தமிழின் முச்சங்க காலம் – ஓர் கருத்து

4

 

 

நூ த லோகசுந்தரமுதலி

மயிலை

இந்நாள், செம்மொழி என போற்றப்படும் தமிழ் மொழியின், மாண்பும் வரலாறும் பற்றி, தமிழைப் படிக்க முனைவோருக்கு, நன்கே அறியும் வகையில் நல்லதொரு முன்னுரை தரப்படுகின்றது. இவற்றிற்கான தரவுகள், சான்றுகள், பல்கால் பல்வகை அறிஞர்களால் நன்கு ஆய்ந்து, கொழித்தெடுத்த பிறகே, தொகுக்கப்பட்டுள்ளன.

எனினும் ‘காய்த்த மரம் கல்லடிபடும்’ எனும் முதுமொழிக்கேற்ப, வேற்று மொழியினரால் அவ்வப்போது எழும் ஐயப்பாடுகளுக்கும் வினாக்களுக்கும், மறுமாற்றங்கள் அளிப்பதும்உற்றோர்தம் கடனுமாகும்

‘இறையனார் அகப்பொருள் உரை’ என நக்கீரர் பெயர் தாங்கி உள்ள தமிழ் முன்னோடி உரை நூல் ஒன்றில் காணும், முச்சங்கங்களின் வரலாறே, பலரும் முதலில் காட்டுவது என அறிவோம். அதனில் குறிக்கப்பட்டுள்ள கடல்கோள்கள், இக்காலத்து எழுந்துள்ள அறிவியல் சான்றுகளும், கண்முன் நிகழும் நிலக் கம்பிதங்களும் அவைபற்றிய ஐயங்களை தானாகவே தகர்த்தெறிக்கின்றன.

சென்ற வாரம் 11.04.12 அன்று தமிழகத்து கடற்கரைத் துறைகளிலும் மற்றும் பற்பல தென்னிந்திய தீபகற்ப பகுதியில் உணரப்பட்ட நில நடுக்கம் பற்றி நினைவுகள் நம் எல்லேருக்கும் பசுமையாகவே இருக்கின்றது.

நிற்க,

மேலை நாடுகள் சில நூற்றாண்டுகளாகத் தொழில்துறையில் முன்னிற்பதைப் போன்றே அதற்கு ஆதாரமான அறிவியல் ஆய்வினிலும் முதன்மைப் பெற்று விளங்கி வருகின்றனர் என்பது கண்கூடு. இவ்வகையில் இப்பூகண்டத்தில் எழும் பல விதமான கோளியல், புவியியல் மாற்றங்கள் யாவற்றையும் செம்மையுற ஆவணப்படுத்தியும் அதன் மேல் ஆய்வுகள் செய்தும் வருகின்றனர்.

இத்துறை சார்ந்தோரின் இணையதள ஆவணங்களில் கண்ட பல நுண்ணிய செய்திகளைக் காணுங்கால் நாம் வாழும் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய தீபகற்பமும் விந்திய மலைக்கு வடக்காக உள்ள இந்திய(தரை) நிலத்துடன் இலங்கை இந்து மாக்கடல் ஆஸ்டிரேலியக் கண்டம் உள்ளிட்ட புவிக்கோள் பகுதி ஓர் உடைந்த சில்லாக காண்கின்றது. அஃதாவது ஒருநாள் எரிப்பிழம்பாக இருந்து பல்லாயிரம் ஆண்டுகளில் சிறிது சிறிதாக இருகி இந்நாள் சற்றேறக்குறைய ஓர் தேங்காய் போல் நடுவண் தீப்பிழம்புடனும் வெளிப்புறம் இருகி தேங்காயின் சதைப்பற்று / மேல் ஓடு, போன்றதொரு அமைப்புடன் நின்றுள்ள பூமியில்,தேங்காய் ஓட்டிற்கு இணையான நன்றாக இறுகிய பாறை அடுக்குகளில் கீறல்கள் உடைசல்கள் ஏற்பட்டுள்ளதும் அவ்வகைத் துண்டுகள் சில்லுகள் சிலபோது உள் பிழம்பிலிருந்து எழும் அழுத்த மாறுபாடுகளால் ஆட்டம் காண்பதாக அறிகின்றோம். சிலபோது இச்சில்லுகள் இவ்வகை மாற்றங்களால் மேற்புறமாக நந்தியக்கால் நிலப்பாறைகளில் காணும் பள்ளங்களில் கடலாக நிற்கும் நீரும் அலைப்புற (தளும்ப) ஆழிப்பேரலைகள் உருவாகியதும் அதனில் ஒன்று 2004 யில் தமிழகக் கடற்கரை விளிம்புப் பகுதிகளை தாக்கி பல தலைமுறையினர் முன்பு அறியாத இயற்கைத் தாக்கங்களால் அவதி உற்றதும் நன்கறிவோம்.
( தென்னிந்திய நிலப்பகுதி ஆஸ்டிரேலிய கண்டத்துடன் இடையே இந்துமா கடலுடன் ஓர் உடைந்த சில்லாக உள்ளதை இணைப்புப் படத்தில் காண்க)

பழங்காலத்தே நம்நாட்டு மூதறிஞர்களாலும் இவ்வகை நிலநடுக்கம் (கம்பம்) உணரப் பட்டுள்ளதால்தான் இவ்வகை பெரும்பூத அசாதாரண நிகழ்ச்சிகளைக் குறிக்கவே அவை நிகழ்ந்த பகுதிகளை அப்பெயர் கொண்டு விளித்தனர் எனலாம். தமிழகத்தில் மதுரைக்கு வடமேற்காக பழனிமலைக் குன்றுகளின் அடிவாரத்தே ஒன்றும் ஆந்திரமாநிலம் கடப்பை கர்நூல் மாவட்டத்தைச் சாரந்ததாக ஒன்றும் என இரு வேறு வேறு ஊர்கள்கம்பம்’ எனும் பெயருடன் திகழ்கின்றன. மேலும். வரலாற்றுக் காலத்தே நம் பழம் பாரதநாடு எனும் பெருநிலப் பரப்பினில் 56 நாடுகள் எனக்குறிக்கப்படுவதும் அவற்றில் ஒன்று ‘விதர்ப்பநாடு’ என்பதும் அறிவோம். அப்பெயரே அந்நாட்டில் அவ்வப்போது பல நில நடுக்கங்கள் நேர்ந்துள்ளமையைக் காட்டுகின்றது (விதர்ப்பம்=நடுக்கம்) 10-12ஆண்டுகளுக்கு முன்பும் இப்பகுதியைச் சார்ந்த இலட்டூர் எனும் இடத்தே நிலநடுக்கம் நிகழ்ந்ததும் சிறு குடில்களில் வாழ்ந்த மக்கள் தாங்கள் வாழும் வீடுகளை உயிர்களை இழந்து தவித்ததையும் நன்கறிவோமே.

இப்பகுதி இந்நாள் மகாராஷ்டிர ‘நாகபுரி’ உள் அடக்கிய கிழக்குப் பகுதி ஆகும். இந்த விதர்ப்பநாட்டு மன்னனின் மகள் ‘தமயந்தி’யை மணந்த நிஷதநாட்டு மன்னன் நளன் கதை அறிவோமே.

எரிமலைகளுக்கும் நிலநடுக்கங்களுக்கும் ஆழிப்பேரலைக்கும் அலைப்புண்டதால்தான் ஒருகாலத்தே இந்நாள் இந்துமாகடல் எனும் பகுதியாக இருப்பது முன்னாள் நிலப்பகுதியாக இருந்து மூழ்கியது எனவும் அஃதே நம் தமிழ் வரலாற்றாளர்கள் குறிக்கும் கடற்கோள்கள் எனவும் இலேமுரியாக் கண்டம் எனவெல்லாம் பல அறிஞர்கள் ஒருகாலத்தே முன்வைத்த கருத்து எனவும் நினைவு கூர்வோம். ஆப்பிரிக்கக் கண்டமும் இந்தியாவும் ஒருகாலத்தே நிலவழியாக ஒன்றி இருந்தமை ஈங்கு காணப்படும் யானை காண்டா முதலிய பெரு விலங்குகள் சில மரவகைகள் சான்று பகர்கின்றன என்பர்

கடல்கோள்கள் பற்றி நேரடியான உள்சான்றுகளும் நம் சங்க நூல்களிலிருந்தும் அறிஞர்கள் நன்கே எடுத்துக்காட்டி உள்ளனர்.

கடல் கோள் சான்றுகள் கலித்தொகையிலும் சிலப்பதிகாரத்திலும்

‘மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வவ்வலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நாடு இடம்பட
புலியொடு வில்நீக்கி புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினால் வணக்கிய வாடாச்சீர் தென்னவன்’
கலி-104 / 1-4
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி’
சிலம்பு 11 / 16-22″

பல புலவோர் தமிழ் ஆய்ந்தது பற்றி :-

நச்சினார்க்கினியர் எனும் பெருமழைப்புலவர் ஒருவர் சங்க நூல்கள் சிலவற்றிற்கும் தொல்காப்பியத்திற்கும் உரை எழுதினர்
இப்பெருமகனார் ஐயமின்றி பல ஆண்டுகள் தமிழ் நூல்களை நன்கே ஆய்ந்தவராதல் வேண்டும் அவர் தம் உரை பரிபாடல் உரைப் பாயிரத்தில் காணும் ஓர் பாடலில் காணும் வரிகள் இவை

பரிபாடல் /நச்சினார்க்கினியர் உரை/ உரைச்சிறப்புப் பாயிரம்
– – – – – – – – – – – – – – –
– – – – – – – – – – – – – – –
கண்ணுதல் கடவுள் அண்ணலங் குறுமுனி
முனைவேள் முருகன் எனஇவர் முதலிய
திருந்துமொழிப் புலவர் இருந்து தமிழ்ஆய்ந்த
சங்கம் என்னும் துங்கமலி கடலுள்
அரிதின் எழுந்த பரிபாட்டு அமுதம்

அப்பெரும் புலவரே தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இடத்து எடுத்தாக்காட்டிய ஓர் பாடல் காண்க. இதனில்

நாம் வாழும் இந்த தீபகற்பம் புடைபெயர்ந்தது என சாற்றுகின்றது
– – – – – – – – – – – – – – – –
– – – – – – – – – – – – – – – –
கொடியணி ஏனம் பொடிஅணிந்து கிடப்ப
வடதிசை வாகை சூடித் தென்திசை
வென்றி வாய்த்த வன்தாள் வளவன்
இமிழ்இசை வேங்கடம் போலத் தமிழகத்து
நாவலொடு பெயரிய ஞாலம்
காவல் போற்றி வாழிய நெடிதே. (8 அடிஆசிரிய சுரிதகம்)

(தொல் சூத் 146 க்கு நச்சினார் மேற்கோள், எந்த நூலினது என அறியப்படாத பழம் பாடல்)

இதனில் காணும் தமிழகத்து நாவல் என்பது நாம் வாழும் தென்இந்திய தீபகற்பம். மேல்நாட்டினர் Peninsula என்பர்

நாவல் என்பதில் நா என்பது நாக்கு. நாக்கின் வடிவமாக உள்ள ஓர் பொருள் நா எனப்பட்டது. அல் சாரியை

நாவலம் தீவு என நிகண்டுகள் குறிப்பதும் இஃதே.

நாவலொடு பெயரிய ஞாலம் என்பது இன்றைய அறிவியலாளரும் கூறும் நிலம் புடைபெயர்ந்து வடக்கிலுள்ள நிலப்பகுதியில் மோதியதால் இமயம் என்னும் மலையும் திபெத்து எனப்படும் மேடான நிலப்பகுதியும் தோன்றின என்பதை உறுதிசெய்கின்றது.

அதான்று

“இரண்டாம் சங்கமிருந்த இடம் கபாடபுரம்” என காண்கின்றோம்.

‘கபாடபுரம்’ எனும் பெயரில் ‘கபாட’ எனும் பகுதி வழி அல்லது வாயில் எனப்பொருள்படும். கூர்ஐரநாட்டு ‘துவாரகை’யில் உள்ள ‘துவார்’ கடல்வழி வருவோர் உள் ஏகும் வாயில் நகரம் என்பது போல் தன் அமைப்பால் பெயர் பெற்றதாகும்.

இன்று சபரிமலைக்குச் செல்லும் வழிபாட்டாளர்களுக்கு உதவ நடைதிறந்தது பற்றி அறிக்கை வருகின்றதல்லவா அது போன்று இமயலையிலுள்ள திருக்கேதாரம் போன்ற கோயில்கள் பலமாதங்கள் பனியினால் மூடிஇருந்து பிறகு கோயில் திறக்கப்படும் நாள் பற்றி அறிக்கைகள் வருகின்றபோது பயன்படும் சொல் “கபாடு கோல்தா ஹூம்” அதாவது கோயில் நடை திறக்கப்படுகின்றது என்பதாகும். கபாடம் என்றால் கதவு/வழி/வாயில் என்பது. ஈங்கு நாம் உணரவேண்டியது அவ்விடத்திற்கு ஏக வழி ஒன்று உண்டு என்பதும் மூடிஇருந்த அது திறக்கும் காலம் இது எனவும் அறிவிக்கப்படுகின்றது.

முதல் சங்கம் அழிந்துபட இடைச்சங்கம் அமைந்த இடமாகிய கபாடபுரம் அதாவது கடல் கோளால் பாழ்பட்ட இடத்திற்கு மாற்றாக வந்த இடம் (கடல்கோளால் சிறு திட்டுகளாக மாறியதால் அந்நகருக்கு) ஓர் சிறு வழியாக ஏகும் நிலையில் இருந்துள்ளது அதனால் அந் நகரின் பெயரே “ஏகும் வாயிலாக உள்ள நகரம் = கபாடபுரம்” என வழங்கப்பட்டதாகலாம்.

வால்மீகி எழுதிய இராமாயண காவியத்திலும் இராவணன் சீதையை தூக்கிச்சென்றபோது தன் நாட்டிற்குச் செல்ல கழுதை பூட்டிய வண்டி ஒன்றைப் பயன்கொண்டான் (&&&) என உள்ளது என்பர் அதனைப் படித்தோர். அதாவது அந்நாளைய இலங்கைக்கு சக்கரமிட்ட வண்டியிலேயே செல்ல முடியும் என்பதே. கடல்கோளால் பாழ்பட்டு இருந்தும் தன் ஊர்/நாடு எனும் அறிவினால் அவன் செல்ல வழி இருந்துள்ளது எனவும் ஆனால் வெளிநாட்டினரான இராமனுக்கு படைகளையும் கொண்டு செல்ல வழியை சீரமைத்துத்தான் செல்லமுடிந்தது.

இராமாயண காவிய இராமன் முழுதும் கடலிலேயே புதிதாக சாலை ஒன்று அமைக்காமல் கடல் இடையே கடல் கோளால் சிறிதே விட்ட விட்டு பிறிந்து நின்ற நிலவழியைத்தான் வேண்டிய இடத்தில் மட்டும் கற்களைக்கொண்டு அடுக்கி மூடி வழியை சீரமைத்துத்தான் சென்றான் என கொள்வது சிறப்பும் அறிவுடைமையாகும். இதைத்தான் மேலே இராவணன் சென்ற வழி காட்டுகின்றது.

இச்செய்திகளால் நாம் உணரக்கூடியது கடல் கோள்களால் இந்திய நிலப்பகுதி பழங்காலத்தே இருந்து விட்டு விட்டு பாழ்பட்டு வந்துள்ளது

மீண்டும் கடற்கோள் வந்து கபாடபுரமும் அழிந்துபடவே மூன்றாம் தமிழ் சங்கம் மேலும் நன்கே வடக்காக உள்ள நகரமாகிய தற்கால மதுரைக்கு வந்தாக வரலாறுள்ளது.

எனவே

இராமாயண காலத்தே குறைந்தது ஓர் கடல்கோள் நடந்து விட்டது எனவும் இறையனார் அகப்பொருளுறை கூறும் கூற்று புனைகதை அல்ல உண்மையே ஆகும் எனலாம்

மேலும் நம்நாட்டு புராண கதைகளிலும் காணும் பலவித நிகழ்ச்சிகள் அவை வேறு ஓர் நிகழ்ச்சியை மறைமுக (உருவக)மாக குறிக்கவே வைக்கப்பட்டன போல் தோன்றுவது பல சான்றுகளால் உறுதி செய்யப்படுகின்றது . எடுத்துக்காட்டாக பாற்கடலைக் கடைந்தது இமயத்தில் சிவனது திருமணம் நிகழுங்கால் அகத்தியரை தென்திசைக்கு ஏகச்செய்து நிலம் சாய்ந்து விடாமல் பாதுகாத்தது போன்றவை கடற்கோளிற்கு தொடர்புடையது ஆகும்.

நீண்டும் உயர்ந்தும் வளர்ந்துவிட்டபின் இமயமலைத்தொடர் களிடையே விழும் மாபெரும் அளவிலான மழைநீர் மலைப் பள்ளத்தாக்குகளிடையே சிக்கி தேங்கி நிற்க அவற்றை சிறிது சிறிதான ஒழுக்குகளாக (சிவபெருமான் தன்சடையில் தாங்கி ) இழிந்து செல்ல விட்டதும் கூட கடல்கோள் இணைப்புடையதே.

அதான்று

கடல் நீரிலிருந்தே நாம் பெருவாரியாகப் பெறும் உணவிற்கான உப்பானது, காந்தாரம் (இன்றைய ஆப்கானிஸ்தானம் பாகிஸ்தான வடபகுதி) போன்ற, கடலிலிருந்து ஆயிரம் கிமீ உள்நாட்டில் அமைந்த நிலப்பகுதிகளில், சுரங்கங்களிலிருந்து, பல்வேறு நிறங்களில், கல்லுப்பாக (நிலக்கரி போன்று கனி வளமாக) தோண்டி எடுக்கப்படுகின்றது. எனவே அப்பகுதிகள் ஒருகாலத்து கடலாக இருந்தது அல்லது அந்நிலப்பகுதி கடலிலிருந்து மேலெழுந்தது எனும் கருத்தும் உளது.

——————————————————————————–
(&&&)
‘சர்க்கார்’ எனும் வடஇந்திய வரலாற்றாளர் “இராவணனது ஊர் வடஇந்தியாவிலேயே உள்ள ஓர் இடம்” எனவும் “சீதையைச் துக்கிச்சென்றபோது கழுதை பூட்டிய வண்டியில் கடந்தது ஓர் ஆற்றிடையே விளைந்த லங்கா” (ஸ்ரீரங்கம் போன்று) எனவும் கூறுவார். ஏனெனில் “குரங்குகள் சண்டையின் போது ‘சால்’ மரங்களைப் பயன் கொண்டதாக வால்மீகி கூறுவதால் சால் மரமே இல்லாத தென்இந்தியக் நிலப்பகுதி ஆகாது” என்பார்

ஆனால் சிலர் வால்மீகியில் இப்படியும் உள்ளதென்பர் >> சீதையைச் தென்திசை நோக்கி தேடச்சென்ற அனுமனுக்கு அறிவுரை கூறுங்கால் “விரைந்து செல். செல்லலும் போது சோழ தேசம் வரும்” எனவும் “மேலும் தெற்காக ஏகும் போது இனிமை மிக்க மொழியாகிய தமிழ் போதித்த அகத்தியரது பொதிகை மலையும் வரும். அதனால் அதில் மயங்கி அங்கே தங்கி விடாமல் மேலும் தெற்காக சென்று கடலையும் கடந்து செல்லல் வேண்டும்” என ஆற்றுப் படுத்தப்பட்டான் எனவும் உள்ளது என்பர்.

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “தமிழின் முச்சங்க காலம் – ஓர் கருத்து

  1. வெகு சிறப்பான ஆய்வுக் கட்டுரை.
    இலக்கியத்தையும், நிலவியலையும் – கடலியலயையும்
    இணைத்துக் காட்டியிருக்கிற நேர்த்தி
    பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதமென பெரும் களிப்பைத் தருகிறது
    சிந்தைக்கு நல்ல விருந்து
    இரு முறை படித்தேன் – ஆர்வ மிகுதியில் – கருத்துக்களின் செறிவை அறிந்து கொள்ளும் தீவிரத்தில்!
    வருங்கால ஆய்வாளர்கள் கருத்தூன்றி கவனித்துச் செயல்படவேண்டிய பல விஷயங்கள் காண்கிறேன்.
    தரவுக்குத் தகுந்த முத்தாய்ப்பான பதிவு.
    நீங்கள் அளித்திருக்கிற இந்தத் தரவு, தரவு வகைகளில் ஒரு முதுகெலும்பை போன்றது – இதில் உள்ள ஒவ்வொரு பரிமாணத்தையும் எடுத்துக் கொண்டு நீண்ட – செறிவான ஆய்வுகள் நடத்தலாம்.
    Interdiciplinary  என்று சொள்ளக்கொடிய அளவிலே – தமிழ் இலக்கியம் (திராவிட இலக்கியம்), தொல்பொருள் ஆய்வு, வரலாறு, கடலியல் ஆகிய துறைகளை இணைத்தவாறு, கடப்பாட்டுணர்வுடன், ஆய்வு நிகழ்த்தப் பேராசிரியர்களும், அவர்களுக்கு வாய்க்கக் கூடிய ஆய்வு மாணவர்களும் முனைவார்களேயானால் கடலுக்கடியில் புதைந்து கிடக்கும் பெரும்பேற்றை, இலக்கியக் கண்ணாடி மூலம் பார்த்து வரலாற்றுத் திறவு கோலால், திறந்து இனிவரும் மக்கள், “தொன்று நிகழ்ந்ததனைத்தும்” அறியுமாறு செய்ய முடியும்

    அவ்வகையான ஆய்வுகள் எதிர்காலத்தில், குமரியின் மூக்கு கரையுமா மறையுமா, குஜராத்தின் சிறகு சிறுக்குமா மடங்குமா, வங்காளத்தின் துப்பாட்டா, இருக்குமா பறக்குமா என்கிற கணக்கை அறிவியலார்ர்கள் போட ஏதுவாய் இருக்கும்.

    இன்னொரு அகத்தியரை அனுப்பி, மிதக்க எத்தனிக்கும் தென் நுனியை, பளுவேற்றி, நீரில் சமனமிடும் தாருணம் என்று வரும் என்பதையும் கூடக் கணிக்கலாம் – இன்றுள்ள தொழிநுட்ப வசதியைக் கொண்டு.

    தொழில்நுட்பம் என்பது கருவியே – அதற்கு – சித்தாந்தங்களும் – ஞானமும் ஊட்டவேண்டும் – அப்போதுதான் அது பயன்பாட்டு நிலையை அடையும்.

    இலக்கியமும் வரலாறும், இந்த இயக்கத்தை, தொழிநுட்ப வளர்ச்சிக்கு அளிக்க முடியும்!

    உயிரூட்டமான உங்கள் கட்டுரை பல தளங்களிலும் மக்கள் அறியுமாறு வெளிவரவேண்டும் என வேண்டுகிறேன்.

    வணக்கம் ஐயா.

  2. மறுமொழி இடுவதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன.

    எழுதிய பின் முழுதாய் மீள்பார்வை பார்க்க இயலவில்லை.
    நமது தமிழ் மொழியில் தட்டச்சு செய்வது எத்தனைக் கடினமாக இருக்கிறது!
    நினைப்பது அச்சாவதில்லை – வல்லின – மெல்லினக் குளறுபடிகள்  சுலபமாக நிகழ்ந்து விடுகின்றன.

    வேகமாக டைப் செய்யப் பழகியவர்கள் நிறையவே பிழை  ஏற்படுத்துவர்.
    போதாக்குறைக்கு  இடைவெளிப் பெட்டிகள் வேறு தொல்லை செய்கின்றன.

    submit  செய்யும் முன் பெரிய  திரையில்  comment  ஐ  முழுவதுமாகக மீள் பார்வை  பார்த்து –   “are you sure you want to submit the comment?”  என்பது போன்ற வினாவிற்கு  ஒப்புதல் பெற்ற பின்பு submit  செய்ய  ஏற்பாடு செய்ய முடியுமா?

    இன்னொன்று –
    கேப்ட்சா ஏன் இருமுறை செய்யவைக்க வேண்டு மென்கிறது?

    இந்நிலை தொடர்ந்தால் பலபேருக்கு மறு மொழி இடும் ஆசை போய்விடக் கூடும்.

    நான் அனுப்பிய மறு மொழியில் ஏற்பட்டுள்ள பிழை சொல்ல  என்பதற்கு பதிலாக சொள்ள என வந்துள்ளது – இது நெஞ்சை நெருடுகிறது.

    தயவு செய்து மனமகிழ்வோடு மறுமொழி இடுவதற்கு ஒத்தாசை செய்யுங்கள்.

  3. தமிழ் மொழியின் வரலாறு சரிவர முறையாக எழுதப்படவில்லை எனக் கூறுவோர் உளர். நம் முன்னோர்கள் வரலாற்றை எழுதி வைக்கவில்லைதான். ஆனால் நல்ல வேளையாக நம் சங்கப் புலவர்கள் தங்களின் பாடல் வரிகளில் நிறையவே நமது சரித்திரம், கலை, கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் முதலியவற்றை மிகவும் கவிநயத்துடன் எழுதிவைத்துள்ளனர். புலவர்கள் கூறியுள்ளதை வரலாறாக ஏற்க முடியுமா என வாதிடுவோரும் உள்ளனர். ஆனால் இலக்கியமும் வரலாறும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. முதல் சங்கமும் இடைச் சங்கமும் கடைச் சங்கமும் தமிழுக்கு அதன் தொன்மைக்கும் சிறப்புக்கும் சாட்சி பகர்பவை என்பதால் இவை பற்றி ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு உண்மையை உலகுக்குக் கூறவேண்டும். சங்க இலக்கியங்கள் கற்றுத் தேர்ந்த புலவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கு மட்டுமே புரியும் என்ற நிலையை மாற்றும்வண்ணமாக அவற்றை பலரும் புரிந்துகொண்டு அவற்றின் அருமையை உணரும் வகையில் எளிமையாக விளக்கியும் கூறவேண்டும். கூடுமானவரை அவற்றை ஆங்கிலத்திலும் உலகின் இதர மொழிகளிலும்கூட தந்திட வழிவகைகள் செய்திடல் வேண்டும். தமிழின் வரலாற்றை சங்கப்பாடல்களின் வழியாகவும் இதிகாசங்களின் வழியாகவும் சுவைபட கூறியுள்ள கட்டுரை ஆசிரியருக்கு எனது நன்றியும் பாராட்டுகளும்! ..டாக்டர் ஜி.ஜான்சன்.

  4. திரு, நூ.த.லோ. அவர்களுடன் எனக்கு முழுதும் உடன்பாடு இல்லையெனினும், டாக்டர்.ஜி.ஜான்சன் சொன்னது போல இது, ‘தமிழின் வரலாற்றை சங்கப்பாடல்களின் வழியாகவும் இதிகாசங்களின் வழியாகவும் சுவைபட கூறியுள்ள கட்டுரை. நல்வரவு. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.