நிலவு முகம்
செண்பக ஜெகதீசன்
நிலவு முகம் தெரிகிறது
நினைவு அலை தெளிக்கிறது
புல்வெளியில் பனித்துளிகள்
புது வானில் நவமணிகள்
நிலவு மகள் வரும் வழியில்
நிறக்கோலம் போடுகிறாள்… (நிலவு)
மலைச்சரிவில் மானினங்கள்
மரம் நிறைய மலர்ச்சுமைகள்
கழனியிலே கதிர் மணிகள்
கனத்தாலே தலை குனியும்
மனதிலெழும் நினைவதிலே
முகம் காட்டிச் சிரிக்கின்றாள்… (நிலவு)
சிறகடித்துப் பறக்கின்றேன்
சிரிப்பதையே நினைக்கின்றேன்
கடலடியின் முத்துக்கள்
கனியிதழின் சொத்துக்கள்
இதழ் குவித்து எனைக்கவர்ந்தே
இதயத்தையே எடுக்கின்றாள்… (நிலவு)
பறவையது பறக்கிறது
பக்கம் வரத் துடிக்கிறது
இடர் பலவாய் வந்தாலும்
எவர் தடுத்தும் நிற்காது
கனவெல்லாம் நனவாகும்
கண்மணி நீ வரும்போது… (நிலவு)
படத்திற்கு நன்றி:http://tops-wallpapers.blogspot.in/2011/09/nature-beauty-girl.html