தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 23
இன்னம்பூரான்
கடந்த 2011-ம் வருடத்தில் இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட துறை, அகில இந்தியத் தணிக்கைத் துறை. அரசியலில் ஆளுமை செலுத்துபவர்களால் பெரிதும் வசை பாடப் பெற்ற மகிமையும் அதைத்தான் சாரும். ஊடகங்களால் ஆதரவுடனும், எதிர் மறையாகவும் விமர்சனம் செய்யப்பட்ட துறையும் அதுவே.
நடு நிலையில் நின்று, ஆதாரங்களுடனும், புள்ளி விவரங்களுடனும், நிரூபணங்களுடனும், மறுக்க முடியாத முடிபுகளுடனும், தங்கு தடையின்றி, நமது அரசியல் சாசனத்துக்கு ஏற்புடைய வகையில், அதன் அடிப்படைக்குக் குந்தகம் இல்லாத வகையில், தரமுயர்ந்த அறிக்கைகளைச் சமர்ப்பணம் செய்யும் துறை, இது ஒன்றே. ஆகவே, குடியரசு தினத்தன்று, இந்தத் தொடர் மீண்டும் உயிர்ப்பிக்கப் படுகிறது.
ஆராயப் படுவதும், விழிப்புணர்ச்சியுடன், தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகளின் தொட்ட குறைகளும், விட்ட குறைகளும், பாரபட்சமில்லாமல் அலசப்படுவதும் கண்கூடு. சில மாஜி அமைச்சர்களும், கட்சிப் பிரமுகர்களும், உயரதிகாரிகளும் சிறை சென்றதின் முகாந்திரம், இந்த ஆடிட் அறிக்கைகளே. அவை அரசியல் சாசனத்தின் கட்டளைக்குட்பட்டு, பாராளு மன்றத்தில்/சட்ட சபையில் சமர்ப்பிக்கப் படுகின்றன. தணிக்கைத் துறைக்கு நாடாளும் மன்றம் தான் எஜமானன் என்பர். ஆனால், அரசியல் சாசனத்தின் மேலாண்மையை உணர்த்துவர், நுட்பம் அறிந்தவர்கள். இன்றைய காலகட்டத்தில், 150 வருடங்களாக, இடை விடாமல் பணி புரியும் இத்துறையின் எஜமானன், மக்கள் சமுதாயமே என்பது என் கருத்து. இது நிற்க.
அணுசக்தி இலாகாவும், வெட்டவெளி (ஸ்பேஸ்) இலாகாவும் பல வருடங்களாகவே, குற்றம், குறை காண்பவர்களை அண்ட விடுவதில்லை. அவற்றைத் தணிக்கை செய்வது எளிதும் அன்று. ஆவணங்கள் கொடுக்கப்பட வேண்டும், கிடைத்தவை புரிய வேண்டும், நாட்டின் பாதுகாப்பு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் வேண்டும். இவற்றைக் கவனத்தில் வைத்துக் கொண்டுதான் ஏற்புடைய தணிக்கைக் கையேடுகள் தயார் செய்யப் பட்டு, விஞ்ஞான ஆடிட் பயிற்சிகள் அளிக்கப் பட்டு, ஒரு தனிப் பிரிவே இயங்குகிறது. இது வரைத் தணிக்கை முடிவுகளைத், தகுந்த காரணம் காட்டி, யாரும் குறை கண்டதில்லை.
இந்தியாவின் வெட்ட வெளி இலாகா, ஆண்ட்டிரிக்ஸ் கார்ப்பரேஷன் என்ற தன்னுடைய நிழல் (‘பினாமி’ மாதிரி, ஆனால்,அநாமதேயம் அல்ல.) மூலம் தேவாஸ் மல்டி மீடியா என்ற கம்பெனிக்கு, விதிகளை விலக்கிச், சலுகைகள் நிறைந்த ஒப்பந்தம் அளித்ததால், கோடிக்கணக்கில் (2,00,000 கோடி) நஷ்டம் என்றும், உள் கை ஆதரவும், புறங்கைச் சுவையுமாகப், பல முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன என்றும் இந்தியத் தணிக்கைத் துறையின் ஆடிட் ரிப்போர்ட் பீ.ஏ.9: 2008 யின் ஒன்பதாவது அத்தியாயம் கூறுகிறது. ‘முதல் கோணல்’ என்று தொடங்கி, முற்றும் கோணல்’ என்று அலசியிருக்கிறது, அந்த ரிப்போர்ட். நியாயப் படுத்த முடியாத தாமதத்திற்குப் பிறகு, ஃபெப்ரவரி 2011ல் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, மத்திய அரசு, ஆடிட் ரிப்போர்ட்டை உறுதி செய்திருக்கிறது. அதற்கு இப்போது 2012- ல் என்ன என்று கேட்பவர்களுக்கு, இன்றைய செய்தி ஒன்று பதில் அளிக்கிறது. திரு. மாதவன் நாயர் என்பவர் பிரபல விஞ்ஞானி. வெட்டவெளித் துறையின் முன்னாள் தலைவர். மத்திய அரசு அவருக்கும், மேலும் மூன்று மாஜி அதிகாரிகளுக்கும் யாதொரு அரசுப் பதவியும் கொடுக்கலாகாது என்றொரு ஆணை பிறப்பித்துள்ளது. அந்தத் தடாலடி ஆணை நான்கு விதமான சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
முதல்கேள்வி:
அவர்கள் நிஜமாகவே தவறு செய்திருந்தால், அவர்களில் சிலரும், மற்றும் சிலரும், தணிக்கைத் துறை அப்பட்டமாக எழுதியது போலத் தங்க நாணயங்களைப் பரிசிலாகப் பெற்று இருந்திருந்தால், இந்த மென்மை வருடல் ஒரு தண்டனையா என்ன? அவர்கள் மீது சட்டபூர்வமாக 2008-லிருந்து ஏன் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை? அல்லது, அவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபணம் ஆகி விட்டால், இந்தத் தடாலடி ஏன்? மாபெரும் தவறுகளை ஒப்புக் கொண்ட மாதிரி தான் பிற்கால நடவடிக்கைகள் இருக்கின்றன. தவறு செய்தவர்கள் தப்பி விட்டனரோ என்ற ஐயம்; இரண்டாவது கேள்வி எழுகிறது.
இரண்டாவதுகேள்வி:
இது மேலும் சிக்கலானது. ஆதாரங்களைப் பாரபட்சமில்லாமல் ஆய்வு செய்தால், தவறுகளுக்கு மற்றும் பலர் துணை போயிருக்கலாம் என்று தோற்றம். ஏனெனில், இந்த ஸ்பேஸ் துறையே பிரதமரின் நேரடி அலுவல்களில் ஒன்று. அவர் தான் இத்துறைக்குப் பொறுப்பு ஏற்கும் அமைச்சர். அவருடைய அலுவலகத்தில் துணை அமைச்சராக இருக்கும் திரு.பிருதிவிராஜ் செளஹான் அன்றாடப் பொறுப்பு வகிக்கும் துணை அமைச்சர். அவருக்கும், பிரதமரின் அலுவலகத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தெரியாதபடி, திரு. மாதவன் நாயர் மறைத்து விட்டார் என்று சொல்ல இயலாது. அவர்கள் தஸ்தாவேஜுகளை இனம் கண்டு (அல்லது இனம் காணாமல் !) அவ்வப்பொழுது சம்மதம் தெரிவித்து இருக்க வேண்டும், அரசு விதிமுறைப்படி.
மேலும், இந்த எஸ். பாண்ட் விவகாரம் நாட்டின் பாதுகாப்பைப் பாதிக்கக் கூடியது. அந்தப் ‘பொன் பரிசில்’ அளித்த கம்பெனிக்கு எக்கச்சக்கச் சலுகைகள். இலாகாவின் மந்திரியோ பிரதமர். அவருக்குத் தெரியாது, இந்தக் கூத்து என்று அவருடைய ஆலோசகர்களின் குழு சொல்கிறது. யார் இதை நம்ப முடியும்?
சந்தடி சாக்கில் துறை சாராத துணை அமைச்சர் ஒருவர் வந்து விஞ்ஞானிகளைத் தரக்குறைவாக, 27-01-2012 அன்று சாடியிருக்கிறார். அவர் வந்து புகல் என்ன நீதி? என்று திரு. மாதவன் நாயர் கேட்பதில் நியாயம் இருக்கிறது. ஐயகோ! இந்தியா கலிலியோ காலத்துக்குத் தள்ளப் பட்டதோ என்று மாதவன் நாயர் வினவுகிறார். நாம் எங்கே போய் அழுவது? ஜனாப் அப்துல் கலாம் அவர்களிடம் போயா?
மூன்றாவதுகேள்வி:
அந்த ஒப்பந்தம் தான் ஒரு வருடம் முன்னால் அபார்ஷன் செய்யப்பட்டு விட்டதே என்று ஒரு சால்ஜாப்பு. அது எடுபடாது, ஐயா. இந்தியத் தணிக்கைத்துறை சுணக்கம் காட்டாமல் தவறுகளைச் சுட்டியதாலும், ஊடகங்கள் சங்கு ஊதியதாலும், மக்கள் மன்றம் ஊழலையும், லஞ்சத்தையும் நாள் தோறும் கண்டித்து வந்த காலகட்டம் அது என்பதாலும் தான், மத்திய அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்தது. காலகட்டத்தைப் பாருங்கள். ஃபெப்ரவரி 2011. இல்லாவிடின், ஒப்பந்தம் நிறைவேறி, ஆடிட் குறிப்பிட்ட இரண்டு லட்ச கோடி ரூபாய்கள் நஷ்டம் கடையேறியிருக்கும்.
நான்காவதுகேள்வி:
இந்தியத் தணிக்கைத் துறையின் ஆடிட் ரிப்போர்ட் பீ.ஏ.9: 2008 யின் ஒன்பதாவது அத்தியாயம் கூறியது என்ன? என்ன? சரியான கேள்வி.
வல்லமை இதழில் இந்தத் தொடர் நிலைக்கு வராத காரணம், இதை வரவேற்கும் வாசகர்கள் இல்லையோ என்ற ஐயம் எழுந்ததாலே. தற்காலம், வல்லமையின் பொலிவு கூடியிருக்கிறது. புதிய எழுத்தாளர்களின், புதிய வாசகர்களின் நல் வருகையினால் உவகை கூடுகிறது. ஆகவே நான்காவது கேள்வி எழுப்பப் பட்டால், அடுத்த தொடரில், பதில் அளிக்க இயலும்.
(தொடரலாமா?)
லோகோ படத்திற்கு நன்றி: http://saiindia.gov.in/english/assets/logo.png
இஸ்ரோ படத்திற்கு நன்றி: http://afterbtech.com/wp-content/uploads/2010/07/IndianSpaceResearchOrganisation_thumb.jpg
தணிக்கை என்பது முட்டுக்கட்டையா? அல்ல, முட்டுக் கொடுபபு! என்று சொல்ல வேண்டும். வீடுகட்டும் போது, வாழைமரம் பூ விட்டதும் காற்றில் விழுந்துவிடாமல் இருக்க முட்டுக் கொடுப்பார்கள். அது போன்று வளர்நது வரும் பாரதம் வீழ்ந்துவிடாமல் இருக்க கொடுக்கப்படும் தணிக்கை அறிக்கை முட்டுக்கட்டைக்குச் சமம். இந்தியாவின் தன்மானம் இதனால் நிலைநிறுத்தப்படுகிறது.
எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. அதை நான்காவது கேள்வியாகப் பதிவு செய்கிறேன்.
நான்காவது கேள்வி.
பொதுவாக, ஏதோ ஒன்று ஏலத்திற்கு வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.,
ஏலம் நடைபெறும் தேதிக்கு முன்னதாகவே, ஏலம் எடுக்க விண்ணப்பித்தவர்கள் ஒன்று கூடி அதை எவ்வளவு ஏலத்திற்கு எடுக்கலாம், யார் அதை எடுப்பது என்று முடிவு செய்து விடுவர். பிறகு அப்படியே ஏலமும் எடுப்பர். பின்னர் வரும் லாபத்தைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வர். இதனைச் “லோக்கல் சின்டிகேட்“ என்று கூறுவர்.
இதை எப்படித் தடுப்பது? இப்படி சின்டிகேட் கூடி முடிவு செய்து அந்த முடிவின்படியே ஏலம் கேட்டால் என்ன செய்வது?
அன்பன்
கி.காளைராசன்
திரு.காளைராஜனின் பின்னூட்டத்திற்கு நன்றி. அரசு அலுவலகங்களின் மெத்தனப்போக்கை எள்ளல் செய்ய, ஆடி,அசைந்து வரும் பூரி ஜெகன்னாத் தேரை உவமையாக சொல்வார்கள் ~Juggernaut. அந்த உவமையை, அரியக்குடித் தேரை இழுத்த நினைவில் எடுத்துக்கொண்டேன். பல பொருத்தமான உவமைகளும் முன் நின்றன. அவற்றையெல்லாம் கூறி, ‘அரசமரத்தை…’ இழையின் அடுத்த கட்டுரையில் முழுமையான பதில் அளிக்கிறேன். இப்போதைக்கு: முட்டுக்கட்டை சாதிப்பது ஒரு உரிமை, கடமை, கலை. தேரை வழி நடத்த இன்றியமையாதது. முட்டுக்கொடுப்பு தற்காலிக பாதுகாப்பு. எனவே, முட்டுக்கடை உவமையாயிற்று.ஏற்கனவே, இந்த இழையில், வேண்டப்பட்டவருக்கு ஒப்பந்தம் கொடுக்கக்கூடிய ‘முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும்’ மர்மம் கூறப்பட்டது. ஏலத்தில் சிண்டிகேட் முறைகேடு நடக்க வாய்ப்பு உண்டு. அதை தடுக்க தன்னலம் உள்ள போட்டி தான் கவசம். பொதுவில் அறிந்தது: கோயில் குளத்தில் மீன் பிடிக்கும் ஏலத்தை பெரியதனக்காரர்கள் வளைத்துக்கொள்வது உண்டு. திடீரென்று ஒரு நாள் ஒருவர் உடைத்து விடுவார், துணிவுடன். காலாவட்டத்தில், கடும்போட்டியை உருவாக்க , சில உத்திகள் உண்டு. அதில் ஒன்று, சிண்டிகேட் ஐயம் இருந்தால், ஏலத்தை ரத்து செய்வது அல்லது அப்செட் மதிப்பை அபரிமிதமாகக்கூட்டுவது. உரிய தருணத்தில், விவரமாக பதில் தருகிறேன், மற்றவர்களும், அனுபவம்/கருத்து அளித்தால்.இன்னம்பூரான்