போலியோ அரக்கனை முற்றிலும் ஒழித்த ஆண்டு!

1

தலையங்கம்

நம் நாட்டின் எதிர்காலமான மழலைச் செல்வங்களின் அதி பயங்கர எதிரியான போலியோ அரக்கன் முற்றிலும் ஒழிந்த ஆண்டாக சென்ற 2011 உள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தி. குழந்தைகளைக் குறி வைத்து தாக்குகின்ற போலியோ மயேலெட்டிஸ் என்ற , அவர்களை வாழ்நாள் முழுவதும் முடமாக்கக் கூடிய கொடிய நோய், சென்ற இரண்டு ஆண்டுகளில் உலகிலேயே அதிகமான பாதிப்பாக இந்தியாவில் மட்டும் 741 குழந்தைகள் எனக் கண்டறியப்பட்டிருந்தது. அசுத்தமான உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீரின் மூலம் பரவக்கூடிய வைரஸ் கிருமிகள் மூலம் கை,கால்களை முடமாக்கக் கூடிய இந்த நோய் வந்தவுடன், அதனை சரி செய்ய இயலாவிட்டாலும், வருமுன் காப்பதற்கான வழிமுறைகள் நல்ல பலனளிக்கிறது. அந்த வகையில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் தொய்வில்லாத முயற்சியால், ரூ.12,000 கோடி செலவில் , கிட்டத்தட்ட 17.2 கோடி குழந்தைகளை, 24 இலட்சம் ஊழியர்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கி சாதனை புரிந்திருப்பதும் பாராட்டிற்குரியது.

குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் பிறப்பது தேசிய அவமானமா?

அதே நேரத்தில் நம் நாட்டில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுடன் பிறக்கும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 42 சதவிகிதமாகவும், வளர்ச்சி கடுமையாகவும், மிதமாகவும் குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கை அதில் 59 சதவிகிதமாகவும் உள்ளது நாட்டிற்கே அவமானச் சின்னம் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பது வேதனைக்குரிய விசயம். கடந்த ஏழு ஆண்டுகளில் இது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. நூறு மாவட்டங்களில் , ஐந்து குழந்தைக்கு ஒரு குழந்தையின் எடை சரியாக உள்ளதென்றால், அது போன்ற சிறப்பான கவனம் செலுத்தப்பட்ட மாவட்டங்களை முன் மாதிரியாகக் கொண்டு ,மற்ற மாவட்டங்களிலும், பணியை முடுக்கி விட வேண்டியது அரசாங்கத்தின் கடமையல்லவா. சத்து குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசாங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்களின் கடமை. விலைவாசி உயர்வு, பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமை போன்ற அடிப்படைக் காரணங்களைச் சரி செய்ய வேண்டியதும் அவசியம். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் இதற்கான தீர்வு காணப்படும் என்று பிரதமர் கூறியிருந்தாலும், பொது மக்களுக்கும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். நம் நாட்டின் வருங்காலத் தூண்களான மழலைச் செல்வங்கள் தோன்றும் போதே வலுவிழந்து இருந்தால் அது நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லதன்று என்ற விழிப்புணர்வும் வேண்டும்!

படத்திற்கு நன்றி : http://www.immunize.org/photos/polio-photos.asp

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "போலியோ அரக்கனை முற்றிலும் ஒழித்த ஆண்டு!"

  1. நாளை மறுதினம் போலியோ சொட்டு மருந்து தரும் தினம். இவ்வாண்டும் போலியோவை முற்றிலும் ஒழிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.