குலதெய்வ வழிபாடும் சிவராத்திரியும்

0

பேராசிரியர். முனைவர் நா. அருணாசலம்,
அழகப்பா பல்கலைக்கழகம்   

ஒவ்வொரு நொடியும் பல கிரகங்கள் மற்றும் கோடானகோடி அண்ட நட்சத்திரங்களின் கதிர்வீச்சுக்கள் நம்மை இந்தப் பிரபஞ்சத்தில்  கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்தச் சூழலில் அண்ட இரகசியங்களையும்,  உலகத்தை உருவாக்கிய இயற்கையின் ஆதித் தலைவனையும், நாம் உணர்ந்தும் உணராமலும்,  வாழ்வியல் பரிணாமத்தின் ஒரு அங்கமாக  இயங்கிக் கொண்டிருக்கிறோம்.  நம்முள் அர்த்தம் கவனிக்கப்படும் பொழுது, நமக்குள் தத்துவம் புரிந்தால், காரணம் அறிந்த தேடலின் விடை ஒரு வேளைப் புரியப்படலாம்.

உலகில் ஆண் பெண் என்று பாலின வேறுபாடு இருந்தாலும் நமக்கு உயிர் என்பது ஒன்றுதான். இறை என்றால் மங்களம் என்றும்  உயிர் என்றும் பொருள்.  உயிர் வாழ உணவும், இருப்பிடமும் மற்றும்  ஆரோக்கியமும்  தேவை . இவை அனைத்தும் நம் உடலை மட்டுமே வளர்க்கும். உடலை பாதுகாத்து நன்றாக வளர்க்கும் நாம், உயிரை வளர்க்க, அதை மேம்படுத்த என்ன செய்கிறோம்.  அவரவர்கள் நம்பிக்கையின் அடைப்படியிலும், கலாச்சாரத்தின் தாக்கத்தினாலும், நாம் இறை என்கிற ஒரு மூலம் உள்ளது என்று நம்புகிறோம் அல்லது அது இறை இல்லை, அதுவே இயற்கை என்கிற சித்தாந்தத்தைக் கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிடுகிறோம்.

மனிதன் தன் உடலின் கட்டுப்பாட்டில் இருந்தால் அவன் வெளிமுகமாகவும், ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தால் உள்முகமாகவும் செயல்படுகிறான்.  மனிதன் சமநிலை தவறாதவண்ணம் அவனை உள்முகமாக இயங்கச் செய்து, பின்னர் ஒருமுகமான சமநிலைப்பாட்டில்வைத்திருக்க இறை சார்  செல்பாடுகள் தேவைப்படுகிறது . அதை அவன் உணர்ந்து,  உண்டாக்கி அதில்  நம்பிக்கையோடு பயணிக்கிறான்.  இதில் மனிதனை முழுமையாக ஈடுபடுத்த நமது முன்னோர்கள் ஏற்படுத்தியது தான் வழிபாடுகள் என்கிற இந்தக் கொண்டாட்டங்கள் மற்றும் விழாக்கள் ஆகும்.

மனம் போக்கில் போனபடி அலையாமல், புலன்களைக் கட்டுபடுத்துவற்கே வழிபாடு தேவைப்படுகிறது. இறைவனைத் தேடி  ஒருவர் போகிறார்  என்றால் அவர் தன் உயிரின் முலத்தைத் தேடிப் போகிறார் என்று அர்த்தம்.  நமது அண்டவெளியில் பூமியானது சூரியனை நீள் வட்ட பாதையில் சுற்றுகிறது. இவை  சிறிய நீள்வட்ட பாதை,பெரிய நீள்வட்ட பாதை என இரண்டு வகையாக உள்ளன. பூமியானது பெரிய நீள்வட்ட பாதையில் இருந்து சிறிய நீள்வட்ட பாதைக்கு மாறுகின்ற நிகழ்வே நாம் மகா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். நம் விண்வெளியில் லூமினிபெரஸ் ஈதர் என்ற ஓர் அற்புத ஆற்றல் வாய்ந்த சக்தி அலைகள் நிரம்பி இருக்கிறது. இந்த சக்தி நம் மகாசிவராத்திரி அன்றுதான் பூமிக்கு முழுமையாக கிடைக்கிறது. இந்த ஈதர் சக்திக்கு இரு தன்மைகள் உள்ளன. ஒன்று ஸ்பிரிங் தன்மை, மற்றொன்று ஃபால்தன்மை என்பதாகும். இதில் ஸ்பிரிங் தன்மைக்கு ஆற்றல் அதிகம். ஃபால்தன்மைக்கு ஆற்றல் குறைவு. மகாசிவராத்திரியன்று மட்டுமே இந்த ஈதர் சக்தி ஸ்பிரிங் தன்மையில் ஒரு விண்கலன் வேகத்தோடு நேரடியாக பூமியை வந்தடைகிறது. எனவே இந்த மகா சிவராத்திரி அன்று இரவு முழுதும் தூங்காமலும் முதுகை நேராக நிமிர்ந்து அமர்ந்து இருப்பதன் மூலம் அளப்பரிய ஆற்றலையும் நன்மைகளையும் அனைவரும் பெற முடியும் என ஆன்மீக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், மகா சிவ ராத்திரி அன்று, வழக்கமான  குணத்தில் இருந்து விடுபட்டு விழிப்பு நிலை அடைந்து அதன் மூலம் நாம்,  இறை நிலையை உணர முயற்சிக்கிறோம். அன்று நாம் உணர முற்பட வேண்டியது மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலை மூலம் நம் ஆன்மாவில் உள்ள இறையை உணருதலே  என்பது ஆகும்.

குலத்தை காப்பது குல தெய்வம். குலதெய்வ வழிபாடு தமிழர்களின் முக்கியமான வழிபாட்டு முறையாகும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினைச் சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக்காக்கும் வல்லமை படைத்தவை. நமக்கு ஒன்று என்றால் நம்மை காக்க முயல்வது குலதெய்வமே ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். குல தெய்வ வழிபாடுதான் முதலில் மற்ற தெய்வ வழிபாடுகள் எல்லாம் பிறகுதான் என்ற பொதுவான கருத்து உள்ளது. எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் முதல் வழிபாடு குல தெய்வத்திற்குத்தான் நடைபெறும். அதன் பிறகு தான் மற்ற நிகழ்ச்சிகளைத் தொடங்கவேண்டும். குல தெய்வ வழிபாடு பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது. மணிமேகலை எனும் குலதெய்வம் பற்றி இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகிறார். கோவலன் நடுக்கடலில் தன் கலன் தடுமாறி உயிருக்கு தவிக்க, மணிமேகலை எனும்  குலதெய்வம் தோன்றி கோவலனைக் காப்பாறியதாகவும், தன் குலம் வாழ தன்னை மீட்ட தன் குலதெய்வத்தின் பெயரை, தன்  வாரிசுக்கு, மணிமேகலை என பெயர் சூட்டினான் கோவலன் என்று சொல்கிறார் இளங்கோவடிகள். நாள் செய்யாததைக் கோள் செய்யும். கோள் செய்யாததைக் குலதெய்வம் செய்யும் என்பார்கள்.

அப்படி குலம் தழைத்தோங்க அனைவரும் சிவராத்திரி நாளில் குல தெய்வ வழிபாடு செய்வார்கள். மகா சிவராத்திரியை குல தெய்வ வழிபாட்டுக்கான நாளாக கொண்டாடுகின்றனர். மகா சிவராத்திரி திருநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலும் சிவராத்திரி திருநாள் கொண்டாடப்பட்டாலும், அதிகம் மக்கள் சென்று கொண்டாடுவது தங்கள் குலதெய்வத்தைத்தான். தமிழகத்தின் வட மாவட்டங்களில் அன்றைய தினத்தில் பாரி வேட்டை நிகழ்ச்சியும், மயானக் கொல்லை நிகழ்ச்சியும் விமரிசையாக நடைபெறும். தென் தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் குல தெய்வத்தை வழிபடச் செல்கிறார்கள்.

தமிழகத்தில் பெரும்பாலவரின் குலதெய்வமாக அய்யனார் மற்றும் அவரின் பரிவார தெய்வங்கள் இருந்து வருகிறது. அய்யனார் வழிபாட்டைக் குலதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு. பழங்காலம் தொட்டே அய்யனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிளும் அய்யனாரை காவல் தெய்வம் ஆக வழி படுகின்றனர். அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம்.  இந்த அய்யனார் தமிழர்களின் மூதாதையராக இருந்திருக்கலாம். இவர் மதம் சார்ந்து அறியப்படும் கடவுள் இல்லை. அய்யனார் கண்மாய்க்கரையில் தெய்வமாகப் பரமேசுவரன் மோகினியால் தோற்றுவிக்கப் பெற்றவர் என்கிற நம்பிக்கையும் மக்களிடையே நிலவி வருகிறது.

அய்யனாரின் பரிவார தெய்வங்களாக  கருப்பணசாமி, வீரபத்திரர், இடும்பன், நடுக்காட்டான், நடாள், ஆண்டி, நொண்டி, இருளப்பன், சின்னான், சன்னாசி, மூக்கன், பொன்னன், சேனையன், முன்னோடி, சுடலைமாடன்,  பட்டாணி, கருத்தாக்கலியான், அடைக்கலம்காத்தான், மற்றும் சோணை முதலிய ஆண் தெய்வங்களும், செல்லியாய், காளி, நீலி, ராக்காயி, ராக்கச்சி, கருப்பாயி, இசக்கி, திரௌபதி, சடைச்சி, இருளாயி, செகப்பி, மூக்காயி, பேச்சி, காத்தாயி, காடேறி,  ஏழைகாத்த அம்மன் மற்றும் சப்த கன்னியர்கள் முதலிய பெண்தெய்வங்களும் உள்ளனர். சிவராத்திரி அன்று அய்யனார் பிறந்தவர் என்பதால் அன்று வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அன்றைய தினம், அய்யனாரைக் குலதெய்வமாகக் கும்பிடுவோர் அனைவரும் அவரவர் குடும்பத்தினருடன் மற்றும் உறவினர், பங்காளிகளுடன்  ஒன்றாகக் கூடிவந்து வழிபடுகின்றனர். ஐயனாரின் பரிவாரத் தெய்வங்களில் ஒன்றான கருப்பர் காவல் தெய்வமாவார். இவரையும் அனைவரும் சேர்ந்து வழிபடுவது குறிப்பிடத்தக்கது.

அண்டத்தின் நேர்மறை கதிர் வீச்சு அதிகமாக உள்ள மகா சிவராத்திரி அன்று காலையிலிருந்து மறுநாள் காலை வரை உள்ள நேரத்தில், சில மணித்துளிகளாவது நம் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு பிடித்த பலகாரங்களையும் உணவு வகைகளையும் வைத்து வழிபட்டு, பின் குலதெய்வக்கோவிலுக்கும், சிவன் கோயிலுக்கும் சென்று பிரார்த்தனை செய்ய அனைவருக்கும் நற்கதிர் வீச்சால் பேராற்றல் ஏற்பட்டு தன்னம்பிக்கையும், வாழ்வியல் சூழலை எதிர் கொள்ளும் திறனும் அதிகரிக்கும் என்பதில் ஐயம் இல்லை.

எனவே நாமும் இப்புனித மகா சிவராத்திரி தினத்தில் எல்லாம் வல்ல பிரபஞ்சப் பேரியக்க ஆற்றலை அடைய நம் முன்னோர்களையும், குல தெய்வத்தையும்  மற்றும் ஆதி சிவ வழிபாட்டையும், அனைவரும் சேர்ந்து மனம் ஒன்றிய பிரார்த்தனை மூலம் கடைபிடித்தும், அந்தந்த கோவில்களுக்கு சென்றும் அருள் பெற்று  மகிழ்வுடன் வாழ்வோமாக.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *