சாந்தி மாரியப்பன்

மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்க நேரிடும் இன்பதுன்பங்கள், ஏற்றத்தாழ்வுகள், தோஷங்கள் எல்லாவற்றிற்கும் தன்னுடைய கர்ம வினைகளும், செய்த பாவங்களுமே காரணமென்று நம்புகிறான். இதிலிருந்து விடுபடவும், பயங்களைப் போக்கி கொள்ளவும் கடவுளைச் சரணடைகிறான். பூஜை புனஸ்காரங்கள், விரதங்கள் என்று விதவிதமான வழிபாடுகளை மேற்கொண்டாலும் அவன் நாடுவது இறையருளை மட்டுமே. எல்லா நாட்களிலும் இறைவனை வழிபட்டாலும் சில நாட்களுக்கும் மாதங்களுக்கும் மட்டும் தனிப்பட்ட சிறப்பு கிடைத்து விடுகிறது. உதாரணமாக, மார்கழி, புரட்டாசி, கார்த்திகை, தை மாதங்களில் திருமால், அம்பாள், ஐயப்பன் என்று ஒவ்வொரு தெய்வத்துக்கும் தனிச்சிறப்புக் கொடுத்துக் கும்பிடறோம். இதில் மாசி மாசம் வரும் சிவராத்திரியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சிவனுக்குரிய ராத்திரிகளான நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி ஆகியவற்றைப் பஞ்சராத்திரிகள் என்று சொல்லுவார்கள். இதில் மாசி மாசம் வரும் சிவராத்திரியை மஹா சிவராத்திரி என்று கொண்டாடுகிறோம். பகல் முழுக்க உபவாசமிருந்து, சிவபுராணம், சிவ அஷ்டோத்திரம் படித்து விட்டு ராத்திரி நாலு காலப்பூஜைகளில் கலந்து கொண்டு பால், தேன், சந்தனம், இளநீர், தயிர், கரும்புச்சாறு என்று விதவிதமாக நடக்கும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசிக்கறது ரொம்ப விசேஷம். இதில் இரவு 11.30லேர்ந்து 1 மணி வரைக்குமான லிங்கோற்பவ காலப் பூஜையில் கலந்து கொள்வது ரொம்பவே சிறப்பானது.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரைக்கும் சிவனுக்கு உருவ வழிபாடு கிடையாது. லிங்க வடிவில்தான் வணங்குகிறோம். இந்த லிங்க வடிவங்களிலும் கூட ஜோதிர்லிங்கங்களுக்குத் தனிச்சிறப்பு உண்டு. ஜோதி என்றாலே ஒளின்னு அர்த்தம். ஒரு திருவாதிரை நாளில் சிவன் தன்னை ஒளிமயமான லிங்க வடிவில் வெளிப்படுத்திக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதனால் மற்ற நாட்களை விட திருவாதிரை தினத்தன்று ஜோதிர்லிங்க வழிபாடு செய்வது விசேஷம். இந்தியாவில் மொத்தம் 12 ஜோதிர்லிங்கங்கள் இருக்கின்றன.

சோம் நாத் ஜோதிர்லிங்கம்குஜராத்.

குஜராத்தின் சோம்நாத் பட்டான், கத்தியவாட் தாலுகாவில் இருக்கும் இந்தக் கோயிலில்தான் முதலாவது ஜோதிர்லிங்கமான சோமநாதர் இருக்கிறார். ‘சோம்’ என்ற வார்த்தைக்கு அமிர்தம் என்று அர்த்தமாம். இறையருளான அமிர்தம் அஞ்ஞானத்தைப் போக்கி, அறியாமை இருளிலிருந்து நம்மை மீட்டுக் கொண்டு வருவதால் இவரை சோம்நாத் என்று அழைப்பது பொருத்தமே.

தல வரலாறு: தக்ஷ ப்ரஜாபதி தனது மகள்களான 27 நட்சத்திரங்களையும் சந்திரனுக்குத் திருமணம் செய்து வைத்தார். பத்துக் குழந்தைகள் இருந்தாலும் பெற்றோருக்கு ஒரு குறிப்பிட்ட குழந்தை செல்லக் குழந்தையாவதைப்போல் சந்திரனுக்கும் தன்னுடைய மனைவிகளில் ‘ரோகிணி’ மேல் தனிப்பிரியம். அதனால் சக்களத்திச் சண்டையும் வந்தது. பஞ்சாயத்து செய்த தக்ஷன் மருமகனின் ஒளியும் அழகும் அழிந்து போகுமாறு சாபமிட, விமோசனத்துக்காக சந்திரன் வந்திறங்கிய இடம்தான் சோம்நாத். இங்கிருந்த ஜோதிர்லிங்கத்தைப் பூஜித்துத்தான் சந்திரனுக்குச் சாப விமோசனம் கிடைத்தது. சோமன் என்ற வார்த்தை சந்திரனையும் குறிக்கும். அதனால் இங்கேயிருக்கும் இறைவனுக்கு சோமநாதர் என்ற பெயர் வந்தது.

மல்லிகார்ஜூனர்ஸ்ரீசைலம்ஆந்திரப் பிரதேசம்.

ஆந்திராவின் கிருஷ்ணா நதி தீரத்தில் பாதாளக் கங்கைக்கரையிலிருக்கும் ஸ்ரீசைலம் மலையுச்சியில் இருக்கிறது இந்தக் கோயில். இந்த மலையின் சிறு நுனியைப் பார்த்தாலே வினையெல்லாம் நம்மை விட்டு ஓடிவிடும். அத்தனைப் புண்ணியமுண்டாம்.

தலவரலாறு: ஒரு சமயம் தனக்கு முன்னாடி தன்னுடைய அண்ணனான பிள்ளையார் திருமணம் செய்து கொண்டதால் தம்பியான முருகனுக்குக் கோபம் வந்து வீட்டை விட்டு வெளியேறிட்டாராம். (எதுக்குக் கோவப்படணும். ஞானப்பழ விஷயமா நடந்த பஞ்சாயத்தே இன்னும் தீரலை. அதுவுமில்லாம சீனியாரிட்டிப்படி அண்ணனுக்குத்தானே முதல்ல கல்யாணம் நடக்கணும்?. இதெல்லாம் முருகக்கடவுளுக்குத் தெரியாதா என்ன?. அவங்க எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும். ) சமாதானப்படுத்துவதற்காக வந்த அப்பனும் அம்மையும் ஒன்றாகக் கலந்து ஜோதிர்லிங்க உருவெடுத்து இங்கே அருள் பாலிக்கிறார்கள். மல்லிகா என்பது பார்வதியின் ஒரு பெயர். சிவனுக்கு அர்ஜூனர் என்று இன்னொரு பெயரும் உண்டாம். (கோயிலுக்கு பெயர் வந்த காரணக் கணக்கு சரியாப் போச்சு)

மஹா காலேஷ்வர்உஜ்ஜயினிமத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினி பகுதியில் ஷிப்ரா நதிக்கரையில் இருக்கும் இந்தக்கோயிலுக்கு சைவர்களிடையே ரொம்பவும் முக்கியத்துவம் உண்டு. மனித உயிருக்கு முக்தி அளிக்கும் ஏழு தலங்களில் இதுவும் ஒன்று. மற்ற மூர்த்திகளைப் போல இல்லாமல் இங்கே தெற்கு நோக்கியிருக்கும் இறைவனின் சிலை தட்சிணாமூர்த்தியின் வடிவமாகும். தந்திர மரபுகளில் சொல்லப்பட்டிருக்கும் இந்தச் சிறப்பம்சத்தை 12 ஜோதிர்லிங்கங்கள்ல இங்கே மட்டும்தான் காண முடிகிறது.

தலவரலாறு: ஸ்ரீகர் என்ற சிறுவன் தானும் இறைவனைப் பூஜை செய்ய ஆசைப்பட்டு, ஒரு கல்லை எடுத்து வைத்துப் பூஜித்தான். அவன் அன்புக்குக் கட்டுப்பட்டு இறைவன் ஜோதிர்லிங்கமா உருவெடுத்து இங்கே தங்கினார் என்றும், அவந்தி நாட்டு மக்களுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த துஷ்ணா எனும் துஷ்ட அரக்கனை பூமியிலிருந்து  வெளிப்பட்டு அழித்து, மக்களைக் காத்த பின், அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு இங்கே தங்கினாரென்றும் விதவிதமாகக் கதைகள் சொல்லப்படுகின்றன. இந்தக் கோயிலின் மூணாவது அடுக்கில் இருக்கும் நாகசந்திரேஷ்வரரை நாகபஞ்சமி அன்றைக்கு மட்டுமே தரிசிக்க முடியும் என்பது ஒரு சிறப்பு.

ஓம்காரேஷ்வர்சிவபுரிமத்தியப் பிரதேசம்.

நர்மதை ஆற்றிலிருக்கும் சிவபுரி என்ற தீவில் இந்தக் கோயில் இருக்கிறது. இந்தத்தீவு இந்துக்களின் அடையாளமான ஓம் என்ற வடிவத்தில் இருப்பதால் இறைவன் ஓம்காரேஷ்வர் என்று வழங்கப்படுகிறார். தீவின் இன்னொரு பகுதியில் அமரேஷ்வர் கோயிலும் இருக்கிறது.

தலவரலாறு: திரிலோக சஞ்சாரியான நாரதர் ஒரு சமயம் விந்திய மலையிடம், மேரு மலையைப் புகழ்ந்து பேச, பொறாமைப்பட்ட விந்திய மலை தான் அதை விடப் பெரியவராக வளர ஆசைப்பட்டது. ஓம்காரேஷ்வரை நோக்கித் தவமும் பூஜைகளும் செய்தது. “விந்தியா,.. உன் பக்தியை மெச்சினோம். காம்ப்ளான் குடிக்காமலேயே நீ வளருவாயாக” என்று சிவனும் திருவாய் மலர்ந்தருளினார். அப்றமென்ன?.. “நான் வளர்றேனே மம்மி” என்று வளர ஆரம்பித்த விந்திய மலை ஒருகட்டத்தில் கர்வம் தலைக்கேறி சூரிய சந்திரர்களையே வழி மறிக்க ஆரம்பித்தது. கடைசியில் அகத்தியர் வந்து அதன் கர்வமடக்கியது தனிக்கதை.

வைத்தியநாதர்தேவ்கட்ஜார்கண்ட்

ஜார்கண்ட் மாநிலத்தில் தேவ்கட் பகுதியில் இருக்கும் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால் தீராத வியாதிகளும் தீர்ந்து ஆரோக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் வந்து வணங்குகிறார்கள்.

தல வரலாறு: சிவனைத் தன்னோடு இலங்கைக்குக் கூட்டிட்டுப் போக விரும்பிய ராவணனுக்குத் தன்னுடைய அம்சமாக ஒரு சிவலிங்கத்தைக் கொடுத்தார் இறைவன். கூடவே இதை இலங்கைக்கு கொண்டு போய்ச் சேர்க்கும் வரைக்கும் தரையில் வைக்கக்கூடாதென்று நிபந்தனையும் விதித்தார். நிபந்தனையை மீற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானதால் சிவலிங்கம் மறுபடி எடுக்கமுடியாமல் தரையுடன் ஒட்டிக்கொண்டது. ஏமாற்றமடைந்த ராவணன் தன்னுடைய ஒன்பது தலைகளையும் ஒவ்வொன்றாகச் சீவிக் காணிக்கையாகக் கொடுக்க, பதறிய சிவன் காட்சி கொடுத்து அந்தத் தலைகளை மறுபடி ஒட்ட வைத்தார். ராவணனுக்கு வைத்தியம் பார்த்ததால் வைத்தியநாதருமானார். இந்தத் தலம் 52 சக்தி பீடங்களில் ஒன்றாவும் கருதப்படுகிறது. இது சக்தியின் இதயம் விழுந்த இடமாம்.

பீமாசங்கர்சஹயாத்ரிமஹாராஷ்ட்ரா

பூனாவுக்கருகே சஹயாத்ரி மலைப்பிரதேசத்தில் இருக்கும் பவகிரி என்ற ஊரில், பீமரதி நதிக்கரையில் இருக்கும் இந்தக் கோயில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நாகரா கட்டடக் கலை முறையில் கட்டப்பட்ட இந்தக்கோயிலுக்கு சிவாஜி மன்னரும்,வருகை தந்து மானியங்களை அள்ளி வழங்கியிருக்கிறார். இந்தக் கோயிலின் கோபுரம் நாநா ஃபட்னவிஸ் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.

தலவரலாறு: இலங்கைப் போரில் கொல்லப்பட்ட கும்பகர்ணனின் மகனான பீம், விஷ்ணுவின் ஒரு அவதாரமான ராமரால் தன் தந்தை கொல்லப்பட்டதைத் தாய் மூலம் அறிந்து கொண்டு, விஷ்ணுவைப் பழி வாங்குவதற்காக பிரம்மாவை நோக்கித் தவம் செய்தார். பிரம்மா கொடுத்த வரங்களின் பலத்தால் மூவேழு லோகங்களையும் அடிமைப்படுத்தி, தனக்கென்று பறக்கும் கோட்டைகளையும் ஏற்படுத்திக் கொண்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்த பீமனைச் சிவன் சண்டையிட்டு முப்புரம் எரித்து அத்துடன் பீமனையும் சாம்பலாக்கி அழித்தார். அப்போது அவர் உடம்பில் ஏற்பட்ட வியர்வைதான் பீமரதி நதியா உருவெடுத்தது. அப்புறம் அனைவரின் வேண்டுகோளுக்கிணங்கி சிவன் அங்கேயே ஜோதிர்லிங்கமாக உருவெடுத்துக் கோயில் கொண்டார்.

இராமநாதர்- இராமேஸ்வரம்- தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் என்ற தீவில் இருக்கும் இந்தக் கோயிலுக்குப் பாம்பன் பாலம் வழியாகச் செல்லலாம். மொத்தம் 36 தீர்த்தங்கள் கொண்ட, திராவிடக் கட்டடக் கலை முறையில் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோயிலின் பிரகாரங்கள் உலகப் புகழ் பெற்றவை.

தலவரலாறு: இராவணனை அழித்தபின் அயோத்தி திரும்பிக் கொண்டிருந்தபோது பிரம்மஹத்தி பாவத்தைப் போக்கிக் கொள்வதற்காகச் சிவபூஜை செய்ய நினைச்சார் ராமர். சிவலிங்கம் கொண்டு வரச் சென்ற அனுமன் திரும்பி வரத் தாமதமாகவே சீதா பிராட்டி தன் கையாலயே மணலைப் பிசைந்து லிங்கம் உருவாக்கினார். ராமர் அந்த லிங்கத்துக்குப் பூஜை செஞ்சதால் இங்கேயுள்ள சிவன் ராமலிங்கர் என்று நாமகரணம் சூட்டப்பட்டார். பிற்பாடு அனுமர் கொண்டு வந்த லிங்கமும் இங்கேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு காசிலிங்கம், அனுமன்லிங்கம் என்ற பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. இங்கே கடலாடிப் பாவங்களைப் போக்கிக் கொள்ள உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருகிறார்கள். இந்தியாவைப் பொறுத்த மட்டில் காசி-ராமேஸ்வரம் இரண்டுமே முக்கியமானவை. காசியிலிருந்து ஆரம்பிக்கும் தலயாத்திரை ராமேஸ்வரம் வந்து ராமலிங்கத்தைத் தரிசித்துக் கங்கை நீரால் அபிஷேகம் செய்தால்தான் முழுமை பெறும். இங்கேயிருந்து ஆரம்பிக்கும் யாத்திரைக்கும் அப்படியே.

கேதார்நாத்-கேதார்-உத்தராகாண்ட்

ருத்ர இமயமலைப் பகுதியில், மந்தாகினி நதி தீரத்திலிருக்கும் கேதார் மலையுச்சியில் இந்தக் கோயில் இருக்கிறது. இங்கிருக்கும் பருவ நிலை காரணமாக ஏப்ரலிலிருந்து நவம்பர் வரை மட்டுமே இந்தக் கோயில் திறந்திருக்கும். மற்ற மாதங்களில் இந்தக் கோயிலின் பூசாரிகள் உகிமந்த் என்ற இடத்துக்குப் போய் அங்கிருந்து பூஜையைத் தொடருவார்கள். இந்தக் கோயிலுக்கு கௌரிகுண்ட் என்ற இடத்திலிருந்து மலையேறித்தான் போக வேண்டும். கேதார் நாத் யாத்திரை போகும் புனித யாத்திரீகர்கள் கங்கோத்ரியிலிரிந்து கங்கை நீரையும் யமுனோத்ரியிலிருந்து யமுனை தீர்த்தத்தையும் கொணர்ந்து கேதார நாதருக்கு அபிஷேகம் செய்வார்கள்.

தலவரலாறு: நர-நாராயணர்களின் தவத்தை மெச்சி அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி ஜோதிர்லிங்கமா இங்கே கோயில் கொண்டார். இந்தக் கோயில் பாண்டவர்களால் கட்டப்பட்டதா சொல்லப்படுகிறது, அர்ஜூனன் தவம் செய்து பாசுபதாஸ்திரம் பெற்றது, திரௌபதி கேட்ட கல்யாண சௌகந்திகம் என்ற பூவைக் கொண்டு வரக் கிளம்பிப்போன பீமன் முதன் முதலா அனுமனைச் சந்தித்தது, ஈசனின் இடப்பக்கம் கேட்டு பார்வதி தவம் செய்து அர்த்தநாரீஸ்வரர் ஆனது என்று இங்கே நடந்ததாகச் சொல்லப்படும் புராண விஷயங்கள் ஏராளம்.

காசிநாதர்- காசி- உத்தரப்பிரதேசம்

இந்துக்களோட வழிபாட்டுத் தலங்களில் காசி ரொம்ப ரொம்ப முக்கியமான இடம். இங்கே இறப்பவர்களில் காதுகளில் அந்த சிவனே தாரக மந்திரத்தை உச்சரித்து நேரடியாகச் சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்கிறதாக ஐதீகம்.

தலவரலாறு: தன்னுடைய முன்னோர்களுக்கு முக்தியளிக்கும் பொருட்டுத், தவம் செய்த பகீரதனுக்காக ஆகாயகங்கையைத் தன் முடிமேல் தாங்கிப் பூலோகத்துக்குக் கொண்டுவந்த இறைவன் இங்கே கோயில் கொண்டிருக்கிறார். அசலான கோயில் 1490-ல் முதன்முறையாகக் கட்டப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், தொடர்ந்த படையெடுப்புகள் மற்றும் கொள்ளையடிப்புகள் காரணமாகப் பலமுறை அழிக்கப்பட்டது. இந்தோரைச் சேர்ந்த ராணி அகல்யா பாய் ஹோல்க்கரின் கனவில் வந்து சிவன், தன்னுடைய கோயிலைச் செப்பனிடுமாறு கட்டளையிடவே 1777-ல் உண்மையான விசுவநாதர் ஆலயத்திலிருந்து சற்றுத் தொலைவில் தற்போதிருக்கும் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

த்ரம்பகேஷ்வர்-த்ரிம்பாக்-மஹாராஷ்ட்ரா

மஹாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் நகரிலிருந்து 28 கி.மீ தொலைவில் த்ரிம்பாக் என்ற நகரில் இக்கோயில் அமைந்திருக்கிறது. கோதாவரி ஆறு இங்கிருந்துதான் பாயத்தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இறைவன் மும்மூர்த்திகளின் முகங்களுடன் அமைந்திருப்பது சிறப்பு. பிரம்மகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இக்கோயில் முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டிருப்பது சிற்பக்கலையின் சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு.

தலவரலாறு: ஒரு சமயம் கௌதம முனிவர் தன் மனைவி அகல்யாவுடன் இங்கே வசித்து வந்தார். வருணபகவானின் அருளால் அவருக்குக் கிடைத்த அட்சய பாத்திரத்தைக் கண்டு பொறாமையுற்ற மற்றவர்கள் தவ வலிமையால் ஒரு பசுவை உருவாக்கி அது கௌதம முனிவரின் தோட்டத்தில் மேயும்படிச் செய்தனர். கௌதம முனி ஒரு தர்ப்பைப்புல்லால் அதை விரட்டவே, அது அங்கேயே இறந்தது. பசுஹத்தி செய்த பாவத்தைப் போக்க கௌதம முனிவர் சிவபெருமானிடம் ஆகாய கங்கையை வேண்டவே கங்கை ஆசிரமத்துக்கு வந்து தன்னுடைய நீரால் பாவத்தைப் போக்கினாள். கங்கை மற்றும் முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமானும் மற்ற கடவுளரும் அங்கேயே தங்குவதாக அருள் பாலித்தனர். பன்னிரண்டு வருடங்கள்க்கு ஒரு முறை இங்கே நடைபெறும் கும்பமேளா மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிரம்மாவும் விஷ்ணுவும் இறைவனின் அடிமுடி தேடியபோது அடிமுடியில்லா பிழம்பாய் ஐயன் நின்றதும் இங்கேதான் என்றும் ஒரு கதை உலவுகிறது.

நாகேஸ்வர்-த்வாரகா-குஜராத்

குஜராத் மாநிலத்தின் சௌராஷ்ட்ரா பகுதியில் அமைந்திருக்கும் இக்கோயிலின் இறைவனான நாகேஸ்வரரை வழிபட்டால் விஷப்பூச்சிகளின் விஷங்கள் அண்டாது என்று நம்பப்படுகிறது. கோமதி த்வாரகாவிலிருந்து வைத் த்வாரகா செல்லும் பாதையில் இக்கோயில் உள்ளது.

தலவரலாறு: தாருகாசுரன் என்பவன் சிவ பக்தையான சுப்ரியாவைச் சிறையெடுத்துப் பாம்புகளின் நகரமான தாருகாவனத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தினான். பாசுபதாஸ்திரத்தால் அவனை அழித்துத் தன் பக்தையைக் காத்த இறைவன் தாருகாசுரனின் வேண்டுகோளுக்கிணங்கி இங்கேயே கோயில் கொண்டார். தன்னுடைய பெயரால் இத்தலம் வழங்கப்பட வேண்டும் என்ற தாருகாசுரனின் விருப்பத்துக்கிணங்க இத்தலம் நாக்நாத் என்று வழங்கப்படுகிறது.

க்ரிஷ்னேஷ்வர்-ஔரங்காபாத்-மஹாராஷ்ட்ரா

மஹாராஷ்ட்ராவின் அஜந்தா-எல்லோராக் குகைகளுக்கு அருகே இருக்கும் ஔரங்காபாதின் சமீபத்திலிருக்கும் தௌலதாபாதிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் வேருல் என்ற சிற்றூரிலுள்ளது இக்கோயில். இந்தக்கோயிலுக்கு சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பாட்டனான மல்ரோஜி ராஜே போஸ்லேயும், இந்தோர் ராணியான அகல்யா பாய் ஹோல்க்கரும் திருப்பணிகள் செய்துள்ளனர்.

தலவரலாறு: தனக்குக் குழந்தையில்லாதால் தன் தங்கை குஷ்மாவைத் தன் கணவன் சுதார்முக்கு திருமணம் செய்து வைத்தாள் சுதேஹா. மூத்த சகோதரியின் அறிவுரைப்படி தினமும்101 சிவலிங்கங்களைப் பூஜை செய்து அருகிலிருந்த நதியில் விட்டு வந்தாள் குஷ்மா. சிவனின் திருவுள்ளத்தால் அவளுக்கு ஒரு மகனும் பிறந்தான். முதலில் அன்புடனிருந்த சுதேஹா நாளடைவில் பொறாமையுற்று தன் தங்கையின் மகனைக் கொன்று நதியில் வீசிவிட்டாள். இரத்தத்துளிகளைக் கண்டு சந்தேகமுற்ற குஷ்மாவின் மருமகள் அது தன் கணவனுடையதுதான் என்றறிந்து தன் மாமியாரான குஷ்மாவிடம் முறையிடவே, அவள் முதலில் வருத்தமுற்றாலும் பின் இறைவன் கொடுத்ததை அவனே எடுத்துக்கொண்டான் என்று தெளிந்தாள்.

எப்போதும் போல் பூஜை செய்த 101 சிவலிங்கங்களை நதியில் கரைப்பதற்காக எடுத்துச் சென்றபோது தன்னுடைய மகன் உயிர்பெற்று நதியிலிருந்து எழுந்து வருவதைக் கண்டாள். அவளுக்கு ஜோதிர்லிங்கமாகக் காட்சியளித்த இறைவன் அவளுடைய வேண்டுகோளுக்கிணங்கி சுதேஹாவை மன்னித்து அங்கேயே கோயில் கொண்டார். குஷ்மாவிற்கு அருளியதால் குஷ்மேஷ்வர் என்றும் நாமம் கொண்டார்.

ஊசிக் குறிப்பு: அசலைத் தரிசிக்க எப்போது நேரம் வருமென்று தெரியவில்லை. அதனால் சமீபத்தில் இங்கே நடந்த ஒரு ஆன்மீக விழாவில் வைத்திருந்த ஜோதிர்லிங்கக் கோயில்களைச் சுட்டுக் கொண்டு வந்திருக்கிறேன். நகல்தான் என்றாலும் கடவுள்தானே.. அவன்தான் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பானென்று நம்புகிறவர்களாயிற்றே நாம். நகலில் இருக்கும் கடவுளைக் கும்பிடாமலா போய் விடுவோம் :-))

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “பன்னிரு ஜோதிர்லிங்கங்கள்

  1. தகவல்களை சுவாரஸ்யமாகத் தந்திருக்கிறீர்கள். நல்ல நாளில் ஜோதிர் லிங்க தரிசனத்திற்கு மிக நன்றி.

  2.       பன்னிரெண்டு சிவன் ரூப தரிசனம் லிங்கத்தில் உருவம்,காட்சியை,காணசெய்த,உங்களுக்கு நன்றி !  ****deva***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.