ஆனந்தமான ஆறாம் ஆண்டு!
அன்பு நண்பர்களே!
வணக்கம். ஒன்றாக இணைந்து பணியாற்றி அறுபது முழுமதி கண்டோம். புதிதாகப் பல கிளைகள் கண்டோம். கனிகள் பிறந்தன. சுவைத்தோர் ஆயிரம். சுவைபடச் செய்த அனைவருக்கும் இந்நாளில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். துஞ்சாமல், பல்வேறு நிலையிலும் எங்களோடு உடனிருந்து இவ்வளர்ச்சிக்கு உரமிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இதயங்கனிந்த நன்றி கூறும் நேரமிது. உறுதுணையாக உடனிருந்து உதவிக்கரம் நீட்டும் தோழர், தோழியரே , வல்லமை என்னும் மலரின் மணம் வீசும் இதழ்களான, எழுத்தாளர்களே, உங்கள் ஆக்கப்பூர்வமான சிந்தைகளால் வல்லமையை வளமையாக்கியிருக்கிறீர்கள். தேன் சிந்தும் மலரில் நுகர்கின்ற வண்டாய் வரும் வாசகர்களே உங்களுடைய அபரிமிதமான வருகையே எங்களை உற்சாகமூட்டுகிறது. இந்த வண்டுகளின் ரீங்காரமே நம் வல்லமையை மென்மேலும் சிறப்பாக்குகிறது. இந்நேரத்தில் இந்த இதழ் மேலும் சிறப்புப் பெற வழிகாட்டுதல் புரிந்த அனைத்து நல்லிதயங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து இணைந்திருப்போம். இன்தமிழ் இனிமையை இன்பமாய் சுவைப்போம். வாரீர்!!
வல்லமை நிர்வாகக் குழு