நினைத்தேன் வந்தாய் நூறு வயது – மக்கள் திலகம் பிறந்த நாள்

பாஸ்கர்
அது 1958 ஆம் வருடம். மருதூர் கோபாலக்ருஷ்ண மேனன் ராமசந்திரன் அந்த திரைப்படத்தில் ஒரு வசனம் பேசுவார். பட்டேனே பல துயரம், கெட்டேனா… இதை எண்ணி தான் புரட்சி கூட்டத்தில் சேர்ந்தேன்.
அண்ணா என எம் என் ராஜம் அலறுவார்.
கவலைப்படாதே மனோஹரி… அது ஆளை கொல்லும் ஆயுத புரட்சி அல்ல. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை என்பார்.
என்னை நம்புகிறாயா சகோதரி?
நான் மட்டும் இல்லை அண்ணா.. இந்த நாடே உங்களை தான் நம்பியிருக்கிறது. மக்கள் திலகம் பேசி முடிப்பார்.
கொட்டகையில் சீழ்க்கை ஒலி பறக்கும். அவர்கள் பாஷையில் பிகில் — கொண்டு வந்த சில்லறையை இறைப்பார்கள். பூக்களை தூவுவார்கள். அவர்கள் வணங்கும் தெய்வம் அவர்.. வசனம் கண்ணதாசன் . உதவி செய்தவர் ரவீந்தர். சுமார் அஞ்சு மணி நேர படம் அது .அதனை சீவி மூன்று மணியாக்கினர். படம் மாபெரும் வெற்றி — வெற்றி பெற்றால் மன்னன், தோல்வி அடைந்தால் நாடோடி என முன்னர் சொன்னார். அன்று முதல் அவர் மன்னன். தனது பிம்பம் பற்றிய திட்டத்தை அங்குலம் அங்குலமாக செதுக்கி அவர் அடைந்த பெரிய உயரம் யாரும் அடையாதது .அவரை மலையாளி என்றார்கள், அவர் ஊர் கண்டி என கிண்டல் செய்தார்கள் ஆனால் அவர் பேசிய தமிழ் வசனம் மிக அற்புதம் . அதற்கு முன்னர் அவர் அடைந்த வெற்றி பல படங்களில் இருந்தாலும் நாடோடி மன்னன் அவரை பெரிய உச்சத்திற்கு கொண்டு சென்றது .கட்டுடல், அழகான சிரிப்பு, வசீகர முகம் – தமிழ் திரை உலகம் ஒரு மயக்கத்திற்கு தயாராகி கொண்டு இருந்தது. மன்றங்கள் முளைத்தன. பட்டுகோட்டையும், மருதகாசியும் திறந்த பேனாவை மூடவில்லை. செங்கொடி பாட்டில் தெறித்தது.
அண்ணாதுரை அணைத்து அவரை கூட்டத்தில் காட்ட தி மு க விஸ்வரூபம். மக்கள் திலகத்திற்கு இப்பொது தான் தன் பலம் என்ன என்பது தெரிந்தது. 1972 ஆம் ஆண்டில் அதை நிரூபித்தார் தன் கட்சியை கொண்டு வருவதின் திட்டம் எப்போதோ போட்ட விதை. கருணாநிதியிடம் கணக்கு என்பது ஒரு சம்ப்ரதாய காரணம். மக்கள் திலகம் இருக்கும் வரை தி மு க எழவில்லை. காரணம் கலைஞரை காட்டிலும் அவருக்கு இருந்த பெயர். அரியணை கட்டில் ஏறிய பின்னர் அவரும் பால்டிகா பல்கேரியா என்ற ஊழல் பிரச்சனையில் மாட்டி நின்றார். ஒரு தேர்தலில் தோல்வி கண்டு பிறகு வலி உணர்ந்தார். அதற்கு பிறகு அவர் தோல்வியடையவில்லை பெற்ற வெற்றியில் செய்த பெரிய தவறு விடுதலை புலிகளுக்கு ஆதரவு கொடுத்தது. அதன் வீர்யம் மற்றும் வீச்சும் ராஜீவ் மரணம் வர தொடர்ந்து வந்தது. அன்று பிரபாகரனிடம் கோட்டையில் வைத்து கோடிக்கணக்கில் கொடுக்காமல் இருந்திருந்தால் பிரபாகரன் தன்னை பொருளாதார ரீதியாக தயார் செய்து கொண்டிருக்க மாட்டார். நாமும் ராஜீவ் காந்தியை இழந்து இருக்க மாட்டோம். தான தர்மங்களில் அவர் காட்டிய முனைப்பு, எல்லோரையும் அணைத்து செல்லும் பாங்கு, ஏழை மக்களின் அன்பு அவரை ஒரு தேசத்து ராஜாவாக்கியது. நல்ல நினைவாற்றல், கொடுத்த வார்த்தையை காக்கும் புத்தி.
ஒரு கல்யாண பத்திரிகை கொடுக்க போனவரிடம் ஏன் விருந்துக்கு மட்டும் என்னை அழைக்கிறீர்.. கல்யாணம் எங்கே என வினவ அது ஒரு ஊரில் என்றார். ஆனால் அது உறவுகள் ஏற்பாடு என்றார். நான் உனக்கு உறவு இல்லையா என கேட்டு சொல்லி வைத்தார் போல அடுத்த மாதம் அவர் ஊருக்கு சென்று கல்யாணம் முன்னின்று நடத்தினார்.
உடல் நலம் குன்றி இருந்த போது இந்திரா காந்தி 1984ஆம் சென்னை வந்து அவரை சந்தித்து வெளிநாடு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.. கொஞ்சம் குணமாகி நன்றி சொல்வதற்கு முன்னால் இந்திரா கொல்லப்பட்டார். மக்கள் திலகம் அடைந்த பெரிய கலக்கம் அது, மூன்று வருடங்களில் அவரும் இயற்கை எய்தினார். ஊரே புலம்பியது, தொலைகாட்சி காமிராக்கள் ஏதும் இல்லை தொண்டர்கள் சுருண்டு கலங்கினார்கள் – எல்லாம் உணர்ச்சிபூர்வமான நடத்தை எதிர்பார்ப்பற்ற செயல்கள். இவர்கள் யாரும் நடிக்கவில்லை.. பொன்னை மண் மூடியது, அவருக்கு வயது அப்போது 71.
அன்று மாலை நான் நண்பர்களுடன் கடற்கரையில் இன்னொரு மூலையில் இருந்தேன். எல்லா துக்கமும் மனசுக்கு தான். காற்றும் அலைகளும், காகமும், மேகமும் வழக்கம் போல் தத்தமது வேலைகளை செய்ய நாங்கள் எல்லோரும் வீடு திரும்பினோம்.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் – வாலி
கவிஞர் வாக்கு – பொய்க்கவில்லை .