அருங்காட்சியகம் ஓர் அறிவுக் அருவூலம் – 10

1

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் அருவூலம் – ஊட்ஸி அருங்காட்சியகம் – 2, போல்ஸானோ, இத்தாலி.

சுபாஷிணி ட்ரெம்மல்

ஊட்ஸி அருங்காட்சியகக் கட்டிடம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒன்று. முதலாம் உலகப்போர் வரை இத்தாலியின் போல்ஸானோ நகர் ஆஸ்திரியாவிற்குச் சொந்தமாகத்தான் இருந்தது. போரில் ஆஸ்திரியா தோற்றபோது ஏற்பட்ட எல்லை மாற்றங்களில் இப்பகுதி இத்தாலிக்குச் சொந்தமாகியது. பின்னர் 1980ல் இப்போது அருங்காட்சியகம் இருக்கும் கட்டிடம் போல்ஸானோ மாநகராட்சியினால் வாங்கப்பட்டது. இச்சாலையில் இருக்கும் பல கட்டிடங்கள் அது சமயம் தனியார் வசமாகவும்வங்கிகளாகவும் செயல்பட்டு வந்தன. 1996ல் ஊட்ஸிக்கு அருங்காட்சியகம் தேவை என முடிவாக இந்தக் கட்டிடத்தை ஒரு அருங்காட்சியகமாக உருவாக்கும் கட்டிடப் பணிகள் தொடங்கின. இக்கட்டிடம் புதுப் பொலிவுடன் அருங்காட்சியகமாக 28.3.1998ம் நாள் திறந்து வைக்கப்பட்டது.

ஊட்ஸி அருங்காட்சியகத்தின் உள்ளே (2013)
ஊட்ஸி அருங்காட்சியகத்தின் உள்ளே (2013)

ஊட்ஸியின் உடல் அளவு, அவரது உடலில் அணிந்திருந்த ஆடைகள் கருவிகள், அவர் இறப்பதற்கு முன்னர் என்ன சாப்பிட்டிருப்பார், எதனால் அவர் இறந்திருக்கக் கூடும் என எல்லா வகை ஆய்வுகளையும் ஆய்வுக் குழு முடித்து இந்த 3 மாடிக் கட்டிடத்தில் பல சிறு பகுதிகளாகப் பிரித்து காட்சிக்கு விளக்கங்களுடன் வைத்திருக்கின்றனர். அக்குறிப்புகளில் உள்ள தகவல்கள் ஒவ்வொன்றும் ஊட்ஸியை அவர் வாழ்ந்த காலத்தில் இப்பகுதியின் நிலை, மக்கள் நிலை ஆகியவற்றை ஊகித்தறிய உதவுகின்றன என்று நிச்சயம் சொல்லலாம்.

மம்மியாக கண்டெடுக்கப்பட்ட ஊட்ஸியின் உடல் அளவைப் பற்றி முதலில் பார்ப்போம். இவர் ஹோமோ செப்பியன் வகை இனத்து நாகரிக மனிதன். இறக்கும் நாளிலும் நாகரிக உலக மனிதன் போல உடையணிந்தே காட்சியளித்திருக்கின்றார்; இலை தளைகளையும் மரப்பட்டைகளையும் ஆடைகளாகக் கட்டிக் கொண்டல்ல. அவரது உயரம் 1.60மீ, எடை 50கிலோ. இன்றோ ஊட்ஸி 1.54மீ குறைந்து எடை அளவில் 13 கிலோ மட்டுமே இருக்கின்றார். உடலின் ரத்தம் சதை நீர் என பிரிந்த பின்னர் எடையிலும் உயரத்திலும் இந்த மாற்றம் நிகழ்வது சகஜம்தான். ஊட்ஸியின் கண்ணின் மணிகள் ஐரோப்பிய இனத்தின் பொதுவான வர்ணமாகிய நீல நிறத்தவை.

இறப்பதற்கு முன்னர் இவர் என்ன வகை உணவை சாப்பிட்டிருப்பார் என்ற வகையிலான ஆய்வுகளும் இந்த ஆய்வுகள் வழங்கியிருக்கும் தகவல்களும் எனக்கு தற்கால விஞ்ஞான வளர்ச்சியை நினைத்து வெகுவாக ஆச்சரியப்படுத்தியது. தனது இறப்புக்கு 12 மணி நேரத்திற்கு முன்னர் ஊட்ஸி இறைச்சி உணவும் தானியவகை உணவுகளையும் உண்டிருக்கிறார். சமைக்க உருவாக்கிய அனலின் கரியின் சில துகள்கள் இவரது உணவுப்பையில் இருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையால் அவர் இறைச்சியையும் தானியத்தையும் கரி அனலில் வாட்டி உண்டிருக்கிறார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. வேட்டையாடி தனது உணவை பிடித்து அதனை அனலில் சமைத்து சாப்பிட்டு விட்டு வரும் வேளையிலேயே அவரது மரண சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

ஊட்ஸி இறப்பதற்கு முன்னர் அவரது உடல் நிலையில் அவர் நோயுற்றிருந்தமைக்கான அறிகுறிகளைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அவரது எலும்புகள் வலுவிழந்தும், அவரது நோய் எதிர்ப்புச்சக்தி குன்றியும் காணப்பட்டிருக்கிறது. அவரது உடலின் உள்ளே காணப்பட்ட சில பொருட்களை ஆராய்ந்த ஆய்வாளர்கள் இவர் அனேகமாக ஒரு கோடைகாலத்தில் ஆரம்ப காலத்தில்தான் இறந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.

ஊட்ஸியின் உடைகளும் அவர் அணிந்திருந்த அணிகலன்களும் இன்றைக்கு 5500 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதி மக்கள் எவ்வகையில் வாழ்ந்தனர் என்பதை நமக்கு அடையாளம் காட்டுவதாகவே அமைந்திருக்கிறது. இவர் மலைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுதுதான் தாக்கப்பட்டு இறந்திருக்கிறார். அப்படி சென்று கொண்டிருக்கும் வேளையில் அவர் இப்போது நாமெல்லாம் அணியும் Bag Pack, அதில் நிறைய சறுகுகள் என வைத்து முதுகில் தூக்கிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.

தலையில் ஒரு தோலினாலான தொப்பி அணிந்திருந்திருக்கிறார். தன் உடலை வெயிலிலோ அல்லது குளிரிலோ பாதுகாக்க ஆட்டுத் தோலினாலான ஒரு மேல் ஆடை தரித்திருந்திருக்கிறார். வெவ்வேறு வகையான கருவிகளைக் கொண்டு அந்தத் தோலை சுத்தப்படுத்தி உடை தயாரித்து அணிந்திருக்கிறார் என்பதும் தோலின் மேல் உள்ள பல கீறல்களின் அடிப்படையில் கண்டுபிடித்திருக்கின்றனர். ஆடையின் கைப்பகுதி கிடைக்காமையினால் அவரது ஆடை கையுடன் தைக்கப்பட்டதா அல்லது கையின்றி அமைக்கப்பட்டதா என்ற தகவல் அறியப்படவில்லை.

இப்போதெல்லாம் பெண்கள் பேஷனாக நினைத்து அணியும் லெகிங் அப்போதே ஊட்ஸி அணிந்திருந்திருக்கிறார். இது ஒரு வகையான காலிணை ஒட்டிய வகையில் அமைந்த ஒரு காலுறை எனலாம். குளிருக்குப் பாதுகாப்பாக இருக்க அணிந்திருக்கலாம். அவரது கால்பகுதியோடு ஒட்டிக் கிடைத்த லெக்கிங்கைப் பத்திரப்படுத்தி அது எவ்வாறு இருந்தது என்பதை இதனால் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த லெக்கிங் எப்படி அணிந்திருந்தார் என்பதைக் காட்டும் படத்தைக் கீழே காண்கிறோம்.

ஊட்ஸி அணிந்திருந்த லெகிங் (மே 2013)
ஊட்ஸி அணிந்திருந்த லெகிங் (மே 2013)

பனியிலேயே மூழ்கிக் கிடந்தமையால் இந்த லெக்கிங் தோல் ஆடை முழுமையாக சேதம் அடையாமல் 5500 ஆண்டுகளுக்குப் பின்னர் நம் பார்வைக்கு வருகிறது என்பது எவ்வளவு ஆச்சரியம் தருகிறது? இந்த லெக்கிங் ஆடைகளை ஆராய்ந்த போது பலமுறை பயன்படுத்தப்பட்ட ஆடைதான் இது என்பதனையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆக அக்காலகட்டத்து நிலமையில் ஆடைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் நிலைதான் மனிதர்களுக்கு இருந்திருக்கிறது.

ஊட்ஸி அணிந்திருந்த காலணி பாதுகாப்பாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது (மே 2013)
ஊட்ஸி அணிந்திருந்த காலணி பாதுகாப்பாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது (மே 2013)

ஊட்ஸி நாகரிகமான மனிதர் அல்லவா? அதனால் காலணி அணிந்து சென்றிருக்கிறார். அவர் அணிந்திருந்த தோலினால் செய்யப்பட்ட 2 காலணிகளும் மிக நேர்த்தியாகக் காட்சியில் வைக்கப்பட்டிருக்கின்றன. தனது தோலாடைக்கு மேல் பெல்ட் ஒன்றும் கட்டியிருந்திருக்கிறார். முழு உடை அணிந்திருந்த நிலையிலே ஆல்ப்ஸ் மலையில் நடந்து சென்று கொண்டிருந்த வேளையிலே. ஏறக்குறைய தனது 50வது வயதில் ஊட்ஸி என்று நாம் இன்று பெயரிட்டு அழைக்கும் அம்மனிதரின் இறப்பு நிகழ்ந்திருக்கிறது. இவர் எப்படி இறந்தார்?

இதற்கான விடையை அடுத்த வாரம் சொல்கின்றேன்!

தொடரும்..

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அருங்காட்சியகம் ஓர் அறிவுக் அருவூலம் – 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *