வாட்சப்
பாஸ்கர்
எல்லோரும் எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
யார் எவரென்று பலரும் அறிகிலர்.
முகமேயில்லை இங்கு நட்பு மட்டுமே உண்டு.
கடுகு எண்ணெய் மூட்டு வலி நிவாரணி என்பார் ஒருவர்.
கற்பகம் காபி ஒரே கசடென்பார் அடுத்தவர் உடனே.
காபி குடிக்காதவன் தனுஷ் பக்கம் ஞாயம் என்பான்.
ஒரு வருஷம் போகாத கோவில் என்பார் மற்றொருவர்.
பேத்தியின் படத்தைக் காட்டி இவள்தான் உலகமென்பார்.
எல்லோரும் சந்தோஷத்தையே காட்டிக்கொள்கிறார்கள்.
காலை இரண்டு மணிக்கே தூக்கம் தொலைக்கிறார்கள்.
கேட்டால் கொசுத்தொல்லை என நழுவுகிறார்கள்.
ஆதரவாய் அருகமர்த்தித் தோள்தொட்டு நாளாச்சு
யாருமில்லை அருகினில், கண்கொண்டு பேச இங்கு.
கடைசி வரை இயந்திரம் இயந்திரத்துடனே சினேகமிங்கு.