திருமூலத் தேவரின் சமத்துவ நெறி

6

 

சுலோச்சனா

யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே

இந்தப் பூவுலகில் பிறந்து சராசரியான மக்களாக சாதாரண வாழ்க்கை வாழும் எண்ணற்ற மக்களின் பொருட்டும் ஏன் மாக்களின் பொருட்டும் மகான்கள் மண்ணுலகிற்கு வருகை தருகின்றனர்.

இந்த சராசரியான உயிர்கள் உய்யும் பொருட்டு நல்லுரைகள் பல புகல்கின்றனர். மனித மனத்தினிடையே அவைகள் புகுந்து மந்திரம் போல் வேலை செய்கின்றன.
   
            மனிதன் தான் தள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? கொள்ளவேண்டிய விஷயங்கள் என்ன? என்று தெளிவுபட சிந்தித்து வாழும் வழி முறைகளை வகுத்துக் கொள்ள மகான்கள் அருளும் மந்திரங்கள் போன்ற உபதேசங்கள் பெரிதும் உதவுகின்றன.அப்படிப்பட்ட நூல்களில் ஒன்று திருமூலர் எனும் ரிஷியின் திரு மந்திரம் ஆகும்.

               பசுக்களின் துயர் தீர்க்க “மூலன்” எனும் இடையனின் உடலில் நுழைந்தவர் அவர்தம் பெயரிலேயே அழைக்கப்பட்டவர்.அவர் அருளிய “திரு மந்திரம்” எனும் நூலில் கையாளப்படாத விஷயங்களே இல்லை எனலாம் இந்த “திரு மந்திரம்” எனும் நூல் ‘சைவத் திருமுறைகளில்’ பத்தாம் திரு முறையாக வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளைக் கடந்து நிலைத்து நிற்கும் இந்நூல் “ஒன்றே குலமும் ஒருவனே தேவன் என்று உலகம் தழுவிய உயர் கருத்தை எக்காலத்திற்கும் எவ்விடத்திற்கும் பொருந்துமறு கூறும் நூலாகும். நாம் எடுத்துக் கொண்டுள்ள பாடலும் யாவருக்கும் மற்றும் எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்தாகவும் இருக்கின்றது. முதல் வரியான,

யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை எனும் வார்த்தைகளின் உள்ளே பொதிந்துள்ள பொருள் ஆழ்ந்த நோக்குடையதாம்.

          ‘பார்க்கும் இடம் எங்கனும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளை யாவரும் வழிபட வேண்டும் என்பது பொருள், இன்னொரு பொருள், உள்ளுறையும் பொருள் யாவராயினும் சரி இறை வழிபாட்டைக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும் என்பது மண்ணாளும் மன்னவனானாலும் சரி மண் குடிசையில் வாழ்பவன் ஆயினும் சரி இரு நிலையில் நிற்பவர்க்கும் நடுநாயகமாக பொதுவில் இருப்பது இறைவழிபாடாகும் மன்னவனின் அபிஷேக ஆராதனைகளும் சரி ஏழை அர்ப்பணிக்கும் ,ஒரு துளசி இலையோ வில்வமோ இரண்டும் ஒரே நிறையாகும். இதன் மூலம் சமத்துவம் எனும்  தத்துவத்தை புரிந்து கொள்ள முடிகின்றது.

              அடுத்த “யாவர்க்கு ஆயினும் பசுவிற்கோர் கையுறை” என்பது.இவ்விடத்தில் பசு என்பது நமக்கு பால் தரும் பசு என்பதோடு விலங்கினங்களோ – பறவைகளோ அல்லது மனிதனை விட குறைந்த அறிவுள்ள அனைத்து உயிரினங்களுக்குமாக என்று புரிந்து கொள்ளலாம்.

             ஓர் கைப்பிடி அளவு ஏதோ ஒரு உணவு அளிப்பது என்பது உயர் அறிவுள்ள மனிதனின் கடமையாக நினைக்கின்றார் தவயோகி .தனவந்த்ர் தாராளமாக அனைத்து உயிர்களுக்குமே அளவின்றி அன்னமிட்டு பெரும் பிணியான தீராப் பிணியான பசிப்பிணியை போக்கலாம் எனில் எளியவனான ஏழை தன் கையில் ஓர் பிடி அளவாவது தருமம் செய்வது சாலச் சிறந்ததுதானே. தன்னிலையில் இருந்து குறைந்த அறிவுள்ள ஜீவனுக்கு  கருணை புரிய வேண்டும் என்பது கடமை. “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடவில்லையா?” நம் வள்ளல் பெருமானார், இராமலிங்க அடிகளார்.

                   யாவர்க்காயினும் உண்ணும் போது ஓர் கைப்பிடி”

புரட்சிக் கவிஞர் பாரதி தாசனின் பிறர் உண்ண தான் உண்ணுதல் வேண்டும்
பிறர் உடுத்த தான் உடுத்துதல்  வேண்டும்.

எனும் சம நீதிக் கருத்தை அன்றே கூறிய வரிகள் இவையாகும்.வாழ்வின் அடித்தட்டில் உள்ளவனுக்கான-அவனுக்கும் சாத்தியமாகக் கூடிய எளிதாகக் கடைபிடிக்கக் கூடிய வழியைக் கூறும் வரியாகும். ஒரு நாளைக்கு ஒரே வேளை உண்ணுபவன் கூட தன் முன் வைக்கப்பட்டிருக்கும் உணவில் இருந்து ஒரு கைப்பிடியேனும் பசித்தவனோடு பகிர்ந்து உண்பது என்பது தியாகத்தின் திடத்தையும் சகோதரத்துவத்தையும் ஊட்டுவதாக இருக்கின்றது. இந்த சிந்தனைக்கு இடம் கொடுத்துவிட்டால் உலகில் யாரும் யாருக்கும் “பகை” என்பதே இல்லாத இனிய உல்கமாக அல்லவா மாறுகின்றது.

                             “யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே”

இனிய உளவாக இன்னாத கூறல்  இனிய கனி இருக்க காயை சுவைப்பது போன்றது என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர் “பிறர்க்கு” என்கிறார் திரு மூலதேவர் தனக்குச் சுற்றமாகவோ- நட்பாகவோ இல்லாத தன்னோடு சம்பந்தம் இல்லாத ஒருவருக்கு ‘இனிய வாய்ச்சொல் அருளல்., ஒருவருக்கு எவ்வளவு ஆறுதலைத் தரும்! கடுஞ்சொல் யாரிடமும் பேசுதல் கூடாது. என்ற கட்டளை போன்ற நீதியும் இதன் மூலம் அறிகின்றோம்.

            பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்ற பாரதியின் பாடல் நம் நினைவிற்கு வருகிறது. எந்த தானமும் தர்மமும் செய்ய இயலாதவர்கள் கூட, ஆண்டவன் அளித்துள்ள பேசும் திறமையை நல்ல விதமாக பயன்படுத்தி இனிய சொற்களைக் கூறி தளர்ச்சியுற்றவனைக் கூட எழுந்து நின்று செயலாற்றும் திறமையை உண்டு பண்ணும் புனித சேவையைச் செய்யலாமே.

              உலகெங்கும் நன்னெறிகளும் நன் மணிகளாக நிறைந்து கிடக்கின்றன. அனைத்து மகான்களும் சாதி மதபேதமின்றி நற்சிந்தனைகளை நமக்குத் தருகின்றன. நாம்தான் அவைகளை நமதாக்கிக் கொள்வது மட்டுமன்றி அடுத்த தலைமுறைக்கும், கொண்டு சேர்ப்பது நம் தலையாய் கடமையாகும். இளம் தலைமுறையினருக்கு இதைவிட சிறந்த செல்வம் எதுவாக இருக்கும்.

     திருமூலத் தேவரின் தவ நெறிகள் உலகிற்கே உகந்தது. அதனால் உலகம் முழுவதற்கும் உரியது.

தட்டச்சு உதவி : திருமதி உமா சண்முகம்

படத்திற்கு நன்றி :

http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.