குறளின் கதிர்களாய்…(515)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(515)
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை
யுள்ளினு முள்ளஞ் சுடும்.
– திருக்குறள் – 799 (நட்பாராய்தல்)
புதுக் கவிதையில்…
கேடு வரும் காலத்தில்
கூட இருக்காமல்
கைவிட்டு
ஓடுகின்றவரின் நட்பு,
நமக்குச்
சாவு வரும்போது
சற்று நினைத்தாலும்
சுட்டிடுமே நெஞ்சை…!
குறும்பாவில்…
கெடும்போது நம்மைக் கைவிட்டோர்
நட்பினை நாம் சாகும்போது நினைத்தாலும்
சுட்டிடும் நமது நெஞ்சை…!
மரபுக் கவிதையில்…
கேடு வாழ்வில் வந்தேதான்
கெட்டுப் போகும் காலத்தில்
நாடும் துணையாய் இல்லாமல்
நம்மைத் தனியாய்த் தவிக்கவிட்டே
ஓடும் ஒருவர் நட்பினையே
ஒடுங்கி நமதின் னுயிரதுதான்
கூடு விடுங்கால் நினைத்தாலும்
கொடிதாய் நெஞ்சில் சுட்டிடுமே…!
லிமரைக்கூ…
கெடும்போது நமைக்கை விட்டிடும்
நட்பினை நாம் சாகும்போது நினைப்பினும்
நமது நெஞ்சைச் சுட்டிடும்…!
கிராமிய பாணியில்…
ஆகாது ஆகாது
அணுவளவும் ஆகாது,
ஆபத்தில உட்டுப்போற நட்பு
ஆகவே ஆகாது..
கேடு நமக்கு வரும்போது
கூட இருக்காம
நம்மத் தனியா தவிக்கவுட்டு
ஓடிப்போற நட்ப
நாம சாகிற நேரத்தில
நெனச்சாலும் சங்கடத்தில
நம்ம மனசு
நொந்து போயிடுமே..
அதால
ஆகாது ஆகாது
அணுவளவும் ஆகாது,
ஆபத்தில உட்டுப்போற நட்பு
ஆகவே ஆகாது…!