மொபைல் போன்களில் உரிமம் இன்றி பாடல் பதிவிறக்கம் செய்துவந்த இருவர் கைது – செய்திகள்
சென்னை, 13 ஜனவரி 2012.
திரைப்பட பாடல்களை உரிமம் பெறாமல் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்துகொடுத்த இருவர் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்தனர். இச்சம்பவத்தால் வடசென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.
SIDMM என்று சுருக்கமாக அழைக்கப்படும் சவுத் இந்தியா டிஜிடல் மியூசிக் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிட் நிறுவனம், (South India Digital Music Management Private Limited)திரைப்பட பாடல்கள், பக்திப் பாடல்கள், கிராமியப் பாடல்கள், சாஸ்திரீய சங்கீத பாடல்களைத் தயாரித்து வழங்கக்கூடியவர்களால் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டது.
1957 இந்திய காப்புரிமை சட்டப்படி பாடல் இசையை பதிவு செய்து, உரிமம் பெறாமல் வியாபாரம் செய்வது குற்றமாகும். அப்படியானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். எனவே இதுவரை உரிமம் இல்லாமல் பாடல்களை பதிவு செய்பவர்கள் இனி அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்றும் மொபைல் சிப்பில் பாடல்களை பதிவு செய்து தருபவர்கள், இனி சிம்காவால் அங்கீகரிக்கப்பட்ட SIDMM -ன் CELL MUZIK உரிமம் பெறுவது அவசியம் என்றும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
உரிமம் பெறாமல் பாடல்களை மொபைல் சிப்பில் பதிவு செய்பவர்களை கண்காணித்து காவல் துறையிடம் புகார் செய்ய முன்னாள் காவல் துறை அதிகாரி மாதவராஜ் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழு சமீபத்தில் வட சென்னை பகுதியில் உள்ள சில கடைகளை கண்காணித்தது. அப்போது ராயபுரத்தில் உள்ள சுப்ரீம் கம்யூனிகேஷன்ஸ், வண்ணாரப் பேட்டையில் உள்ள கனெக்ஷன்ஸ் மொபைல் ஆகிய கடைகளில் அனுமதியின்றி வாடிக்கையாளர்களின் மொபைல்களில் பாடல்களை பதிவிறக்கம் செய்வது கண்டறியப்பட்டது. இதுகுறித்து திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவிடம் புகார் செய்யப்பட்டது.
புகாரின் அடிப்படையில் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய இன்ஸ்பெக்டர் சுப்பராயன், சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு விரைந்து வந்து, கடையில் திருட்டுத்தனமாக பாடல்களை பதிவிறக்கம் செய்துக் கொடுத்த ரகமதுல்லா, சதீஷ் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால், மொபைல் போன்களில் அனுமதியின்றி பாடல்களைப் பதிவிறக்கம் செய்து தரும் கடை உரிமையாளர்கள், ஊழியர்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது.