”ஈஸ்வர் அல்லா தேரேநாம் சப்கோ சன்மதி தே பகவான்”
ராமஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு, 2010 செப்.30 அன்று வருவதை முன்னிட்டு, சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராமஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் சிறப்பு பெஞ்ச் செப்.30 அன்று வழங்குகிறது. இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ராமஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் வர இருந்தது. நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை அனைத்துத் தரப்பினரும் அமைதியுடனும் கட்டுப்பாட்டுடனும் ஏற்றுக்கொண்டு சட்டம், ஒழுங்கு மற்றும் நல்லிணக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று செப்.22ஆம் தேதி வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இந்த வழக்கின் தீர்ப்பு, செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிடப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை, 6 நாட்கள் தாமதமாக வரும் தீர்ப்பானது எதிர்பாராத விதமாக, உள்நோக்கம் ஏதுமில்லாத ஒரு பயனைத் தந்திருக்கிறது. இந்தத் தாமதமானது தனி நபர்கள், அமைப்புகள், பல்வேறு கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பைத் தந்துள்ளது. இதன் மூலம் அவர்களும் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நடப்பதாகத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடந்த வந்த சட்ட நடைமுறையின் ஒரு படியாகக் கருதி, இத்தீர்ப்பை மதிப்பதாக முக்கிய கட்சிகள் கூறியுள்ளன. தொடர் நடவடிக்கை தேவை என்று கருதினாலும் சட்ட ரீதியாக அணுகுவதாகத் தெரிவித்துள்ளன. இப்பிரச்சினைக்குச் சட்டரீதியாகத் தீர்வு காண்பதையே மக்கள் பலரும் விரும்புகின்றனர். தீர்ப்பு வெளிவரும் நிலையில் அமைதி, நல்லிணக்கமான சூழ்நிலை நிலவ இவை அனைத்தும் முக்கியமான காரணங்களாக அமையும்.
நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றி, அமைதியான சூழ்நிலையை உண்டாக்க மாநில அரசுகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்துள்ளது. நாட்டின் பண்பாடு, பெருமை காக்க அனைத்து மக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த ”ஈஸ்வர் அல்லா தேரேநாம் சப்கோ சன்மதி தே பகவான்” என்ற பாடல் வரிகளை நினைவுகூர்ந்து அறிக்கையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.