Author: ஆ. செந்தில் குமார்

  • புத்தாண்டே வருக! வருக…! புதுவாழ்வு தருக! தருக…!

    -ஆ. செந்தில் குமார்.

    நல்லதோர் அரசு அமைய… புத்தாண்டே வருக! வருக..!
    நல்லோர் நட்பு நிலைக்க… புத்தாண்டே வருக! வருக..!
    பொல்லாதோர் விலகி ஓட… புத்தாண்டே வருக! வருக..!
    இல்லாத நிலை மாற… புத்தாண்டே வருக! வருக..!

    தொட்ட தெல்லாம் துலங்க… புத்தாண்டே வருக! வருக..!
    நட்ட தெல்லாம் தழைக்க… புத்தாண்டே வருக! வருக..!
    பட்ட தெல்லாம் மறக்க… புத்தாண்டே வருக! வருக..!
    கெட்ட தெல்லாம் விலக… புத்தாண்டே வருக! வருக..!

    பருவமழை பொய்க்காது பொழிய… புத்தாண்டே வருக! வருக..!
    துருவப்பனி உருகாது இருக்க… புத்தாண்டே வருக! வருக..!
    இருப்பதைக் கொண்டு மகிழ… புத்தாண்டே வருக! வருக..!
    தரணியெங்கும் அமைதி நிலவ… புத்தாண்டே வருக! வருக..!

    முத்தான வாழ்வு கிடைக்க… புத்தாண்டே வருக! வருக..!
    எத்திசையும் தமிழ் ஒலிக்க… புத்தாண்டே வருக! வருக..!
    புத்துணர்ச்சி பெற்று விழிக்க… புத்தாண்டே வருக! வருக..!
    புத்தாண்டே வருக! வருக…! புதுவாழ்வு தருக! தருக…!

    Share
  • இச்சையின் பிடியிலிருந்து இளம் பிஞ்சுகளைக் காப்போம்…!

    ஆ. செந்தில் குமார்.

    அனைத்திலும் குழந்தைகள் முதன்மையாக இருப்பதற் கேங்கும் பெற்றோரால்…
    அகவை ஐந்தை எட்டுவதற்குள் ஆற்ற வியலா மனவுளைச்சல்…
    அளித்திடும் இந்த கல்விமுறை அடிப்படை மாபெரும் தவறல்லவா…?

    பகட்டு வாழ்வே மகிழ்வளிக்கும் என்று எண்ணும் மாணவனை…
    பணம்காய்க்கும் மரமாய் உருவாக்கத் தெரிந்த இந்த பள்ளிகட்கு…
    பண்பில் உயர்ந்த சமுதாயம் ஒன்றை உருவாக்கத் தெரியாதா…?

    வழித்தடம் பிறழும் மனிதனுக்கு வாய்ப்புகள் இங்கே ஏராளம்…
    வீதிக் கிரண்டு மதுக்கடைகள் விதிமுறை மீறித் திறந்திருக்கும்… இளைஞன்
    வாசத்தை மட்டும் முகர்ந்துவிட்டு வந்த வழியே செல்வானா?

    இதயம் கவரும் திரைத்துறையில் அரைகுறை ஆடைக் கலாச்சாரம்…
    இருக்கும் ஊடகத்தில் பெரும்பாலும் இச்சையைத் தூண்டும் விளம்பரங்கள்…
    இம்மி அளவேனும் இவற்றுக்கு சமுதாய அக்கறை வேண்டாமா…?

    வன்முறை ஆபாசம் மலிந்திருக்கும் இணைய வசதிகள் மிகுந்திருக்கும்…
    வயது வரம்பின்றி யாவருமே பார்த்திடும் அந்த நிலையிருக்கும்… காணும்
    வயதில் முதிர்ந்த கிழவனுமே புத்தன் காந்தி ஆவானா…?

    அலைபாயும் பருவத் தொடக்கத்தில் அன்பைச் செலுத்த மறந்துவிட்டு…
    ஆப்பிள் ஆண்டிராய்டு அலைப்பேசி பகட்டுக்காக வாங்கித் தந்து…
    அழிவுப் பாதையின் வாயிலுக்கு அழைத்துச் செல்வது முறைதானா…?

    அழகுற அணிந்தும் பயனில்லை அப்பட்டமாய்த் தெரியும் அங்கங்கள்…
    அதுபோன் றிருக்கும் ஆடைகளை அணிவதற் கனுமதி அளித்துவிட்டு…
    அன்னை தந்தை இருவருமே குய்யோ முறையோ எனலாமா…?

    அகவை ஐந்து ஆனாலும் ஐம்பதைக் கடந்துச் சென்றாலும்…
    அன்னை தந்தை இருவருக்கும் அன்புக் குழந்தை என்றாலும்…
    அடுத்தவர் கண்களில் அக்குழந்தை அங்ஙனம் தோன்றுமென எண்ணலாமா…?

    இருபத்து நான்கு மணிநேரம் இயற்கை நமக்கு அளிக்கையிலே…
    இருபத்து நான்கு மணித்துளிகள் தம் பிள்ளைகட்கு ஒதுக்காமல்…
    இருக்கும் மணித்துளி அனைத்தையுமே காசுகளாக்கி என்ன பயன்…?

    இணைய சேவைகள் அனைத்திலுமே நெறிமுறை ஏதும் வேண்டாமா…?
    இச்சை கொண்டோர் பிடியிலிருந்து பிஞ்சுகளைக் காக்க வேண்டாமா…?
    இந்திய அரசு நினைத்துவிட்டால் ஒருநொடி இதற்குப் போதாதா…?

    பண்பில் சிறந்த குழந்தைகளை பெற்றோர் உருவாக்கித் தரவேண்டும்…!
    பண்பில் சிறந்த சமுதாயத்தை பள்ளிகள் உருவாக்கித் தரவேண்டும்…!
    பண்பில் சமுதாயம் சிறந்திடவே அரசு வழிவகை செயவேண்டும்…!

    Share
  • ஈழத்தின் குரலாய்…!

     

    ஆ. செந்தில் குமார்

     

    வஞ்சியவள் சீதையின்
    வாட்டத்தைப் போக்கி – காத்து நின்ற
    அஞ்சனையின் மைந்தனவன்
    அனுமனைப் போன்று
    எதிரிகளின் படைதம்மை வீழ்த்தியே நித்தம்
    எமைக் காத்து நின்றான் எமது அண்ணன்!

    எங்குமே காணாத அவன் வீரம் கண்டு
    சிங்கக் கொடியுமே வீழ்ந்தது அன்று!
    சங்கும் முழங்கியது அவன் வீரம் கொண்டு
    எங்கும் தமிழ் ஒலிக்க செய்திட்டான் அவனே!

    செங்காந்தள் மலர் போன்ற தன் மனதைக் கொண்டு
    செந்தமிழர் தம் மனதில் கோலோச்சி நின்றானே!
    செங்கதிரோன் ஒளி போன்ற அவன் கண்ணைக் கண்டு
    எதிர்த்து நின்ற சேனைகளும்
    அஞ்சியது அன்று!

    நெஞ்சுரமே சிறிதுமின்றி இருந்த நம் பகைவர்
    வஞ்சனைகள் பல சேர்ந்து வீழ்த்தியது நம் படையை!
    முத்து முத்தாய் பொழிகின்ற வான் மழையைப் போல
    கொத்து கொத்தாய் பொழிந்தன குண்டுகள் தலை மேலே!

    செங்குருதி பெருக்கெடுக்க தலைசாய்ந்த நம் மக்கள்!
    எங்குமே மரணத்தின் ஓலம் – நாடே
    பிணக்காடாய் மாறிய அவலம்!
    அறமின்றி
    மறம் சிறிதுமின்றி
    வஞ்சனையின் துணைக்கொண்டு
    இன அழிப்பு செய்திட்டார் நம் பகைவர்!
    பிஞ்சென்றும் பூவென்றும்
    பால் மணம் மாறா
    பிள்ளையென்றும் பாராமல்
    நஞ்சு மனம் கொண்டு அவர்கள்
    கொன்று கொன்று குவித்தனரே!
    கங்குகரை காணாத
    கடல் போன்ற மக்கள்
    பொங்கி வந்த வேதனையால்
    சிலையாகி நின்றனரே!

    இன்றளவும் கிடைக்கவில்லை
    இதற்கு ஒரு நீதி!
    எங்களுக்கும் காலம் வரும்
    எம்மண்ணில் விதைக்கப்பட்ட வீரமும்
    முளைத்து வரும்!
    அது வரையும் காத்திருபோம்!
    ஈழத்தை வென்றெடுப்போம்!
    புலிக்கொடியை நாட்டிடுவோம்!

    Share
  • வஞ்சகர்…!!

    -ஆ. செந்தில் குமார்

     

    கருத்திருப்பர்! வெளுத்திருப்பர்!
    கனிவான பேச்சில் இனித்திருப்பர்!
    உள்ளத்தில் கடுத்திருப்பர்! – எனினும்
    உடல் மொழியதை உணர்த்தாது!

    உறவென்பர்! உயிரென்பர்!
    உயிரில் கலந்த உணர்வென்பர்!
    உள்ளத்தில் கடுத்திருப்பர்! – எனினும்
    உடல் மொழியதை உணர்த்தாது!

    மதமென்பர்! இனமென்பர்!
    இனத்தின் மொழியென்பர்!
    உள்ளத்தில் கடுத்திருப்பர்! – எனினும்
    உடல் மொழியதை உணர்த்தாது!

    கண்னென்பர்! மணியென்பர்!
    கனவில் பூத்த மலரென்பர்!
    உள்ளத்தில் கடுத்திருப்பர்! – எனினும்
    உடல் மொழியதை உணர்த்தாது!

    அமுதென்பர்! தேனென்பர்!
    தேனில் ஊறிய சுளையென்பர்!
    உள்ளத்தில் கடுத்திருப்பர்! – எனினும்
    உடல் மொழியதை உணர்த்தாது!

    அறிவென்பர்! அழகென்பர்!
    அனைத்துமே நீயென்பர்!
    உள்ளத்தில் கடுத்திருப்பர்! – எனினும்
    உடல் மொழியதை உணர்த்தாது!

    ~~~~~~~~~~~~

    Share