அமெரிக்காவின் முதல் அணுகுண்டுப் பரிசோதனை

2
அமெரிக்காவின் முதல் அணுகுண்டுப் பரிசோதனை

நாகேஸ்வரி அண்ணாமலை

ஜூலை 16, 2020 அன்று அமெரிக்கா முதல் அணுகுண்டை வெடித்துச் சோதித்துப் பார்த்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன.  அன்று அதிகாலை ஒரு மணிக்கு அணுகுண்டுப் பரிசோதனையின் (இதை டிரினிட்டி (Trinity) என்று அழைத்தார்கள்) தலைவர் விஞ்ஞானி  ராபர்ட் ஓப்பென்ஹைமெர், ராணுவ அதிகாரி லெஃப்டினென்ட் ஜெனரல் லெஸ்லி க்ரோவெஸ்ஸை அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்திலுள்ள ஒரு பாலைவனத்தில்  – அணுகுண்டை வெடித்துப் பரிசோதிக்கப் போகும் இடத்தில் – சந்தித்து எல்லா ஏற்பாடுகளும் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்தார்.

அவர்கள் இருவர் மட்டுமல்ல, நிறையப் பொறியர்களும் (engineers) பௌதிகவியலாளர்களும் (physicists) அங்கு கூடியிருந்தனர்.  யாருக்கும் 13 டன் ப்ளூடோனியமும் யுரேனியமும் நிரப்பப்பட்ட ஒரு சாதனத்தை வெடிக்கப் போவதன்  பின்விளைவுகளைப் பற்றிச் சரியாகத் தெரியவில்லை; சில விஞ்ஞானிகள் அப்படிச் செய்வதால் உலகமே வெடித்துச் சிதறிவிடுமோ என்று பயந்தனர்; இன்னும் சிலரோ இது வெடிக்காமலே போய்விடலாம் என்று பயந்தனர்.

சரியாக 5:29 மணிக்கு அந்தச் சாதனம் வெடித்தது; 21,000 டன் எடையுள்ள டி.என்.டி.-க்குச் சமமான (TNT) சக்தியோடும் செவ்வாய் கிரகத்திலிருந்தே பார்க்கக்கூடிய அளவுக்கு வெளிச்சத்தோடும் அது வெடித்தது.  மனித வரலாற்றிலேயே முதல் முதலாக வெடித்த அணுகுண்டு அது.

அமெரிக்கா முதலில் இந்த அணுகுண்டை வெடித்துப் பார்த்த பிறகு,  அமெரிக்காவும் மற்ற எட்டு நாடுகளும் 2000 தடவைக்குமேல் (அமெரிக்கா மட்டும் 1000 தடவை) இந்த அணுகுண்டை வெடித்துப் பரிசோதனை நடத்தியிருக்கின்றன. இந்தக் குண்டு வெடித்த சமயத்தில் அதன் பின்விளைவுகள் பாதிக்கக்கூடிய தூரத்தில் –சுமார் 50 மைல் சுற்று வட்டாரத்திற்குள் – மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருந்தார்கள்.  பின்விளைவுகளைப் பற்றிச் சரியாகத் தெரியாதாலோ அல்லது அவர்களைப் பற்றிக் கவலைப்படாதாலோ இதை வெடிக்கும் முன் இந்த டிரினிட்டி திட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அந்த மக்களை எச்சரிக்கவில்லை, வேறு இடங்களுக்கு இடம்பெயர்க்கவில்லை. அதன் பிறகு பல தலைமுறைகள் அங்கு வாழ்ந்தவர்களிடையே குழந்தைகள் இறந்துபோனதோடு பலர் புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டனர். குண்டு வெடித்த அன்று எல்லா திசைகளிலும் – சுமார் 1000 சதுரமைல் அளவுக்கு – அதன் பாதிப்பு இருந்தது; வடமேற்கு திசையில் குண்டின் சாம்பல் 15 மைல் தூரத்திற்குச் சென்று அங்கிருந்த கால்நடைகளைப் பாதித்தது; வட கிழக்கில் 20 மைல் தூரத்திற்குச் சென்று பல குடும்பங்களின் வீடுகளின் கூரைகளையும் தண்ணீர்த் தொட்டிகளையும் நச்சுப்படுத்தியது; தென்கிழக்கில் 35 மைல் தூரம் கதிரியக்க சாம்பல் அங்கு கொடிகளில் காயப்போட்டிருந்த துணிகளைக் கருப்பாக்கியது.  மனிதனுக்குக் கேடுவிளைவிக்காத கதிர்வீச்சின் அளவைவிட 10,000 மடங்கு அதிமான சக்தியோடு அன்றைய கதிர்வீச்சு இருந்தது.

1939-1945 வரை இரண்டாவது உலகப்போர் நடந்தது. குண்டு வெடித்த சமயம் ஜெர்மனி சரணடைந்துவிட்டாலும் ஜப்பான் சரணடைவதாக இல்லை.  ஜப்பானைச் சரணடையவைக்க ஒரு அழிவுசாதனத்தை உருவாக்கி அதை ஜப்பானின் மீது பிரயோகிக்க வேண்டும் என்று அமெரிக்கா நினைத்தது. அந்த சாதனத்தை உருவாக்க அரசு விஞ்ஞானிகளையும் பௌதிகவியலாளர்களையும் பணித்தது. முதலில் அந்தத் திட்டத்திற்கு ஒதுக்கிய தொகை 6000 டாலர்கள்; பின்னால் அதுவே இரண்டு பில்லியன் டாலர்களாக உயர்ந்தது; இன்றைய மதிப்பில் அது 28 பில்லியன்களுக்குச் சமம்.  (இன்றைய இந்திய ருபாயில் 209 கோடி)  இந்தக் குண்டைப் போட்டு ஜப்பானைப் பணியவைக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு முடிவுசெய்தது. போர் நீண்டுகொண்டே போனாலும், கடைசியில் அமெரிக்கா எப்படியும் ஜப்பானை வென்றுவிடும் என்று கணிக்கப்பட்டாலும் அது பல அமெரிக்க வீரர்களின் உயிரைப் பலிகொண்ட பிறகுதான் சாத்தியம் என்று முடிவுசெய்யப்பட்டு அணுகுண்டை ஜப்பான் மீது வீச அமெரிக்கா முடிவுசெய்தது. இதனால் பல ஜப்பானிய குடிமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்தாலும், ஜப்பான் குடிமக்களின் உயிர்களைவிட அமெரிக்க வீரர்களின் உயிர்கள் மேலானவை என்று கருதியது அமெரிக்க அரசு. முதலில் குண்டை வெடிக்கும் பரிசோதனையின்போது அது ஏற்படுத்திய அழிவைக் கண்ட 70 விஞ்ஞானிகள் குழு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமனுக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பியது.  அதில் கூறப்பட்டிருந்ததாவது: கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அழிவை உண்டாக்கக் கூடிய இந்தச் சாதனத்தை முதல் முதலாக உபயோகித்த அவப்பெயர் அமெரிக்காவுக்கு வருமாதலால்,  இதை ஜப்பான் மீது பிரயோகிப்பது பற்றி நன்றாக யோசனை செய்யவும்.  இந்த விண்ணப்பத்திற்கு முன்னாலும் டிரினிட்டியில் பங்குகொண்ட ஒரு ஹங்கேரி விஞ்ஞானியும் ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த ஒரு ஜெர்மன் விஞ்ஞானியும் ட்ரூமனுக்கு ‘எங்களிடம் இப்படிப்பட்ட அழிவை ஏற்படுத்தும் ஒரு சாதனம் இருக்கிறது என்று ஜப்பானிடம் ஒரு முறை சொல்லி எச்சரித்துப் பார்த்த பிறகு குண்டு போடுவது பற்றி யோசிக்கலாம்’ என்று செய்தி அனுப்பினர்.  இரண்டு செய்திகளையும் ட்ரூமன் பார்த்த மாதிரியே தெரியவில்லை.  எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் ஜப்பான் சரணடைய வேண்டும் என்று விரும்பியதோடு எவ்வளவு சீகிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஜப்பனைச் சரண்டையவைக்க வேண்டும் என்பதிலும் ட்ரூமன் குறியாக இருந்தார். ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஹிரோஷிமா மேல் அமெரிக்கா ‘சின்னப் பையன்’ (little boy) என்று ‘செல்லப்’ பெயரிடப்பட்ட அணுகுண்டை வீசிய பிறகு ஜப்பான் சரணடையும் வாய்ப்பு இருந்ததால்,  மறுபடி நாகசாகிமீது ‘தடித்த மனிதன்’ (fat man) என்று பெயர் சூட்டப்பட்ட இன்னொரு குண்டைப் போடுவதை அமெரிக்கா தவிர்த்திருக்கலாம்.  ஆனால். செய்யவில்லை.

தன்னுடைய ராணுவ பலத்தைக் காட்டுவதற்காக அமெரிக்கா செய்த மிகப் பெரிய கொடுமை இது.  இரண்டு குண்டு வீச்சுகளிலும் இறந்த ஜப்பானிய மக்களின் எண்ணிக்கை இரண்டு லட்சம்; இதற்குமேல் காயம்பட்டவர்கள், அதன் பிறகு பல காலம் உடல்நலம், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், அங்கஹீனமுற்றவர்கள், குறையோடு பிறந்த குழந்தைகள் ஆகியோரின் எண்ணிக்கை பல மடங்கு.   நாங்கள் 1996-இல் ஜப்பானுக்குச் சென்றிருந்தபோது ஹிரோஷிமாவில் குண்டால் பாதிக்கப்பட்ட இடங்களையும் அதையடுத்து உள்ள மியூசியத்தையும் பார்த்தோம். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டுபவையாக இருந்தன. இரண்டாவது குண்டையாவது அமெரிக்கா தவிர்த்திருக்கலாம் என்ற நினைப்பு அமெரிக்காவின்மீது மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.

டிரினிட்டி திட்டத்திற்குத் தலைவராகயிருந்த ஓப்பன்ஹைமெர் ஜனாதிபதி ட்ரூமனிடம் ‘என் கைகள் ரத்தக்கறை படிந்த கைகள்’ என்று கூறினாராம்; இறக்கும்வரை குண்டினால் ஏற்பட்ட விளைவுகள் அடிக்கடி அவர் மனதில் தோன்றி அவரைத் துன்புறுத்திக்கொண்டிருந்தனவாம்.

வியட்நாமில் அணுகுண்டைப் போடும்படி ஜனாதிபதி ஜான்ஸனுக்கு யோசனை கூறப்பட்டும், நல்ல வேளையாக அவர் அப்படிச் செய்யவில்லை; அணுகுண்டின் அழிவைப் பார்த்த பிறகு வியட்நாமிலும் பிரயோகிக்கும்படி யோசனை கூற யாருக்கு மனம் வந்ததோ தெரியவில்லை.

நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள், பிறர் துயரத்தை உணராதவர்கள் எல்லாக் காலங்களிலும் இருப்பார்கள் போலும். அமெரிக்கா ஜப்பானில் அத்தனை சேதம் விளைவித்தாலும் சொந்த நாட்டிலேயே 1000 முறை அணுசோதனை செய்ததன் மூலம் தன் சொந்த நாட்டிலும் எத்தனையோ கெடுதல்கள் புரிந்திருக்கிறது. 1963-க்குப் பிறகு தரைக்கு மேல் அனுகுண்டு சோதனை செய்வதில்லை என்று அமெரிக்க அரசு முடிவுசெய்தது; பூமிக்குக் கீழே மட்டுமே அப்போதிலிருந்து சோதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன.  ஆனால் இப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதவிக்கு வந்தவுடனேயே தேவையென்றால்  அணு ஆயுதப் பரிசோதனைகளை விரிவுபடுத்தப் போவதாகவும் பூமிக்கு மேலேயும் சோதனைகளை நடத்தப் போவதாகவும் கூறியிருக்கிறார்.  இந்த வக்கிரம் பிடித்த மனிதனை சீக்கிரமே பதவியிலிருந்து இறக்க வேண்டும். அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே அப்போதுதான் நல்ல காலம் பிறக்கும்.

கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸால் இத்தனை மனித உயிர்களைக் கொல்ல முடிகிறது; அதைத் தடுத்து நிறுத்த மனிதனால் முடியவில்லை. அணுகுண்டு போன்ற ஆயுதங்களைக் கொண்டு மனித உயிர்களைக் கொல்லாமல், துன்புறுத்தாமல்  இருக்கவாவது செய்யலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.