த கட்ட நகர்வு என்று அடுத்த சென்னை வருகை மறுபடியும் தேசீய நாடகப் பள்ளியின் நாடகப் பட்டறை, கே.எஸ் ராஜேந்திரனின் பொறுப்பில் நிகழ்ந்த போது. இம்முறை அது இந்திரா பார்த்த சாரதியின் ராமானுஜரா இல்லை. எஸ் ராமானுஜத்தின்  செம்பவளக் காளியா எது என்று சரியாக நினைவில் இல்லை.

    அப்போது கூட இருந்தது எஸ் கே எஸ் மணி அதாவது பாரதி மணி. நாங்கள் தங்கியிருந்தது தரமணியின் தங்குமிடம் ஒன்றில். வந்திறங்கிய ஒன்றிரண்டு நாட்களுக்குள் நானும் ராஜேந்திரனும் தங்கியிருந்த அறைக்கு வந்தது கிருஷாங்கிணி நாகராஜன் தம்பதியினர். கூட ஒரு பையில் எல்லோருக்கும் மசால் தோசை. இப்படியல்லவா இருக்கவேண்டும் தங்கியிருக்கும் இடம் வந்து உபசாரம். மிக கலகலப்பான பொழுது. மசால் தோசை காரணமாக மட்டுமல்ல.  அடுத்த பட்டறைப் பயிற்சிக்கோ என்னவோ ப்ரெஹ்டின் Mother Courage நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்துத் தரும்படி கே எஸ் ராஜேந்திரன் கேட்க. அவர் அடுத்த முறைவரும்போது மொழிபெயர்த்த சில பக்கங்களுடன் வந்திருந்தார். அடுத்து  நடந்தது நானும் மணியும் கிருஷாங்கினி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். எனக்குப் பணிக்கப்பட்டது, இரண்டு பேரும் சேர்ந்து மொழிபெயர்ப்பு வேலையை முடித்து வாருங்கள் அது வரைக்கும் பட்டறையில் உங்களுக்கு வேலை இல்லை,” என்பதாகும். இது எப்படி நிகழ்ந்தது என்று எனக்கு சரியாக நினைவில் இல்லை. கிருஷாங்கினி அழைத்தா, இல்லை அடிக்கடி வந்து போவதை விட இரண்டு பேரும் சேர்ந்து மொழிபெயர்த்தால் எளிதாகும் என்றா, தெரியவில்லை.
    அடுத்து நானும் மணியும் கிண்டி வந்து மின்சார ரயிலில் ஏறி சிட்ல பாக்கம் போனோம். கிருஷாங்கினி வீட்டுக்கு. பத்து நாட்களோ என்னவோ அங்கு அவர்கள் விருந்தினராக இருந்தோம். கிருஷாங்கினி, நாகராஜன் இருவரோடும் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு இப்படிக் கிடைத்தது. சிட்ல பாக்கதில் ஒரு மெயின் ரோடில் மாடி வீட்டில் இருந்தனர். இப்போது அதே இடத்தில் கீழ்த் தளத்துக்கு மாறிவிட்டதாகச் சொன்னார்கள்.

    அங்கு கிருஷாங்கினி- நாகராஜன் தம்பதிகளுடன் கழித்த நாட்கள் சந்தோஷமான நாட்கள். அங்கு போய்ச் சேர்ந்த ஒரு சில05-poorani-age-94-with-krishangini-300x196 நாட்களுக்குள் எனக்கு சுரமோ என்னவோ நினைவில் இல்லை, உடல் சரியில்லாமல் போய்விட்டது. இடையில் ஒரு நாள் ராஜேந்திரன் வந்து என்னை அழைத்த போது நாகராஜன், “அவர் உடல் சரியாகும் வரை நான் அனுப்பமாட்டேன்” என்று நிர்தாக்ஷண்யத்துடன் மறுத்துவிட்டார். அங்கு ஒரு நாய் கூட வளர்ந்து வந்தது. அதனுடன் கொஞ்சம் ஜாக்கிரதையோடேயே ஒதுங்கி வந்தேன். என்ன இருந்தாலும் அதன் கண்களுக்கு நான் அந்நியன். அப்போது நான் சாஹித்ய அகாடமியின் என்ஸைக்ளோபீடியாவுக்கும் தமிழ் ஆலோசகராக, கட்டுரைகள் பல எழுதி வந்தேன். அந்த வேலையும் அவர்களது வீட்டு டெலெஃபோன் மூலமே நடந்தது. இதற்கெல்லாம் மேலாக, நாகராஜனின் ஓவிய ஈடுபாடு பற்றியும் சங்கீதத்தில் இருந்த அபார ஈர்ப்பைப் பற்றியும் உடன் இருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது. சிட்லபாக்கத்தில் இருந்த டாக்டரிடம் தான் மருந்து சாப்பிட்டு வந்தேன். என் சுகக்கேடு அவர் சிகித்சைக்குள் முடிந்து விட்டது அன்றைய வரலாற்று அதிசயம் தான். திரும்ப தரமணிக்குச் சென்றேன். அங்கு பட்டறைக்கான அலுவலகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தின் மேல் மாடியில் இருந்தது. அங்கு கிருஷாங்கினியின் மொழிபெயர்ப்பு வந்தது. அந்த மொழிபெயர்ப்பு “வீரத் தாய்” (Mother Courage) என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஒரு போனஸாக, அங்கு இருந்த ஆராய்ச்சியாளர் துளசியின் நட்பு கிடைத்தது.

    இந்தச் சமயத்தில்தான் அவர்களின் பெண், நீரஜா பரத நாட்டியம் பயின்று வருவது தெரிந்தது. ஒரு நாள் நான் தரமணி அலுவலகத்தில் இருந்த போது திடீரென நீரஜாவை அழைத்து வந்திருந்தார் கிருஷாங்கினி. ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் மலேசியாவில் நீரஜா ஒரு நாட்டியப் பள்ளி தொடங்கி அதில் நடனம் பயிற்றுவிப்பதாகவும் சொன்னார்.

    தில்லியில் இருந்த கடைசிப் பத்துக்களில் சாஹித்ய சங்கீத அகாடமிகளுடன் நெருங்கி உறவாடும் வாய்ப்பு கிடைத்தது. எதுவும் தமிழ் நாட்டுத் தமிழர்களின் காரணமாக அல்ல. தில்லியில் இந்த அகாடமிகளில் இருந்தவர்களுடன் ஏற்பட்ட ஒருவருடன்  ஒருவர் பழகிப் பிறந்த புரிதலால்.

    ஹிந்திலும் ஆங்கிலத்திலும் அகாடமி வெளியிட்ட பத்திரிகைகளில் தமிழ் கவிதை, நாவல் சிறுகதை பற்றியெல்லாம் சிறப்பிதழ்கள் கொணர முடிந்தது. முற்றிலும் என் தேர்வில். அந்த இதழ்களில் தமிழ் நாட்டு ஓவியர்கள், சிற்பிகளையும் பிரதிநிதித்வப்படுத்த முயன்றேன். ட்ராஸ்கி மருது, ஆதிமூலம், இலங்கை                 த.சனாதனன், போன்றோருடன், எனக்குப் புதிதாக அறிமுகமான நாகராஜனையும் அதில் சேர்க்க முடிந்தது. அகாடமியில் இருந்த ஹிந்தி இலக்கியவாதிகள் யாருக்கும் ஏதும் மறுப்பு இருந்ததில்லை.

    மறுபடியும் இன்னொரு வருகை, ராஜேந்திரனது. இம்முறை நாடகப்பயிற்சி முகாம் எடுத்துக்கொண்டது மராத்திய நாடகாசிரியர் சதீஷ் ஆலேகரின் மகா நிர்வாண். அது எப்போது கே.வி. ராமசாமியால் மொழிபெயர்க்கப்பட்டது என்பது தெரியவில்லை. மொழி பெயர்த்திருக்கிறார் அது  நான் சென்னை வந்த பிறகு தான் மொழிபெயர்ப்புப் பிரதியைப் பார்த்தேன். கிருஷாங்கினி தான் கொண்டு வந்தார். நாகராஜன், கிருஷாங்கினி நான் மூவரும் தமிழினி வசந்த குமாரிடம் கொடுத்தோம். அவரும் மிக ஆர்வத்துடன் அதைப் பிரசுரித்தார்.

    இதற்குள் நான் கோயில் மணி கேட்டு விழித்தெழும், வாசல் தெளிக்கும் ஒலி கேட்டு வாசலில் காணும் கோலங்களையும் கோலமிடும் சிறு பெண்களின் தொங்கும் சடைகளையும் பளிச்சிடும் கால் கொலுசுகளையும் அந்த அதிகாலையில் தரிசனம் பெறும் ஆசை துளிர்த்தது. தமிழ் நாடு தனது என்றளிக்க வேறு என்ன இருக்கிறது?
    பக்கத்தில் இருந்த ஐயப்பன் அதற்குக் குறை வைக்கவில்லை.

    வந்த உடனேயே அல்லது அதற்குச் சற்றுப் பின்னோ, க்ரிஷாங்கினியின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று வந்தது. 1982 லிருந்து 1999 வரையிலான 17 வருடங்களில் எழுதிய 17 கதைகள். வருடத்திற்கு ஒன்று. அது வரை அவர் என்னிடம் தான் சிறுகதை எழுதுபவராகக் காட்டிக்கொண்டதே இல்லை. ஓவியராக, சங்கீத ரசிகராக நெருங்கிப் பழகிய பின்னரே தன்னைக் காட்டிக் கொண்ட நாகராஜனைப் போல்.  அது மட்டுமல்ல. கிருஷாங்கினியை ஒரு கவிஞராக, பெண்ணியவாதியாக அறிந்து கொண்டது இங்கு வந்து சந்திப்புகள் கொஞ்சம் கூடியதும் தான். பல இலக்கியச் சந்திப்புகளில் அவரைக் கவிஞராக மேடையிலும். ஒரு பெண்ணியக் கவிதைகளின் தொகுப்பு மாற்றுக்குரல் என்ற தலைப்பில், கிருஷாங்கினியும் இன்னொரு கவிதாயினி,  பெயர் மறந்து விட்டது) வந்தது. அது ஒரு முக்கியமான கவிதைத் தொகுப்பு. பெண்ணிய குரலின் பல வண்ணங்களையும் அதில் காணலாம். தன் கையெழுத்திலேயே அச்சிட்ட கவிதைத் தொகுப்பு ஒன்றையும் கிருஷாங்கினி வெளியிட்டிருக்கிறார்.

    நான் இங்கு குடிபெயர்ந்த ஆரம்ப வருஷங்களில் நாகராஜனை சென்னை ஒவியக கலைக் கண்காட்சிகளில் சந்தித்ததுண்டு. பின்னர் அவரே சொல்வனத்தில் மேற்குலக சரித்திரம் முழுதையும் ஒவ்வொரு மாற்றத்தையும் அதற்குக் காரணமாக இருந்த ஒவியர்கள் சிற்பிகளைப் பற்றியும் விரிவாக எழுதியுமிருக்கிறார். அவரின் சதுரம் பதிப்பகம் மூலம் இருபதாம் நூற்றாண்டின் ஒவிய நிகழ்வுகள் என்று புத்தகமும் வெளிவந்துள்ளது. இதை ஒவியர்களோ, சிற்பிகளோ எழுதுவதே சிறப்பானது. . இவையெல்லாம் தமிழுக்கு வருவதில்லை.

    இதற்கிடையில் கிருஷாங்கினி தொகுத்த பரத நாட்டியப் பாடல்கள், எனக்கு மிகவும் மகிழ்ச்சியும் சில ஆச்சர்யங்களயும் தந்த பாடல் தொகுப்பு. இன்னம் ஒரு சிறுகதைத்  தொகுப்பு நாட்டியம் பற்றிய நேர்காணல்கள் கொண்ட ஒன்று. இசைக்கலைஞர்களுடன் கொண்ட நேர்காணல்கள் கொண்ட தொகுப்பு ஒன்று இப்படி சதுரம் என்று தாம் தொடங்கிய பதிப்பகம் மூலம் வெளிவந்தன. நான் தில்லியிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்த பின் இம்மாதிரியான நிகழ்வுகள் அடிக்கடி வரத் தொடங்கின.

    இதெல்லாம் வருவதற்கு முன்னால் பூரணி அம்மாளின் சுயவரலாறு, நினைவலைகள் என்ற தலைப்பில் கிடைத்தது. அதைப் பார்த்ததும் தான். அதன் பல விவரங்கள் எனக்கு மறந்து விட்டன. அவர் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்திருக்கிறார், அக்காலத்தில் ஏழையோ வசதி உண்டோ இல்லையோ எல்லாம் பெரிய குடும்பங்கள் தான். அவையெல்லாம் செல்வங்கள் எனத் தான் சொல்வார்கள். ஆனாலும் வாழ்வது அதற்கேற்ப எளிமையாகத் தான் இருக்கும். இருப்பினும் கசப்பில்லை. சுகம் துக்கம் எல்லாம்தான் இருந்திருக்கும். ஆயினும் அவ்வளவுக்கிடையிலும் அந்த அம்மையார் வளர்ந்து மணம் செய்து குடும்பம் நடத்தி, ஒரு பெரிய குடும்பத்துக்குத் தானும் தாயாகி, எல்லாம் சரிதான். இப்படி வாழ்ந்து காட்டுவதே ஒரு பெரிய சாதனையாகச் சொல்வார்கள். சாதனைதான். சந்தேகமில்லை.  இப்போது ஒரு தலைமுறை, திட்டமிட்ட குடும்பமாக சந்தோஷமாக வாழ்வதாக, பரஸ்பர அன்போடு மரியாதையோடு வாழ்வதாகக் காண்பது கிடைக்கக் கூடும்தான்.

    இவ்வளவு வாழும் அவஸ்தைகளுக்கும் இடையில், இடைப்பட்ட சந்தோஷங்களுக்கும் இடையில் தன்னை ஒரு லக்ஷிய குடும்பஸ்த்ரீ என்பதற்கும் மேலாகத் தன் வாழ்வினை, தன் அனுபவங்களை, தன் வாழ்வின் ஆதார ஸ்ருதியின் விகாசங்களைப் பதிய வேண்டும். அதில் சாரமுண்டு, அதை தனக்குத் தோன்றும் மொழியில் வடிவில் சொல்லவேண்டும், யாரையும் பின்பற்ற வேண்டியதில்லை. யாரிடமும் வடிவு, மொழி, பற்றி ஆலோசனை தேவையில்லை, தன் மொழிக்கும், அந்தப் பதிவு பெறும், வடிவத்திற்கும் ஒரு நியாயம் உண்டு என்று தனக்குள்

    முடிவு செய்து எழுதியது செய்லாற்றியது ஒரு முதல் தர எழுத்தாளனின், சிந்தனை. இது இன்னும் பல புகழ் பெற்ற எழுத்தாளர்களுக்குக் கிடைத்திராத சிந்தனை. அந்தச் சுய சிந்தனைதான், வேறு பாதிப்புகளோ, அக்கறைகளோ, செல்வாக்கோ அற்று தன் மனதுக்குப் பட்டதைச் சொல்லும் சிந்தனை வயப்பட்ட மனதுதானே, அன்று எல்லோராலும் சுயநலத்துக்காக வசைபாடப்பட்ட எழுத்தையும் கண்டு ஆச்சரியப்பட்டு, “நீங்க என்ன ஒரு பச்சை மிள்காயைக் கடித்துக்கொண்டே தான் எழுதுவேளோ?” என்று கேட்கத் துணிந்தது?ஆமாம் காரம் தான். ஆனால் அது வேண்டிய காரம் என்றும்,  மௌனம்தான் (தனக்கு) பலம் என்றும் சுயநலம் சொல்லத் தூண்டியது.

    சுயவரலாறு, கவிதை, கதைகள், மொழிபெயர்ப்புகள் என எத்தனை. இது ஒரு பாரம்பரிய குடும்பப் பெண்ணின் ஆளுமையின் விகாசம் அல்லாமல் வேறு என்ன? அந்த ஆலவிருக்ஷத்தின் விழுதுகள் ஒவ்வொரு தலைமுறைக்கும், நாடகம், சங்கீதம், நடனம், கவிதை, சிறுகதை ஒவியம் நடிப்பு என தன் விழுதுகள் ஒவ்வொன்றும் விகாசித்து நிழல் பரப்பி இருக்கின்றன. இதை நான் அன்று நினைத்துப் பார்த்தவனில்லை. முடிந்தும் இராது.

    சென்னை வந்த பிறகு, 2004-ல் கம்ப்யூட்டர் ஒன்று வாங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக என் மகனிடமிருந்தும் வரும் நண்பர்களைத் தொந்திரவு செய்தும் ஒரு டைப்ரைட்டர் மாதிரி உபயோகிக்கக் கற்றுக்கொண்டேன். பிறகு வந்த நண்பர்களில் ஒருவர், யாராக இருக்கும், அரவிந்தன் நீலகண்டன்? நேசகுமார்,? ராஜன் சடகோபன்? தெரியவில்லை. என்னை சிந்தனை என்ற ஓர் இணையக் குழுமத்தில் சேர்த்துவிட்டார். எனக்கே தெரியாது எப்படி இந்தக் குழுமத்தில் என் பெயர் சேர்ந்தது என்று. அப்போது அந்த குழுமத்தில் ஒருவராக எனக்கு அறிய வந்தவர் தான் ஹரி கிருஷ்ணன். அவர்தான் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தன் இழை ஒன்றில் 1973 பட்டினப்பாக்கம் கே.வி. ராமசாமி வீட்டில் எனக்கு நடந்த பச்சை மிளகாய் சாத்துபடியைச் சொல்லி எல்லோரையும் குதூகலப் படுத்தினார். அப்போது தான் எனக்கே அது நினைவுக்கு வந்தது. நினைவின் ஆழ்கடல் தோண்டி எடுத்த முத்து. முத்தோ அரிய வகை மீனோ அல்லது வேறு எதோ. ஆச்சரியத்துடன் கேட்டேன் அவரை. அப்போது தான் அவர் முழுவிவரத்தையும் தான் அங்கிருந்ததும், ஒரு சிறுவனாக வியப்புடன் பார்த்திருந்ததையும் சொன்னார். இப்படி இருவரும் மறுபடியும் அறிமுகம் செய்து கொள்வோம் என்று யார் கண்டார்?

    ஆழ்கடல் தோண்டி எடுத்தது ஏதோ. ஒரு ஆலவிருக்ஷமாக இருந்து தன்னை மீறி எழுந்து விகாசித்த பூரணி அம்மையாருக்கும் அஞ்சலி. ஒரு நூற்றாண்டு சரியாக. 17.10.1913 – 17,11. 2013.

    -நன்றி : சொல்வனம் இணைய இதழ்

    Share
  • 2013 ஜூன் மாதச் சிறுகதைப் போட்டி முடிவுகள்

    வெங்கட் சாமிநாதன்

    புதியவர்கள் அறிமுகமாகின்றனர். இருப்பினும் கதைகளும் குறைந்துவிட்டன. இருப்பினும் மகிழ்ச்சி தருவது தன்னையும் தன் துறையையும் நகைச் சுவையுடன் பார்க்கும் பாங்கு. அதிலும் ஒரு கேலிச் சித்திரமாகவே எழுதியுள்ளது. இம்மாதிரி கேலியைப் படிப்பது இது தான் முதல் தடவை.

    இம்முறை பழமைபேசி தன் அனுபவங்களிலிருந்து ஒரு புதிய உலகை நமக்குப் படிக்கத் தருகிறார். மிகவும் இருண்ட உலகம், படிக்கவே கஷ்டமாக இருக்கிறது. வாழ்பவர்களுக்கு எப்படி இருக்குமோ! இம்மாதமும் அவரது தான் சிறந்த கதை. அவருக்கு என் வாழ்த்துகள். அந்தியூரான் அங்கு உட்கார்ந்துகொண்டு எப்படி இவ்வளவு நெருக்கமாக அன்னிய உலகைப் பற்றி எழுத முடிகிறது? மணவாளன் தான் எனது தேர்வு.

    பழமைபேசி2013 ஜூன் மாதச் சிறுகதைப் போட்டியில் பங்கேற்ற சிறுகதைகள்:

     

    (பழமைபேசிக்குப் பாராட்டுகள்; பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இன்னும் ஒரு மாதத்துடன் இந்தப் போட்டி நிறைவு பெறுகிறது; எனவே, விருப்பமுள்ளோர் விரைந்து பங்கேற்றிட அழைக்கிறோம். – ஆசிரியர்)

    Share
  • அன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்

    வெங்கட் சாமிநாதன்

    எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ர என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன் 1900 லிருந்து 1974 வரை 74 ஆண்டுகள் வாழ்ந்தவர். நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் முத்தவர். சிறு கதை, மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள் என் பல துறைகளிலும் தன் ஆளுமையின் பதிவுகளை விட்டுச் சென்றுள்ளவர். தான் செயலாற்றியது எத்துறையானாலும் அத்துறைக்கு வளம் ஊட்டி சிறப்பித்தவர். தேசீய போராட்டத்திலும் பங்கு கொண்டு சிறை சென்றவர். எவ்வளவு சிறப்பான ஆளுமையான போதிலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர். அடக்கம் மிகுந்தவர்.

    எல்லாவற்றுக்கும் மேலாக, மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். பட்டங்களோ, விருதுகளோ பணமுடிப்புகளோ அவரை வந்தடைந்ததில்லை. அவர் எதிர்பார்த்ததுமில்லை. அக்காலத்தில் அவரைச் சூழ்ந்த பலரையும் போல தம் இயல்பில் இயல்பில் வாழ்ந்தவர். நாடு சுதந்திரம் பெற்றதும் தியாகிகளுக்கு ஐந்து ஏக்கம் நிலம் மாதாந்திர ஊதியம் என்றெல்லாம் தரப்பட்ட போதிலும், காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள் எல்லோரையும் நன்கு தெரிந்த போதிலும் தம் இயல்பில் வாழ்ந்த வாழ்வுக்கு தியாகம் என்று பெயர் சூட்டி அங்கீகாரமும் பிரதிபலனும் கோரவில்லை.

    அவர் 1974-ல் இறந்த போது அவர் சொத்து எதுவும் விட்டுச் செல்லவில்லை. குடும்பம் வறிய நிலையில் தான் இருந்தது. அவர் குமாரர்கள் தம் வழிச் சென்றுவிட்டனர். இது எங்கும் அனேகமாக நேர்வது தான். அவரது இரண்டாவது மகள், பாப்பா தான் வீடுகளில் சமையல் வேலை செய்து தன் தந்தையையும் தாயையும் காப்பாற்றி வந்திருக்கிறார். திஜர வின் மறைவிற்குப் பின்னும் இதே நிலை. 2008-ல் தமிழக அரசு திஜர வின் எழுத்துக்களை நாட்டுடமையாக்கி ஆறு லட்சம் ரூபாய் வழங்கியது. அந்த ஆறு லட்ச ரூபாயைப் பங்கு போட்டுக்கொண்டனர் திடீரென தோன்றிய திஜரவின் சட்டபூர்வமான வாரிசுகள் அனைவரும். இதுவும் அனேகமாக எங்கும் நடப்பது தான். அதில் திஜரவையும் தாயையும் காப்பாற்றி வந்த பாப்பாவின் பங்கு மிகச் சிறியதாகியது. அதுவும் தான் இருந்த வறிய நிலையில் கடன் கொடுத்தவர்களூக்குப் போயிற்று.

    இப்போது, தந்தை திஜரவையும் தன் தாயையும், காப்பாற்றி வந்த பாப்பா வுக்கு 86, இப்போது அவரையும் தன் 50 வயது அக்காவையும் காப்பாற்றி வருவது அவரது இரண்டாம் மகள், திஜர வின் பேத்தி, 48 வயது சத்திய பாமா. அவர் குழந்தைகளுக்கு பாட்டு வகுப்பு நடத்தி அதில் வரும் வருமானத்தில் தான் குடும்பம் நடந்து வந்தது. அம்மா அக்கா இருவருமே முதுமையின் தேக உபாதைகளால் துன்புறுபவர்கள். அவர்களுக்கான மருத்துவ செலவும் சேர்ந்து கொள்ள அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு இரண்டாம் பேத்தியினதாகியது.

    தீக்ஷை பெற்று சன்னியாசியாக தனித்து வாழ்ந்த வந்த மலர்மன்னன் தான் அவர்களைத் தான் இருந்த இடத்திற்கு அழைத்துப் பாதுகாத்து வந்துள்ளார் கடந்த சில வருஷங்களாக. அவரும் இப்போது மறைந்துவிட்டார். மலர் மன்னன் தன் கடைசி வருடங்களில் சத்தியபாமாவின் பாட்டு வகுப்புக்களையும் நிறுத்தச் சொல்லி அவர்களது முழு பாதுகாப்பையும் தாமே எடுத்துக்கொண்டிருந்திருக்கிறார். அவர்களது பெயரில் ஒரு வைப்பு நிதி ஒன்று வசூலித்து ஏற்படுத்தி விட்டால் அதிலிருந்து வரும் வட்டி இவர்களை ஓரளவுக்குக் காப்பாற்றும் என்பது அவரது திட்டமாக இருந்திருக்கிறது. அவரது மறைவிற்குப் பிறகு, அந்தத் திட்டமும் நிறைவேறாது அவரது பாது காப்பும் அற்ற நிலையில் திஜரவின் பேத்தி இருவரும் அவர்களது முதிய தாயும் விடப்பட்டுள்ளனர். குறைந்த வாடகையில் அவர்கள் இருப்பது மலர்மன்னன் இருந்த இடம் தான். மலர் மன்னன் இறந்ததும் அவரது குடும்பத்தார் வந்து மலர்மன்னனின் புத்தகம் மற்றும் பொருட்களை எடுத்துச் சென்று விட்டனர்.

    எனது வேண்டுகோள் நாம் எல்லோரும் அவரவருக்கு முடிந்த அளவில் செய்யும் பொருள் உதவி மொத்தமாக வறிய நிலையில் அனாதையாகி விட்ட இவர்களூக்கு உதவக்கூடும். ஆறு லட்சம் அரசின் நிதி உதவி பெற்ற குடும்பம் என்ற பெயர் அழுத்தி வதைக்கும் வெற்று பாரமாகவே இவர்களுக்கு ஆகியுள்ளது வாழ்க்கையின் தரும் முரண்களில் ஒன்று.

    எனவே திரும்பவும் எனது வேண்டுகோள். அவரவர் சக்திக்கு ஏற்றபடி உதவி அனுப்ப வேண்டிய வங்கிக் கணக்கு விவரங்கள்.

    R. Sathyabama, SB A/c No. 37950100001010,

    IFSC code BAR8 ‘O” THICE, Micr code 600012047

    Bank of Baroda, Thiruvanmiyur Branch,

    Chennai

    அவரது முகவரி: R.Sathyabama, 18/37, MuthuLaxmi Road,

    Laxmipuram (near Pamban Swami mutt)

    Chennai-41 PIN 600 041

    Share
  • ஏப்ரல் (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்

    வெங்கட் சாமிநாதன்

    இம்மாதம் சிறுகதைகளின் வருகை இன்னமும் குறைந்துவிட்டது. வருத்தம் என்னவென்றால், போனமாதம் வந்த சிறுகதைகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், நல்ல கதைகள் எண்ணிக்கை குறையவில்லை. இம்முறை அதற்கும் கேடுகாலம்.

    இம்மாதம் வந்துள்ள கதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று என்று சொல்லக் கூடியது பழையவரும் தேர்ந்த கையுமான பழமை பேசியினது தான். கொழுகொம்பு

    அன்னிய சூழலில் தொடர்ந்து இருந்த போதிலும், பிறந்த மண்ணின் வாசம் விடாது, அதே சமயம் வாழும் அன்னிய மண்ணின் சூழலில் ஆழ்ந்த அனுபவம் நிறைந்த வாழ்நிலைகளை எழுதுகிறவர். இம்முறை மனிதனுக்கும் நாய்க்கும் இடையேயான உறவில் வாய் பேசாத ஜீவனின் நம்பிக்கையை மனிதன் பொய்க்கைச் செய்யும் கணங்களில் மனிதன் அதைக் குற்ற உணர்வோடு உணரச் செய்வது நன்றாக இருந்தாலும் அதை அதிக அலங்கார வார்த்தைகளால் நிரப்பாது செய்திருக்கலாம். இது காறும் பழமை பேசியின் எழுத்துக்களில் நான் காணாத ஒரு புதிய மாற்றம் இது

    ஒரு உதாரணத்திற்கு ஆரம்பத்தையே எடுத்துக்கொள்ளலாம்,

    நித்திரை கலைந்து நினைவுக்கண் விழித்துக் கொண்டதிலிருந்து நாட்டம் எம்மை படுத்தி எடுத்திக் கொண்டிருந்தது. வீட்டில் மனைவி மக்கள் என்ன செய்கிறார்கள் எனச் சிரம் உயர்த்திப் பார்த்தேன். ஆழ்ந்த உறக்கத்தில் மெய்ப்புலங்கள் யாவும் நான்கு உருவங்களுக்குள் கட்டுண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. நான் மெதுவாய் எனும் கூட்டுக்குள் புகுந்து சன்னல் ஓரத்துக்குப் போய், சிறிதே சிறிதாய் திரை விலக்கிப் பார்த்தேன். ஒட்டு மொத்த நீலவண்ணத்தையும் வானக்கூரைக்கு அடித்திருந்தான் இயற்கை தேவன்.

    எனக்கு இது வேண்டாம் என்று தோன்றுகிறது. மற்றபடி, அவரது சுதந்திரம் இது.

    இருப்பினும் அவரது கதை கொழு கொம்பு தான் வந்தவற்றில் சிறந்தது

    பழமை பேசிக்கும், பங்கு கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    அன்புடன்,

    வெ.சா..

    இந்த மாத சிறுகதைப் போட்டியில் பங்கு பெற்ற கதைகள்:

    எழுச்சி

    கல்யாணப் புடவை

    “ ஐ லவ் யூ “

    “ திருட்டுப் பூனைகள் “

    மை லிட்டில் ரெட் வேகன்

    கொழுகொம்பு

    மனதின் உயரம்….

    அன்பு நண்பர்களே,

    ’சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பார்கள். படைப்புத் திறனும் அப்படித்தான் அல்லவா. எழுத எழுத மெருகேறிக் கொண்டேயிருக்கும் இல்லையா. வெ.சா. ஐயா போன்று சிறந்த விமர்சகரின் மோதிரக் கையால் குட்டுப்பட நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  அதனைப் பயன்படுத்தி நம் திறமையையும் வளர்த்துக் கொள்ளலாமே.. இன்னும் நிறைய சிறுகதைகளை எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து தங்கள் படைப்புகளை வரவேற்கிறோம். இந்த முறையும் பரிசுக்கு உரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு பழமைபேசி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அன்புடன்

    பவள சங்கரி

    Share
  • அறுபது ரூபாய் படுத்திய பாடு!

     

    வெங்கட் சாமிநாதன்

    நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 54)

    கொஞ்ச நாட்கள்  கழிந்தன. எந்த இடத்திலிருந்தாவது  ஏதும் ஆர்டர் வருமா என்று  காத்திருப்பு. இன்னும் wanted column-ல் ஏதும் எனக்கு ஏற்ற விளம்பரங்கள் வருமா என்ற காத்திருப்பு. ஒரு மாதம் இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். முதலில் வந்தது Northern Railway-யிலிருந்து. எனக்கு வேலை கிடைத்துவிட்டது. சந்தோஷமாக இருந்தது. முதல் தடவையாக நானே முயன்று பெற்ற வேலை அல்லவா? இங்கு யாரும் ராஜாவோ, செல்ல ஸ்வாமியோ சொல்லி ஒரு முரளீதர் மல்ஹோத்ரா கருணை மனம் கொண்டு, ”boys service-ல் எடுத்துக்கொள்,” என்று தனிச் சலுகை காட்டிப் பெறவில்லையே. எத்தனையோ பேருடன் போட்டி போட்டல்லவா கிடைத்திருக்கிறது. அந்த சமயத்தில் அந்த சந்தோஷம் தகுதியில் பெற்றதாகத்தான் தோன்றியது.

    எல்லோரிடமும் சொல்லிச் சந்தோஷப்பட்டேன். அவர்களுக்கும்  சந்தோஷம் தான். ஆனால், ”இன்னம்  பொறு. மூன்று இடங்களுக்குப் போய் வந்திருக்கிறாயே, அவை என்ன ஆகிறது என்று பார்க்கலாம்,” என்று மிருணாலும், என் செக்‌ஷன் அதிகாரி தேஷ் ராஜ் பூரியும் சொல்லவே, அது சரியாகத்தான் பட்டது. இரண்டாவது நான் வேலைக்குச் சேர பிக்கானீர் போகவேண்டும். பாலைவனம். வெயில் வறுத்து எடுக்கும். இங்கேயே ஆறு வருடங்கள் அஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட கூரையில் காய்ந்து வரண்டாயிற்று. பிக்கானீர் போவதா என்ற தயக்கம் ஒரு மூலையில் எட்டிப் பார்த்தது. இங்காவது ஆறு வருடங்களோடு போயிற்று. பிக்கானீர் போனால் ஆயுள் முழுக்க அல்லவா கஷ்டப் படவேண்டும். இந்த நினைப்பு மற்ற இடங்களிலிருந்து என்ன வருகிறது என்று பார்க்கலாம் என்று ஆலோசனை சொன்னதால் வந்ததா இல்லை, பிக்கானீர் பாலைவன தகிப்பின் காரணமாக மற்றவர்கள் சொன்ன ஆலோசனைப்படி காத்திருக்கத் தீர்மானித்தேனா தெரியவில்லை. இரண்டுமே இருக்கலாம்.

    பிக்கானீர் ஆர்டர் வந்த பத்திருபது நாட்களுக்குள்ளேயே Eastern Railway  யிலிருந்தும் கடிதம் வந்தது. கல்கத்தாவில் வேலைக்குச் சேரவேண்டும். எங்கு நான் சொதப்பிவிட்டு வந்ததால் வேலை கிடைக்காது என்று நினைத்தேனோ அங்கிருந்தும் வேலைக்கு ஆர்டர் வந்தது. இரண்டு இடங்களிலிருந்தும், கல்கத்தாவுக்கும் பிக்கானீருக்கும் பயணம் செய்வதற்கான ரயில்வே பாஸும் உடன் வைக்கப்பட்டிருந்தன. எங்கு சேர்ந்தாலும் வாழ்நாள் பூராவும் இலவசமாக ரயிலில் பயணம் செய்யலாம். எனக்கு ஏதோ லாட்டரி விழுந்த மாதிரித்தான் சந்தோஷம். “ஔர் க்யா சாஹியே சாலே, குதா சப்பர் ஃபாட்கே தேதியா? மௌஜான் ஹி மௌஜான்” (இன்னம் என்ன வேணும் உனக்கு. கடவுளே கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கறார் உனக்கு, கொண்டாட்டம் தான்) என்று பஞ்சாபி நண்பர்கள் சந்தோஷத்தோடு கேலியும் செய்தார்கள். ஆக, பிக்கானீர் தான் போயாகணும்னு இல்லை. கல்கத்தா போகலாம். கிடைக்காது என்று நிச்சயமாக நினைத்த இடத்தி லிருந்தே வேலை கிடைக்கிறதே. அந்த இண்டர்வ்யூ போர்டுலே இருந்த மனுஷன் ரொம்ப நல்ல மனுஷனா இருக்கணும், அவர்களையெல்லாம் மரியாதையாக, “ஸார்” னு சொல்லாததுக்காக வேலை கொடுக்காமல் இல்லை. இந்த உலகத்திலும் சில நல்ல மனுஷங்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

    இப்படி இந்த மயக்கத்தில் கொஞ்ச நாட்கள் கழிந்து கொண்டிருக்கும்போதே தில்லியிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. மத்திய உள்விவகாரத் துறையிலிருந்து. வேலை தில்லியில் மத்திய அரசாங்கத்தில். புது இடம் சம்பளமும் அதிகம். கல்கத்தா பிக்கானீர் வேலைகளைவிட கிட்டத்தட்ட அறுபது ரூபாய்கள் அதிகம். வேலையில் க்ரேடும் வேறு. உயர்ந்த அடுக்கில் உள்ளது. பின் என்ன வேண்டும்.? பிக்கானீர் பாலவன வெயிலில் சுட்டெறிய வேண்டாம். கல்கத்தா வேலையை விட சம்பளம் அதிகம்  அது தானே அன்று எனக்கு வேண்டியது! தில்லி தான் என்று மனதுக்குள் நிச்சயப்படுத்திக்கொண்டேன். ஒரே ஒரு குறை. தில்லியில் வேலைக்கு அழைப்போடு இலவச ரயில் பாஸ் இல்லை. சொந்த செலவில் தான் போகவேண்டும்.   இலவச பயணம் என்ற கனவிலிருந்து விழித்தெழ வேண்டும். சரி. இப்போது கிடைக்கும் அதிக சம்பளம் அறுபது ரூபாய் போகப்போக இன்னும் அதிகமாகாதா என்ன? பதவி உயருமே? அதுவும் எனக்கு அதிக சம்பளம் தருமே? இப்படியேவா இருக்கப் போகிறது எல்லாம் எப்போதும்?

    ஒரு மாதிரியான  தீர்மானம் மனதுக்குள் ஆனதும் முதலில் நான் இச்செய்தியைச்  சொன்னது மிருணாலிடம்தான். அவன் அப்போது மஞ்சு சென்னோடு உட்கார்ந்து வம்பளந்து  கொண்டிருந்தான். போய்ச் சொன்னேன் ஒரே ஆரவாரம். இருவருக்கும் ரொம்ப சந்தோஷம் “இது என்ன இது. தினம் தினம் வந்து உங்களுக்கு ஒரு புது ஆர்டர் வந்திருக்குன்னு சொல்கிறீர்கள்? இது எத்தனாவது ஆர்டர்?….” என்றாள் மஞ்சு முகத்தில் வியப்பும் பூரிப்பும் பொங்க. “oh hundreds” என்றான் மிருணால். “அவன் சும்மா கேலி பண்றான். மூணு இடத்துக்குப் போனேன். மூணு இடத்திலிருந்தும் வேலைக்கு அழைப்பு வந்துவிட்டது. இது எப்படி நூற்றுக் கணக்காகும், மிருணால் அப்படித்தான் சொல்வான்” என்றேன்.

    சரி எங்கே போகிறதுன்னு  தீர்மானிக்கமுடியாது, இப்படி தினம் இவ்வளவு இடத்திலேயிருந்து அழைப்பு வந்தால், இல்லையா?” என்றாள் மஞ்சு.

    தில்லி போகலாம்னு  நினைக்கிறேன். புதிய இடம். தலைநகரம். அதெல்லாம் போக, இந்த தில்லி மத்திய மந்திரி அலுவலகம். அறுபது ரூபாய் அதிகம் கிடைக்கும்.” என்றேன்.

    புர்லாவில் இருந்த அந்த கடைசி நாட்களில் எங்கே  போவது அடுத்து? என்று தீர்மானித்தது அந்த அதிகப்படியாக கிடைக்க விருந்த அறுபது ரூபாய் தான். அதை இன்று நினைத்துப் பார்க்கப் பார்க்க   நான் திகைத்துப் போகிறேன். அறுபது ரூபாய் ஆசை காட்டி இழுத்த தில்லி, என்னையும் என் வாழ்க்கையையும் என் சிந்தனைகளையும் முற்றிலும் மாற்றி அமைத்தது கால் பதித்த தினத்திலிருந்தே தொடங்கிய தில்லி வாழ்க்கை தான். பார்க்கக் கண்களை விழித்திருந்தால் காட்சி தர தில்லி தன்னுள் நிறைய கொண்டிருந்தது தில்லி. தேடத் தொடங்கினால அது என் முன் விரித்த உலகம் வித்தியாசமானதாக, புதியதாக என்னை முற்றிலும் புதிய மனிதனாக ஆக்க தன்னிடம் நிறைய கொண்டிருந்தது. சுற்றியிருந்த ஜன்னல்கள் எத்தனையோ அத்தனையையும்  திறந்தால் அது காட்டும் உலகம் தேடுபவர்களுக்கு மாதிரமே காட்சி தரும் ஒன்றாக இருந்தது. அந்த ஜன்னல்கள் எதையும் திறக்காது, ஜன்னல்களையோ மூடியிருக்கும் அதன் கதவுகளையோ காணாது, தன் இருந்த அறைக்குள் தனக்குப் பழக்கமான பாளையங்கோட்டையையோ, மன்னார்குடியையோ விருத்தாசலத்தையோ உருவாக்கி அதனுள் தம் ஆயுளைக் கழித்த பெருந்தகைகள அங்கு இருந்தனர். அது பற்றிய அவர்கள் பெருமையை, சமயம் வாய்க்கும் போதெல்லாம் சொல்லிச் சொல்லி தாம் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டிருப்பதைப் பற்றி கர்வம் கொண்டனர். “தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற வரிக்கு தம் உணர்வில் புதிய அர்த்தங்களை உருவாக்கிக்கொண்டவர்கள் அனேகர்.

    புர்லா மண்ணிலிருந்து  என்னை அழைத்து  ஆசை காட்டியது அறுபது ரூபாய் அதிகம் தரும் வேலை தான். ஆனால் வெகு சீக்கிரம் அதை பின்னுக்குத் தள்ளி தில்லி என்னை வேறு மனிதனாக்கியது.

    ”அது மட்டுமில்லை, செல்லஸ்வாமி அங்கு தானே இருக்கிறார்?. எனக்கு உதவவும், புது இடத்தில் வழிகாட்டவும் தான் அவர் எனக்கும் முன்னால் போய் அங்கு எனக்காகக் காத்திருப்பது போல் இருக்கிறது” என்றேன்.

    “அப்போ எங்களையெல்லாம் விட்டுப் பிரிகிறதாத் தீர்மானம் ஆயாச்சு, இல்லையா?” என்றாள் மஞ்சு. இந்த உணர்வு மிருணாலிடம், மஞ்சுவிடம் என்னிடமும் எப்போதும் ஒரு மறைவிடத்தில் ஒளிந்து இருந்து கொண்டேதான் இருந்தது. கடைசியில் தான் அது மெல்ல தலை நீட்டும். இப்போது மறுபடியும் தலை நீட்டியது.

    உடன் யாரும் பேசமாட்டார்கள். ஒரு அசாதாரண மௌனம் நிலவும். எங்கோ மனமும் பார்வையும் திரும்பும்.

    “என்ன செய்ய? இன்னம் கொஞ்ச  நாளில் நாங்களும் எங்கேயாவது தான் போகவேண்டியிருக்கும். அதை எப்படித் தவிர்ப்பது? எல்லோரும் போய்க்கொண்டிருக்கிறார்கள். நாமும் ஒவ்வொருவராகப் போகத்  தான் வேண்டும்.” என்று மூவரும் ஆளுக்கொரு வார்த்தையாக, சொல்லி சமாதானம் கொண்டோம்.

    முதலில் சம்பல்பூர் Chief Medical Officer- இடம் போய் உடல் ஆரோக்கியத் தகுதிச் சான்று வாங்க வேண்டும். அங்கு நான் போன சமயம் கட்டக்கில் என்னோடு நேர்காணலுக்கு வந்திருந்த ஏ. ஸ்ரீனிவாசன் போற்றியும், டி.ஆர்.ஜி. பிள்ளையும் இருந்தனர். அவர்களும் இந்த அணைக்கட்டிலேயே வேலை பார்த்த போதிலும், கட்டக்கில் பார்த்துத்தான் ஒருவரை ஒருவர் ஹிராகுட் அணை சகாக்களாக அறிந்து கொண்டிருந்தோம். எங்கோ மூலையில் அவர்கள் வேலை பார்த்திருக்க வேண்டும். சிப்ளிமாவோ, பர்கரோ, இப்படி இன்னும் எத்தனை இடங்கள் இருக்கின்றனவோ. ஆனால், ஆறு வருஷங்கள் கழித்து புர்லாவைவிட்டுப் போகும் போதாவது. ஒருவரை ஒருவர் பரிச்சயம் செய்துகொண்டு இணைந்தோமே. இப்போது அவர்களுக்கும் தில்லி ஆர்டர் கிடைத்துவிட்டதால், தில்லி போகும் போதாவது ஒன்றிணைந்து போவது என்று தீர்மானித்துக் கொண்டோம். பயணத்திலும், பின் அங்கு புது இடம் தில்லியில் ஆரம்ப நாட்களில் தங்குவதற்கும் ஒன்றிணைந்து கொண்டால் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளலாமே. அன்றே சி.எம்.ஓ எங்களுக்குத் தகுதிச் சான்றிதழ் கொடுத்து விட்டார். எந்தக் கையூட்டு பற்றியும் அவருக்கும் சரி, எங்களுக்கும் சரி, அந்த மருத்துவமனையின் வேலையாட்களுக்கும் சரி, அந்த நினைப்பே தோன்றாத பொற்காலம். அது. ஒரிஸ்ஸாவில் சம்பல்பூரில் 1956- டிஸம்பரில் ஒரு தினம் அது.

    எல்லோரும் சேர்ந்தே தில்லிக்குப் பயணப்படுவது என்று தீர்மானித்துக்கொண்டோம். நாங்கள் எங்கு எந்த மூலையில் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நாள் சாயந்திரம் சம்பல்பூரிலிருந்து ஜர்ஸகுடாவுக்குப் போகும் சாயந்திர ரயில் 5.00 5.30 மணிக்கு சேர்ந்துகொள்வது என்று முடிவாயிற்று.

    செக்‌ஷன் அதிகாரி தேஷ் ராஜ் பூரி முன்னாலேயே கொடுத்த  வாக்கு இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும்  தடை சொல்லாது பணியிலிருந்து விடுவிப்பதாக. வீட்டில் ஒரு சின்ன பையன் சில மாதங்களாக வந்து சேர்ந்திருக்கிறான். வேலை தேடிக்கொண்டு. அவ்வப்போது ஏதோ வேலை கிடைத்து வருகிறது. என் வீட்டை அதிகாரப்பூர்வமாக பங்குகொண்டிருக்கும் சிவராம கிருஷ்ணன் பார்த்துக்கொள்வான் அந்த புதிதாக வந்த பையனை. இன்னும் யாருக்காவது என் இடத்தில் அந்த வீடு ஒதுக்கப்பட்டாலும், ஒரு காலத்தில் 12 பேர் இருந்த இடம். அவனுக்குத் தெரியும். இப்போது அந்த 20 வயது பையனுக்கா இடம் இராது.? அதிக பந்தங்கள் இல்லை. தகர ட்ரங்க் ஒன்று. பின் படுக்கை. தில்லியில் அதிகம் குளிரும் என்றார்கள். அவர்கள் சொன்ன ஆலோசனையில், இரண்டு கம்பளி ஸ்வெட்டர் வாங்கிக் கொண்டேன். வேறு என்ன? மிகுந்தது புத்தகங்கள். அவற்றைத் தூக்கிக் கொண்டு போகமுடியாது. மூன்று பெரிய கள்ளிப்பெட்டி களில் அடுக்கி சுற்றி ஸ்டீல் டேப் போட்டு பத்திரப்படுத்தினேன். ‘இவை இங்கேயே இருக்கட்டும். பத்திரமாகப் பார்த்துக்கொள். பின் அங்கு இருக்கும் இடத்தின் சௌகரியத்தைப் பொருத்து நான் சொல்லும்போது இவற்றை ரயிலில் அனுப்பி வை. செய்வாயா?” என்று கேட்டேன். “இதென்ன பெரிய காரியம். நீங்கள் கவலைப் படாமல் சௌகரியமாகப் போய் வாருங்கள். இப்போது இதை யெல்லாம் எப்படி எங்கு தூக்கிக் கொண்டு போக முடியும்?. அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம், என்னிடம் விட்டு விடுங்கள்” என்றான். நான் பழகி ஒரு சில மாதங்களில் அவன் சாதுவாகவும் சொன்ன காரியத்தைச் செய்பவனாகவும் தெரிந்தான்.

    தேஷ் ராஜ் பூரி கொடுத்த  வாக்குப் படியே எனக்கு தடை ஏதும் செய்யவில்லை. அப்போது நிர்வாக அதிகாரியாக இருந்த கிர்தாரி லால் எனக்குக் கொடுத்த Relieving Order-ல் ஒரு விஷமம் செய்திருந்தான். அதாவது நான் என் இஷ்டத்துக்கு வேலையை விட்டுப் போவதால் ஹிராகுட் அணைக்கட்டுத் திட்டத்திலிருந்து வேலையை விட்டு நீங்க அனுமதிப்பதாக அந்த ஆர்டர் எழுதியிருந்தது. இந்த நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் செய்யும் சில விஷமங்கள் உடனே சட்டெனெ புரிவதில்லை. எனக்கும் அப்போது புரியவில்லை. நான் சந்தோஷமாக அந்த ஆர்டரை எடுத்துச் சென்றேன்.

    அருகில் இருந்த நண்பர்களுக்கும்  ஹிராகுட்டிலிருந்த எஸ்  என் ராஜாவுக்கும் நான் தில்லி போவதைப் பற்றிச் சொன்னேன். அவர் சந்தோஷப்பட்டார். ”முடிந்தால் எழுதிக்கொண்டிரு. அங்கு போய் விலாசம் தெரிவி,” என்றார். இது சம்பிரதாய வார்த்தை என்று தான் தோன்றும். ஆனால் இந்த சம்பிரதாயங்களில் எவ்வளவு அர்த்தங்கள், அவசியங்கள், காரியங்கள் இருந்தன என்பது எனக்கு வெகு சீக்கிரம் தெரிய வந்தது.

    கடைசியாக என்னுடன் சம்பல்பூர் வரை வந்து வழியனுப்ப புறப்பட்டது மிருணால் தான். ஏதும் வண்டி கிடைக்கவில்லை. ஒரு ரிக்‌ஷா தான் கிடைத்தது. அதில் நானும் மிருணாலும். ஒரு பெட்டி படுக்கை. இவ்வளவு தான். சைக்கிள் ரிக்‌ஷா நேரத்துக்கு என்னை சம்பல்பூரில் கொண்டு சேர்க்கும் என்று தோன்ற வில்லை. ஆனாலும் செய்வதற்கு ஏதும் இல்லை. மகாநதிப் பாலம் தாண்டியதும் பின்னாலிருந்து ஒரு லாரி வந்தது. ரிக்‌ஷாவிலிருந்து இறங்கி அந்த லாரியை நிறுத்தி, ”எனக்கு மிக அவசரமாக சம்பல்பூரி போய் தில்லிக்கு ரயில் ஏறவேண்டும். உதவ முடியுமா?” என்று கேட்டேன். ”சரி ஏறிக்கொள்,” என்றான். ரிக்‌ஷாவுக்கு பேசிய பணத்தைக் கொடுத்துவிட்டு நானும் மிருணாலும் லாரியில் ஏறிக்கொண்டோம். லாரி ஓட்டுபவர்கள் இந்த மாதிரி சமயங்களில் உதவுவார்கள். காசு கேட்க மாட்டார்கள். மிஞ்சி கடக்க வேண்டிய ஆறு மைல் தூரத்தை வெகு சீக்கிரம் கடந்து சம்பல்பூரில் ரயிலைப் பிடிக்க முடிந்தது.

    தில்லிப் பயணம் அந்த நாட்களில் அவ்வளவு சுலபம் இல்லை. முன் பதிவு இல்லாத நாட்கள் அவை. எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். எந்த வண்டியிலும் எங்கும் பயணம் செய்யலாம். டிக்கட் கிடைக்க இல்லை என்ற பேச்சு இல்லை. ஆனால் கூட்ட நெரிசலில் இடிபட  வேண்டியிருக்கும். நீண்ட தூரப் பயணங்கள் சிரமம் தருபவை. தூங்கவும் சாப்பிடவும். அத்தோடு நாலைந்து இடங்களில் இறங்கி வண்டி மாறவும் வேண்டும். 1956-ல் நான் தில்லி சென்ற மார்க்கம் இதோ. சம்பல்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஜார்ஸகுடா. ஜார்ஸ குடாவில் வண்டி மாறி பிலாஸ்பூர். பிலாஸ்பூரிலிருந்து பினா. பின் மறுபடியும் வண்டி மாறி கட்னி. கட்னியில் இறங்கி பின் தில்லிக்கு வண்டி மாற வேண்டும். எத்தனை ஆயிற்று? அவ்வப்போது மாறும் வண்டிகளில் இருக்க இடம் பொருட்களை வைக்க இடம், சாப்பிட கிடைக்கும் வசதி இரவுகளில் தூங்கக் கிடைக்கும் வாய்ப்புகள் இவை என்ன கிடைக்கின்றனவோ அனுபவித்து வதை படத்தான் வேண்டுமே ஒழிய அவற்றை நீட்டி முழக்கி எழுதுவது இன்றைய தலைமுறையினருக்கு வெறுப்பேற்றும்.

    ஜார்ஸகுடாவில் ஏ. ஸ்ரீனிவாசன் போற்றியும், டி.ஆர்.ஜி பிள்ளையும் சேர்ந்து கொண்டார்கள். அது பயணத்தின் கடுமையை அவ்வப்போது மறக்க உதவியது.

        புது தில்லி ரயில் நிலையத்தை இரண்டு நாள் பயணத்துக்குப் பின் டிசம்பர் 30-ம் தேதி இரவு ஏழு மணிக்கோ எட்டு மணிக்கோ போய்ச் சேர்ந்தோம். ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து பார்த்தேன். ஸ்டேஷனும் புதிதாகக் கட்டப்பட்ட ஒன்று. வெளியே அகன்று பரந்திருந்த சாலை மரங்கள் அடர்ந்து அழகாக இருந்தது. விளக்குகள் சிறிய எட்டடி ஸ்தம்பங்களில் குளிர்ச்சியாக ஒளி வீசியதும் அழகாக இருந்தது. வெளியே கேட்டை விட்டு வந்ததும் சாலையில் கண்ட காட்சி ஆச்சரியப்பட வைத்தது. சாலையின் இரு மருங்கிலும் குதிரை பூட்டிய டாங்கா வண்டிகள். இடையிடையே சில பாரம் எடுத்துச் செல்லும் வண்டிகளை ஒட்டகங்கள் இழுத்துச் சென்றன. எத்தனை நூற்றாண்டுகளை ஒரே சமயத்தில் தில்லி வாழ்ந்து காட்டுகிறது என்ற திகைப்பு. வெளியே வலது பக்கம் ஒரு நீண்ட சாலையின் எதிர்ச்சாரியில் ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடியின் மேலே Star Hotel என்று விளம்பரம் செய்யும் நியோன் விளக்குகள் மின்னின. பக்கத்திலேயே ஹோட்டல் இருக்கிறதே. இன்று இரவோ அல்லது இன்னும் வசதியான இடம் கிடைக்கும் வரையோ இந்த ஹோட்டலிலேயே தங்கலாமே என்று சொன்னதும் அவர்களும் உடன் சம்மதித்தார்கள். அன்று இரவு ஸ்டார் ஹோட்டலில் ஒரு அறை எடுத்து தங்கினோம். ஆளுக்கு ஒரு நாள் வாடகை ரூபாய் ஆறு. என்றார்கள். அந்த சாலைக்கு குதப் ரோட் என்று தெரிந்தது. தில்லியில் கால் பதித்த முதல் நாள் இரவே நாங்கள் தங்கியது குதப் ரோடில் என்பதில் ஒரு விசேஷம் இருந்தது மறு நாள் காலையில் அலுவலத்தில் பணிக்கு சேர்ந்ததும், அங்குள்ளவர்களின் அட்டஹாச கேலிச் சிரிப்பில் எங்களுக்குத் தெரிய வந்தது.

    பி.கு. இத்துடன் ஹிராகுட் வாழ்க்கை முடிகிறது. அடுத்து தில்லி வாழ்க்கையின் தொடக்கம்.

     

    Share
  • “பொருள் என்று ஒரு திடப் பொருள் உலகத்தில் இல்லை”

     

    வெங்கட் சாமிநாதன்

    நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 53)

    புர்லா திரும்பியதும்  மறுபடியும் பழைய அன்றாட பாட்டை நடைதான். அலுவலகம், தினசரி பத்திரிக்கையில் wanted column-ல் எனக்கு என்ன இருக்கு என்ற தேடல். இருந்தால் ஒரு மனு போட  வேண்டியது. இதில் ஏதும்  சுவாரஸ்யம் இல்லை என்றாலும், இவ்வளவு நெருக்கமாக பழகியவர்களை விட்டுப் பிரிய வேண்டியிருக்கிறதே என்ற ஒரு வருத்தம் ஒரு மூலையில் அவ்வப்போது எட்டிப் பார்க்கும். ஒவ்வொரு சமயம் இந்த நினைப்பு வந்ததும் சக்கரவர்த்தியைப் பார்க்கப் போய் விடுவேன். மஞ்சு சென்குப்தாவுக்கும் வேறு செக்‌ஷனுக்கு மாற்றலாகி விட்டது. அங்கு கொஞ்ச நேரம் கழிப்பேன். சில சமயங்களில் மிருணாலும் சேர்ந்து கொள்வான். அவன் இருக்கும் போது மஞ்சு சொல்வாள்: “எங்களை விட்டுப் போய் விடுவீர்கள் இல்லையா?” என்பாள் இது கட்டாயம் இண்டர்வ்யூவுக்குப் போகும் போதும் அங்கிருந்து திரும்பும் போதும் கேட்கப் படும் கேள்வி. மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வோம். சாதாரணமாகக் கேட்பது போலும் இருக்கும். குற்றம் சாட்டுவது போலும் இருக்கும். வருத்தத்துடன் தனக்குள் பேசிக்கொள்வது என் காதில் விழுந்தது போலும் இருக்கும். என்ன என்று பதில் சொல்வது? எங்கோ பார்வை செல்லும். ஒரு வெறுமை முகத்தில் படரும். எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் இந்த வருத்தம் சொல்லப்படும். பகிர்ந்து கொள்ளப்படும். எல்லோருமே வாய்ப்புக்காகத் தான் காத்திருந்தார்கள். வாய்ப்புக் கிடைத்ததும் சென்று கொண்டிருந்தார்கள். இங்கு தான் அணைக்கட்டு வேலை முடிந்து கொண்டிருக்கிறதே. உள்ளூர்வாசிகள், ஒடியாக்கள் தவிர மற்ற எல்லோருக்கும் இதே கவலை தான். வேலை நீக்க உத்தரவு தரப்படுவதற்கு முன் கிளம்பிவிடவேண்டும். FA & CAO அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு கவலை இல்லை. அப்படியே கூண்டோடு அவர்கள் பிலாய்க்குப் போகக் காத்திருந்தார்கள்.

    இப்படி எல்லோரும் போய்க்கொண்டிருந்தால் இங்கு மிகுந்த நாட்களுக்கு வேலை நடக்க வேண்டாமா? வேறு வேலைக்கு உத்தரவு வந்த போதிலும் இருக்கும் வேலையைச்  செய்ய ஆட்கள் இல்லையென்று நிர்வாக மேல் அதிகாரிகள் வேலை கிடைத்தவர்களை விடுவிக்க மறுத்தார்கள். அந்த ஆபத்து வேறு ஒன்று தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக பயமுறுத்திக் கொண்டிருந்தது, என் செக்‌ஷனுக்கு பொறுப்பாக இருந்த தேஷ் ராஜ் பூரி எனக்கு ஆசுவாசம் அளித்திருந்தார். “உனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்ததும் சொல். பதிலுக்கு ஆள் வேண்டும் என்று நான் உனக்குத் தடை சொல்ல மாட்டேன். உடனே உன்னை விடுவித்து விடுகிறேன். கவலைப் படாதே” என்று எப்போதாவது தோணும் போதெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆறு வருஷங்களுக்கு முன் வேலைக்குச் சேர்ந்த சமயம் என்னிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டிருந்தவர் பின்னர் ஒரு சில மாதங்களில் மிகவும் கனிந்த மனிதராக மாறியவர். அந்த ஆரம்ப மாதங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் அவரிடம் நான் வேலை பார்க்கவில்லை. ஆனால், அன்று விட்டுப்போன அந்தக் கனிவை இன்று இப்போது திரும்பப் பார்க்க முடிந்தது. உறவுகள் எப்படியெல்லாம் தான் மாறுகின்றன!

    Wanted columns பார்த்து வேலைக்கு  மனு எழுதிப் போடுவதும் எங்கிருந்து என்ன வரும் என்று எதிர்பார்ப்பும் தொடர்ந்தது. ஊர் சுற்றும் ஆசையும் அந்த எதிர்பார்ப்போடு சேர்ந்து கொள்ளும். வந்தது ஒரு அழைப்பு. Eastern Railway யிலிருந்து. கல்கத்தாவுக்குப் போகவேண்டும் நேர்காணலுக்கும் பரிட்சைக்கும். மிருணாலுக்கு சந்தோஷம் தான். ஆனால் கல்கத்தாவில் அவன் குடும்பத்தார் யாரும்  இல்லை. அப்பா இன்னமும் டாக்காவில் தான் வேலை பார்க்கிறார். ஆனால் முன்னொரு தடவை எல்லோரும் கல்கத்தா போயிருந்த போது எங்களுக்கு இடவசதிகள் செய்து கொடுத்தவர் இம்முறையும் தனக்குத் தெரிந்தவருக்கு ஒரு கடிதம் கொடுத்தார் பாலிகஞ்சில் வெகு காலமாக வாழ்ந்து வருகிறவர்கள். அங்கு நான் தங்கிக்கொள்ளலாம். இரண்டு நாட்கள் தான் தங்க வேண்டியிருக்கும். ஒரு நாள் பரிட்சை. மறுநாள் நேர்காணல். நேர்காணல் 12 மணிக்குள் முடிந்துவிடும். பின்  மதியம் எங்கும் போகலாம். அல்லது இன்னும் ஒரு நாள் தங்கவும் செய்யலாம். இரவு தான் பம்பாய் மெயில். காலை ஐந்து மணிக்கு ஜார்சகுடா போய்ச் சேர்ந்து விடும். அலுவலகத்துக்கு 10 மணிக்குள் போய்ச் சேர்ந்து விடலாம்.

    இம்முறை குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இருக்கவில்லை. நேர் காணலில் தான் நான் என் இயல்பில் இருந்ததாக நினைத்தேன். ஆனால் கடைசியில் என்னை அறியாது தவறிழைத்தது தெரிய வந்தது. மூன்று அதிகாரிகள் நேர்காணலில் இருந்தனர். எல்லாக் கேள்விகளுக்கும் சரியாகவே பதில் சொன்னதாகத் தான் நான் நினைத்தேன். கடைசியில் அந்த மூவரில் மூத்தவராகத் தோன்றியவர் ஒரு கேள்வி கேட்டார்.

    ”பதினைந்து நிமிஷங்களாகப் பார்த்து வருகிறேன். நாங்கள் உன்னை இங்கு வேலைக்குச் சேர்த்துக் கொள்வதற்கான உன் தகுதியை நிச்சயிக்கிறவர்கள். நாங்கள் உயர் அதிகாரிகள். எங்களைப் போன்ற ஒருவரிடம் நீ வேலை செய்ய வேண்டும். எங்கள் கேள்விகளுக்குப் பதில் தந்தாயே தவிர ஒரு தடவை கூட எங்களுடன் பேசும் போது “Sir” என்று நீ சொல்ல வில்லை. உயர் அதிகாரிகளிடம் எப்படிப் பேசுவது என்று கூடத் தெரியவில்லையே உனக்கு?” என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்படி ஒரு கேள்வி வரும், என்று நான் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் அதிர்ந்து “yes I should have, I am sorry” என்று பதில் அளித்தேன். மூவரும் கொஞ்ச நேரம் அமைதியாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். பின் சட்டென்று, “ இப்பவும், “Sir” என்று வரவில்லையே உன்னிடமிருந்து” என்று சொல்லி, “சரி, நீ போகலாம்.” என்று முடித்து விட்டார். நான் எழுந்து வந்து விட்டேன். சரி இனி பயனில்லை. வேலை கிடைக்குமா என்பது நிச்சயமில்லாது இருந்தது. இனி நிச்சயமாகக் கிடைக்கப் போவதில்லை என்று நினைத்துக்கொண்டேன். ஏன் இப்படி நடந்தது? என்று தெரியவில்லை. சொல்லக் கூடாது என்ற கர்வம் இல்லை. பின்? ஒரு வேளை ஹிராகுட் அலுவலகத்தில் முழுதும் ஹிந்தியிலேயே பேசி வந்த பழக்கத்தால்தான் “Sir” சொல்ல வரவில்லையா? வேலை கிடைக்கப் போவதில்லை என்று வெளியே வரும்போதே மனதுக்குள் நிச்சயமாகி விட்டதால் அதைப் போட்டு நான் குழப்பிக்கொள்ளவில்லை. இன்னும் எத்தனையோ வாய்ப்புக்கள் விளம்பரங்கள் வரும் என்று மனம் சமாதானம் கொண்டது.

    மறுபடியும் பேலூர் மடம் தக்ஷிணேஸ்வரம் போகவேண்டும்  என்று ஒரு ஆசை. மிக அழகான  கோயில். மடம். ஆற்றங்கரை. எல்லாமே நமக்குப் பழக்கமில்லாத புதிய முறையில் கட்டப்பட்ட கோயில்கள். அன்று மாலை காலேஜ் ஸ்ட்ரீட் போனேன். அங்கு தான் அந்த தெரு முழுதுமே நம்மூர் மூர் மார்க்கெட் போல நடைபாதையிலும் கடைகளிலும் பழைய புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும். ஒரு நடை பாதைக் கடையில் Bertrand Russel-ன்  A History of Western Philosophy கிடைத்தது. பெரிய புத்தகம் பத்து ரூபாய்க்குக் கிடைத்தது. எனக்கு ஏதோ புதையல் கிடைத்தது போல சந்தோஷம். ரஸ்ஸல் எனக்கு பிடித்தமானவராகியிருந்தார். பாதியும் ஸ்ரீனிவாசனும் எனக்கு ரஸ்ஸலைப் பழக்கி விட்டிருந்தார்கள். மிகுந்த நகையுணர்வும் மிகக் கஷ்டமான தத்துவ கருத்துக்களையும்  மிக எளிய ஆங்கிலத்தில் மிக எளிய நடையில் சொல்வதில் அவர் திறமைசாலி. அவரைப் போலவே C.E.M Joad-ம் மிக எளிய நடையில் விளக்கி எழுதிய தத்துவ தரிசனப் புத்தகங்களைப் படித்திருந்தாலும் அவற்றை ரஸ்ஸல் சொல்லப் படிக்க வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருந்தது.

    ரஸ்ஸல் மாதிரி வெகு சிக்கலான தத்துவார்த்த தரிசனங்களையும் வேடிக்கையாகவும்  அதே சமயம் அவை சிதைபடாமலும் சொல்வது ஒரு கொடை என்று தான் சொல்ல வேண்டும்

    புனிதர் அகஸ்டினின் Confessions பற்றி பேசும்போது ரஸ்ஸலுக்கு மகாத்மா காந்தி தன் பால்ய பருவத்து பாலியல்  உணர்வுகளைக் குற்ற உணர்வுடனேயே தன் சுய சரிதத்தில் (My Experiments with Truth) நினைவு கொள்வதைக் குறிப்பிட்டு இரண்டு பேரும் ஒரே ரக ஜீவன்கள் என்பார். அந்தக் குற்ற உணர்வு ரஸ்ஸலுக்கு வேடிக்கையாக இருக்கும். இன்னொரு இடத்தில் அவர் காலத்து மனோவியல் அறிஞர்கள் மனம் பற்றிய ஆராய்ச்சியில் ஆழந்து மனம் என்றே ஏதும் கிடையாது என்ற முடிவுக்கு வந்துள்ளது போல பௌதீக அறிஞர்களும் பொருளைப் பற்றி விளக்கப்போக கடைசியில் பொருள் என்று ஒரு திடப் பொருள் உலகத்தில் இல்லை. எல்லாம் ஆராயப் போகப் போக ஒரு சக்தியின் வெளி தான் கிடைப்பது என்றும் சொல்வதெல்லாம். தையல்காரர்கள் உலகத்தில் எல்லோரும் நிர்வாணமாகத்தான் செல்கிறார்கள், ஆடை என்று ஒன்று உலகத்தில் இல்லை என்று சொல்வது போலும், , செருப்பு தைப்பவர்கள் உலகத்தில் எல்லோரும் வெறுங்காலுடன் தான் நடக்கிறார்கள், என்றும் சொல்வது போல் இருக்கிறது என்பார். தன்னுடைய சகா ஆல்ஃப்ரெட் நார்த் வொய்ட் ஹெட் என்ன சொல்கிறார் என்றே ஒருவருக்கும் புரியாது அவர் விளக்கங்கள அவ்வளவு கடினம். ஆனால் அவர் பிரசங்கங்களுக்கு பெருங்கூட்டம் கூடும். வொயிட் ஹெட் பேச்சைக் கேட்டு வந்தேன் என்று சொல்லிக்கொள்வதில் அவர்களுக்குப் பெருமை என்றும் காரணம் சொல்வார்.  இப்படி ரஸ்ஸல் பெரிய விளக்கங்கள் சொல்லிச் செல்லும்போது நகைச் சுவையான கமெண்ட் அடித்துக்கொண்டே செல்வார்.

    ஆனால் ஐம்பதுகளிலும்  அறுபதுகளிலும் ரஸ்ஸலும் பெர்னாட் ஷாவும் பேசப்பட்டது  போல் இப்போது அவர்களை யாரும் நினைவு கொள்வதில்லை. இதுவும் ஒரு இழப்பாகத்தான் தோன்றுகிறது. இந்த சோக உணர்வு ஒரு வேளை வயது முதிர்ந்த காலத்தில் பழைய நினைவுகளைக் கிளறும்போது தோன்றுவது இயல்பு என்று இளைஞர்கள் சொல்லக் கூடும்.

    அப்படித்தான் அன்று  எனக்கு இருந்தது. இந்த இடத்தை விட்டுப் போகவேண்டும் என்று  முனைப்போடு முயன்று கொண்டிருக்கும் போதே இவர்களை எல்லாம் விட்டுப் பிரிகிறோமே என்ற நினைப்பும் உடன் தோன்றிக்கொண்டே இருந்தது.

    புர்லா திரும்பியதும் நண்பர்களிடம் நடந்ததைச் சொன்னேன். இந்த கல்கத்தா பயணம் வீண் தான் வேலை கிடைக்காது என்றால் அவர்கள் காரணம் கேட்டுச் சிரித்தார்கள். ”உனக்குத் தெரியாது. உனக்குள் ஒரு திமிர் இருக்கத் தான் செய்கிறது. இருந்தாலும் கவலைப் படாதே. இன்னும் நிறைய வாய்ப்புக்கள் கிடைக்கும்” என்றும் சமாதானம் சொன்னார்கள். கிடைத்தது. இப்போது எனக்கு அழைப்பு வந்தது கட்டக்கிலிருந்து. ஒரிஸ்ஸாவின் தலைநகர். அப்போது புபனேஸ்வர் கட்டப்படவில்லை. இந்திய அரசாங்கத்தின் உள்துறை யிலிருந்து அழைப்பு. போனேன். எப்படிப் போனேன் என்று நினைவில்லை. பஸ்ஸில் தான் போகவேண்டும். ஆனால் பஸ்ஸில் போய்ப் பார்க்க வேண்டும் என்று அந்நாளைய வாலிப வீம்பில் ஒரு முறை போனேனே தவிர நிர்ப்பந்தத்திற்கு கட்டக் பஸ்ஸில் போன நினைவு இல்லை. ஏதோ கொஞ்ச தூரம் பஸ்ஸிலும் பின் எங்கே ரயில் ஏறினேன் என்று நினைவில்லை.

    இந்தப் பயணத்தில்  என்னுடன் கட்டக்கில் பரிட்சைக்கும் நேர்காணலுக்கும் வந்திருந்தவர்கள் இன்னம் நான்கு பேரை எனக்கு நல்ல நினைவு இருக்கிறது. மற்ற எந்த பயணத்திலும் யாரும் நினைவில் இல்லை. டி.எம். ராகவாச்சாரி நாக்பூரிலிருந்து வந்தவன். பி.எஸ் ராஜூ, எங்கிருந்து என்று நினைவில் இல்லை. ஆனால் ஆந்திராவிலிருந்து வந்தவர். எங்கள் எல்லோரையும் விட மூத்தவர். நல்ல உயரமான மனிதர். டி.ஆர்.ஜி பிள்ளை என்று எனக்கு இளையவனான ஒருவன். பின் ஏ. சீனிவாசன் போற்றி. இருவரும் மலையாளிகள். நினைவிலிருக்கக் காரணம் இவர்கள் எல்லோருடனும் வெகு காலம் பழக விதிக்கப் பட்டிருந்தார்கள் என்பது அன்று எங்கள் எவருக்கும் தெரியாது. எப்படியோ நாங்கள் ஐவரும் கட்டக்கில் சந்தித்த கணத்திலிருந்தே வெகு நெருக்கமாக பேசிப் பழகினோம் அதுவும் ஏதோ விதிவசத்தில் நடந்தது போல் தான்.

    கட்டக்கில் தங்கியது,  சுற்றி உலவியது எதுவும்  எனக்கு நினைவில் இல்லை. சுற்றி எங்கும் குடிசைகள், ஓரு பெரிய விஸ்தாரமான கிராமம் போலத் தான் இருந்தது கட்டக். ஒரு பெரிய அழகான கட்டிடம் என்று பார்த்தது ராவென்ஷா காலேஜ் கட்டிடம் ஒன்று தான். நேதாஜி வாழ்ந்த ஊர் அது. அவர் படித்த காலேஜ் அது. அவர் வாழ்ந்த, படித்த காலத்தில் அந்நகரம் எப்படி இருந்திருக்குமோ, கற்பனை செய்துக்கொள்ளத் தான் வேண்டும்.

     தொடரும்

    Share
  • பிரக்ஞையே இல்லாத இரண்டு பாதகங்கள்!

     

    வெங்கட் சாமிநாதன்

    நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 52)

    சினிமா பார்த்துவிட்டு ஹோடடலுக்குத் திரும்பி வந்தேன். பயப்படும்படி ஒன்றும் நேரவில்லை. ஹோட்டலும் ரூமும்  பத்திரமாகத்தான் இருந்தன. பூட்டு உடைக்கப்படவில்லை. உடைப்பதற்கு அறையில் ஏதும் இல்லை. முதல் தடவையாக தனியாக வந்துள்ள அனுபவமும் தான் சற்று பயப்பட வைத்துள்ளது என்று மனம் சமாதானம் சொன்னாலும் ஹோட்டல் ஒன்றும் அப்படி சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சூழ்நிலையில் இல்லை. இருப்பினும் படுத்துக்கொண்டேன். இரவு முதலில் கொஞ்ச நேரம் மனம் அமைதியின்றி கழிந்தாலும் எப்படியோ தூக்கம் வந்து கவலையைத் தீர்த்தது. தூங்கினால் காட்டில் தனிமையில் இருந்தாலும் நகரச் சந்தடியில் கூட்டத்தோடு இருந்தாலும் தூக்கம் எல்லாவற்றையும் அழித்து விடுகிறது. சுய நினைவே இல்லையென்றால் எது எப்படி இருந்தால் என்ன?

    காலையில் எழுந்ததும் காசிக்குப் போனால் என்ன என்று தோன்றியது. இவ்வளவு தூரம் வந்து விட்டு காசிக்குப் போகவில்லையென்றால்…? பின், எப்போது இந்தப் பக்கம் காசிக்கு இவ்வளவு அருகில் வரும் சந்தர்ப்பம் ஏற்படுமோ? அதிலும் என் காசியாத்திரைக்காகும் செலவு அலஹாபாதிலிருந்து காசிக்குப் போய் வரும் செலவுதான். யார் யாரெல்லாமோ நிறைய பணம் வாழ்நாளெல்லாம் சேர்த்துக்கொண்டு, சொத்துக்களை நிர்வகிக்க ஏற்பாடு செய்து,  உயில் எழுதி வைத்து விட்டுப் போவார்களாம். எனக்கு அந்த கஷ்டம் இல்லையே. அதோடு அப்பா அம்மாவுக்கு காசியிலிருந்து கங்கை ஜலச் செம்பு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தால் இன்னும் சந்தோஷப்படுவார்களே. அத்தோடு புள்ளையாண்டானுக்கு அபூர்வமா காசிக்குப் போகணும், கங்கை ஜலம் வாங்கிக் கொடுக்கணும்னு அக்கறையும் பக்தியும் வந்து விட்டது என்றால் சந்தோஷம்தானே. நான் சொன்னால் நம்ப மாட்டார்கள். ஆனால் கங்கைச் செம்பு சாட்சி சொல்லுமே.

    திரும்பி வரவேண்டும் அலஹாபாதுக்கு. இலவச பாஸ் அலஹாபாதிலிருந்து சம்பல்பூருக்கு. காசிக்கு டிக்கட் வாங்கி ரயிலில் உட்கார்ந்து கொண்டால், சுற்றி இருப்பவர்கள் ஒரு கூட்டம், ஐந்தாறு பேர், தமிழ் பேசுகிறவர்களாக இருந்ததில் ஒரு ஆச்சரியமும் சந்தோஷமும். எல்லாம் நாற்பது ஐம்பது வயசுக்காரர்கள். பெண்கள் யாரும் இல்லை. பேச்சுத் துணையாயிற்று. யார், எந்த ஊர், எங்கே வந்தீர்கள், எங்கே போகணும்? இத்யாதி விசாரிப்புகள் இல்லாதிருப்பது சாத்தியமில்லையே. பேசிக்கொண்டோம். அவர்களும் அதிசயமாக காசிக்குப் போகிறவர்கள்தான். அதுவும் நல்லதாயிற்று. என்னைப் பற்றித்தான் அவர்கள் துருவித் துருவி கேட்டார்களே ஒழிய, அவர்கள் பற்றி அவர்களாகச் சொன்னதைத் தவிர எனக்கு அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள எதுவும் கேட்கத் தோன்றவில்லை.

    மாலை வரைதான் உறவு. பின் பிரியப் போகிறோம். தெரிந்து என்ன ஆகப் போகிறது என்பதற்கு  மேல், அப்படி ஒரு சுபாவம் வளரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் அவர்களுடன் பேசிக்கொண்டே வந்ததில் பொழுது போயிற்று. சுவாரஸ்யமாகவும் இருந்தது. காசி வந்ததும் இறங்கினோம். அவர்களோடு சேர்ந்ததில் ஒரு லாபம். எல்லா விசாரிப்புகளையும் அவர்களே செய்தார்கள். ஒரு சத்திரமோ மடமோ சரியாக நினைவில் இல்லை. அங்கே தங்கினோம். இதுவும் இதை எழுதும் இச்சமயம் ஒரு சந்தேகம் தட்டுகிறது. தங்கின இடத்தின் முகப்பு, தூண்களும் தாழ்வாரமும் கொண்ட முகப்பு நினைவில் பதிந்திருக்கிறது. ஆனால் அது காசியிலா, இல்லை, பூரியிலா என்று நிச்சயமில்லாது ஒரு மங்கலான நினைவாக இருக்கிறது

    இதை இடையில் சொல்ல மறந்து விட்டேன். ஒரு சமயம் ஊருக்கு  விடுமுறையில் போக, கட்டக் வரை  பஸ்ஸிலும் பின்னர் அங்கிருந்து  கல்கத்தா மெயிலில் ஊருக்கும்  செல்லலாமே என்று தோன்றியது. இரவு பூராவும் பஸ்ஸில். அப்போது  என்னுடன் இன்னும் சிலர்  ஹிராகுட்வாசிகள் இருப்பது இடையில் தெரிந்து அவர்கள் நண்பர்களாகி, பூரி போய் ஜகந்நாதர் தரிசனம் செய்து விட்டு போகலாமே என்று பெல்லாரிக்காரர், தன் தங்கையுடன் வந்தவர் சொல்ல, சரி என்று எல்லோரும் பூரி சென்றோம். அங்கு தங்கியிருந்த ஒரு மடம், இலவசமாகக் கிடைத்த தங்கல். அது ஒரு மிகவும் மனதுக்கு சந்தோஷம் அளித்த அனுபவம். அதை எழுத எப்படி ஏன் மறந்தது என்று தெரியவில்லை.

    கூட வந்தவர்கள் சொல்லி, வழியில் ரோடில் பூரி சாப்பிட்டதும், அவ்வளவாக ரசிக்காத பூரி, நிழலாடுகிறது. ஆனால் இதெல்லாம் முக்கியமில்லை. குறுகி வளைந்த இருபுறமும் இர்ண்டு மூன்று அடுக்கு மாளிகை போன்ற பெரிய வீடுகள் கொண்ட நீண்ட தெருக்கள் வழி சென்றது ஒரு புதுமையான அனுபவம். இப்படிப்பட்ட குறுகிய, வளைந்து நீளும் சந்துகள் இருபுறமும் உயர்ந்த கட்டிடங்கள் என்பது இதுகாறும் காணாத ஒன்று. எத்தனை நூற்றாண்டு பழமையான, சரித்திரப் பிரசித்தி பெற்ற நகரம் இது.! அதன் குறுகிய சந்துகளின் ஊடே நடந்து செல்வதே பெருமையாக இருந்தது. தரையில் வெயில் படாத சந்துகளான தெருக்கள்.

    முதலில் கங்கைக்கரையை அடைந்தோம். எந்த படித்துறை என்பதெல்லாம் நினைவிலில்லை. நீண்ட விசாலமான படிகள். வெகுதூரம் படிகளில் இறங்கியே ஆழத்தில் கங்கை நதி பாயும் நீர்த்தடத்தை அடைய முடியும். படிகளின் இடையே ஒரு சமதளம். ஒரு பெரிய மரம் பின் மறுபடியும் படிகள். ஆற்றின் அருகே சென்றதும் எதிர்க்கரையைப் பார்த்தால் அது எங்கோ தூரத்தில். எவ்வளவு பிரம்மாண்ட ஆறு. இதற்கு முன் காவிரி எல்லாம் வெறும் வாய்க்கால் தான். எதிர்க்கரையிலும் பெரிய பெரிய மாளிகைகள். கண்ணுக்கெட்டிய தூரம் இரு புறமும், இரு கரைகளிலும் மாளிகைகள். கோயில்கள் போன்ற கோபுரங்கள். நீண்ட விஸ்தாரமான, ஆற்று நீரைத் தொட்டுக் கொண்டிருக்கும் படிகள்.

    பார்க்க ஆனந்தமாகத்தான் இருந்தது. இது நாள் வரை காணாத காட்சி. காணாத பிரம்மாண்டம். என்னுடன் வந்தவர்கள் இறங்கிக் குளித்துக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஆற்றில் இறங்குவதா, வேண்டாமா என்ற தயக்கம். ஆற்றையும் அதில் கண்ட இடமெல்லாம் மிதக்கும் பொருள்களையும் குப்பைகளையும் பார்க்க மிகக் கஷ்டமாக இருந்தது. மேலும் ஆற்று நீரின் கலங்கல் இறங்குமிடத்தில் காணும் சேறு என்னவோ மனத்தைப் புரட்டியது. காவிரி ஆற்றின் நீரும் கலங்கல்தான். ஆனால் அது இப்படி அசுத்தங்கள் மிதக்கும் ஆறு இல்லை. இத்தகைய சேறு நிறைந்த கரையும் அல்ல. உடையாளூரின் ஆற்றில் இறங்க படியில் கால் வைத்தால் படிகளை கலங்கலற்ற  நீரின் அடியில் பார்க்கலாம். மீன்கள் கால்களைக் கடிக்கும். இப்போது தான் ஆற்றில் நீரும் இல்லை. ஒரு வேளை மணலும் இல்லை என்று நினைக்கிறேன்.

    குளித்துக்கொண்டிருந்தவர்கள் “பயப்பட வேண்டாம் . நாங்கள்  இருக்கோம்.” என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு சின்னப் பெண் பாவாடை அணிந்த பத்து வயசுப் பெண், அவர்களைத் திட்டிக்கொண்டே கரையில் நின்று கொண்டிருந்தது. ரொம்ப சூட்டிக்கையான பெண். முகத்தைப் பார்த்தாலே அதோடு விளையாடத் தூண்டும் முகம். “அது ”ஐயோ” என்று இடையில் கத்தியது தமிழ்ப் பெண்ணோ என்ற எண்ணம் தோன்றவே அதன் பயம் நீக்கி அதோடு பேச்சுக் கொடுத்தால், அந்தக் குழந்தை அங்கு கங்கைக் கரையிலேயே வசிக்கும் ஒரு தமிழ்க் குடும்பத்தின் பெண் என்று தெரிந்தது. . இங்கு விளையாட வந்திருக்கிறது. கங்கைக் கரையில் குடியிருந்தால் குழந்தைகள் விளையாட கங்கைக் கரைக்கு வருவது பற்றி பெற்றோருக்கு பயம் இல்லை போலும். சகஜமாகியிருக்கும் வாழ்க்கை. சூழல். அப்பா அங்கேயே அருகில் ஏதோ கோயிலில் பூஜை செய்பவர். அதற்கு அதிக நேரம் என்னோடு பேசுவதில் இஷ்டம் இருக்க வில்லை. “ரொம்ப நாழியாயிடுத்துன்னு அம்மா கோவிச்சுப்பா” என்று சத்தம் போட்டு சொல்லிக்கொண்டே ஓடிவிட்டது.

    ”போறும் பேசினது. வாங்க குளிக்க” என்று அழைப்பு தொடர்ந்தது. வெகு தயக்கத்திற்குப் பிறகு இஷ்டமில்லாமல் அரை மனதோடு ஆற்றில் இறங்கினேன். இது நடந்தது 1956-ம் வருடம். அதன் பிறகு கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு ராஜீவ் காந்தி கங்கையைச் சுத்தம் செய்ய ஒரு பெரும் திட்டம் வகுத்து பல ஆயிரங்கோடிகள் செலவழித்த பிறகு, 1990 களில் நான் ஒரு முறை காசிக்கு நாடகக் கருத்தரங்குக்குப் போயிருந்தேன். கங்கையோ இன்னும் 45 வருட அசுத்தங்களைச் சுமந்து கொண்டு பிரவாஹித்துக்கொண்டு இருந்தது. நாங்கள் ஒரு படகில் கங்கையைக் கடந்து அக்கரைக்குச் சென்றோம். படகில் எங்களுடன் அமர்ந்திருந்த காசிவாசிகள், காசி பல்கலைக் கழக பேராசிரியர்கள் பேராசிரியைகள், மற்றும் பல நகரங்களிலிருந்து வந்திருந்த பேராசிரியர்கள், படகு நதியில் இறங்கியதும் கங்கை நீரைக் கையில் ஏந்திப் பருகினர். பக்தி பரவசத்தோடு தலையில் தெளித்துக் கொண்டனர். எனக்கு அந்த  நீரைத் தொடவே அருவருப்பாக இருந்தது. அன்று 1956-ல் ஆற்றில் குளிக்க இறங்கியவர்கள் வற்புறுத்தியது போல இவர்களும் வற்புறுத்துவார்களோ என்ற பயம் ஏற்பட அவர்களைப் பார்க்காது முகத்தைத் திருப்பிக் கொண்டேன். என்னில் பக்தி உணர்வும் புனிதம் பற்றிய சிந்தனையும் அறவே வற்றிவிட்டதோ என்னவோ, தெரிய வில்லை.

    எல்லோரும் பின் விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றோம். அதைக்  கோயில் என்று சொல்வதா இல்லை ஒரு மடத்தின் அறையில் தரையில் ஒரு தொட்டியில் பதிக்கப்பட்டிருக்கும் லிங்கம் என்று சொல்வதா என்று கேட்கத் தோன்றும். ஒரு பாண்டா லிஙகத்தின் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்தான். வருபவர்களுக்கு புஷ்பங்கள் எடுத்துக் கொடுத்து ஆசீர்வதிப்பான். அவன் ஆசிர்வதிக்கிறானோ என்னவோ, அதை வாங்கிக்கொள்பவர்கள் மிகுந்த பக்தி பாவத்தோடு கைகளைச் சேர்த்துக் குவித்து வாங்கிக்கொண்டார்கள். நம் கோயில்களில் காணும் யாரும் அண்டாத கர்ப்பக்கிரஹம், தூர இருந்து சேவிப்பது, மந்திரங்கள் சொல்லி அர்ச்சிப்பது என்று ஏதும் இல்லை. ஜனங்கள் அதிகம் இல்லை. இல்லையென்று இல்லை. பத்திருபது பேர் வருவதும் போவதுமாக இருந்தார்கள். இது கோயிலாக, கர்ப்பக்கிரஹமாக, ஒரு புனித ஸ்தலமாக, இல்லை. விஸ்வநாதர் ஏதோ நீண்ட தூர பயணத்தில் தாற்காலிகமாக இங்கு ஒரு அறை எடுத்து விஸ்ராந்திக்காக, பயணக் களைப்பு போக தங்கியிருக்கிறார். இன்று மாலையோ நாளைக் காலையோ இந்த அறையை விட்டு தன் பயணத்தைத் தொடங்குவார் என்பது போலிருந்தது.

    அப்போது எனக்குத் தோன்றவும் இல்லை. அது பற்றிய விவரமோ பிரக்ஞையோ இருக்கவில்லை. இந்தக் கோயில் என்னும் அறை, ஒரு பெரிய மசூதியை ஒட்டி இருப்பது. ஒரு பெரிய மாளிகையை ஒட்டி ஒரு அவுட் ஹவுஸ் என்று ஒரு அறை கட்டியது போலத் தான் இந்த காசி விஸ்வநாதர் ஆலயம். தெற்குக் கோடியிலிருந்தும் ராமநாதபுரத்திலிருந்து இந்தியாவின் தூர எல்லைகளிலிருந்து நூற்றாண்டு காலங்களாக தம் ஆயுட்கால தவமாக பணம் சேர்த்து, இறுதிக்கால ஏற்பாடுகள் செய்து காசியாத்திரை வருவது விஸ்வநாதரைத் தரிசிக்க இந்த அறைக்குத்தான். ஒரு காலத்தில், பிருமாண்டமாக இருந்த ஆலயம் இது. எத்தனை முறை இது இடிக்கப்பட்டுக் கட்டப்பட்டதோ. இப்போது என் பூர்வீக இடத்தை விட்டு நான் போகமாட்டேன் என்று காசி விஸ்வநாதர் மசூதியின் பின் சுவரை ஒட்டி “தாரணா” வில் உட்கார்ந்திருப்பது போல பட்டது.

    கங்கையும் ஏமாற்றியது. காசி விஸ்வநாதரும் ஏமாற்றினார். ஒன்று, சரித்திரம் வாங்கிய பழி. இன்னொன்று நம்மை நாமே அழித்துக் கொண்டிருப்பது. இரண்டு பாதகங்கள் பற்றியும் நமக்கு பிரக்ஞை இல்லை. வழியில் ஒரு கடையில் கங்கை ஜலம் நிரப்பி பற்று வைத்து மூடிய செம்பு இரண்டு வாங்கிக் கொண்டேன். ஒன்று அப்பாவுக்கு. இன்னொன்று நிலக்கோட்டை மாமாவுக்கு. இரண்டும் அவரவர் பூஜை அறையில் இடம் கொள்ளும்.

    என்னோடு வந்தவர்கள் அங்கேயே தங்கினார்கள். அவர்களூக்கு இன்னும் சில நாட்கள் தங்கும் திட்டம் இருக்கும். நான் அலஹாபாதுக்குத் திரும்பினேன். வேறு எங்கும் போகும் எண்ணமில்லாததால் சம்பல்பூர் வந்து புர்லா போய்ச் சேர்ந்தேன்.

    திரும்பி வந்த பயணத்தின் நினைவு எதுவும் இல்லை.

    யாருக்குத் தெரியும்? நேர்காணலும்  தேர்வும் என்னவாகும் என்று?. ஏதும் வேலைக்கான உத்திரவு வரும் வரை, இது போல, தினம் பத்திரிக்கைகளில்  wanted column –ஐத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது தான். இதை எழுதிய வாக்கியத்தில் ஒரு அலுப்பும் சோர்வும் தட்டுவதாகத் தோன்றலாம். இல்லை. இப்படி மனுச் செய்து கொண்டே இருக்கலாம். நேர்காணலுக்கு அழைப்பு வந்து கொண்டே இருக்கும். நானும் புதுப்புது இடங்களை இலவசமாகப் பயணம் செய்து பார்க்கலாம் என்று ஒரு புதிய வாழ்க்கையும் அனுபவமும் கிட்டத் தொடங்கியிருப்பது நினைக்க எனக்கு உற்சாகமாகத் தான் இருந்தது.  

     படங்களுக்கு நன்றி :

    http://travel.wikinut.com/Varanasi-,also-known-as-Kashi-and-Banaras-is-the-worlds-oldest-city/1vpvjumm/

    Share
  • தென்னாட்டு சாந்தாராம்

    வெங்கட் சாமிநாதன்

    நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 51)

    தினசரி செய்தித் தாள் வாங்கிப் படிக்கும்  பழக்கம் இங்கு ஹிராகுட் அணைக்கட்டுக்கு வேலைக்கு சேர்ந்து நானே சம்பாதிக்க ஆரம்பித்ததிலிருந்து ஏற்பட்டது. இருந்த போதிலும், அதில் Wanted பகுதியையும் படிக்கும் கால கட்டம் ஒன்று புதிதாக ஆரம்பித்துவிட்டது. வேலை தேடவேண்டும் என்ற முனைப்பு இருந்தாலும் அது எத்தகைய கவலையும் தோய்ந்ததாக என்ன ஆகுமோ, என்னவோ, வேலை கிடைக்குமோ கிடைக்காதோ, கிடைக்காவிட்டால் என்ன செய்வது, பெற்றோருக்கு எப்படி பணம் அனுப்புவது என்ற கவலைகளில் பீடிக்கப்பட்டதாக உணரவே இல்லை. எப்படி நான் அதை ஏதோ சினிமா விளம்பரம் பார்ப்பது போல எவ்வித கலவரமும் இல்லாது வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டேன் என்பது தெரியவில்லை. அதிக நாட்கள் இங்கு இருக்கப் போவதில்லை, ஒரு சில மாதங்கள், அல்லது அதிகம் போனால் ஒரு வருடம் இங்கு காலம் தள்ள முடியும். அதன் பின்? சிக்கல் தான். நிச்சயமின்மை தான். ஆனாலும் எப்படி ஒரு அமைதியான மனத்துடன் அந்த நாட்களில் இருந்தேன் என்பது இப்போது எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஏதோ வீரன், தீரன் என்றும் மனத்திடம் என்றும் எல்லாம் என்னைச் சொல்லிக் கொள்வதற்கும் இல்லை.

    எப்படியோ தெரியவில்லை. எப்போதும்  போல் அமைதியாக, சுற்றியிருப்பவர்கள் எல்லாம் ஒருவர் இருவராக, நாலைந்து பேராக ஊரைக் காலி செய்து கொண்டிருந்த போது, நான் பத்திரிகைகளில் வந்த விளம்பரங்களுக்கு மனு போட்டுக் கொண்டிருந்தேன். முதலில் வந்த அழைப்பு Northern Railway யிலிருந்து.. நேர்காணலுக்கும் பரிட்சைக்கும். கூடவே சம்பல்பூரிலிருந்து அலஹாபாதுக்கு போக வர இலவச ரயில்வே பாஸும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. முதல் தடவையாக இலவசமாக ரயிலில் வெகுதூரம் பிரயாணம் செய்யப் போகிறேன். கூட வேலை சம்பந்தப்பட்ட ஒரு நேர்காணலுக்கும் போகப்போகிறேன். புதிய அனுபவம். யாரும் சிபாரிசு செய்து அல்ல. கூட அழைத்துச் சென்று அல்ல. நானே என் தகுதியில் என் முயற்சியில் ஒரு வேலை தேடிக்கொள்ளப் போகும் முதல் அடிவைப்பு. பெருமை யாக இராதா?

    எப்படிப் போவது? யாருக்கு வழி தெரியும்.? தெரிந்தால் என்ன, தெரியாவிட்டால் தான் என்ன? ரயில்வே பாஸ் இருக்கிறது. இலவசம். எங்கே வேண்டுமானாலும் இறங்கி எந்த வண்டியில் வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம். சம்பல்பூரிலிருந்து ஒரு வழியா, இல்லை நேராகச் செல்லும் வண்டி ஏதுமா? இல்லை. எத்தனை வண்டி ஏறி இறங்கி மாறவேண்டுமோ. இஷ்டம் போல் செய்யலாம். ஆனால் குறித்த தேதிக்கு முன்னால் போய்ச் சேர்ந்து விடவேண்டும்.

    சேர்ந்தேன். எப்படி என்றெல்லாம்  இப்போது நினைவில் இல்லை. அலஹாபாத் ஸ்டேஷனில் இறங்கியதும், அது இரவு நேரம். மணி ஏழரை எட்டு இருக்கும். ஒரு ரிக்‌ஷாக்காரன் ஒரு நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லவே, வேறு வழி? சரி என்று ஏறி உட்கார்ந்து அவன் இட்டுச் சென்ற இடத்தில் இறங்கினேன்.

    அது ஹோட்டலாகத் தெரியவில்லை. வளைந்த குறுகிய மாடிப்படி ஏறினால் அறைகள். என் அறைக் கதவு ஒரு மாதிரிதான் இருந்தது. பழங்காலத்துக் கதவு. தாட்பாள் இல்லை. கதவின் மேலே ஒரு சின்ன சங்கிலி. அதை நிலைப்படியின் மேல் சட்டத்தின் வளைவில் கோர்த்து அறையைப் பூட்ட வேண்டும். உள்ளே ஒரு கட்டில். அவ்வளவே. ஒன்றும் சரியாகத் தோன்றவில்லை. இடமும் அதிக நடமாட்டம் உள்ள இடமாகத் தோன்றவில்லை. அப்போது தான் எனக்குச் சற்று, கவலை பயமாக பூதாகரிக்கத் தொடங்கியது. இருப்பதா, இல்லை வேறு இடம் தேடுவதா? வேறு இடம் எங்கே என்று தேடுவது?. இரண்டு நாட்களுக்கு காசும் கொடுத்தாய்விட்டது.  சரி நடப்பது நடக்கட்டும் பார்ப்போம் என்ற ஒரு அசட்டு  தைரியம். உள்ளே பையை வைத்துவிட்டு சாப்பிடப் போனேன். அது ஒன்றும் பெரிய தேடலாக இல்லை. வெளியே பெஞ்ச் மேஜை போட்டு இது தான் பஞ்சாபி ஹோட்டல் என்று விளம்பரம் இல்லாது தன்னைக் காட்டிக்கொள்ளும் ஒன்று. சாப்பிட்டேன். அதில் ஒன்றும் கஷ்டம் இல்லை. பஞ்சாபி உணவு பழகியது. புது இடம். எதாக இருந்தாலும் நன்றாகத் தான் தோன்றும். லாட்ஜுக்குத் திரும்பி வந்து படுத்துக்கொண்டேன்.

    வழியில் சினிமா விளம்பரம்  ஒன்று பார்த்தேன். புதிய படம். ஜனக் ஜனக் பாயல் பாஜே. நல்ல பாட்டுக்கள். நல்ல நடனங்கள் கொண்ட படம். என்று படித்திருக்கிறேன். சாந்தாராம். தாஹேஜ் என்ற பழைய படம் ஒன்று சம்பல்பூர் விஜயலட்சுமி டாக்கீஸில் பார்த்திருக்கிறேன். எரியும் சமூகப் பிரச்சினைகளை கையாள்பவர் என்று புகழ் பாடப்படுபவர். தஹேஜ் என்றால் வரதட்சணை என்று பொருள். அதில் வரதட்சணைக் கொடுமையில் தவிக்கும் பெண்ணின் அவலம் பற்றிய கதை. அதெல்லாம் சரி. ஆனால் ஒரே மெலோட்ராமா. அழுகை. ஸ்டாக் பாத்திரங்கள். ஸ்டாக் சம்பவங்கள். புதிதாக சாந்தாராம் டச் என்று சொல்லப் படுவதைத் தேடினால், அதில் ஒரு காட்சி. ஜயஸ்ரீ, தான் கதாநாயகி. சாந்தாராம் தான் காதலித்து மணம் புரிந்து கொண்ட  மனைவியை கதாநாயகியாக்கிக் கொண்டதில் ஒன்றும் தவறில்லை. பணம் மிச்சம். தன் மனைவிக்கும் புகழ் தேடித்தரும் காரியம் தான். ஆனால் அவளை இடுப்பை வளைத்து தன் செழிப்பான பின்புறங்களை ஆட்டிக்கொண்டே நடக்க வைப்பது தான் பெண்ணின் அழகைக் காட்டுவதற்கான ஒரே வழி என்று சாந்தாராமுக்குப் பட்டிருக்கிறது. ஜயஸ்ரீயின் பின் புற அழகைப் பற்றி ரொம்பவும் பெருமைப் பட்டுக்கொள்கிறவர் சாந்தாராம், அப்பெருமையை உலகறியச் செய்ய்யும் விருப்பம் அவருக்கு  என்றும் தோன்றுகிறது. ஆரம்பக் காட்சிகளில் ஒரு பந்து வீசப்படும். அது முன்னே தன் அழகான பின்புறத்தை ஆட்டிக்கொண்டே போய்க்கொண்டிருக்கும் ஜயஸ்ரீயின் பின்புறத்தை அடித்துத் திரும்பும். ஜயஸ்ரீ திரும்பிப் பார்த்து பொய்க்கோபம் கொள்வாள். இப்படித்தான் இருக்கும் அவர் சமூகப் பிரச்சனைகளைக் கையாளும் பார்வையும் அதற்கு அவர் தேடும் உத்திகளும். இப்போது அவர் இந்திய சினிமாவில் ஒரு பெரிய சகாப்த புருஷர். நம்மூர் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர், மணிரத்தினம் போல. நம்மூர் ஸ்ரீதர் வாழ்வில் ஒரு நாள் நாம் காசியாத்திரை போகும் ஆசை கொண்டிருப்பது போல, அவர் ஒரு நாள் சாந்தாராம் ஷூட்டிங் பார்க்கப் போயிருக்கிறார். “உங்களைத் தென்னாட்டு சாந்தாராம் என்று சொல்கிறார்களாமே? “ என்று சாந்தாராம் கேட்டாராம். “ஸ்ரீதர் அதற்கு சற்று வெட்கப்பட்டு ஆமாம் என்றாராம். எல்லாம் விவரமாக அந்த சைதன்யத்தைப் பற்றி தமிழ் பத்திரிக்கை ஒன்றில் அவரே எழுதியிருக்கிறார். இல்லையெனில் எனக்கு எப்படித் தெரியும். இன்னொரு காட்சி. மேலே ஒரு ஹரிகேன் விளக்கு ஒன்று தொங்கும். மாமனாரும் மருமகளுமோ இல்லை மாமியாரும் மருமகளுமோ ஒரு சூடான விவாதத்தில். மேலே தொங்கும் ஹரிகேன் விளக்கு ஆடும். ஒரு பக்கம் சாயுந்து ஆடும்போது மாமனாரின் முகம் கோபாக்கினியில் சுடர் விட்டு எரியும். விளக்கு மறுபக்க முனைக்கு ஆடிச் செல்லும் போது மறுமகளின் துக்கத்தில் பீறிடும் முகம் காணும். இப்படி அந்த விளக்கு ஒரு மூலைக்கு மறு மூலை என்று ஆட, இருவர் முகமும் மாறி மாறி உணர்ச்சிகளின் உச்ச கட்டத்தைத் தொடும். அரங்கில் அழுகையும் மூக்கை உறிஞ்சலும் கேட்கும் அமைதி. இது இன்னொரு சாந்தாராம் டச்.

    சரி நல்ல பாட்டுக்கள், நல்ல நடனங்கள் இந்தப் படத்தில் என்று சொல்லப்படுகிறது. நடனமும் பாட்டுமே படத்தின் மையக் கரு. அதுவே படம் முழுதும் விரவியிருக்கும் என்றும் படித்திருந்தேன். சரி பார்த்து வைப்போம். ஆனால் அது நாளைக்கு. நேர்காணல், பரிட்சை எல்லாம் முடிந்த பிறகு என்று தீர்மானித்துக் கொண்டேன்.

    இரவு அமைதியாகக் கழியவில்லை. எந்நேரமும் கதவு தட்டப்படலாம், எதுவும் நேரும் என்ற ஒரு  திகில் இருந்து கொண்டே இருந்தது. இப்போதாவது சரி. நாளை, அறையைப் பூட்டிக் கொண்டு இண்டர்வ்யூக்குப் போனால் இங்கு என்ன நடக்கும்? என்றும் கவலை. இது தான் முதல் தடவை என்பதால் இந்தக் கவலையா, இல்லை இந்த இடம் ஒரு மாதிரியாக அதிகம் நடமாட்டம் இல்லாத இடமாக இருப்பதால் இப்படித் தோன்றுகிறதா என்று தெரியவில்லை.

    இரவு எப்படியோ கழிந்துவிட்டது தான். துக்கத்தில்  எதுவும் தெரியவில்லை. புது இடம், பழக்கமில்லாத் சூழல். அது தான் வேண்டாத சிந்தனைகளையும் கவலைகளையும் தூண்டியதோ என்னவோ. காலையில் குளித்துவிட்டு காலை உணவும் சாப்பிட்டுவிட்டு நேர்காணலுக்குக்குறித்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்திருக்கவேண்டும். இ[ப்போது அது நினைவில் இல்லை. ஆனால் எல்லாம் முடிந்த பிறகு இரண்டு மூன்று இடங்களுக்குப் அலஹாபாத் சுற்றிப் பார்க்கப் போனது நினைவில் இருக்கிறது. ஒன்று மோதிலால் நேரு புகழும் செல்வாக்கும் மிக்க வக்கீலாக இருந்த போது தனக்கென கட்டிக்கொண்ட ஆனந்த் பவன். அதைப் பின்னர் காங்கிரஸ் பார்ட்டிக்கு என கொடுத்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. அங்கு தான் இந்திரா காந்தி வளர்ந்ததும், பெரோஸ் காந்தியுடன் பழக்கமேற்பட்டதும், இத்யாதி. ஆனால் இப்போது அந்த பவனின் வெளித்தோற்றம் தான் நினைவிலிருக்கிறதே தவிர உள்ளே சென்று பார்த்த நினைவுகள் மறந்துவிட்டன. அதைத் தான் இப்போது ஸ்வராஜ் பவன் என்று அழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பின்னர் ஏதோ ஒரு மொகலாய கட்டிடம் என்னவென்று நினைவில் இல்லை.

    பின்னர் கங்கைக்  கரைக்குச் சென்றது நினைவில் இருக்கிறது. அங்கு ஒரு  படகுக்காரனைப் பிடித்து சங்கமத்துக்கு சென்றது நினைவில் இருக்கிறது. இவ்வளவு தூரம் வந்த பிறகு பிரயாகைக்குப் போய் திரிவேணி சங்கமம் பார்க்காமல் போவியா என்ன? என்று ஒரு படகுக்காரனே கேட்டான். இல்லாவிட்டால் எனக்கு எப்படித் தெரியும் படகில் திரிவேணி சங்கமத்துக்குப் போகலாம், அதற்கு படகோட்டிகள் தயாராக இருப்பார்கள் அந்த வாடிக்கை உண்டு என்று?. சரி என்று உட்கார்ந்து விட்டேன். ஐந்து ரூபாய் பேசினதாக நினைவு. சரியாகச் சொல்வதற்கில்லை. ஆனால் இதுவல்ல நான் சொல்ல வந்த விஷயம்.

    எவ்வளவு பெரிய  பிரம்மாண்டமான நதி அது. கங்கை. அதில் நான் படகில் தனியாகப் போய்க்கொண்டிருந்தேன். படகோட்டி என்னவோ சொல்லிக்கொண்டிருந்தான். படகில் உட்கார்ந்து பாதி தூரம் அந்த பிரும்மாண்டத்தின் மத்திக்குப் போனபின் தான் பயம் ஏற்பட்டது. இப்போது ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது? நீச்சல்கூட தெரியாதே. நீச்சல் தெரிந்தாலே இந்த சமுத்திரம் போன்ற பிரவாகத்தில் எப்படி தப்பிப்பது? ராமக்ரிஷ்ண கதாம்ருதத்தில் தான் படித்த ஒரு கதை. கதையில் படகில் சவாரி செய்துகொண்டிருப்பது ஒரு பண்டிதர். சகல சாஸ்திரங்களும், வேதங்களும், புராணங்களும் கரைத்துக்குடித்தவர். படகோட்டியை, ”உனக்கு இது தெரியுமா, அது தெரியுமா?” என்று தன் தொணதொணப்பில் வறுத்துக்கொண்டிருக்கிறார். படகோட்டி அவர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் தனக்குத் தெரியாது என்றே சொல்லிவருகிறான். பண்டிதருக்கு தன் வித்வத்தின் கர்வம் தலைக்கேறுகிறது. “கடைசியில் அவனுக்காக பச்சாதாபப்பட்டு, “இப்படி ஒன்றுமே தெரியாது வாழ்க்கையை வீணாக்கிவிட்டாயே அப்பா? என்று இரக்கப்படுகிறார். கொஞ்ச நேரத்தில் பலமான காற்று வீச படகு ஆட்டம் காண்கிறது. படகோட்டி அந்த வித்வானைக் கேட்கிறான். ”ஐயா, தங்களுக்கு நீச்சல் தெரியுமா? என்று கேட்க அவர் தெரியாது என்று சொல்ல, இப்போது படகோட்டியின் முறை, “ஐயா, வாழ்க்கை முழுதும் என்ன புராணமும், சாஸ்திரங்களும் கற்று என்ன பயன்?, இப்போது நீச்சல் தெரியாத உங்கள் வாழ்க்கை தான் முடியப் போகிறது? என்று சொல்லி ஆற்றில் குதித்து நீந்தத் தொடங்குகிறான் என்பது அந்தக் கதை. எனக்கும் எந்தப் பயனும் இப்போது இல்லாத படிப்பும், நேர்காணலும், வேலை வாய்ப்பும் என்ன பயன் தரப்போகிறது,? எல்லாமே முடிந்து விடுமோ என்ற பயம் தோன்றியது என் கவலை ஏதும் அறியாத படகோட்டியோ, ”ஐயா வந்துவிட்டோம் மையப் பகுதிக்கு. இதோ பாருங்க இங்கே தான் இரண்டு நதியும் சேர்கிறது” என்றான் பார்த்தால் ஏதோ நடுக்கடலில் இருப்பது போல ஒரு பிரம்மாண்டத்தின் நடுவில் அகப்பட்டுக்கொண்டு அந்த படகோட்டியின் கையில் தயவில் என் உயிர் சிக்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.

    திரிவேணி சங்கமம்  வந்து, கிடைத்தற்கரிய ஒரு  அனுபவத்தின் திளைத்து பக்தி பாவத்தில் மூழ்குவதற்கு பதிலாக நான் இப்படி வேண்டாத சிந்தனையில் எல்லாம் ஆழ்ந்து ஏன் அவதிப்பட வேண்டும்? படகு இருக்கிறது. இதையே தொழிலாகக் கொண்ட படகோட்டி இருக்கிறான். என் உயிரைக் காப்பதில் தானே அவன் பிழைப்பும் என்று நினைத்துக்கொண்டேன். நேற்று இரவு இப்படித் தானே வேண்டாத சிந்தனைகளில் அவதிப்பட்டோம் என்றும் ஒரு எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.

    இருப்பினும் இது  தானா திரிவேணி சங்கமம்? சரஸ்வதி  இல்லை. யமுனையும் கங்கையும்  தான். ஆனால், இரண்டு நதிகளும், சங்கமிக்கும் இடத்தில் படகு இருக்கமுடியுமா? எங்கோ நிறுத்தி விட்டு இது தான் த்ரிவேணி என்கிறானோ. எதாக இருந்தால் என்ன? இரண்டு நதிகளும் சங்கமிக்கும் புள்ளியில் இருந்து தான் ஆகவேண்டுமா என்ன? தூரத்தில் இரு பக்கங்களிலும் விஸ்தாரமாக, ஏதோ கடல் விஸ்தரித்து இருப்பது போல ஒரே நீர்ப்பரப்பாக, தொடுவானம் வரை, இப்படி எங்கே பார்த்திருக்கிறோம். சங்கமிக்கும் புள்ளியிலிருந்து வெகுதூரம் தள்ளியே இருந்து விட்டுப் போகட்டும். இப்படி அகன்ற ஒரு நீர்ப்பரப்பை எங்கு காணப் போகிறோம். இந்த பிரம்மாண்டத்தின் நடுவில் நாம் எவ்வளவு சிறுத்துப் போய்விட்டோம். நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருந்தது. சிந்தனை மறுத்த பிரமிப்பில் ஆழ்ந்திருக்கும் போது படகோட்டி திரும்பிக்கொண்டிருந்தான். ஒன்றும் பேசத் தோன்றவில்லை. படகோட்டி என்னவோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சொல்வது எதுவும் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. அவனும் இந்த ஆள் பயந்து கிடக்கிறான் என்று தெரிந்திருப்பான்.

    மாலை சினிமாவுக்குப் போனேன். ஜனக் ஜனக் பாயல் பாஜே. ஜனக் ஜனக் என்று சலங்கைகள் ஒலித்தன என்று பொருள். தேகி நா தார் மூக், தேகினா தார் பாணி, கேவல் ஸூனி தாஹார் பாயேர் த்வனி கானி. (அவன் முகத்தை நான் பார்க்கவில்லை. அவன் குரலையும் நான் கேட்கவில்லை. அவன் கால் சலங்கை ஒலி மாத்திரமே எனக்குக் கேட்டது) தாகூரின் பாடல் வரிகள். சலங்கை ஒலிகள் தான் என்னென்ன கற்பனைகளை சிறகடித்துப் பறக்க விடுகின்றன. இன்று காலை கூட பீம்சேன் ஜோஷியின் பாட்டு கேட்டது. இரண்டே வரிகள

    சலங்கை ஒலி தான் கேட்கிறது. அவளை யார் சமாதானப் படுத்துவது? கேட்க மாட்டேன் என்கிறாளே? போதும் அரை மணி நேர கயாலுக்கு. சில காட்சிகள், படிமங்கள்  காலம் காலமாக நம்மை சிலிர்க்க வைக்கின்றன. ஏங்க வைக்கின்றன. அதை நினைத்து நினைத்து நாமும் ஏங்க விரும்புகிறோம் என்பது தான் விந்தை. வெகுதூரப் பயணி. கிணற்றடியில் ஒரு பெண். நீர் வார்க்கிறாள். படகோட்டி. ஒரு கரையிலிருந்து மறு கரைக்குப் பயணம். இப்படியான எல்லா இலக்கியங்களிலும் எல்லாக் காலத்திலும் திரும்பத் திரும்பத் தோன்றும் படிமங்களில் காட்சிகளில் சலங்கை ஒலியும் ஒன்றாகத் தோன்றுகிறது.

    முதல் தடவையாக சாந்தாராமின் படம் ஒன்றில் சிலகாட்சிகள் ரசிக்கும் படியாக இருந்தன. பாட்டுக்கள். சில நடனங்கள். இளம் வயது சந்தியா, சாந்தாராமின் புதிய சேர்க்கை, படத்திலும், வாழ்விலும்,. ஜெயஸ்ரீ, பிரிந்தாயிற்று. சாந்தாராமுக்கு சினிமாவைப் பத்தி என்ன தெரியும் என்று ஜெயஸ்ரீ சொல்ல ஆரம்பித்து விட்டாள். பாபுராவ் படேலின் ஃபில்ம் இந்தியாவில் படித்தேன் ஏதோ ஆத்திரத்தில் சொல்கிறாள் என்று தோன்றும். ஆனால் உண்மையும் அது தானே.

    மற்றபடி படம் சினிமாவாக  இல்லை. பழைய சாந்தாராம். கலர்ப் படம். கதக் நடனம் பார்க்கும் படியாக இருந்தது. மற்றபடி  அது என்னைக் கவரவில்லை. திரும்ப ஒரு முறை நான் அந்தப் படத்தைப் பார்க்கும் ஏற்படவில்லை. புர்லாவிலும் சரி, தில்லியிலும் சரி.

     தொடரும

    முந்தைய பகுதியை வாசிக்க:

      படங்களுக்கு நன்றி :

    http://en.wikipedia.org/wiki/File:V._Shantaram_%281901-1990%29.jpg

    Share