இந்த வார வல்லமையாளர் [08/07/2013 – 14/07/2013]

 பேரா.  நாகராசன்

சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்ற கவிதை வரிக்கேற்ப மடலாடர்கள் மற்றும் படைப்பாளர்கள் தங்கள் சிந்தனை வளங்களைக் கருத்து வடிவில் வல்லமை மின் இதழிலும் மடலாடல் குழுவிலும் வெளியிடுவது நாம் அறிந்ததே

தனித்திருப்பவன் தனியனல்ல ஒருவரின் தனித்தன்மை ஒரு குழுவில் இருக்கும்போதே வெளிப்படும். தனித்தன்மை மிளிரத் தங்களின் ஆற்றல் வெளிப்படும் வண்ணம் தெரிந்தெடுத்த புலத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்துபவர்களே வல்லமையாளர்கள்

photoநவீன விஞ்ஞானம் நாத்திகம் என்று தமிழ்க் குமுகம் தன்னுடைய நடுநாயகமான ஆன்மீகத்திலிருந்து விலகி வெகுதூரம் பயணிக்கும் ஆபத்தான சூழலில் தமிழகத்தின் சமயச் சிந்தனைகளைத் தொடராகக் கோர்வையுடம் எழுதும் வல்லமை உடையவர் அவர்

சமயக் குரவர்களையும் பாணர்களையும் நினைவில் நிறுத்தும் வண்ணம் பல தலங்களுக்கு நேரில் சென்று அத்தலங்களின் பெருமைபற்றி ஆற்றொழுக்கான எளிய தமிழ் நடையில் எழுதும் வல்லமை படைத்தவர் அவர்

பழமையான ஓலைவடிவிலும் அச்சு ஊடகத்திலும் உள்ள வளங்களில் சிறப்பான சிலவற்றித்  தேர்ந்தெடுத்து இணையத்துக்குத் தொடர்ந்து அறிமுகப்படுத்தும் அவர்  அருகிவரும் கருத்து வளங்களை எண்ணிமப்படுத்துவதில் வல்லவர்

 ஒவ்வொருநாளும் அதிகாலையில் எழுந்ததும் இணையத்தில் தன் பங்குக்கான தினம் ஒரு திவ்ய நாமம் நாள் தவறாமல் எழுதும் வல்லமையுடையவர் நல்லதொரு கருத்தென்றால் தயங்காமல் பாராட்டுவதும் குறையைச் சுட்டும்போது மென்மையான நிலைப்பாட்டையும் எடுத்துப் பிறர் மனம் புண்படாமல் எழுதும் வல்லமையாளர் இணையத்துக்கே இயல்பான கருத்து மோதல் கட்சி சேர்த்தல் பிறரை எள்ளி நகையாடல் போன்ற வல்லமைகள் இல்லாதவர் இணையத் தமிழுக்கு உயர்கல்வியில் உரிய இடம் கிடைக்கவேண்டும் என்ற மாறாப்  பற்று கொண்டவர் அவர் திரு.காளைராஜன் அவர்கள் அவரே இந்த வார வல்லமையாளர் அவரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு கிடைத்தது எனக்குக் கிடைத்த பெருமை அவரே இந்த வார வல்லமையாளர்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.