சுழற்சங்கத்தில் சேர்ந்தார் நடிகை சிநேகா

Sneha_smileபோலியோ ஒழிப்புக்காக நிதி திரட்டும் சுழற்சங்கத்தின் (ரோட்டரி கிளப்) புதுச்சேரி மாவட்டக் கருத்தரங்கம், எஸ். ஆர். எம். பல்கலைக்கழகத்தில் நடந்தது. இந்தக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, போலியோவை ஒழிக்க நிதியுதவி செய்யுமாறு நடிகை சிநேகா வேண்டுகோள் விடுத்தார்.

உலகமெங்கும் போலியோ ஒழிப்பு முழுமையடைந்தாலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, நைஜீரியா நாடுகளில் மட்டும் இன்னும் முழுமையடையவில்லை. இந்த நாடுகளில் போலியோவை ஒழிக்க ரூ. 825 கோடியைத் திரட்டச் சுழற்சங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி மாவட்டச் சுழற்சங்கம் சார்பில் நிதி திரட்டும் நிகழ்ச்சி, சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ். ஆர். எம். பல்கலைக்கழக அரங்கில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை சிநேகா கலந்து கொண்டார். விழாவில் பேசிய சிநேகா, “போலியோ ஒழிப்பு என்பது, இன்றைக்கு மிக முக்கியமான ஒரு விஷயம். என்னுடைய அப்பாவும் ஒரு ரொட்டேரியன்தான். அந்த வகையில் இந்த விழாவுக்கு வந்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். போலியோ ஒழிப்பு என்ற நோக்கத்துக்கு ஒவ்வொருவரும் தம்மாலான தொகையை நன்கொடையாக வழங்க வேண்டும்” என்றார்.

இதில் தானே முதல் நபராக ரூ. 15000 கொடுத்து போலியோ ஒழிப்புக்கான நிதி திரட்டலை சிநேகா தொடங்கிவைத்தார்.

மேலும், “போலியோ ஒழிப்பு போன்ற நல்ல நோக்கங்களுக்காக பாடுபடும் ரோட்டரி கிளப்பில் என்னையும் ஒரு உறுப்பினராக இன்று முதல் (ஜனவரி 2011) இணைத்துக்கொள்கிறேன்”, என்று அறிவித்தார்.

ரூ 5000-க்கும் அதிகமாக நன்கொடை வழங்கியவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு சிநேகாவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் தமிழகம்  முழுவதிலுமிருந்து வந்திருந்த பல்வேறு சுழற்சங்க உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் சிநேகாவிடம் நன்கொடை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ரொட்டேரியன் செல்வநாதன், ரொட்டேரியன் சக்கரபாணி ஆகியோர் செய்திருந்தனர்.

=============================

தகவல் – மக்கள் தொடர்பாளர் ஏ.ஜான்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *