இந்த வார வல்லமையாளர்!
திவாகர்
நவராத்திரி முடிந்து விஜயதசமியாக மலரும் இந்தப் பொன்னாளில் இந்த வார வல்லமையாளராக வலம் வரப்போவது ராஜராஜேஸ்வரி அவர்கள்.
ஆசிரியர் பவளசங்கரி அவர்கள் அனுப்பிய இந்த சுட்டியை http://jaghamani.blogspot.com/ பார்த்து அகமகிழ்ந்து போனதால் உடனடியாக வந்த விளைவுதான் அவருக்கு இந்த வல்லமையாளர் விருது.
படங்கள் கதை பேசவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கருத்துக்களைக் குறைத்து ஏராளமான படங்கள் மூலம் எளிய தகவல்கள் வழங்கி வரும் இவரது வலைப்பூ ஒரு படப்பெட்டகம்.
பெண்மையின் சக்தியைப் போற்றிப் புகழும் நாட்கள் நவராத்திரி நாட்கள். பெண்மையை தெய்வீகமாக்கும் நாட்கள் கூட இவைதான். பெண்மையை மதிப்போர்க்கு அவர் பெண்ணானாலும் ஆணானாலும் பெண்களால் தீங்கு நேரிடவே முடியாது.
தேவி மஹாத்யத்தில் மகாசக்தியானவள் தன் அத்தனை பெண் சமூகத்தையும் (துணைச் சக்திகள்) தன்னுள் அடக்கிக் கொண்டு மது-கைடபன், மகிஷாசுரன், கம்பன் முதலான அசுரரகளை வதைத்ததாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக பெண்ணுக்குப் பெண் அவ்வளவு எளிதாக உடன்படமாட்டாள் என்று உலக வழக்கு சொல்லும். ஆனால் பெண்கள் மட்டும் மகாசக்தியைப் போல ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டால் உலகத்தில் உள்ள அத்தனை அசுரசக்திகளையும் அவர்களால் ஒழித்துக்கட்டி நல்லதொரு வாழ்வாங்கு உலகை மக்கள் சமுதாயம் வாழ்வதற்காக உருவாக்கம் செய்ய முடியும். இதுதான் நவராத்திரி எனும் அற்புதப் பண்டிகையின் மூலக் கரு கூட. இதையேதான் ராஜராஜேஸ்வரியும் தன் வலைப்பூவொன்றில் எழுதியிருப்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
”நவராத்திரி நாளான ஒன்பது இரவுகள் தனிச்சக்தியாக விளங்கும் ஜகன்மாதா பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி ‘சிவசக்தியாக, ஐக்கிய ரூபிணியாக, அர்த்தநாரீசுவரராக” மாறுகிறாள்.http://jaghamani.blogspot.com/2013/10/blog-post_11.html#links
நீண்ட சிந்தனையுடன் நினைத்துப் பார்த்தால் இதுதான் நிதர்சனம் என்று தோன்றுகிறது. இத்தகு வலைப்பூக்களை தொடர்ந்து கொடுத்து வரும் இராஜ ராஜேஸ்வரி அவர்களை இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.
கடைசி பாரா: கவிதாயினி மதுமிதா:
சிறுவயதில் சொல்லப்பட்ட கதைகள், வாசித்த கதைகள் இவையெல்லாம் ஒரு குழந்தையின் எதிர்கால வாழ்க்கையில் உளவியல் ரீதியாக செயல்பட்டு அதன் விளைவு குழந்தையினிடத்தில் பல்வேறுபட்ட ஆளுமையை வளர்க்க பலவழிகளில் உதவுபவையாக அமையும்.
மிக முக்கிய உதாரணமாக, அரிச்சந்திரனின் கதையினை முழுமையாக விரும்பி உள்வாங்கிக் கொண்டதாலேயே காந்தி வாழ்நாள் முழுக்க உண்மையே கடவுள் என்று உணர்ந்து இந்திய விடுதலைக்கு தனது வாழ்நாள் பங்கினை அளித்து மகாத்மாவாக உயர்ந்து உலகம் முழுக்க நூற்றாண்டு மனிதராகப் போற்றப்படுகிறார்