செரியாத கல்வியின் சுமை-22
அவ்வை மகள்
உலக முன்னோடி இருப்பினும் பின்னாடி
பள்ளிக் கூடத்தில் குழந்தைகளுக்கு இருக்கிற உணவு எனும் பிரச்சனையின் தீவிரத்தைக் கண்டோம். கல்வி பெற வரும் குழந்தைகளுக்கு உணவு வழங்க வேண்டிய கடமை பள்ளிகளுக்கு உண்டு என்பதை உலக நாடுகள் என்றோ உணர்ந்தன எனலாம். 1800களின் பிற்பாதியிலேயே. பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவது பல கண்டங்களைச் சேர்ந்த பல நாடுகளில் பழக்கத்தில் இருந்ததை நாமறிகிறோம். இப்பழக்கம், இன்றும் என்றும் என்றென்றும் தொடருமாறு அந்நாடுகள் கட்டாயச் சட்டமாக்கி ஒரு நிலைத்த ஏற்பாட்டைச் செய்திருக்கின்றன!
இவ்வகையில் நாம் ஒன்றும் சளைத்தவர்கள் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது. 1920லேயே சென்னை மாநகரத்தில், கார்ப்பரேஷன் பள்ளிகளில் சமைக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டு வந்ததைப் பதிவுகள் காட்டுகின்றன. ஆக, அரசுத் தரப்பில் பள்ளிகளில் குழந்தைகளுக்குச் சாப்பிடத் தகுதியான தரமான உணவு வழங்கப்பட்ட முதல் மாநிலம் எனும் தன்னேரில்லாப் பெருமை கொண்டது தமிழகம். அரசுப் பள்ளிகளில் மட்டுமா? தனியார்ப் பள்ளிகளும் கூடத்தான்!
அன்று இருந்த தனியார்ப் பள்ளிகளும் கூட பள்ளியில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கியதோடு – வசதியில்லாத குழந்தைகள் தங்கிப் படிக்குமாறு மூன்று வேளை உணவும், தங்குமிடம் மற்றும் இன்ன பிற அடிப்படை வசதிகள் செய்து தந்ததையும் நாமறிகிறோம். சொல்லப் போனால், 1923ல் மதுரை சௌராஷ்டிரா பள்ளியில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்ட பாங்கைக் கண்டு வியந்த அந்த நொடியில் தான் காமராசர் எம் மாநிலத்தில் இது போன்று எல்லாக் குழந்தைகளும் உணவு பெற வேண்டும் என்று உளமார எண்ணினார். இவ்வகையில் தொடர்ந்த அவரது சிந்தனை, 1960கள் வாக்கில் பள்ளி மதிய உணவுத் திட்டம் தமிழகத்தில் சிறப்பான முறையில் பரவலாக்கப்பட்டது.
தொடர்ந்த நாட்களில் மதிய உணவுத் திட்டம் அரசியலில் ஒரு முக்கியக் கவர்ச்சிப் பொருள் ஆனது. எம்ஜியார் இத்திட்டத்தை ஒரு அரசியல் மறு மலர்ச்சியாக வலுப்படுத்தினார் . தொடர்ந்து 1995ல் தேசிய மதிய உணவுத் திட்டம் அமுலானது. இதனை ஒட்டித் தொடர்ந்த கால கட்டத்தில், 1989ல் தமிழகத்தில் இன்னொரு அரசியல் கவர்ச்சியாக, ஆளுக்கொரு முட்டை நாளுக்கொரு முட்டை என்பதாகப் புரதப் புரட்சி – தொடர்ந்தது மதிய உணவு. நன்று. இன்று முட்டை உண்ணாதவர்களுக்கு வாழைப்பழம் தரும் ஏற்பாடும் உள்ளது. இதுவும் நன்று.
இவ்வாறு, மாநில வானிலையில், பல ஏற்ற இறக்கங்களுக்கு இடையிலேயும், விடப்படாமல் தமிழகத்தில் தொடரப்படும் மதிய உணவுத் திட்டம், வெகுவாகப் பாராட்டப் படவேண்டிய திட்டமாகும். இத்திட்டத்தில், ஊழல், திருட்டு, தரத்தில் குறைபாடு, சுகாதாரக் குறைவான நடைமுறைகள், குடிநீர் வழங்காமை அல்லது குடிநீர் பாதுகாப்பின்மை ஆகிய பல புகார்கள் இருப்பினும், ஒட்டு மொத்தமாகப் பார்க்கிற போது இந்தத் திட்டம், சற்றேறக் குறையப் பரவாயில்லை எனும்படியாகத் தான் போகிறது எனலாம்.
சொல்லப் போனால், அமெரிக்கப் பள்ளிகளில் உணவு வழங்கும் முறையில் கூடுதல் கவனம் செலுத்தப் பட்டது காமரராஜரின் மாடலைக் கண்ட பிறகுதான் என இங்குள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கூறுவதைக் காண்கிறோம். இவர்களின் கூற்றுக்கு ஆதாரமான தரவுகளை நான் தேடிய போது ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் – பல கல்வித் துறை அதிகாரிகள் இங்கு காமராஜரை நினைவு கூரும் போது, இது உண்மை என நம்பலாம்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, 1800களிலேயே பள்ளிகளில் உணவு வழங்கும் முறை இருந்து வந்தது என்றாலும் அது சேவை அமைப்புக்களின் செயலாகவே இருந்து வந்தது. 1904 ல் ஹண்டர் எழுதிய “ஏழ்மை” எனும் புத்தகம் அமரிக்கக் கல்வி முறையில் ஒரு புதிய அத்தியாயம் எனலாம். உலகின் தலைமை எனும் மிதர்ப்பில் இருந்த ஒரு நாடு ஏழ்மை எனும் பிணியைப் பற்றிச் சிந்திக்குமாறு செய்த இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கப் புத்தகம் அமரிக்க அதிபர்கள் மனதிலே நிலை பெற்றது. கருப்பினத் தலைவர்கள் தங்கள் இனக் குழந்தைகளின் முன்னேற்றம் கல்வியில் உள்ளது என்பதை உணர்ந்தவர்களாக இந்த இனம் மாட்டிக் கொண்டுள்ள ஏழ்மைச் சூழல் விடுபட அவர்களுக்குக் கல்வியும் உணவும் ஒருங்கே தேவை என்பதை உணர்கின்றனர். அவர்களது முயற்சியின் பயனாய் 1946ல் அமெரிக்காவில் தேசிய – பள்ளி உணவு சட்டமாக்கப்பட்டு நாடு முழுவதும் கட்டாயமாக்கப் படுகிறது.
இதனைத் தொடர்ந்து 1953 – 1961 காலகட்டத்தில் ஐசன்ஹோவர் அமரிக்காவின் 33ஆவது அதிபராகிறார். அப்போது அவர் அமெரிக்க தேசிய – பள்ளி உணவுச் சட்டத்தை வலுவாக்கிப் பரவலாக்க விழைகிறார். 1959 ஐசன்ஹோவர் இந்தியா வருகிறார். அவரது இந்திய விஜயத்தின் போது, சத்தியமூர்த்தி உள்ளிட்ட சில தமிழ்ப் பெரியவர்களைத் தொடர்பு கொண்டதாக அறிகிறோம். அப்போது, தமிழகப் பள்ளிகளில் வழங்கப்பட்ட மதிய உணவு முறையில் அவர் வெகு ஆர்வம் காட்டியதோடு – பல தகவல்களைத் திரட்டிச் சென்றதாகவும் அறிகிறோம்.
அமெரிக்கா திரும்பிய வேகத்தில், மடமடவென்று அமெரிக்க தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தை வெகு ஸ்திரமாய் வேரூன்றிய பெருமை அவரையே சாரும் என்றால் அந்த உத்வேகம் தந்த பெருமை தமிழகத்தையே சாரும்.
அமெரிக்காவில் பள்ளி உணவுத் திட்டம் ஸ்திரமான அதே காலகட்டத்தில்தான் தமிழகத்திலும் பள்ளி உணவுத் திட்டம் ஸ்திரமானது – பரவலானது என்பது குறிப்பிடத்தக்கது.
2001 ல் புகழ்பெற்ற வழக்கான சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஐக்கிய அமைப்பு இந்திய அரசுக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் (“People’s Union for Civil Liberties vs Union of India and Others, Writ Petition (Civil) No 196 of 2001”.) உச்ச நீதி மன்றம் கீழ்க்காணும் தீர்ப்பை வழங்கியது:
“மதிய உணவுத் திட்டத்தை அமுல் படுத்தி, ஆரம்பப் பள்ளிகளில், குறைந்த பட்சம் 3oo கலோரிகள் ஆற்றல் தருவதானதும் குறைந்த பட்சம் 8லிருந்து 12 கிராம் அளவு புரதம் இருப்பதுமான மதிய உணவை அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில், ஆண்டொன்றுக்குக் குறைந்த பட்சம் 200 நாட்கள் வழங்க வேண்டும்.” (“implement the Mid-Day Meal Scheme by providing every child in every government and government assisted primary school with a prepared mid-day meal with a minimum content of 300 calories and 8-12 grams of protein each day of school for a minimum of 200 days.”)
இங்கு நாம் காண வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னவென்றால் நாட்டின் சட்ட வாக்கு மற்றும் சட்ட அமுல் வலிமை. அமரிக்காவில் தேசியப் பள்ளி உணவுத் திட்டம் எல்லாப் பள்ளிகளுக்கும் கட்டாயமாக்கப் படும்போது இங்கு இந்திய தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தில் அரசுப் பள்ளிகள் அதுவும் ஆரம்பப் பள்ளிகள் மட்டுமே சேர்க்கப் படுகின்றன. தனியார்ப் பள்ளிகளும், உயர் நிலைப் பள்ளிகளும் இதில் லாவகமாகத் தப்பிக்க விடுகின்றன என்பதே.
அது மட்டுமல்ல; தேசியச் சட்டம் என்று வந்து விட்டால் அதனை மாநிலங்கள் மதித்து அமுல் படுத்த வேண்டும். தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தை அமுல் படுத்தாத மாநிலம் எதுவும் அமெரிக்காவில் இல்லை. தன்னாட்சி என்ற பெயரில் எந்த ஒரு தனியார்ப் பள்ளியும் இந்தச் சட்டத்தைப் புறக்கணிக்க முடியாது.
ஆனால் நம் நிலையோ வேறானது. நாம் நமது சட்டத்தில் தனியார்ப் பள்ளிகளைக் கழற்றி விட்டு விட்டோம். கல்வியில் தனியாரை நுழைய விட்டு விட்டு, அவர்களை உணவு வழங்கும் பொறுப்பேற்காமல் தப்பிக்க விட்டிருக்கிறோம்.
அது மட்டுமல்ல. பல மாநிலங்களில், அரசுப் பள்ளிகளில் கூட முழு வீச்சான அளவில் தேசியப் பள்ளி உணவுத் திட்டம் தழுவப்படவில்லை. கீழ்க்காணும் படத்தைப் பாருங்கள். எத்தனை மாநிலங்கள் நமது தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தில் உண்மையில் ஆர்வம் காட்டுகின்றன என்று. (படத்திற்கு நன்றி: www.righttofoodindia.org).
ஒரு தேசத்தில் மாநிலங்களின் நிலைமை இவ்வாறு என்றால், நீங்களே பார்த்துக் கொள்ளலாம் நான் பொறுப்பில் எங்கு இருக்கிறோம் என்று.
1995ன் தேசிய மதிய உணவுத் திட்டம் மற்றும் 2001ன் உச்சநீதி மன்றத் தீர்ப்பு ஆகியவற்றைச் சிரத்தையாக எடுத்துக் கொள்ளாமலும், உதாசீனப் படுத்தியும் நடந்து கொள்ளுகிற மாநிலங்கள் உள்ள இந்தியாவில், ஒரு மாநிலம் அந்த நாள் முதல் இந்த நாள் வரை எதுவரினும் விடமாட்டேன் – எவர் வரினும் விடமாட்டேன் எனப் படிப்படியாய் வளர்ந்து வந்திருப்பது சிறப்பு.
தேசியப் பள்ளி உணவுத் திட்டம் முழுமையான அமுலில் இருக்கும் மாநிலங்களான கர்நாடகம், தமிழகம், குஜராத், இவற்றுள் கர்நாடகமும், குஜராத்தும். கர்நாடகமும் குஜராத்தும் தமிழகத்தை விடப் பல்லாற்றானும் சிறப்பாக, தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தைச் செவ்வனே செயல்படுத்தி வருகின்றன.
இஸ்கான் இயக்கமும், அட்சய பாத்திர திட்டமும் கர்நாடக வெற்றிக்குப் பின்னணி என்றால், குஜராத்தின் ஆலய தர்மங்கள் இம்மாநில தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தின் வெற்றி இரகசியம்.
தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தில் உலகுக்கே முன்னோடியான தமிழகம் மற்ற இரு மாநிலங்களுக்குச் சற்றும் சளைக்காத வகையில் திறம்பட இயங்க முடியும்.
கர்நாடகம் மற்றும் குஜராத்தில் தேசியப் பள்ளி உணவுத் திட்டம் அரசியல் புகாத – அரசியல்வாதிகள் தன் சாதனை என்று புளுகாத ஒரு திட்டமாக இருக்கிற காரணத்தாலும் ஆன்மீக ஒழுங்கு நிறைந்த நல்லற நிறுவனங்கள் அங்கு கடைமை உணர்வோடு இயங்குவதாலும் வெற்றி விழுக்காடு உயர்வான நிலையில் உள்ளது.
இத்தகையதொரு ஒழுங்கு இப்போது தமிழக அரசுப் பள்ளிகளில் இயங்கி வருகிற தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தின் செயல்பாட்டில் வர வேண்டும் என்பது நம் அவா. அது மட்டுமல்ல, ஏகப்பட்ட எண்ணிக்கையில் வளர்ந்து நிற்கிற தனியார்ப் பள்ளிகளையும் தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தில் பங்கேற்று பொறுப்பேற்று செயல்பட வேண்டும் என்பதும் அவசியம்.
(மேலும் பேசுவோம் )
படத்திற்கு நன்றி: http://www.frontlineonnet.com/fl2016/stories/20030815002208500.htm